சனி, 22 ஏப்ரல், 2017

பிரதோஷத்தின் வகைகளும் பயன்களும்

சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவவழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி (சந்திரன்) நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் (புத்தியும் நன்றாகும்) மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் உண்டு. அவற்றையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

பொதுவாக வளர் பிறையிலோ, தேய் பிறையிலோ, மாலை வேளையில் திரயோதசி வந்தால் அது பிரதோஷம் ஆகும். அதுவே சனிக்கிழமைகளில் வந்தால் அது மஹா பிரதோஷமாகும். பிரதோஷம் அன்று மாலை வேலையில் (4.00 மணி முதல் 6.30 மணி வரை) அருகில் இருக்கும் சிவாலயத்திற்க்கு சென்று எல்லாம் வல்ல பெருமானை வழிபடுங்கள் வாழ்வில் சகல வளமும் நலமும் கிட்டும். 


01. தினசரி பிரதோஷம்: தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

02. பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர்பிறை காலத்தில் 13வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு (பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடுதுறை போல்) செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாக அன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.

03. மாதப் பிரதோஷம்: பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க'' வழிபாடு (பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை) செய்வது உத்தம பலனைத் தரும்.

04. நட்சத்திர பிரதோஷம்: பிரதோஷ திதியாகிய "திரயோதசி" திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

05. பூரண பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை" தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

06. திவ்யப் பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று "மரகத லிங்கேஸ்வரருக்கு" அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

07. தீபப் பிரதோஷம்: பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

08. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்: வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

09. மகா பிரதோஷம்: ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட "சுயம்பு லிங்க தரிசனம்" செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்''. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "திருப்பைஞ்ஞீலி'' சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீ வாஞ்சியம்'' சிவ ஆலயம், கும்பகோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்'' சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்'' எனப்படும்.

10. உத்தம மகா_பிரதோஷம்: சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை "ஏகாட்சர பிரதோஷம்" என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின் விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம்: வருடத்துக்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்ம பிரதோஷம்: ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம்: வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். "நான்" என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது "சட்ஜ பிரபா பிரதோஷம்". தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்டதிக் பிரதோஷம்: ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம்: அரிதிலும் அரிது பத்து மகா பிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்.*
   

01 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ தரிசனம்  நல்ல மங்களங்களைத் தரும்.

02 திங்கட்கிழமை பிரதோஷ தரிசனம்  நல்ல சிந்தனைகள் உண்டாகும். அஸ்வமேத யாகங்கள் செய்யக்கூடிய பலன்கள் கிட்டும்.

03 செவ்வாய்க் கிழமை பிரதோஷ தரிசனம்  பஞ்சமும், பட்டினியும் விலகிப் போகும்.

04 புதன்கிழமை பிரதோஷ தரிசனம்  புத்திரப்பேறு கிட்டும். கல்வி, கேள்விகளில் திறமை உண்டாகும்.

05 வியாழக்கிழமை பிரதோஷ தரிசனம்  குருவருளோடு திருவருளும் கைகூடும். 

06 வெள்ளிக்கிழமை பிரதோஷ தரிசனம் – எதிர்ப்புகள் நீங்கும்

07 சனிக்கிழமை பிரதோஷ தரிசனம் – அஷ்ட லட்சுமிகளின் ஆசீர்வாதம் கிடைக்கும். எல்லா பிரதோஷங்களிலும் சனிப் பிரதோஷம் உயர்ந்தது. அதனால் மஹா பிரதோஷம் என்கிறார்கள்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக