வெள்ளி, 13 மே, 2016

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்

சண்முக கவசத்தை இயற்றியவர் பாம்பன் சுவாமிகளாவார். 30 செய்யுள்கள் கொண்ட இக்கவசம் ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துகளை கொண்டுள்ளது (உயிர் எழுத்து - 12, மெய் எழுத்து - 18). ஷண்முக கவசத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்வோர்க்கு தீராத நோய், சங்கடம் தரும் வழக்கு, செய்வினை, சூன்யம் போன்றவை நீங்கி முருகன் அருள் கிட்டுவது உறுதி. ஷண்முக கவசத்தை நாள் தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு.



பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் கி.பி. 1923-இல் டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி காலை பத்துமணிக்கு சென்னை, தம்புச்செட்டித் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது வடக்கிலிருந்து வெகு வேகமாக ஓடி வந்த ஒரு பெரிய குதிரை சுவாமிகள் மீது மோதியது. அவர் கீழே விழுந்தார். வண்டியின் சக்கரம் அவரது இடது காலில் ஏறியதில் கால் எலும்பு முறிந்தது.

உடனே அவர் அரசுப் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மன்றோ வார்டில் (11-ஆம் அறை) சேர்க்கப்பட்டார். அக்காலத்து ஆங்கில மருத்துவர் ஒருவர் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தார். சுவாமிகள் முதிர்ந்த 73 வயதுடையவராகவும் உப்பு நீக்கி உணவு கொள்ளும் நியமம் உடையவராகவும் இருந்ததால் முறிந்த காலைக் குணமாக்க இயலாது என மருத்துவர் கை விரித்தார்.

சுவாமிகள் சண்முகனை நினைத்து, சண்முகா! நீயே அடியாரின் உயிருக்கும் உடம்புக்கும் கவசமாக இருப்பாய் என உறுதியாக நம்பிச் சண்முக கவசம் பாடினேன். இப்போது கவசம் பாடிய என் காலையே நீ காப்பாற்றாது போனால் அடியார்க்கு உன் மீது எப்படி நம்பிக்கை உண்டாகும்? என் கால் போனால் போகட்டும். என் தூல உடம்பை விட்டு உன்னுடன் கலக்கவே நான் ஆசைப்படுகிறேன். அதற்கு இது நல்ல வாய்ப்பு என்று ஆனந்தப்படுகிறேன். ஆனால் அடியாரை நீ கவசமாக இருந்து காக்க மாட்டாய் என இழிவாகக் கூறி உன் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்களே. அந்த இழிவு என்னால் உனக்கு ஏற்படலாமா? அதை எவ்வாறு தடுப்பேன் என்று சொல்லி அழுதார்.

சுவாமிகளின் வருத்தத்தை நீக்க முருகன், மருத்துவமனையில் சேர்ந்த 11-ஆம் நாள் இரண்டு மயில்கள் நடனம் ஆடிவரும் காட்சியைச் சுவாமிகளுக்கு அளித்து அருளினான். பின் முருகன் ஒரு குழந்தையாக வந்து அவர் படுக்கையில் அவர் அருகில் கால் நீட்டிப் படுத்து மறைந்தருளினான். இவ்விரு காட்சிகளுக்குப் பிறகு மருத்துவர் சுவாமிகளின் காலை மீண்டும் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தபோது முறிந்த கால் பூரண குணமாகி இருந்தது.


இது ஓர் அதிசயம் என்று மருத்துவமனையில் இருந்த ஆங்கிலேயர்கள், கிறிஸ்தவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் சுவாமிகளிடம் திருநீறு பெற்றுப் பூசிக் கொண்டார்கள்.

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருளதாகித் 
தொண்டர்கள் குருவுமாகித் துகளறு தெய்வமாகி
எண்டிசை போற்ற நின்ற என்னருள் ஈசனான
திண்டிறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க ... ... ... ... (01)

ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசிலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க ... ... ... ... (02)

இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க வாயை
முருகவேள் காக்க நாப்பல் முழுதும் நற் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ரமணியன் காக்க ... ... ... ... (03)

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க எந்தன்
ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க ... ... ... ... (04)

உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க 
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறங்கையை அயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும் 
பிறங்கு மால்மருகன் காக்க பின்முதுகைச் சேய் காக்க ... ... ... ... (05)

ஊணிறை வயிற்றை மஞ்ஞை ஊர்தியோன் காக்க வம்புத்
தோள் நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க குய்ய
நாணினை அங்கி கௌரி நந்தனன் காக்க பீஜ
ஆணியைக் கந்தன் காக்க அறுமுகன் குதத்தைக் காக்க ... ... ... ... (06)

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
அஞ்சகனம் ஒரிரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க ... ... ... ... (07)

ஏரகத் தேவன் என்தாள் இரு முழங்காலும் காக்க
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க
நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க ... ... ... ... (08)

ஐயுறு மலையன் பாதத்தமர் பத்து விரலும் காக்க
பையுறு பழநி நாத பரன் அகம் காலைக் காக்க
மெய்யுடல் முழுதும் ஆதி விமல சண்முகவன் காக்க
தெய்வ நாயக விசாகன் தினமுமென் நெஞ்சைக் காக்க ... ... ... ... (09)

ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரும் பூதப் பிரேதம்
பலிகொள் இராக்கதப்பேய் பலகணத் எவை ஆனாலும்
கிலிகொள எனைவேல் காக்க கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க ... ... ... ... (10)

ஓங்கிய சீற்றமே கொண்டு உவனிவில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடிபரசு ஈட்டி யாதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க ... ... ... ... (11)

ஒளவியமுளர் ஊண் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவாராயின் சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன் கை அயில் காக்க காக்க ... ... ... ... (12)

கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோலாமார்ச் சாலஞ் சம்பு
நடையுடை எதனாலேனும் நான் இடர்ப் பட்டிடாமல்
சடிதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க ... ... ... ... (13)

ஙகரமே போற் றழீஇ ஞானவேல் காக்க வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யனேறு ஆலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையா வெற்கோர் ஊறிலாது ஐவேல் காக்க ... ... ... ... (14)

சலத்திலுய்வன் மீனேறு தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால் நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
பலத்துடன் இருந்து காக்க பாவகி கூர்வேல் காக்க ... ... ... ... (15)

ஞமலியம் பரியன் கைவேல் நவக்கிரகக்கோள் காக்க
சுமவிழி நோய்கள் தந்த சூலை ஆக்கிராண ரோகம்
திமிர்கழல் வாதம் சோகை சிரமடி கர்ண ரோகம்
எமை அணுகாமலே பன்னிரு புயன் சயவேல் காக்க ... ... ... ... (16)

டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி கண்ட மாலை
குமுறு விப்புருதி குன்மம் குடல்வலி ஈழை காசம்
நிமிரொணா(து) இருத்தும் வெட்டை நீர்பிரமேகம் எல்லாம்
எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க ... ... ... ... (17)

இணக்கம் இல்லாத பித்த எரிவு மாசுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த
பிணிக்குலம் எனையாளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க ... ... ... ... (18)

தவனமா ரோகம் வாதம் சயித்தியம் அரோசகம் மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு இளைப்பு உடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய் அண்டவாதங்கள் சூலை
எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க ... ... ... ... (19)

நமைப்புறு கிரந்தி வீக்கம் நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி
இமைப்பொழுதேனும் என்னை யெய்தாமல் அருள்வேல் காக்க ... ... ... ... (20)

பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க ... ... ... ... (21)

மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும் சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறெந்த இடத்தும் என்னை
நண்ணி வந்து அருளார் சஷ்டி நாதன் வேல் காக்க காக்க ... ... ... ... (22)

யகரமே போல் சூலேந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க
சசகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க
சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க ... ... ... ... (23)

ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க அங்கி
விஞ்சிடு திசையின் ஞான வீரன் வேல் காக்க தெற்கில்
எஞ்சிடாக் கதிர் காமத்தோன் இகலுடைக் கரவேல் காக்க ... ... ... ... (24)

லகரமே போல் காளிங்கன் நல்லுடல் நெளிய நின்று
தகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்
நிகழெனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க மேற்கில் 
இகல் அயில் காக்க வாயுவினில் குகன் கதிர்வேல் காக்க ... ... ... ... (25)

வடதிசை தன்னில் ஈசன் மகன்அருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும் ஞான்று நவில்கையில் நிமிர்கையில் கீழ்க்
கிடக்கையில் தூங்கும் ஞான்று கிரிதுளைத் துளவேல் காக்க ... ... ... ... (26)

இழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கு நல் ஊண் உண்போதும் மால் விளையாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சடக்கும் போதும்
செழுங்குணத்தோடே காக்க திடமுடன் மயிலும் காக்க ... ... ... ... (27)

இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளர் அறுமுகச் சிவன் தான் வந்தெனைக் காக்க காக்க
ஒளியெழு காலை முன்எல் ஓம் சிவ சாமி காக்க
தெளிநடு பிற்பகல் கால் சிவகுரு நாதன் காக்க ... ... ... ... (28)

இறகுடைக் கோழித் தோகைக் இறைமுன் இராவில் காக்க
திறலுடைச் சூர்ப்பகைத்தே திகழ்பின் இராவில் காக்க
நறவிசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னிற் காக்க
மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க ... ... ... ... (29)

இனமெனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன் கடவுடள் தான் காக்க வந்தே ... ... ... ... (30)


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக