புதன், 18 மே, 2016

01 தில்லை வாழ் அந்தணர் புராணம்

"தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்"

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ திருமூலட்டானேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சிவகாமியம்மை

அவதாரத் தலம் : சிதம்பரம்

முக்தி தலம் : சிதம்பரம்

குருபூஜை நாள் : சித்திரை முதல் நாள்

"ஞானமே முதலா நான்கும் நவையறத் தெரிந்து மிக்கார்
தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையும் தாங்கி மனையறம் புரிந்து வாழ்வார்."

பாடல் விளக்கம்:
ஞானம் முதலாகச் சொல்லப்பெறும் யோகம், கிரியை, சரியை ஆகிய நால்வகை நன்னெறிகளையும் குற்றமறத் தெரிந்து, அந்தப் படி நிலையில் உயர்ந்து ஞானத்தைப் பெற்றவர்கள், தானம், தவம் ஆகிய இரு பேரறங்களையும் செய்து வருதலில் வல்லவர்கள். நடுநிலைமை கோடலில் பகை, நொதுமல், நட்பு எனும் பாகுபாடின்றி, அதனைக் கடைப்பிடித்து வருபவர்கள். மேல் எதிர் கொள்ளுதற்குரிய எவ்வகைக் குறைபாடுகளும் இல்லாமல், உலகத்தவ ரெல்லாம் பெரிதும் புகழ்ந்து போற்றிவரும் மானம், பொறை ஆகிய ஈரறங்களையும் என்றும் மனத்தகத்துக் கொண்டு இல்லறத்தை என்றும் நடத்தி வருபவர்கள்.

தில்லை வாழ் அந்தணர் புராணம்



வெள்ளைப் பிறையணிந்த வேணிபிரான் எழுந்தருளியிருக்கும் தில்லை என்னும் இத்திருத்தலம் சோழவள நாட்டிலுள்ளது. தில்லை என்பது சிதம்பரமாகும். ஓங்கி வளர்ந்த நெற்கதிர்களைத் தாங்கிய பரந்த வயல்கள், கதிரவனைக் கண்டுகளிக்கும் செங்கமல மலர்கள் நிறைந்த தடாகங்கள், அத்தடாகங்களில் மலர்ந்திருக்கும் செந்தாமரை மலர்கள் தில்லையின் இயற்கை எழிலை எடுத்துக்காட்டின. அங்குள்ள சோலைகளில், மரங்கள் ஒன்றொடொன்று நெருக்கமாக, ஓங்கி வளர்ந்திருக்கும். அம்மரங்களில் குயில்கள் பாட, கிளிகள் கத்த, அழகு மயில்கள் தோகை விரித்தாட, அன்னப் பறவைகள் ஒலியை எழுப்பிக் கொண்டேயிருக்கும். நறுமணப் பூச்செடிகள் அழகிய வடிவங்களில் ஆங்காங்கே எழிலோடு காணப்படும். 

உயர்ந்த மதிற் சுவர்கள், அம்மதிற் சுவற்றைச் சுற்றித் தாழைகள் நிறைந்த அகழிகள் - அத்தாழை மலர்களில் தேன் பருக வரும் கரு வண்டுகள் - மலரின் மகரந்தத்தூள் படுவதால் திருநீறு அணிந்த அடியார்களைப் போல் தோற்றமளிக்குமாம். தில்லையில் எந்நேரமும் மாமறைகளின் ஒலி எழுந்த வண்ணமாகவே இருக்கும். ஆங்காங்கே காணப்படும் நடன அரங்கங்களில் ஆடும் ஆரணங்கு அழகிகளின் சதங்கை ஒலியும் கூடவே ஒலிக்கும். வான வீதியில் எந்நேரமும் தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, நரம்புக்கருவி, மாடற்றுக்கருவி என்னும் ஐவகை இசைக் கருவிகளின் முழக்கமும் கேட்ட வண்ணமாகவே இருக்கும். மாலை வேளைகளில் வண்டுகளின் ரீங்கார ஓசை, அன்பின் பெருக்கால் எம்பெருமானை வழிபடும் அடியார்களின் அரகரா! சிவ! சிவா! என்ற திருநாம ஓசையோடு, சேர்ந்து தேவகனமாய் ஒலிக்கும். 

மாட மாளிகைகளில் வேதியர் வளர்க்கும் வேள்விப்புகை விண்ணை முட்டும். கூட கோபுரங்களில் ஆடி விளையாடும் மயில்களின் ஆட்டம் கண்களைக் கவரும். வேள்விச் சாலைகளில் வெந்தணல் ஒளிவீச, அன்னச் சாலைகளில் செந்நெல் அரிசிச் சோறு வெள்ளி மலையென ஒளியுடன் திகழ, நீண்டு, அகன்ற பெருவீதிகளில் கூடியிருக்கும் அடியார்களின் திருமேனிகளில் திருவெண்ணீறு ஒளிவீச, தில்லை வெள்ளி மாமலையெனப் பொலிவுடன் திகழும். தில்லையில், எந்நேரமும் சிவனடியார் கூட்டம் இருந்துக் கொண்டேயிருக்கும். அதனால் அங்கு சிவ நாமம் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தில்லையிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், சிவனருள் பெற்று வெண்ணீறு அணிந்த பொன்மேனி கோலத்தோடு ஆனந்தத்தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானாய் காட்சி தருகிறார். 

இத்தகைய பல்வளமிக்கத் தில்லையில் சிவனருள் பெற்று வாழும் அடியார்கள் தான் தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படுவோர். பொன்னாகி, மணியாகி, போகமாகி, புறமாகி, அகமாகி, புனிதமாகி, மண்ணாகி, மலையாகி, கடலுமாகி, ஆதியாகி, நடுவுமாகி, அளவிலா அளவுமாகி, பெண்ணுமாகி, ஆணுமாகி, கருணை மழை பொழியும் வள்ளலுமாகி ஆனந்தத் தாண்டவம் ஆடும் பிறையணிந்த பெருமானின் பூங்கழல்களைப் போற்றி வரும் இத்தில்லைவாழ் அந்தணர்கள் மொத்தம் மூவாயிரம் பேர் ஆவர். தில்லைவாழ் அந்தணர்கள் என்ற நாமம், எந்தத் தனிப்பட்டவரையும் குறிக்காத பொதுப்பெயர். கற்பனையைக் கடந்த ஒளி வடிவமாக விளங்கும் நடராஜ பெருமானைச் சேவிக்கின்ற மூவாயிரம் அந்தணர்களையும் மொத்தப் படுத்தித் தான் தில்லைவாழ் அந்தணர் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். பொன்னம்பலவாணரை முப்போது மட்டுமின்றி, எப்போதும் போற்றி வழிபடும் இத்திருவுடைய தில்லை மூவாயிரம் அந்தணர்கள் தெய்வத்தன்மை நிறைந்த மூவாயிரம் வேதியர்களாவர். 

இவர்கள் தில்லை தீட்சதர்கள் எனப் பெயர் பெற்று விளங்குபவர். இத்தில்லை வாழ் அந்தணர்கள் எப்பொழுதும், எக்காலமும், திருவெண்ணீறு அணிந்த கோலத்தினராய்- உள்ளும் புறமும் மாசற்று - அகமும், முகமும் மலர தூய வடிவினராய் விளங்குவர். பக்தியின் எல்லை கண்டு பக்குவத்தின் நிலைமை பெற்றவர். பொன்னம்பலவாணரின் குஞ்சித பாதம் வணங்குவோர்க்கு, சஞ்சித வினைகள் துகள்பட்டு ஒழியும் என்ற முறைமைக்கு ஏற்ப பரமனைத் தொழுது வாழுபவர்! பொன்னம்பலத்தரசரை, வேதச் சிலம்புகள் ஒலிக்க, பூசிப்பவர்! உயிர்களிடத்தும் பேரன்பு மிக்கவர். அறத்தையே செல்வமாகக் கொண்டவர். குற்ற மற்ற அந்தணர் குலத்தில் தோன்றியவர். தூய நெறிப்படி தலைசிறந்து ஒழுகுபவர். 

நலம் புரியும் நாயகனுக்குத் திருத்தொண்டு புரியும் தவத்தவர். சிவத்தொண்டே தான் இவ்வடியார்களின் ஒப்பற்ற ஒரே சிந்தனை! செயல் எல்லாம். இவர்கள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையும், நன்கு கற்றுணர்ந்தவர். சிட்சை, வியாகரணம், சந்தோவிசிதி, திருத்தம், சோதிடம், கற்பம் என்னும் ஆறு அங்கங்களையும், மீமாம்சை, நியாஸம், புராணம், ஸ்மிருது என்னும் நான்கு உபாயங்களையும் ஐயந்திரிபுறக் கற்றவர். வேத விதிப்படி ஆகவனீயம், சாருகபத்தியம், தக்கணாக்கினி என்னும் முத்தீ வளர்ப்பவர். சிவாகமத்தில் கூறப்படும் சிரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வகைப் பாதங்களையும் நன்கு உணர்ந்தவர். பிறப்பிலேயே இறைவனின் திருவருளைப் பெற்ற இவர்கள் நிலவுலகில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தை வேரோடு ஒழித்தனர் என்ற பெருமையையும், பாராட்டையும் பெற்றவர். 

இவ்வடியார்கள் எவ்வகைக் குற்றமும் இல்லாதவர். மானமும், பொறுமையும் தாங்கி மனையறம் நடத்துபவர். செம்மையான உள்ளம் கொண்டவர். தென் தமிழ்த் தவப்பயனால் எழுந்த திருத்தொண்டத் தொகையைப் பாடுவதற்கு திருவாரூரில் தேவாசிரிய மண்டபத்தில் சுந்தரருக்குத் திருவருள் புரிந்த புற்றிடங்கொண்ட பெருமானின் அமுதவாக்கால், "தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று அடி எடுத்துக் கொடுக்கப் பெற்ற பெரும் பேறு பெற்ற நற்றவமுடையவர். இங்ஙனம் மதியணிந்த பெருமானாலேயே சிறப்பிக்கப் பெற்றத் தில்லை வாழ் அந்தணர்களின் பக்தியையும், பெருமையையும், புகழையும் அளவிடுவதுதான் எங்ஙனம்? அழ்கடலின் ஆழத்தை அளவிட முயலும் கதை போலத் தோன்றும்.

"அகலிடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம்
புகழ் திருமறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ்க
நிகழ்திரு நீலகண்டக் குயவனார் நீடு வாய்மை
திகழும் அன்புடைய தொண்டர் செய்தவம் கூறல் உற்றாம்."

பாடல் விளக்கம்:
விரிந்த இவ்வுலகில் உயர்ந்தவர்களாக விளங்கி அருளும் தில்லைவாழ் அந்தணர்களாகிய மறையவர்கள், இவ்வுலகமெல்லாம் புகழ்ந்து போற்றும் கூத்தப் பெருமானின் அருள் நடனத்தைப் போற்றி என்றும் வாழ்வார்களாக! இத்தில்லையில் வாழ்ந்து புகழ் விளங்க நிற்கும் திருநீலகண்டக் குயவனார் எனும் பெயருடையவரும், போற்றப்பெறும் வாய்மையினின்றும் வழுவாத அன்புடையவருமான அடியவர்தம் அருந்தவச் செயலை இனிக் கூறத் தொடங்குகின்றேன்.

முகவரி: அருள்மிகு. ஸ்ரீ நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608 001 கடலூர் மாவட்டம்

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக