ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

திருஆலவாய் திருமுறை திருப்பதிகம் 04

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ சோமசுந்தரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ அங்கயற்கண்ணி

திருமுறை : மூன்றாம் திருமுறை 47 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
காட்டு மா அது உரித்து உரி போர்த்து உடல்
நாட்டம் மூன்று உடையாய் உரைசெய்வன் நான்
வேட்டு வேள்வி செய்யா அமண் கையரை
ஓட்டி வாது செயத் திரு உள்ளமே.

பொருளுரை:
காட்டிலுள்ள யானையின் தோலை உரித்துப் போர்த்திய இறைவனே! மூன்று கண்ணுடைய பெருமானே! நல் வேள்வியைப் புரியாதவர்களாகிய சமணர்களுடன் நான் வாதம் செய்து அவரை விரட்டுவதற்குத் திருவுளக்குறிப்பு யாது? உரை செய்வாயாக.


பாடல் எண் : 02
மத்த யானையின் ஈருரி மூடிய
அத்தனே அணி ஆலவாயாய் பணி
பொய்த்தவன் தவ வேடத்தராம் சமண்
சித்தரை அழிக்கத் திரு உள்ளமே.

பொருளுரை:
மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்திய அத்தனே! அழகிய ஆலவாயில் விளங்கும் நாதனே! பொய்த்தவ வேடம் கொண்ட சமணரிடம் வாது செய்து அழிப்பதற்குத் திருவுள்ளம்யாதோ? உரைப்பாயாக. 


பாடல் எண் : 03
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத் திரு ஆலவாயாய் அருள்
பெண்ணகத்து எழில் சாக்கியப்பேய் அமண்
தெண்ணர் கற்பழிக்கத் திரு உள்ளமே.

பொருளுரை:
இப்பூவுலகத்திலும், விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற இறைவனே! பௌத்தர்களும் சமணர்களும் வாதம் புரியும் தன்மையில் அவர்தம் கல்வியைத் தகுதியற்றதாக அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது! உரைத்தருள்வாயாக.


பாடல் எண் : 04
ஓதி ஓத்து அறியா அமணாதரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே
ஆதியே திருஆலவாய் அண்ணலே
நீதியாக நினைந்து அருள் செய்திடே.

பொருளுரை:
வேதங்களை ஓதி உணரும் ஞானம் அற்றவராகிய சமணர்களை வாதில் வெற்றி கொள்ளத் திருவுள்ளம் யாது? ஆதி மூர்த்தியாய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே! நடுநிலையிலிருந்து அருள் செய்வாயாக!.


பாடல் எண் : 05
வையமார் புகழாய் அடியார் தொழும்
செய்கையார் திரு ஆலவாயாய் செப்பாய்
கையில் உண்டு உழலும் அமண் கையரைப்
பைய வாது செயத் திரு உள்ளமே.

பொருளுரை:
உலகெங்கும் பரவிய புகழை உடையவனே! அடியவர்கள் தொழுது போற்றும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவனே! கையில் உணவு வாங்கி உண்டு திரியும் அமணராகிய கீழ்மக்களுடன் மெதுவாக நான் வாதம் புரிவதற்குத் திருவுள்ளம் யாது? உரைத்தருள்வாயாக!.


பாடல் எண் : 06
நாறு சேர் வயல் தண்டலை மிண்டிய
தேறலார் திரு ஆலவாயாய் செப்பாய்
வீறுலாத்தவ மோட்டு அமண் வேடரைச்
சீறி வாது செயத் திரு உள்ளமே.

பொருளுரை:
நாற்றுக்கள் நடப்பட்ட வயல்களிலும், சோலைகளிலும் பெருக்கெடுத்து வழியும் தேன் நிறைந்த திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! பெருமையில்லாத தவத்தைப் புரியும் முரடர்களாகிய சமணர்களைச் சினந்து வாது செய்ய உன்னுடைய திருவுள்ளம் யாது? சொல்லியருள்வாயாக!.


பாடல் எண் : 07
பண்டு அடித்தவத்தார் பயில்வால் தொழும்
தொண்டருக்கு எளியாய் திருஆலவாய்
அண்டனே அமண் கையரை வாதினில்
செண்டு அடித்து உளறத் திரு உள்ளமே.

பொருளுரை:
தொன்று தொட்டுப் பலகாலும் பழகிய திறத்தால் உம்முடைய திருவடிகளையே வணங்கி வருகின்ற தொண்டர்களுக்கு எளியவரே! திருவாலவாயில் வீற்றிருந்தருளுபவரே! அண்டப் பொருளாக விளங்கும் பெருமையுடையவரே! சமணர்களை வாதில் வளைத்து அடித்து அழிக்க எண்ணுகிறேன். உமது திருவுளம் யாது?.


பாடல் எண் : 08
அரக்கன் தான் கிரி ஏற்றவன் தன்முடிச்
செருக்கினைத் தவிர்த்தாய் திருஆலவாய்
பரக்கும் மாண்புடையாய் அமண் பாவரைக்
கரக்க வாது செயத் திரு உள்ளமே.

பொருளுரை:
கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனின் முடிகளை நெரித்து, அவனது செருக்கினை அழித்தவரே! திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! எங்கும் பரவிய புகழை உடையவரே! இறைவனை நினைந்து வழிபடும் பேறு பெறாதவர்களான சமணர்களை அடக்குவதற்கு அவர்களுடன் அடியேன் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?.


பாடல் எண் : 09
மாலும் நான்முகனும் அறியா நெறி
ஆலவாய் உறையும் அண்ணலே பணி
மேலை வீடு உணரா வெற்று அரையரைச்
சால வாது செயத் திரு உள்ளமே.

பொருளுரை:
திருமாலும், பிரமனும் அறியாத தன்மையராய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானே! இறைவனுக்குத் தொண்டு செய்து உயர்ந்த வீட்டுநெறியினை அடைவதற்குரிய வழியை உணராது ஆடையின்றித் திரியும் சமணர்களோடு மிகவும் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?.


பாடல் எண் : 10
கழிக் கரைப்படு மீன் கவர்வார் அமண்
அழிப்பரை அழிக்கத் திரு உள்ளமே
தெழிக்கும் பூம்புனல் சூழ் திருஆலவாய்
மழுப்படை உடை மைந்தனே நல்கிடே.

பொருளுரை:
நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து உண்ணும் புத்தர்களையும், நன்மார்க்கங்களை அழித்து வரும் சமணர்களையும் அடக்க எண்ணுகிறேன். ஒலிக்கும் அழகிய ஆறு சூழ்ந்த திருவாலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! மழுப்படையை உடைய மைந்தரே! உமது திருவுள்ளம் யாது?.


பாடல் எண் : 11
செந்தெனா முரலும் திருஆலவாய்
மைந்தனே என்று வல் அமண் ஆசறச்
சந்தமார் தமிழ் கேட்ட மெய்ஞ் ஞானசம்
பந்தன் சொல் பகரும் பழி நீங்கவே.

பொருளுரை:
வண்டுகள் முரலும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் மைந்தனே என்று விளித்து வலிய அமணர்களின் நெறிகளிலுள்ள குற்றங்கள் நீங்கச் சந்தமுடைய தமிழால் இறைவன் திருவுள்ளம் யாது எனக் கேட்ட மெய்ஞ்ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பழி நீங்க ஓதுவீர்களாக!.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

சனி, 29 ஏப்ரல், 2017

திருஆலவாய் திருமுறை திருப்பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ சோமசுந்தரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ அங்கயற்கண்ணி

திருமுறை : மூன்றாம் திருமுறை 39 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
மானின் நேர் விழி மாதராய் வழுதிக்கு மாபெருந்தேவி கேள்
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்
ஆனை மாமலை ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
மான் போன்ற மருண்ட பார்வையுடைய மாதரசியே! பாண்டிய மன்னனின் மனைவியான பெருந்தேவியே! கேள். பால் வடியும் நல்ல வாயையுடைய பாலன் ` என்று நீ இரக்கமடைய வேண்டா. திருஆலவாயன் துணை நிற்பதால் ஆனைமலை முதலான இடங்களிலிருந்து வந்துள்ளவர்களும், பல துன்பங்களைப் பிறர்க்கு விளைவிக்கின்றவர்களுமாகிய இழிந்த இச்சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன்.


பாடல் எண் : 02
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா
மா கதக்கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசுசேர்
ஆகதர்க்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
வேத ஆகமங்களையும், மந்திரங்களையும், நன்கு பயின்ற வைதிக மாந்தர் வெட்கம் அடையும்படி அம்மொழியின் கூறாகிய பிராகிருத மொழியை ஆரவாரித்துப் பேசி மிக்க கோபத்தையுடைய யானைபோல் திரிந்து நின்றுண்ணும் அழுக்கு மேனியுடைய சமணர்கட்கு நான் எளியேன் அல்லேன், திருஆலவாய் அரன் துணை நிற்பதால்.


பாடல் எண் : 03
அத்தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து சனங்கள் வெட்குற நக்கமே
சித்திரர்க்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே. 

பொருளுரை:
கடவுள் உண்டு என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும் சொல்ல முடியாது என்னும் பொருள்பட அத்திநாத்தி என்று ஒத்தும், ஒவ்வாமலும் கூறும் சமணர்கள் வாதில் அழிந்து தோற்று, எனது கவிதையாகிய வாளால் மடிந்து ஒடிவர். பார்ப்பவர் வெட்கப் படும்படி ஆடையின்றி உலவும் தங்கள் நெறியே மேலானது என சித்திர வார்த்தை பேசுபவர்கட்கு, நான் ஆலவாயன் துணை நிற்றலால் எளியேன் அல்லேன்.


பாடல் எண் : 04
சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமைசேர்
கந்துசேனனும் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
சந்துசேனன், இந்துசேனன், தருமசேனன், மாசுடைய கந்தசேனன், கனகசேனன் முதலான பெயர்களைக் கொண்டு மந்திபோல் திரிந்து, வடமொழி, தென்மொழிகளைக் கற்றதன் பயனாகிய சிவனே முழுமுதற்கடவுள், சைவமே சீரிய சமயநெறி என்னும் உணர்வினைப் பெறாது அகக்கண்ணிழந்து திரியும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன். ஆலவாயன் என்னுள்ளிருந்து அருள்புரிவார்.


பாடல் எண் : 05
கூட்டினார் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் ஒலியின் தொழில்
பாட்டு மெய் சொலிப் பக்கமே செலும் எக்கர்தங்களை பல்லறம்
காட்டியே வரு மாடெலாம் கவர் கையரை கசிவு ஒன்றிலாச்
சேட்டைகட்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
கூண்டிலிருக்கும் கிளியின் ஒலித்தன்மைக்கு ஏற்ப, கிளிவிருத்தம் முதலிய சுவடிகளின் பொருள்களை மெய்யென்று சொல்லி ஏமாற்றுகிறவர்கட்கும், பல தருமங்களைச் செய்தவர்களாக வெளியில் காட்டி அவற்றால் வரும் செல்வங்களைக்கவரும் கீழோர்கட்கும் இரக்கமில்லாத குறும்பர்கட்கும் யான் எளியேனல்லேன். திருஆலவாய் அரன் என்றும் நின்று அருள்புரிவார்.


பாடல் எண் : 06
கனக நந்தியும் புட்ப நந்தியும் பவண நந்தியும் குமணமா
சுனக நந்தியும் குனக நந்தியும் திவண நந்தியும் மொழிகொளா
அனக நந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும்
சினகருக்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
கனக நந்தி, புட்ப நந்தி, பவண நந்தி, குமணமா சுனக நந்தி, குனக நந்தி, திவண நந்தி என எண்ணற்ற பலவகை நந்திகள் என்னும் பெயர் கொண்டவர்களாய் மது உண்பதை ஒழித்து, அவமாகிய நிலையைத் தவமெனக் கொள்ளும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன், திருஆலவாய் அரன் என்னுள் நிற்பதால்.


பாடல் எண் : 07
பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசக
மந்தணம் பலபேசி மாசுறு சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மது புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே. 

பொருளுரை:
சுற்றமும், பற்றும் இல்லை என்று கூறியும், இரகசியமான வாசகங்களைப் பேசியும், குற்றமற்ற ஒழுங்கு நெறியின்றியும், நியாயமற்ற நெறி நின்று, ஆருகத சமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் சமணர்கட்கும், புத்த சமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் புத்தர்கட்கும், அச்சமயங்களில் சித்தி பெற்றோர்கட்கும் திருஆலவாய் அரன் என்றும் துணை நிற்றலால் யான் எளியவன் அல்லேன்.


பாடல் எண் : 08
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்றதீப்
போலியைப் பணியக்கிலாது ஒரு பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின்செலும்
சீலிகட்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
தனக்கு மேலானவரும், எதிரானவரும் இல்லை என்று கருதிய இராவணனது செருக்கை அழித்த, தீயைப்போன்று செந்நிற மேனியுடைய சிவபெருமானைப் பணிந்து, ஏத்தாது பொய்த்தவம் பூண்டு, குண்டிகை, மயிற்பீலி ஆகியவற்றைக் கொண்டு, பாயை அக்குளில் இடுக்கி நடந்து செல்லுங்கால் சிற்றுயிர்க்கு ஊறுநேருமோ என அஞ்சி நடுக்கத்துடன் ஒருவர்பின் ஒருவராய்ச் செல்வதைச் சீலம் எனக்கொள்ளும் சமணர்கட்கு, யான் திருஆலவாய் அரன் என்னுள் துணை நிற்றலால் எளியவனல்லேன்.


பாடல் எண் : 09
பூமகற்கும் அரிக்கும் ஓர்வரு புண்ணியன் அடி போற்றிலார்
சாம் அவத்தையினார்கள் போல் தலையைப் பறித்து ஒரு பொய்த்தவம்
வேம் அவத்தை செலுத்தி மெய்ப்பொடி அட்டி வாய் சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
பிரமனும், திருமாலும் அறியவொண்ணாத புண்ணியனான சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்காது, இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்பவர்போல் தலைமுடியைக் களைந்து, பொய்த்தவத்தால் துன்புறும் நிலையடையும்படி உடம்பை வாட்டி, பொருளற்ற உரைகளைக் கூறுகின்ற சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன், திருஆலவாய் அரன் என்னுள் துணை நிற்றலால்.


பாடல் எண் : 10
தங்களுக்கும் அச்சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நற்சேவடி
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய்த்தவம்
பொங்கு நூல்வழி அன்றியே புலவோர்களைப் பழிக்கும் பொலா
அங்கதர்க்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே.

பொருளுரை:
சமணர்கட்கும், புத்தர்கட்கும் அரியவராகிய, நல்ல சிவந்த திருவடிகளையுடைய எங்கள் தலைவராகிய சிவபெருமானை வழிபடுதலைவிட்டு, பொய்த்தவம் பூண்டு, நல்ல நூல்கள் கூறும் வழியும் நில்லாது அறிஞர்களைப் பொல்லாப் பழிச்சொல் பேசுபவர்கட்கு, யான் திருஆலவாய் அரன் என்னுள் நிற்பதால் எளியேன் அல்லேன்.


பாடல் எண் : 11
எக்கராம் அமண் கையருக்கு எளியேன் அலேன் திருஆலவாய்ச்
சொக்கன் என்னுள் இருக்கவே துளங்கும் முடித் தென்னன் முன்னிவை
தக்கசீர்ப் புகலிக்கு மன்தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய்
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே.

பொருளுரை:
திருஆலவாய் இறைவன் சொக்கநாதன் என் உள்ளத்தில் இருத்தலால், செருக்குடைய சமணர்கட்கு யான் எளியவன் அல்லன் என்று பாண்டிய மன்னன் முன்னிலையில் திருப்புகலியில் அவதரித்த தமிழ் நாதனாகிய ஞானசம்பந்தன் வாய்மையோடு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குத் துன்பம் இல்லை. 

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

திருஆலவாய் திருமுறை திருப்பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ சோமசுந்தரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ அங்கயற்கண்ணி

திருமுறை : இரண்டாம் திருமுறை 66 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமைபங்கன் திருஆலவாயான் திருநீறே.

பொருளுரை:
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.


பாடல் எண் : 02
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.

பொருளுரை:
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.


பாடல் எண் : 03
முத்தி திருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.

பொருளுரை:
திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.


பாடல் எண் : 04
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணம் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.

பொருளுரை:
திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.


பாடல் எண் : 05
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத்தோர்களுக்கு எல்லாம் 
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே.

பொருளுரை:
திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.


பாடல் எண் : 06
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.

பொருளுரை:
அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மனவருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.


பாடல் எண் : 07
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

பொருளுரை:
கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்க நிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.


பாடல் எண் : 08
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவமாவது நீறு
அரா வணங்குத் திருமேனி ஆலவாயான் திருநீறே.

பொருளுரை:
பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.


பாடல் எண் : 09
மாலொடு அயனறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.

பொருளுரை:
நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது.


பாடல் எண் : 10
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே.

பொருளுரை:
மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.


பாடல் எண் : 11
ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

பொருளுரை:
ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வியாழன், 27 ஏப்ரல், 2017

திருஆலவாய் திருமுறை திருப்பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ சோமசுந்தரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ அங்கயற்கண்ணி

திருமுறை : முதல் திருமுறை 94 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
நீலமாமிடற்று ஆலவாயிலான் 
பால தாயினார் ஞாலம் ஆள்வரே.

நீலநிறம் பொருந்திய கண்டத்தினை உடைய திருஆலவாய் இறைவனைச் சென்று தொழுது மனத்தால் அவன் அருகில் இருப்பதாக உணர்பவர்கள், இவ்வுலகை ஆள்வர்.


பாடல் எண் : 02
ஞால ஏழுமாம் ஆலவாயிலார்
சீலமே சொலீர் காலன் வீடவே.

எம பயம் இன்றி வாழ, ஏழுலகங்களிலும் எழுந்தருளியிருக்கும் ஆலவாய் இறைவனது மெய்ப்புகழையே உரையால் போற்றி வருவீர்களாக.


பாடல் எண் : 03
ஆல நீழலார் ஆலவாயிலார்,
கால காலனார் பால தாமினே.

கல்லால மரநிழலில் வீற்றிருப்பவரும், காலனுக்குக் காலனாய் அவனை அழித்தருளிய பெருவீரரும் ஆகிய ஆலவாய் இறைவரை மனத்தால் அணுகியிருப்பீர்களாக.


பாடல் எண் : 04
அந்தமில் புகழ் எந்தை ஆலவாய்
பந்தியார் கழல் சிந்தை செய்ம்மினே.

ஆலவாய்க் கோயிலிலுள்ள எந்தையாகிய சிவபெருமானுடைய அழிவில்லாத புகழுக்கு இருப்பிடமான திருவடிகளை மனங்கொள்ளுங்கள்.


பாடல் எண் : 05
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய்
பாடியே மனம் நாடி வாழ்மினே.

வெற்றியோடு கூடிய ஆனேற்றினானது நான்மாடக்கூடல் என்னும் ஆலவாயின் புகழைப் பாடி மனத்தால் அவ்விறைவனையே நாடி வாழ்வீர்களாக.


பாடல் எண் : 06
அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை
எண்ணியே தொழ திண்ணம் இன்பமே.

தலைமையாளனும் ஆலவாய் என்னும் மதுரைப்பதியின் கோயிலைப் பொருந்தியிருப்பவனுமாகிய சோமசுந்தரப் பெருமானையே எண்ணித் தொழுதுவரின் இன்பம் பெறுவது திண்ணமாகும்.


பாடல் எண் : 07
அம்பொன் ஆலவாய் நம்பனார் கழல்
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே.

அழகிய பொன்மயமான ஆலவாய்த் திருக்கோயிலில் விளங்கும் இறைவனுடைய திருவடிகளே நமக்குச் சார்வாகும் என நம்பி வாழ்பவரின் துன்பம் நீங்கும்.


பாடல் எண் : 08
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய்
உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மையே.

அரக்கனாகிய பெருவலிபடைத்த இராவணனைக் கால் விரலால் நெரித்தருளிய ஆலவாய் அரன் புகழை உரைக்கும் உள்ளத்தார்க்கு அவனது கருணை உளதாகும்.


பாடல் எண் : 09
அருவன் ஆலவாய் மருவினான்தனை
இருவர் ஏத்த நின்று உருவம் ஓங்குமே.

அருவனாய் விளங்கும் இறைவன் திருவாலவாயில் திருமால் பிரமர் ஆகிய இருவர் போற்றும் உருவனாய் மருவி ஓங்கி நிற்கின்றான்.


பாடல் எண் : 10
ஆரம் நாகமாம் சீரன் ஆலவாய்த்
தேரமண் செற்ற வீரன் என்பரே.

பாம்பாகிய ஆரத்தை அணிந்தவனாய், ஆலவாயில் பெரும் புகழாளனாய் விளங்கும் இறைவன், புத்தரையும் சமணரையும் அழித்த பெருவீரன் ஆவான் என்று அடியவர்கள் அவனைப் புகழ்ந்து போற்றுவார்கள்.


பாடல் எண் : 11
அடிகள் ஆலவாய் படிகொள் சம்பந்தன்
முடிவில் இன்தமிழ் செடிகள் நீக்குமே.

ஆலவாயில் எழுந்தருளிய அடிகளாகிய இறைவனது திருவருளில் தோய்ந்த ஞானசம்பந்தனின் அழிவற்ற இனிய இத்தமிழ் மாலை நமக்கு வரும் வினைகளைப் போக்குவதாகும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

திங்கள், 24 ஏப்ரல், 2017

ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை

நட்சத்திரங்கள், திதிகள் எல்லாம் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவை. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி "அட்சய திருதியை" என போற்றப்படுகிறது. "அட்சயம்" என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கிற, ஆரம்பிக்கிற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பயனை தரும் என்பது வேத வாக்கு.


அற்புதத் திருநாள் அட்சய திரிதியை. அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் என்பர். இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. 

தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமி பூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும். அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும்.

வனவாச காலத்தில், சூரிய பகவானை வேண்டி தர்மர் அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அட்சய திருதியை தினத்தில் தான் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான். குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில் தான் பெற்றான். 

மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்கா இடம் பிடித்த நாள். கேரள சொர்ணத்து மனையில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே. ஸ்ரீ லட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும் விளங்குகிறாள். பசுக்களில் கோமாதா, யாகங்களில் தட்சிணை, தாமரையில் கமலை, அவிர் பாகத்தில் ஸ்வாகா தேவி என சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் நாராயணனின் இணைபிரியாத தேவியான லட்சுமியை நாம் அட்சய திரிதியை நாளில் சாஸ்திரப்படி பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிட்டும்.

கவுரவர்களுடன் சூதாடியதன் காரணமாக தனது நாடு, சொத்து, தம்பிகள் அனைவரையும் தர்மர் இழந்தார். பின்னர் தனது மனைவி திரவுபதியையும் பந்தயப் பொருளாக வைத்து தோற்றுப்போனார். இதையடுத்து திரவுபதியை சபைக்கு இழுத்து வரச் சொன்ன துரியோதனன், அவளை துகிலுரிக்க உத்தரவிட்டான். அதன்படி துச்சாதனன் துகிலுரிக்க முற்பட்டான். திரவுபதி அபயம் வேண்டி சபையோரிடம் வேண்டினாள். ஆனால் அந்த சபையில் பீஷ்மர், துரோணாச்சாரியார் போன்றோர் இருந்தும் அவளுக்கு உதவ முன்வரவில்லை. பின்னர் கண்ணனை நினைத்து கைகூப்பி வேண்டினாள். 

அப்போது கிருஷ்ணர் தன் கையை உயர்த்தி, "அட்சய" என்றார். அவரது கையில் இருந்து புறப்பட்ட ஆடை, திரவுபதியின் உடலை சுற்றி வளர்ந்து கொண்டே இருந்தது. துச்சாதனன், திரவுபதியின் புடவையை இழுத்து, இழுத்து கைசோர்ந்து மயங்கி விழுந்துவிட்டான். திரவுபதியின் மானத்தை கிருஷ்ண பகவான் காப்பாற்றிய தினம், "அட்சய திருதியை" ஆகும்.

கிருஷ்ணனின் பால்ய நண்பர் குசேலன். இவர் வறுமையில் வாடிய நிலையில், கிருஷ்ணரை சந்திப்பதற்காகச் சென்றார். அவரை கண்ட மாத்திரத்தில் ஓடோடி வந்து வரவேற்ற கிருஷ்ணர், குசேலர் கொண்டு சென்ற அவலில் ஒருபிடியை எடுத்து வாயில் போட்டு கொண்டு "அட்சயம்" என உச்சரித்தார். மறுவினாடி குசேலன் வீட்டில் செல்வம் குவிந்தது. குழந்தைகளுக்கு நல்ல உணவு, ஆடைகள், ஆபரணங்கள் கிடைத்தன. குடிசை வீடு, பெரிய பங்களாவாக மாறியது. இப்படி குசேலர் எல்லா செல்வங்களையும் பெற்ற திருநாள் "அட்சய திருதியை" தினமாகும்.

நாட்டை இழந்த பாண்டவர்கள், வனவாசத்தின்போது சூரியனை வேண்டி அட்சய பாத்திரம் ஒன்றை பெற்றனர். அந்தப் பாத்திரத்தில் இருந்து உணவைப் பெற்று பாத்திரத்தை கழுவி விட்டால் மீண்டும் உணவு பெற முடியாது. மறுநாள் தான் அதில் இருந்து உணவைப் பெற முடியும்.

இந்த நிலையில் பாண்டவர்களை துன்புறுத்த துரியோதனன் திட்டமிட்டான். இதற்காக அடிக்கடி கோபம் கொள்ளும் துர்வாச முனிவரை அழைத்து உபசரித்து பணிவிடைகள் செய்தான். அவர் மகிழ்ந்து வேண்டிய வரம் கேட்கச் சொல்ல, "காட்டில் உள்ள எங்கள் சகோதரர்களான பாண்டவர்களுக்கும் அருள்புரிய வேண்டும்'" என கேட்டுக்கொண்டான். அவ்வாறே செய்வதாக கூறி துர்வாசர் காட்டிற்கு சென்று பாண்டவர்களை சந்தித்தார்.

அப்போது பாண்டவர்கள் உணவருந்தி முடித்துவிட்டு அட்சய பாத்திரத்தை கவிழ்த்து விட்டிருந்தனர். இதனால் கலக்கமடைந்த பாண்டவர்கள் முனிவரிடம், "ஆற்றுக்கு சென்று நீராடிவிட்டு வாருங்கள்" எனக் கூறினர். தங்கள் தர்ம சங்கடமான நிலையை நினைத்து திரவுபதி, கண்ணனை வேண்டினாள். பகவான் அங்கு தோன்றினார். அட்சய பாத்திரத்தை கொண்டுவரும்படி கூற, அதில் ஒரே ஒரு பருக்கை சாதமும், கீரையும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை பகவான் எடுத்து வாயில் போட்டு வயிற்றை "அட்சய" எனக்கூறி தடவினார். அந்த நேரத்தில் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த துர்வாச முனிவருக்கும், அவரது சீடர்களுக்கும் உணவை உண்ட திருப்தி ஏற்பட்டது. அவர்களால் இனி சாப்பிட முடியாது என்ற நிலையில் பாண்டவர்கள் இல்லத்திற்கு வராமல் திரும்பி சென்றுவிட்டனர். இவ்வாறு கண்ணன், பாண்டவர்களுக்கு அருள்புரிந்த தினமும் அட்சய திருதியை என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. 

அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும்.

அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். "மகிழ்வித்து மகிழ்" என்று சொல்வார்கள். எனவே, மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெறுவோமாக.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||