செவ்வாய், 3 ஜனவரி, 2017

திருக்கடவூர் அபிராமி அம்மை திருப்பதிகம்


தை அமாவாசையன்று அபிராமியின் தியானத்திலிருந்தார் சுப்ரமணியம் எனும் பக்தர். அன்றைய தினம் அபிராமி கோயிலுக்கு வந்த சரபோஜி மன்னர் அன்றைய  திதி என்ன என்று சுப்ரமணியத்திடம் கேட்க, அவரோ அன்னை அபிராமியின் முக லாவண்யத்தில் மனதைப் பறிகொடுத்தவராய் ‘பவுர்ணமி’ எனக் கூறிவிட்டார். அவர் சொன்ன தவறை மெய்ப்பிக்க வேண்டும் என்று மன்னன் கடுமையாகச் சொல்லி விடவே, சுப்ரமணியமும் அபிராமி அந்தாதி என்ற அற்புத நூல் இயற்றி, அன்னையின் கருணையால் அரசனின் தண்டனையிலிருந்து தப்பினார். அவரே அபிராமி பட்டர் எனவும் சிறப்பிக்கப்பட்டார். அந்த அபிராமி பட்டர் இயற்றிய இன்னொரு நூல் தான் "அபிராமி அம்மை பதிகம்". இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்தால் எல்லா துன்பங்களும் விலகும், சகல செல்வங்களும் கிட்டும். 

தூய தமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதன் நால்
வாய் ஐங்கரன் தாள் வழுத்துவாம் - நேயர் நிதம்
எண்ணும் புகழ்க் கடவூர் எங்கள் அபிராமவல்லி 
நண்ணும் பொற்பாதத்தில் நன்கு. ......... (01)

எந்த செயல் தொடங்குவதற்கு முன் கணபதியைத் தோத்திரம் செய்து வணங்குவது என்பது தமிழ் இலக்கியத்தில் காணப்படும் ஒரு மரபாகும். அந்த வகையில் தான் இயற்றப் போகும் இந்த பதிக ஆரம்பத்தில் விநாயகப்பெருமானை துதித்து தூய தமிழ்ப் பாமாலை அணிவிப்பதற்கு வேண்டுகிறார். நாமும் அவருடன் வேண்டிக்கொள்வோம் திருக்டையூர்த் திருத்தலத்தில் பிள்ளையார் “கள்ள வினாயகர்” என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். அபிராமி பட்டர் இவ்விநாயகரையும் தன் பதிகத்தால் துதி செய்துள்ளார். 

கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும் கலா மதியை நிகர் வதனமும்
கருணை பொழி விழிகளும் விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும்
சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு மணி மிடறும் மிக்க
சதுர் பெருகு துங்க பாசாங்குசம் இலங்கு சதுர் கரதலமும் விரல் அணியும் அரவும்
புங்கவர்க்கு அமுது அருளும் அந்தர குசங்களும் பொலியும் நவமணி நூபுரம்
பூண்ட செஞ்சேவடியை நாளும் புகழ்ந்துமே போற்றி என வாழ்த்த விடைமேல்
மங்களம் மிகுந்த நின் பதியுடன் வந்து அருள்செய் வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (02)


கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமிய. ......... (03)


சந்திர சடாதரி முகுந்த சோதரி துங்க சலச லோசன மாதவி
சம்ப்ரம பயோதரி சுமங்கலி சுலட்சணி சாற்ற அரும் கருணாகரி
அந்தரி வராகி சாம்பவி அமர தோத்ரி அமலை செகசால சூத்ரி
அகில ஆத்ம காரணி வினோத சய நாரணி அகண்ட சின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச சுகுமாரி கௌமாரி உத்-
துங்க கல்யாணி புஷ்பாஸ்திராம் புய பாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி
வந்து அரி மலர்ப் பிரமராதி துதி வேத ஒலிவளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (04)


கார் அளக பந்தியும் பந்தியின் அலங்கலும் கரிய புருவச் சிலைகளும்
கர்ண குண்டலமும் மதிமுக மண்டலமும் நுதல் கத்தூரிப் பொட்டும் இட்டுக்
கூர் அணிந்திடு விழியும் அமுத மொழியும் சிறிய கொவ்வையின் கனி அதரமும்
குமிழ் அனைய நாசியும் குந்த நிகர் தந்தமும் கோடு சோடான களமும்
வார் அணிந்து இறுமாந்த வனமுலையும் மேகலையும் மணி நூபுரப் பாதமும்
வந்து எனது முன் நின்று மந்தகாசமுமாக வல்வினையை மாற்றுவாயே
ஆர மணி வானில் உறை தாரகைகள் போல நிறை ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (05)


வாச மலர் மருவளக பாரமும் தண் கிரண மதி முகமும் அயில் விழிகளும்
வள்ள நிகர் முலையும் மான் நடையும் நகை மொழிகளும் வளமுடன் கண்டு மின்னார்
பாச பந்தத்திடை மனம் கலங்கித் தினம் பல வழியும் எண்ணி எண்ணிப்
பழி பாவம் இன்னது என்று அறியாமல் மாயப்ரபஞ்ச வாழ்வு உண்மை என்றே
ஆசை மேலிட்டு வீணாக நாய் போல் திரிந்து அலைவது அல்லாமல் உன்றன்
அம்புயப் போதெனும் செம்பதம் துதியாத அசடன் மேல் கருணை வருமோ
மாசு இலாது ஓங்கிய குணாகரி பவானி சீர்வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (06)


மகர வார் குழை மேல் அடர்ந்து குமிழ் மீதினில் மறைந்து வாளைத் துறந்து
மைக் கயலை வேண்டி நின் செங்கமல விழி அருள் வரம் பெற்ற பேர்கள் அன்றோ
செகம் முழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்து மேல் சிங்க ஆதனத்தில் உற்றுச்
செங்கோலும் மனுநீதி முறைமையும் பெற்று மிகு திகிரி உலகு ஆண்டு பின்பு
புகர் முகத்து ஐராவதப் பாகராகி நிறை புத்தேளிர் வந்து போற்றிப்
போக தேவேந்திரன் எனப் புகழ விண்ணில் புலோமசையொடும் சுகிப்பர்
அகர முதலாகி வளர் ஆனந்த ரூபியே ஆதிகடவூரின் வாழ்வே.
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (07)


நன்று என்று தீது என்று நவிலும் இவ்விரண்டனுள் நன்றதே உலகில் உள்ளோர்
நாடுவார் ஆதலின் நானுமே அவ்விதம் நாடினேன் நாடினாலும்
இன்று என்று சொல்லாமல் நினது திருவுள்ளமது இரங்கி அருள் செய்குவாயேல்
ஏழையேன் உய்குவேன் மெய்யான மொழி இஃது உன் இதயம் அறியாதது உண்டோ
குன்றம் எல்லாம் உறைந்து என்றும் அன்பர்க்கு அருள் குமார தேவனை அளித்த
குமரி மரகத வருணி விமலி பைரவி கருணை குலவு கிரி ராச புத்ரி
மன்றல் மிகு நந்தன வனங்கள் சிறை அளி முரல வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (08)


மறி கடல்கள் ஏழையும் திகிரி இரு நான்கையும் மாதிரக் கரி எட்டையும்
மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும் மாகூர்மம் ஆனதையும் ஓர்
பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈர் ஏழையும் புத்தேளிர் கூட்டத்தையும்
பூமகளையும் திகிரி மாயவனையும் அரையில் புலி ஆடை உடையானையும்
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப் பழைமை முறைமை தெரியாத நின்னை
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல் மொழிகின்றது ஏது சொல்வாய்
அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (09)


ஒரு நாள் இரண்டு நாள் அல்ல நான் உலகத்து உதித்த இந்நாள் வரைக்கும்
ஒழியாத கவலையால் தீராத இன்னல் கொண்டு உள்ளம் தளர்ந்து மிகவும்
அருநாண் இயற்றிட்ட விற்போல் இருக்கும் இவ்வடிமைபால் கருணை கூர்ந்து இங்கு
அஞ்சேல் எனச் சொல்லி ஆதரிப்பவர்கள் உனை அன்றியிலை உண்மையாக
இரு நாழிகைப் போதும் வேண்டாது நிமிடத்தில் இவ்வகில புவனத்தையும்
இயற்றி அருளும் திறம் கொண்ட நீ ஏழையேன் இன்னல் தீர்த்து அருளல் அரிதோ
வரு நாவலூரர் முதலோர் பரவும் இனிய புகழ்வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (10)


வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர அருள்மழை பொழிந்தும் இன்ப 
வாரிதியிலே நின்னது அன்பு எனும் சிறகினால் வருந்தாமலே அணைத்துக்
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்டம் முதலான சீவ
கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக் குறையாமலே கொடுத்தும்
நீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் நின்னுதர பந்தி பூக்கும்
நின்மலீ அகிலங்களுக்கு அன்னை என்று ஓதும் நீலி என்று ஓதுவாரோ
ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்கு புகழ் ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (11)


எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல் ஏறிட்டு ஒறுக்க அந்தோ
எவ்விதம் உளம் சகித்து உய்குவேன் இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில்
நண்ணி எள் அளவு சுகம் ஆனது ஒரு நாளினும் நான் அனுபவித்தது இல்லை
நாடெலாம் அறியும் இது கேட்பது ஏன் நின்னுளமும் நன்றாய் அறிந்து இருக்கும்
புண்ணியம் பூர்வ சனனத்தினில் செய்யாத புலையன் ஆனாலும் நினது
பூரண கடாட்ச வீட்சண்ணியம் செய்து எனது புன்மையை அகற்றி அருள்வாய்
மண்ணவர்கள் விண்ணவர்கள் நித்தமும் பரவும் இசை வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (12)


பல் குஞ்சரம் தொட்டு எறும்பு கடையானது ஒரு பல்லுயிர்க்கும் கல்லிடைப்
பட்ட தேரைக்கும் அன்று உற்பவித்திடு கருப்பை உறு சீவனுக்கும்
மல்கும் சராசரப் பொருளுக்கும் இமையாத வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும் அவரவர் மனச் சலிப்பு இல்லாமலே
நல்கும் தொழில் பெருமை உண்டாய் இருந்தும் மிகு நவநிதி உனக்கு இருந்தும்
நான் ஒருவன் வறுமையில் சிறியன் ஆனால் அந்நகைப்பு உனக்கே அல்லவோ
அல் கலந்து உம்பர் நாடு அளவு எடுக்கும் சோலை ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (13)


தெரிந்தோ அலாது தெரியாமலோ இவ்வடிமை செய்திட்ட பிழை இருந்தால்
சினம் கொண்டு அது ஓர் கணக்காக வையாது நின் திருவுளம் இரங்கி மிகவும்
பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து இனல் படாது நல்வரம் அளித்துப்
பாதுகாத்து அருள் செய்ய வேண்டும் அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி
புரந்தரன் போதன் மாதவன் ஆகியோர்கள் துதி புரியும் பதாம்புய மலர்ப்
புங்கவி புராந்தகி புரந்தரி புராதனி புராணி திரி புவனேசுவரி
மருந்தினும் நயந்த சொற்பைங்கிளி வராகி எழில்வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (14)


நீடு உலகங்களுக்கு ஆதாரமாய் நின்று நித்தமாய் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத்து இரண்டு அறம் வளர்க்கின்ற நீ மனைவியாய் இருந்தும்
வீடு வீடுகள் தோறும் ஓடிப் புகுந்து கால் வேசற்று இலச்சையும் போய்
வெண் துகில் அரைக்கு அணிய விதியற்று நிர்வாண வேடமும் கொண்டு கைக்கோர்
ஓடேந்தி நாடெங்கும் உள்ளம் தளர்ந்து நின்று உன்மத்தனாகி அம்மா
உன் கணவன் எங்கெங்கும் ஐயம் புகுந்து ஏங்கி உழல்கின்றது ஏது சொல்வாய்
ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும் ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (15)


வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும் மருந்தினுக்கா வேண்டினும்
மறந்தும் ஓர் பொய்ம்மொழி சொலாமலும் தீமையாம் வழியினில் செல்லாமலும்
விஞ்சு நெஞ்சு அதனில் பொறாமை தரியாமலும் வீண் வம்பு புரியாமலும்
மிக்க பெரியோர்கள் சொலும் வார்த்தை தள்ளாமலும் வெகுளியவை கொள்ளாமலும்
தஞ்சமென நினது உபய கஞ்சத் துதித்திடத் தமியேனுக்கு அருள் புரிந்து
சர்வ காலமும் எனைக் காத்து அருள வேண்டினேன் சலக் கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாவி ஆம்பல் மலரும் வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (16)


ஞானம் தழைத்து உன் சொரூபத்தை அறிகின்ற நல்லோர் இடத்தினில் போய்
நடுவினில் இருந்து உவந்து அடிமையும் பூண்டு அவர் நவிற்றும் உபதேசம் உட்கொண்டு
ஈனந்தனைத் தள்ளி எனது நான் எனும் மானம் இல்லாமலே துரத்தி
இந்திரிய வாயில்களை இறுகப் புதைத்து நெஞ்சு இருளற விளக்கேற்றியே
ஆனந்தமான விழி அன்னமே உன்னை என் அகத் தாமரைப் போதிலே
வைத்து வேறே கவலை அற்று மேலுற்ற பரவசமாகி அழியாததோர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண் ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (17)


எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும் அவர்கள் கேட்டு இவ்
இன்னல் தீர்த்து உள்ளத்து இரங்கி நன்மைகள் செயவும் எள் அளவும் முடியாது நின்
உன்னதம் மருவும் கடைக் கண் அருள் சிறிது செயின் உதவாத நுண் மணல்களும்
ஓங்கு மாற்றுயர் சொர்ண மலையாகும் அதுவன்றி உயர் அகில புவனங்களைக்
கனமுடன் அளித்து முப்பத்து இரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும் நின்னைக்
கருது நல் அடியவர்க்கு எளிவந்து சடுதியில் காத்து ரட்சித்தது ஓர்ந்து
வனசம் நிகர் நின்பாதம் நம்பினேன் வந்து அருள்செய் வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (18)


சலதி உலகத்தில் சராசரங்களை ஈன்ற தாயாகினால் எனக்குத்
தாய் அல்லவோ யான் உன் மைந்தன் அன்றோ எனது சஞ்சலம் தீர்த்து நின்றன்
முலை சுரந்து ஒழுகு பாலூட்டி என் முகத்தை உன் முந்தானையால் துடைத்து
மொழிகின்ற மழலைக்கு உகந்து கொண்டு இளநிலா முறுவல் இன்புற்று அருகில் யான்
குலவி விளையாடல் கொண்டு அருள்மழை பொழிந்து அங்கை கொட்டி வா என்று அழைத்துக்
குஞ்சர முகன் கந்தனுக்கு இளையன் என்று எனைக் கூறினால் ஈனம் உண்டோ
அலை கடலிலே தோன்றும் ஆராத அமுதமே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (19)


கருநீல வடிவமார் மாடேறி உத்தண்ட கன தண்ட வெம் பாசமும்
கைக்கொண்டு சண்டமா காலன் முன் எதிர்க்க மார்க்கண்டன் வெகுண்டு நோக்க
இரு நீலகண்டன் எனும் நின்பதியை உள்ளத்தில் இன்பு கொண்டு அருச்சனை செய
ஈசன் அவ் இலிங்கம் பிளப்ப நின்னொடு தோன்றி யமனைச் சூலத்தில் ஊன்றிப்
பெருநீல மலையென நிலத்தில் அன்னவன் விழப் பிறங்கு தாளால் உதைத்துப்
பேசுமுனி மைந்தனுக்கு அருள் செய்தது உனதரிய பேரருளின் வண்ணம் அல்லவோ
வருநீல மடமாதர் விழியென்ன மலர் வாவி வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (20)


கைப்போது கொண்டு உன் பதப்போது தன்னில் கணப்போதும் அர்ச்சிக்கிலேன்
கண் போதினால் உன் முகப்போது தன்னை யான் கண்டு தரிசனை புரிகிலேன்
முப்போதில் ஒரு போதும் என் மனப்போதிலே முன்னி உன் ஆலயத்தின்
முன்போதுவார் தமது பின் போத நினைகிலேன் மோசமே போய் உழன்றேன்
மைப் போதகத்திற்கு நிகரெனப் போது எருமைக் கடா மீது ஏறியே
மாகோர காலன் வரும் போது தமியேன் மனம் கலங்கித் தியங்கும்
அப்போது வந்து உன் அருட்போது தந்தருள் ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (21)


மிகையும் துரத்த வெம் பிணியும் துரத்த வெகுளியானதும் துரத்த
மிடியும் துரத்த நரை திரையும் துரத்த மிகு வேதனைகளும் துரத்த
பகையும் துரத்த வஞ்சனையும் துரத்த பசி என்பதும் துரத்த
பாவம் துரத்த பதி மோகம் துரத்தப் பல காரியமும் துரத்த
நகையும் துரத்த ஊழ் வினையும் துரத்த என் நாளும் துரத்த வெகுவாய்
நா வறண்டு ஓடிக் கால் தளர்ந்திடும் என்னை நமனும் துரத்துவானோ
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (22)


சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச தனயை மாதேவி நின்னைச்
சத்யமாய் நித்யம் உள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோய் இன்மை கல்வி தன தானியம் அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுக ஆனந்த வாழ்வு அளிப்பாய்
சுகிர்த குணசாலி பரிபாலி அநுகூலி திரிசூலி மங்கள விசாலி
மகவு நான் நீ தாய் அளிக்கொணாதோ மகிமை வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (23)


குறிப்பு: இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கடவூர் அபிராமி அம்மை திருப்பதிகம் முற்றிற்று --- ||

|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

06 திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் 41 - 50


பாடல் எண் : 41
முதலைச் செவ்வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி
விதலைச் செய்வேனை விடுதி கண்டாய் விடக்கு ஊன்மிடைந்த
சிதலைச் செய் காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ
திதலைச் செய் பூண்முலை மங்கை பங்கா என் சிவகதியே.

பொருளுரை:
தேமல் படர்ந்த அணி பூண்ட கொங்கைகளையுடைய உமை பாகனே! என் இன்ப நெறியே! சிவபெருமானே! முதலை போன்ற கொடுமையையுடைய, சிவந்த வாயைக் கொண்டுள்ள மாதரது ஆசையாகிய வெப்பம் மிகுந்த நீரில் ஆழ முழுகி, நடுக்கம் உறுகின்ற என்னை, விட்டு விடுவாயோ? புலால் நாற்றமுடைய தசை நிறைந்த, நோய்க்கு இடமாகிய உடம்பைத் தாங்க மாட்டேன். இந்நிலை தகுமோ? தகுமோ?.


பாடல் எண் : 42
கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா
விதி அடியேனை விடுதி கண்டாய் வெண்தலை முழையில்
பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க அஞ்சி
மதிநெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே.

பொருளுரை:
வெண்மையான தலையாகிய வளையை இருப்பிடமாக உடைய ஒளியையுடைய பாம்பானது, நோக்கிச் சற்றுப் படமெடுத்து அதனைச் சுருக்கிக் கொள்ளவும், பிறைச்சந்திரன், அதனைக் கண்டு பயந்து, கங்கையாகிய பெரிய நீர் நிலையில் மூழ்கி மறைந்து கொள்ளும் சடையையுடைய தலைவனே! அடியேனுக்கு உயர் ஞான நெறியை உன் திருவடிகள் கொடுத்தருளவும், உடல் நீங்கப் பெறவில்லை. ஊழ்வினையுடைய அடியேனை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 43
மன்னவனே ஒன்றும் ஆறு அறியாச் சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேத மெய்ந்நூல்
சொன்னவனே சொல் கழிந்தவனே கழியாத் தொழும்பர்
முன்னவனே பின்னும் ஆனவனே இம் முழுதையுமே.

பொருளுரை:
மேலான வேதமாகிய உண்மை நூலினைச் சொன்னவனே! சொல்லினுக்கு அப்பாற்பட்டவனே! நீங்காத அடியார்க்கு முன் நிற்பவனே! அவர்க்கு ஆதரவாகப் பின் நிற்பவனும், இவ்வெல்லாமும் ஆனவனே! தலைவனே! உன்னை வந்து கலக்கும் விதத்தை அறியாத சிறியேனுக்கு இன்ப விளக்கமாய்த் திகழ்பவனே! விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 44
முழுது அயில் வேல் கண்ணியர் என்னும் மூரித் தழல் முழுகும்
விழுது அனையேனை விடுதி கண்டாய் நின்வெறி மலர்த்தாள்
தொழுது செல்வானத் தொழும்பரில் கூட்டிடு சோத்தம் பிரான்
பழுது செய்வேனை விடேல் உடையாய் உன்னைப் பாடுவனே.

பொருளுரை:
எம்பெருமானே! உடையவனே! முழுக் கூர்மையை உடைய வேற்படை போன்ற கண்களையுடைய மாதரார் என்கிற பெரு நெருப்பில் முழுகுகின்ற வெண்ணெய் போன்ற என்னை விட்டு விடுவாயோ? உன்னை நான் புகழ்ந்து பாடுவேன். உனது மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடியை வணங்கிச் செல்லுகின்ற பரவெளித் தொண்டரோடு சேர்ப்பாயாக. குற்றம் செய்யும் என்னைக் கைவிடாதே! வணக்கம்.


பாடல் எண் : 45
பாடிற்றிலேன் பணியேன் மணி நீ ஒளித்தாய்க்குப் பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய் வியந்து ஆங்கு அலறித்
தேடிற்றிலேன் சிவன் எவ்விடத்தான் எவர் கண்டனர் என்று
ஓடிற்றிலேன் கிடந்து உள் உருகேன் நின்று உழைத்தனனே.

பொருளுரை:
மாணிக்கமே! நின் புகழைப் பாடமாட்டேன். நின்னை வணங்கேன். எனக்கு ஒளித்துக் கொண்ட உன் பொருட்டே, பசிய ஊனுடம்பைத் தொலைத்திடாத என்னை விட்டு விடுவாயோ? வியப்படைந்து அவ்விடத்தே, அலறித் தேடிற்றிலேன்; சிவபெருமான் எவ்விடத்திலுள்ளான்? யார் அவனைக் கண்டனர்? என்று கேட்டு ஓடிற்றிலேன். மனம் கசிந்து அன்பு செய்யேன்; வீணே நின்று வருந்தினேன்.


பாடல் எண் : 46
உழைதரு நோக்கியர் கொங்கை பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்
விழைதருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்
பழைதரு மாபரன் என்று என்று அறைவன் பழிப்பினையே.

பொருளுரை:
மான் போன்ற பார்வையையுடைய பெண்டிரது, கொங்கையின்கண் பலாக்கனியில் மொய்க்கும் ஈயை ஒத்து விரும்புகின்ற என்னை விட்டு விடுவாயோ? விட்டு விடுவாயாயின், கடல் விடமுண்ட மேகம் போன்ற கருமையான கழுத்தை உடையவன்; குணம் இல்லாதவன்; மானிடன்; குறைந்த அறிவுடையவன்; பழைய பெரிய பரதேசி; என்று அடிக்கடி உன் இகழ்ச்சியை எடுத்துச் சொல்வேன்.


பாடல் எண் : 47
பழிப்பில் நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து
விழித்திருந்தேனை விடுதி கண்டாய் வெண்மணிப் பணிலம்
கொழித்து மந்தாரம் மந்தாகினி நுந்தும் பந்தப் பெருமை
தழிச்சிறை நீரில் பிறைக்கலம் சேர்தரு தாரவனே.

பொருளுரை:
ஆகாய கங்கை, வெண்மையான மணியாகிய முத்தினையும், சங்கினையும், ஒதுக்கி மந்தார மலர்களைத் தள்ளுகின்ற அணையாகிய பெருமையைப் பொருந்திய சிறைப்பட்ட அந்நீரில், பிறையாகிய தோணி சேர்தற்கிடமாகிய, கொன்றை மாலையை யுடையவனே! பழிப்பற்ற உன் திருவடியின் பழம் தொண்டினை அடைந்து, அது நழுவி விழ, உன்னை நிந்தித்துக் கொண்டு, திகைத் திருந்த என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 48
தாரகை போலும் தலைத்தலை மாலை தழல் அரப் பூண்
வீர என் தன்னை விடுதி கண்டாய் விடின் என்னை மிக்கார்
ஆரடியான் என்னின் உத்தரகோச மங்கைக்கு அரசின்
சீர் அடியார் அடியான் என்று நின்னைச் சிரிப்பிப்பனே.

பொருளுரை:
நட்சத்திரம் போல, தலையில் தலைமாலையையும், நெருப்புப் போற்கொடிய பாம்பாகிய ஆபரணத்தையும் அணிந்த வீரனே! என்னை விட்டு விடுவாயோ? விட்டுவிடில் மேலோர் என்னை நோக்கி, யாருடைய அடியான் என்று கேட்டால், திருவுத்தரகோச மங்கைக்கு வேந்தனாகிய சிவபிரானது சிறப்புடைய அடியாருக்கு அடியவன் என்று சொல்லி, அவர்கள் உன்னைச் சிரிக்கும்படி செய்வேன்.


பாடல் எண் : 49
சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற்கு என்று
விரிப்பிப்பன் என்னை விடுதி கண்டாய் விடின் வெங்கரியின்
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன் நஞ்சு ஊண் பிச்சன் ஊர்ச் சுடுகாட்டு
எரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப் பிச்சன் என்று ஏசுவனே.

பொருளுரை:
என்னை நீ விட்டு விடுவாயோ? விட்டுவிட்டால், என்னை நீ சினந்து தள்ளிய குற்றத்தை, பிறர் நகையாடும்படி செய்வேன். எனது தொண்டையும் ஈசனுக்கே என்று எல்லோரும் சொல்லும்படி செய்வேன். கொடிய யானையின் தோலைப் பூண்ட பித்தன்; புலித்தோல் ஆடையணிந்த பித்தன்; விடத்தை உண்ட பித்தன்; ஊர்ச் சுடுகாட்டு நெருப்போடு ஆடும் பித்தன்; என்னையும் அடிமையாகக் கொண்ட பித்தன்; என்று உன்னை இகழ்ந்து உரைப்பேன்.


பாடல் எண் : 30
ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதி கண்டாய் செம்பவள வெற்பின்
தேசுடையாய் என்னை ஆளுடையாய் சிற்றுயிர்க்கு இரங்கிக்
காய்சின ஆலம் உண்டாய் அமுது உண்ணக் கடையவனே.

பொருளுரை:
செந்நிறமுடைய பவள மலை போன்ற ஒளியுடைய திருமேனியனே! என்னை அடிமையாக உடையவனே! சிற்றறிவும் சிறுதொழிலுமுடைய தேவர்களுக்கு இரங்கி, அவர்கள் அமுதம் உண்ணுதற் பொருட்டு, கொல்லும் வேகத்தோடு எழுந்த ஆல கால விடத்தை உண்டவனே! கடைப்பட்டவனாகிய நான் உன்னை இகழ்ந்து பேசினாலும், வாழ்த்தினாலும், எனது குற்றத்தின் பொருட்டே மனம் வாடி, துக்கப்படுவேன்; அவ்வாறுள்ள என்னை விட்டு விடுவாயோ?.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் திருப்பதிகம் முற்றிற்று --- ||

|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

06 திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் 31 - 40


பாடல் எண் : 31
சச்சையனே மிக்க தண் புனல் விண் கால் நிலம் நெருப்பாம்
விச்சையனே விட்டிடுதி கண்டாய் வெளியாய் கரியாய்
பச்சையனே செய்ய மேனியனே ஒண் பட அரவக்
கச்சையனே கடந்தாய் தடந்தாள அடற்கரியே.

பொருளுரை:
இளமையுடைய தலைவனே! மிக்க குளிர்ச்சியுள்ள நீரும், ஆகாயமும், காற்றும், நிலமும், தீயுமாக நிற்கின்ற வித்தையுடையவனே! வெண்மை நிறமுடையவனே! கருமை நிறமுடையவனே! பசுமை நிறமுடையவனே! செம்மேனியுடையவனே! அழகிய படத்தையுடைய பாம்பாகிய அரைக்கச்சினை அணிந்தவனே! பெரிய அடிகளையுடைய வலி அமைந்த யானையை வென்றவனே! விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 32
அடற்கரி போல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை
விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்க்கு அல்லால்
தொடற்கரியாய் சுடர் மாமணியே சுடு தீச்சுழலக்
கடற்கரிதாய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே.

பொருளுரை:
மேலாகிய அடியார்களுக்கு அல்லாது ஏனையோர்க்குப் பற்றுதற்கு அருமையானவனே! ஒளி விளங்கும் பெரிய மாணிக்கமே! சுடும் தீயாகிய ஒரு பூதமும் நிலைகலங்க, கடலின் கண் அருமையாய் உண்டாகிய நஞ்சை அமுதாக்கிய நீலகண்டப் பெருமானே! விடுதற்கு அருமையானவனே! வலி பொருந்திய யானையைப் போன்ற ஐம்புல ஆசைக்குப் பயந்து உள்ளம் ஒடுங்கிய என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 33
கண்டது செய்து கருணை மட்டுப் பருகிக் களித்து
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய் நின் விரை மலர்த்தாள்
பண்டு தந்தால் போல் பணித்து பணிசெயக் கூவித்து என்னைக்
கொண்டு என் எந்தாய் களையாய் களையாய குதுகுதுப்பே.

பொருளுரை:
எம் தந்தையே! உன் கருணையாகிய தேனைப் பருகிக் களிப்படைந்து, மனம் போனவாறு செய்து, செருக்கித் திரிகின்ற என்னை விட்டு விடுவாயோ? உனது, மணம் அமைந்த தாமரை மலர் போன்ற திருவடியை முன்னே கொடுத்து அருளினாற்போல கொடுத்தருளி, உன் திருத்தொண்டினைச் செய்ய அழைப்பித்து என்னை ஏற்றுக் கொண்டு வீடுபேற்றுக்கு இடையூறாய் உள்ள களிப்பினைக் களைவாயாக.


பாடல் எண் : 34
குதுகுதுப்பு இன்றி நின்று என் குறிப்பே செய்து நின் குறிப்பில்
விதுவிதுப்பேனை விடுதி கண்டாய் விரையார்ந்து இனிய
மதுமதுப் போன்று என்னை வாழைப் பழத்தின் மனம் கனிவித்து
எதிர்வது எப்போது பயில்விக் கயிலைப் பரம்பரனே.

பொருளுரை:
நிறைந்த மலர்களையுடைய கயிலையில் வாழ்கின்ற மிகமேலானவனே! உன் திருவுளக் கருத்திற்கியைய நடப்பதில் மகிழ்ச்சியின்றி நின்று என் குறிப்பின்படி செய்து, உன் குறிப்பினை அறிவதில் விரைகின்ற என்னை விட்டு விடுவாயோ? வாழைப் பழத்தைப் போல என்னை மனம் குழையச் செய்து, மணம் நிறைந்து இனிதாய் இருக்கின்ற ஓர் இனிமையில் மற்றோர் இனிமை கலந்தது போன்று நீ எதிர்ப்படுவது எக்காலம்?.


பாடல் எண் : 35
பரம்பரனே நின்பழ அடியாரொடும் என்படிறு
விரும்பரனே விட்டிடுதி கண்டாய் மென் முயற்கறையின்
அரும்பர நேர் வைத்து அணிந்தாய் பிறவியை வாயரவம்
பொரும் பெருமான் வினையேன் மனம் அஞ்சி பொதும்பு உறவே.

பொருளுரை:
மெல்லிய மதிக்கொழுந்தையும், பாம்பையும் சமமாக வைத்து அணிந்தவனே! எம்பிரானே! தீவினையுடைய நான், மனம் நடுங்கிப் புகலிடம் அடையும்படி, பிறப்பாகிய ஐந்தலை நாகம் தாக்குகின்றது. மிக மேலானவனே! உன் பழைய அடியார்களது உண்மைத் தொண்டோடும், எனது வஞ்சத் தொண்டினையும் ஏற்றுக் கொள்ளுகின்ற சங்காரக் கடவுளே! என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 36
பொதும்புறு தீப்போல் புகைந்து எரிய புலன் தீக்கதுவ
வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரையார் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு
அதும்பும் கொழுந்தேன் அவிர்சடை வானத்து அடல் அரைசே.

பொருளுரை:
மனம் நிறைந்த, தேன் ததும்புகின்ற மந்தார மலரில் தாரமாகிய வல்லிசையைப் பழகி, பின் மந்தமாகிய மெல்லிசையை ஒலிக்கின்ற, வண்டுகள் அழுந்தித் திளைக்கின்ற செழுமையாகிய தேனோடு கூடி விளங்குகின்ற சடையினையுடைய, பரமாகாயத்திலுள்ள வலிமை மிக்க அரசனே! மரப்பொந்தினை அடைந்த நெருப்புப் போல, புகைந்து எரிகின்ற அந்தப் புலன்களாகிய நெருப்புப்பற்று தலால் வெப்பமுறுகின்ற என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 37
அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல் என்னின் அல்லால்
விரைசேர் முடியாய் விடுதி கண்டாய் வெண்ணகைக் கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா
வரை சேர்ந்து அடர்ந்து என்ன வல்வினை தான் வந்து அடர்வனவே.

பொருளுரை:
வெண்மையான பல்லினையும், கருமையான கண்ணையும் உடைய, திருப்பாற்கடலில் தோன்றிய திருமகள் வணங்கிப் பொருந்திய அழகிய திருப்பாதங்களையுடைய, பாம்பணிந்த பெருமானே! அரசனே! மணம் பொருந்திய முடியினையுடையவனே! மலைகள் ஒன்று சேர்ந்து தாக்கினாற்போல, கொடிய வினைப் பயன்கள் வந்து தாக்குகின்றன. அறிவில்லாத சிறியேனது குற்றத்திற்குத் தீர்வாக, அஞ்சற்க என்று நீ அருள் செய்தல் அல்லாது விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 38
அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி அஞ்சொல் நல்லார் அவர் தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய் விரிந்தே எரியும்
சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே தொழும்பர்க்கு அமுதே
தொடர்வு அரியாய் தமியேன் தனி நீக்கும் தனித்துணையே.

பொருளுரை:
பரந்து எரிகின்ற நெருப்பை ஒத்தவனே! சுடுகாட்டின் அரசனே! தொண்டர்க்கு அமுதமே! அணுகுதற்கு அரியவனே! தனியேனது, தனிமையை நீக்குகின்ற தனித்துணையே! வருந்துகின்ற புலன்களால் உன்னைப் பிரிந்து அஞ்சி, இன்சொற்களையுடைய மாதர்களது மயக்கினை விட்டு நீங்கும் ஆற்றல் இல்லாத என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 39
தனித்துணை நீ நிற்க யான் தருக்கி தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய் வினையேனுடைய
மனத்துணையே என் தன் வாழ் முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே
தினைத் துணையேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே.

பொருளுரை:
வினையேனது, மனத்துக்குத் துணையே! என்னுடைய வாழ்வுக்குக் காரணமானவனே! எனக்கு இளைத்த காலத்தில் நிதியாய் இருப்பவனே! துன்பங்களுக்கு ஆதாரமாகிய உடம்பென்னும் திண்ணிய வலையிற் கிடப்பதைத் தினை அளவு நேரங்கூடப் பொறுக்கமாட்டேன். ஒப்பற்ற துணையாகிய நீ இருக்க, செருக்கடைந்து, தலையாலே நடந்த வினையைத் துணையாகவுடைய என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 40
வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் வெண்மதியின் ஒற்றைக்
கலைத் தலையாய் கருணாகரனே கயிலாயம் என்னும்
மலைத் தலைவா மலையாள் மணவாள என் வாழ் முதலே.

பொருளுரை:
வெள்ளிய சந்திரனது ஒரு கலையைத் தலையில் அணிந்தவனே! கருணைக்கு இருப்பிடமானவனே! கயிலாயம் என்கிற மலைக்குத் தலைவனே! மலை மகளாகிய உமாதேவிக்கு மணாளனே! என் வாழ்வுக்கு மூலமே! வலையினிடத்து அகப்பட்ட மான் போன்ற கண்களை உடைய மாதரது பார்வையாகிய வலையிற்சிக்கி, மயங்கி அலைந்த என்னை விட்டு விடுவாயோ?.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

06 திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் 21 - 30


பாடல் எண் : 21
ஆனைவெம் போரில் குறும் தூறு எனப் புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே.

பொருளுரை:
என் அப்பனே! தீவினையேனது உள்ளத்தின்கண், தேனினையும், பாலினையும், கருப்பஞ்சாற்றையும், அமுதத்தினையும் நிகர்த்து உடம்பையும் உடம்பில் இருக்கும் எலும்பையும் உருகச் செய்கின்ற ஒளியுடையோனே! யானையினது கொடிய சண்டையில் அகப்பட்ட சிறுபுதர் போல ஐம்புலன்களால் அலைக்கப்பட்ட என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 22
ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும்
வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு
அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம்
பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே.

பொருளுரை:
ஒளிப்பிழம்பாய் உள்ளவனே! திருவெண்ணீற்றை நிறையப் பூசி ஒளி மிளிரும் வெண்மை நிறம் உடையவனே! மெய்யடியார்க்குப் பக்கத்தில் இருப்பவனே! அடியாரல்லாத ஏனையோர்க்கு எக்காலத்தும் தூரத்தில் இருப்பவனே! அறிதற்கரியதாகிய பொருளாய் இருப்பவனே! பெண்ணாய் இருப்பவனே! பழமையானவனே! ஆணாய் இருப்பவனே! அலித் தன்மையாய் இருப்பவனே! என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 23
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
மற்று அடியேன் தன்னை தாங்குநர் இல்லை என் வாழ்முதலே
உற்று அடியேன் மிகத்தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே.

பொருளுரை:
என் வாழ்க்கைக்குக் காரணமான முதற்பொருளே! எனக்குப் பற்றுக்கோடாய் உள்ளவனே! உன்னை விட்டு விலகியதனால் வரும் துன்பத்தை அனுபவித்து, அடியேன் இவ்வுலகம் இத்தன்மையது என்பதை மிகவும் தெளிவாக அறிந்து நின்றேன். எனக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைப் பற்றிக் கொண்டு, குற்றத்தையே பெருகச் செய்து, அன்பைச் சுருங்கச் செய்கின்ற, பயனற்ற அடியேனை விட்டு விடுவாயோ? விட்டு விட்டாலோ, அடியேனைத் தாங்குவோர், வேறு ஒருவரும் இல்லை. அதனால் நான் அழிவேன்.


பாடல் எண் : 24
உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்
பொள்ளனல் வேழத்து உரியாய் புலன் நின்கண் போதல் ஒட்டா
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே.

பொருளுரை:
மிகவும் பெரிய நீண்ட துதிக்கையின்கண், துளையினையுடைய அழகிய யானையின் தோலையுடையானே! ஐம்புலன்களும், உன்பால் செல்ல ஒட்டாமல், நெய்க்குடத்தை எறும்பு மொய்ப்பது போல, என்னை மெல்லென மொய்க்கின்றன; உண்மையானவை இருக்க, பொய்யாயினவற்றையே செய்கிற, மயக்கத்தையும் ஆரவாரத்தையும் உடைய தூயவன் அல்லாதவனாகிய என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 25
எறும்பிடை நாங்கூழ் என புலனால் அரிப்புண்டு அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க
உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே.

பொருளுரை:
கொடிய இயமன் ஒடுங்கும்படி, அவன் மேல் பொருந்திய மணம் நிறைந்த தாமரை மலர்களையொத்த உன் திருவடிகளாகிய அவற்றையே அழுத்தி அறிந்தவர்கள் பெறுகின்ற மிகமேலான பதவியாய் உள்ளவனே! அடியவராயினர், பின்பு உன்னை விட்டு நீங்காத பெருமையுடையவனே! எறும்புகட்கு இடையே அகப்பட்ட, நாங்கூழ் புழு அரிப்புண்டு வருந்தினாற்போல, புலன்களிடையே அரிப்புண்டு அரித்துத் தின்னப்பட்டு வருந்திய தனியேனை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 26
பெருநீர் அறச் சிறுமீன் துவண்டு ஆங்கு நினைப் பிரிந்த
வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி
வரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக்
குருநீர் மதிபொதியும் சடை வானக் கொழு மணியே.

பொருளுரை:
பெரிய கங்கையாகிய பெருகுகின்ற நீரையுடைய பள்ளத்துள், எதிர்த்து நிற்றலையுடைய சிறிய தோணியின், தோற்றம் போல வெண்மை நிறமும் குளிர்ச்சியும் பொருந்திய பிறைச்சந்திரன் தவழ்கின்ற சடையினையுடைய, பரமாகாயத்திலுள்ள, செழுமையாகிய மாணிக்கமே! மிகுந்த நீரானது வற்றிப்போக, சிறிய மீன்கள் வாடினாற்போல உன்னை விட்டு நீங்கிய என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 27
கொழு மணியேர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று குன்றி
விழும் அடியேனை விடுதி கண்டாய் மெய்ம் முழுதும் கம்பித்து
அழும் அடியாரிடை ஆர்த்து வைத்து ஆட்கொண்டருளி என்னைக்
கழுமணியே இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே.

பொருளுரை:
உடல் முழுதும் நடுங்கப்பெற்று, அழுகின்ற அடியார் நடுவே, என்னைப் பொருத்தி வைத்து அடிமை கொண்டருளி, தூய்மை செய்த மாணிக்கமே! செழுமையாகிய முத்துப் போன்ற அழகிய பல்லினை உடைய மாதரது வலையில் போய் மயங்கி விழுகின்ற அடியேனை விட்டு விடுவாயோ? இனியும் முன்போல உனது ஞானமாகிய திருவடியை அடியேனுக்குக் காட்டுவாயாக.


பாடல் எண் : 28
புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து இங்கொர் பொய்ந்நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய் விண்ணும் மண்ணும் எல்லாம்
கலங்க முந்நீர் நஞ்சமுது செய்தாய் கருணாகரனே
துலங்குகின்றேன் அடியேன் உடையாய் என் தொழுகுலமே.

பொருளுரை:
விண்ணுலகமும் மண்ணுலகமும் முழுவதும், அஞ்சிக் கலக்கமுற்றபோது, கடலில் எழுந்த விடத்தை அமுதமாக உண்டவனே! அருட்கடலே! என்னை ஆளாக உடையவனே! என் வேதியனே! அடியேன் பிறப்புக்கு அஞ்சி நடுங்குகின்றேன். ஐம்புலன்களும், திகைக்கச் செய்ய, திகைப்பை அடைந்து, இவ்விடத்தில் ஒரு பொய் வழியிலே, உன்னை விட்டு விலகித் திரிகின்ற என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 29
குலம் களைந்தாய் களைந்தாய் என்னைக் குற்றம கொற்றச் சிலையாம்
விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னு கொன்றை
அலங்கலந் தாமரை மேனி அப்பா ஒப்பிலாதவனே
மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில் பொருமத்து உறவே.

பொருளுரை:
பொன்போல மின்னுகின்ற, கொன்றை மாலை அணிந்த, செந்தாமரை மலர்போன்ற திருமேனியை உடைய அப்பனே! ஒப்பற்றவனே! என் சுற்றத் தொடர்பை அறுத்தவனே! என்னைக் குற்றத்தினின்றும் நீக்கியவனே! வெற்றி வில்லாகிய மேருவையுடைய எந்தையே! கடைகின்ற மத்துப் பொருந்தினவுடன் சுழல்கின்ற தயிர்போல, ஐந்து மலங்களாலும் அலைவுற்று வருந்துவேன். என்னை விட்டு விடுவாயோ?.


பாடல் எண் : 30
மத்துறு தண் தயிரின் புலன் தீக்கது வக்கலங்கி
வித்துறு வேனை விடுதி கண்டாய் வெண்டலை மிலைச்சிக்
கொத்துறு போது மிலைந்து குடர்நெடு மாலை சுற்றித்
தத்துறு நீறுடன் ஆரச் செஞ்சாந்தணி சச்சையனே.

பொருளுரை:
வெண்டலை மாலையை அணிந்து கொத்துக்களாகப் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடி நெடு மாலையைச் சுற்றிப் பரவின திருவெண்ணீற்றுடன், சந்தனத்தின் செம்மையான சாந்தினை அணிந்த இளமையை உடைய தலைவனே! புலன்களாகிய நெருப்புப் பற்ற மத்துப் பொருந்திய குளிர்ந்த தயிரைப் போலக் கலங்கி, வேருறுவேனை விட்டு விடுவாயோ?.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||