புதன், 18 மே, 2016

திருத்தொண்டத்தொகை - திருவாரூர்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ புற்றிடங்கொண்டார், ஸ்ரீ தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அல்லியம் பூங்கோதை, ஸ்ரீ கமலாம்பிகை

திருமுறை : ஏழாம் திருமுறை 39 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

திருத்தொண்டத்தொகை சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பட்டது. சிவனுடைய அடியவர்களுக்கெல்லாம் தான் அடிமை என்ற பொருள்பட அமைந்த திருத்தொண்டத்தொகை 11 பாடல்களால் ஆனது. திருவாரூர் கோயிலில் இருந்த போது சிவபெருமானே அவருக்குத் "தில்லைவாழ் அந்தணர்" என அடியெடுத்துக் கொடுத்துப் பாடுமாறு பணித்தார் என்பது சைவ மக்களின் நம்பிக்கை. இதுவே சேக்கிழாரின் பெரியபுராணத்துக்கு முதல் நூல் ஆகும். இதை விரிவு படுத்தி அடியவர்களின் வரலாறுகளைப் பெரியபுராணமாகத் தந்தார் சேக்கிழார்,


திருத்தொண்டத்தொகை 72 அடியார்களின் பெயர்களை எடுத்துக்கூறுகின்றது. இவர்களில் 63 தனி அடியார்களும், 9 தொகை அடியார்களும் அடங்குவர். தனிப்பட்ட ஒருவரை அடியவராகச் சுட்டும் போது அவர் தனி அடியார் எனப்படுவார். ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ஒருங்கே அடியவர்களாகச் சுட்டும் போது அவர்கள் தொகை அடியார் எனப்படுவர். 63 அடியவர்களுள் 60 அடியவர்கள் ஆண்கள். 3 பெண்கள்.

பாடல் எண் : 01
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் 
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் 
இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் 
விரிபொழில்சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர் நீதிக்கு அடியேன் 
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 02
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன் 
ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் 
கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன் 
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன் 
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 03
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் 
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் 
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க 
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன் 
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 04
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட 
திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன் 
பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் 
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் 
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 05
வம்பறா வரிவண்டு மணநாற மலரும் 
மதுமலர் நல் கொன்றையான் அடியலாற் பேணா 
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் 
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் 
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் 
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 06
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே 
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் 
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்
கார்கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன் 
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன் 
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 07
பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் 
பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையற்கு அடியேன் 
விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன் 
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் 
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் 
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 08
கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த 
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற 
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித் 
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற்கு அடியேன் 
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 09
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் 
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை 
மன்னவனாஞ் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன் 
புடை சூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி 
பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல் சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் 
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 10
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் 
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் 
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் 
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் 
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன் 
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் 
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


பாடல் எண் : 11
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் 
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கு அடியேன் 
திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன் 
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் 
இசைஞானி காதலன் திருநாவலூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார் 
ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

4 கருத்துகள்: