செவ்வாய், 3 ஜனவரி, 2017

திருக்கடவூர் அபிராமி அம்மை திருப்பதிகம்


தை அமாவாசையன்று அபிராமியின் தியானத்திலிருந்தார் சுப்ரமணியம் எனும் பக்தர். அன்றைய தினம் அபிராமி கோயிலுக்கு வந்த சரபோஜி மன்னர் அன்றைய  திதி என்ன என்று சுப்ரமணியத்திடம் கேட்க, அவரோ அன்னை அபிராமியின் முக லாவண்யத்தில் மனதைப் பறிகொடுத்தவராய் ‘பவுர்ணமி’ எனக் கூறிவிட்டார். அவர் சொன்ன தவறை மெய்ப்பிக்க வேண்டும் என்று மன்னன் கடுமையாகச் சொல்லி விடவே, சுப்ரமணியமும் அபிராமி அந்தாதி என்ற அற்புத நூல் இயற்றி, அன்னையின் கருணையால் அரசனின் தண்டனையிலிருந்து தப்பினார். அவரே அபிராமி பட்டர் எனவும் சிறப்பிக்கப்பட்டார். அந்த அபிராமி பட்டர் இயற்றிய இன்னொரு நூல் தான் "அபிராமி அம்மை பதிகம்". இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்தால் எல்லா துன்பங்களும் விலகும், சகல செல்வங்களும் கிட்டும். 

தூய தமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதன் நால்
வாய் ஐங்கரன் தாள் வழுத்துவாம் - நேயர் நிதம்
எண்ணும் புகழ்க் கடவூர் எங்கள் அபிராமவல்லி 
நண்ணும் பொற்பாதத்தில் நன்கு. ......... (01)

எந்த செயல் தொடங்குவதற்கு முன் கணபதியைத் தோத்திரம் செய்து வணங்குவது என்பது தமிழ் இலக்கியத்தில் காணப்படும் ஒரு மரபாகும். அந்த வகையில் தான் இயற்றப் போகும் இந்த பதிக ஆரம்பத்தில் விநாயகப்பெருமானை துதித்து தூய தமிழ்ப் பாமாலை அணிவிப்பதற்கு வேண்டுகிறார். நாமும் அவருடன் வேண்டிக்கொள்வோம் திருக்டையூர்த் திருத்தலத்தில் பிள்ளையார் “கள்ள வினாயகர்” என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். அபிராமி பட்டர் இவ்விநாயகரையும் தன் பதிகத்தால் துதி செய்துள்ளார். 

கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும் கலா மதியை நிகர் வதனமும்
கருணை பொழி விழிகளும் விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும்
சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு மணி மிடறும் மிக்க
சதுர் பெருகு துங்க பாசாங்குசம் இலங்கு சதுர் கரதலமும் விரல் அணியும் அரவும்
புங்கவர்க்கு அமுது அருளும் அந்தர குசங்களும் பொலியும் நவமணி நூபுரம்
பூண்ட செஞ்சேவடியை நாளும் புகழ்ந்துமே போற்றி என வாழ்த்த விடைமேல்
மங்களம் மிகுந்த நின் பதியுடன் வந்து அருள்செய் வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (02)


கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமிய. ......... (03)


சந்திர சடாதரி முகுந்த சோதரி துங்க சலச லோசன மாதவி
சம்ப்ரம பயோதரி சுமங்கலி சுலட்சணி சாற்ற அரும் கருணாகரி
அந்தரி வராகி சாம்பவி அமர தோத்ரி அமலை செகசால சூத்ரி
அகில ஆத்ம காரணி வினோத சய நாரணி அகண்ட சின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச சுகுமாரி கௌமாரி உத்-
துங்க கல்யாணி புஷ்பாஸ்திராம் புய பாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி
வந்து அரி மலர்ப் பிரமராதி துதி வேத ஒலிவளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (04)


கார் அளக பந்தியும் பந்தியின் அலங்கலும் கரிய புருவச் சிலைகளும்
கர்ண குண்டலமும் மதிமுக மண்டலமும் நுதல் கத்தூரிப் பொட்டும் இட்டுக்
கூர் அணிந்திடு விழியும் அமுத மொழியும் சிறிய கொவ்வையின் கனி அதரமும்
குமிழ் அனைய நாசியும் குந்த நிகர் தந்தமும் கோடு சோடான களமும்
வார் அணிந்து இறுமாந்த வனமுலையும் மேகலையும் மணி நூபுரப் பாதமும்
வந்து எனது முன் நின்று மந்தகாசமுமாக வல்வினையை மாற்றுவாயே
ஆர மணி வானில் உறை தாரகைகள் போல நிறை ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (05)


வாச மலர் மருவளக பாரமும் தண் கிரண மதி முகமும் அயில் விழிகளும்
வள்ள நிகர் முலையும் மான் நடையும் நகை மொழிகளும் வளமுடன் கண்டு மின்னார்
பாச பந்தத்திடை மனம் கலங்கித் தினம் பல வழியும் எண்ணி எண்ணிப்
பழி பாவம் இன்னது என்று அறியாமல் மாயப்ரபஞ்ச வாழ்வு உண்மை என்றே
ஆசை மேலிட்டு வீணாக நாய் போல் திரிந்து அலைவது அல்லாமல் உன்றன்
அம்புயப் போதெனும் செம்பதம் துதியாத அசடன் மேல் கருணை வருமோ
மாசு இலாது ஓங்கிய குணாகரி பவானி சீர்வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (06)


மகர வார் குழை மேல் அடர்ந்து குமிழ் மீதினில் மறைந்து வாளைத் துறந்து
மைக் கயலை வேண்டி நின் செங்கமல விழி அருள் வரம் பெற்ற பேர்கள் அன்றோ
செகம் முழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்து மேல் சிங்க ஆதனத்தில் உற்றுச்
செங்கோலும் மனுநீதி முறைமையும் பெற்று மிகு திகிரி உலகு ஆண்டு பின்பு
புகர் முகத்து ஐராவதப் பாகராகி நிறை புத்தேளிர் வந்து போற்றிப்
போக தேவேந்திரன் எனப் புகழ விண்ணில் புலோமசையொடும் சுகிப்பர்
அகர முதலாகி வளர் ஆனந்த ரூபியே ஆதிகடவூரின் வாழ்வே.
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (07)


நன்று என்று தீது என்று நவிலும் இவ்விரண்டனுள் நன்றதே உலகில் உள்ளோர்
நாடுவார் ஆதலின் நானுமே அவ்விதம் நாடினேன் நாடினாலும்
இன்று என்று சொல்லாமல் நினது திருவுள்ளமது இரங்கி அருள் செய்குவாயேல்
ஏழையேன் உய்குவேன் மெய்யான மொழி இஃது உன் இதயம் அறியாதது உண்டோ
குன்றம் எல்லாம் உறைந்து என்றும் அன்பர்க்கு அருள் குமார தேவனை அளித்த
குமரி மரகத வருணி விமலி பைரவி கருணை குலவு கிரி ராச புத்ரி
மன்றல் மிகு நந்தன வனங்கள் சிறை அளி முரல வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (08)


மறி கடல்கள் ஏழையும் திகிரி இரு நான்கையும் மாதிரக் கரி எட்டையும்
மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும் மாகூர்மம் ஆனதையும் ஓர்
பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈர் ஏழையும் புத்தேளிர் கூட்டத்தையும்
பூமகளையும் திகிரி மாயவனையும் அரையில் புலி ஆடை உடையானையும்
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப் பழைமை முறைமை தெரியாத நின்னை
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல் மொழிகின்றது ஏது சொல்வாய்
அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (09)


ஒரு நாள் இரண்டு நாள் அல்ல நான் உலகத்து உதித்த இந்நாள் வரைக்கும்
ஒழியாத கவலையால் தீராத இன்னல் கொண்டு உள்ளம் தளர்ந்து மிகவும்
அருநாண் இயற்றிட்ட விற்போல் இருக்கும் இவ்வடிமைபால் கருணை கூர்ந்து இங்கு
அஞ்சேல் எனச் சொல்லி ஆதரிப்பவர்கள் உனை அன்றியிலை உண்மையாக
இரு நாழிகைப் போதும் வேண்டாது நிமிடத்தில் இவ்வகில புவனத்தையும்
இயற்றி அருளும் திறம் கொண்ட நீ ஏழையேன் இன்னல் தீர்த்து அருளல் அரிதோ
வரு நாவலூரர் முதலோர் பரவும் இனிய புகழ்வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (10)


வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர அருள்மழை பொழிந்தும் இன்ப 
வாரிதியிலே நின்னது அன்பு எனும் சிறகினால் வருந்தாமலே அணைத்துக்
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்டம் முதலான சீவ
கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக் குறையாமலே கொடுத்தும்
நீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் நின்னுதர பந்தி பூக்கும்
நின்மலீ அகிலங்களுக்கு அன்னை என்று ஓதும் நீலி என்று ஓதுவாரோ
ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்கு புகழ் ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (11)


எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல் ஏறிட்டு ஒறுக்க அந்தோ
எவ்விதம் உளம் சகித்து உய்குவேன் இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில்
நண்ணி எள் அளவு சுகம் ஆனது ஒரு நாளினும் நான் அனுபவித்தது இல்லை
நாடெலாம் அறியும் இது கேட்பது ஏன் நின்னுளமும் நன்றாய் அறிந்து இருக்கும்
புண்ணியம் பூர்வ சனனத்தினில் செய்யாத புலையன் ஆனாலும் நினது
பூரண கடாட்ச வீட்சண்ணியம் செய்து எனது புன்மையை அகற்றி அருள்வாய்
மண்ணவர்கள் விண்ணவர்கள் நித்தமும் பரவும் இசை வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (12)


பல் குஞ்சரம் தொட்டு எறும்பு கடையானது ஒரு பல்லுயிர்க்கும் கல்லிடைப்
பட்ட தேரைக்கும் அன்று உற்பவித்திடு கருப்பை உறு சீவனுக்கும்
மல்கும் சராசரப் பொருளுக்கும் இமையாத வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும் அவரவர் மனச் சலிப்பு இல்லாமலே
நல்கும் தொழில் பெருமை உண்டாய் இருந்தும் மிகு நவநிதி உனக்கு இருந்தும்
நான் ஒருவன் வறுமையில் சிறியன் ஆனால் அந்நகைப்பு உனக்கே அல்லவோ
அல் கலந்து உம்பர் நாடு அளவு எடுக்கும் சோலை ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (13)


தெரிந்தோ அலாது தெரியாமலோ இவ்வடிமை செய்திட்ட பிழை இருந்தால்
சினம் கொண்டு அது ஓர் கணக்காக வையாது நின் திருவுளம் இரங்கி மிகவும்
பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து இனல் படாது நல்வரம் அளித்துப்
பாதுகாத்து அருள் செய்ய வேண்டும் அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி
புரந்தரன் போதன் மாதவன் ஆகியோர்கள் துதி புரியும் பதாம்புய மலர்ப்
புங்கவி புராந்தகி புரந்தரி புராதனி புராணி திரி புவனேசுவரி
மருந்தினும் நயந்த சொற்பைங்கிளி வராகி எழில்வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (14)


நீடு உலகங்களுக்கு ஆதாரமாய் நின்று நித்தமாய் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத்து இரண்டு அறம் வளர்க்கின்ற நீ மனைவியாய் இருந்தும்
வீடு வீடுகள் தோறும் ஓடிப் புகுந்து கால் வேசற்று இலச்சையும் போய்
வெண் துகில் அரைக்கு அணிய விதியற்று நிர்வாண வேடமும் கொண்டு கைக்கோர்
ஓடேந்தி நாடெங்கும் உள்ளம் தளர்ந்து நின்று உன்மத்தனாகி அம்மா
உன் கணவன் எங்கெங்கும் ஐயம் புகுந்து ஏங்கி உழல்கின்றது ஏது சொல்வாய்
ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும் ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (15)


வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும் மருந்தினுக்கா வேண்டினும்
மறந்தும் ஓர் பொய்ம்மொழி சொலாமலும் தீமையாம் வழியினில் செல்லாமலும்
விஞ்சு நெஞ்சு அதனில் பொறாமை தரியாமலும் வீண் வம்பு புரியாமலும்
மிக்க பெரியோர்கள் சொலும் வார்த்தை தள்ளாமலும் வெகுளியவை கொள்ளாமலும்
தஞ்சமென நினது உபய கஞ்சத் துதித்திடத் தமியேனுக்கு அருள் புரிந்து
சர்வ காலமும் எனைக் காத்து அருள வேண்டினேன் சலக் கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாவி ஆம்பல் மலரும் வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (16)


ஞானம் தழைத்து உன் சொரூபத்தை அறிகின்ற நல்லோர் இடத்தினில் போய்
நடுவினில் இருந்து உவந்து அடிமையும் பூண்டு அவர் நவிற்றும் உபதேசம் உட்கொண்டு
ஈனந்தனைத் தள்ளி எனது நான் எனும் மானம் இல்லாமலே துரத்தி
இந்திரிய வாயில்களை இறுகப் புதைத்து நெஞ்சு இருளற விளக்கேற்றியே
ஆனந்தமான விழி அன்னமே உன்னை என் அகத் தாமரைப் போதிலே
வைத்து வேறே கவலை அற்று மேலுற்ற பரவசமாகி அழியாததோர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண் ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (17)


எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும் அவர்கள் கேட்டு இவ்
இன்னல் தீர்த்து உள்ளத்து இரங்கி நன்மைகள் செயவும் எள் அளவும் முடியாது நின்
உன்னதம் மருவும் கடைக் கண் அருள் சிறிது செயின் உதவாத நுண் மணல்களும்
ஓங்கு மாற்றுயர் சொர்ண மலையாகும் அதுவன்றி உயர் அகில புவனங்களைக்
கனமுடன் அளித்து முப்பத்து இரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும் நின்னைக்
கருது நல் அடியவர்க்கு எளிவந்து சடுதியில் காத்து ரட்சித்தது ஓர்ந்து
வனசம் நிகர் நின்பாதம் நம்பினேன் வந்து அருள்செய் வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (18)


சலதி உலகத்தில் சராசரங்களை ஈன்ற தாயாகினால் எனக்குத்
தாய் அல்லவோ யான் உன் மைந்தன் அன்றோ எனது சஞ்சலம் தீர்த்து நின்றன்
முலை சுரந்து ஒழுகு பாலூட்டி என் முகத்தை உன் முந்தானையால் துடைத்து
மொழிகின்ற மழலைக்கு உகந்து கொண்டு இளநிலா முறுவல் இன்புற்று அருகில் யான்
குலவி விளையாடல் கொண்டு அருள்மழை பொழிந்து அங்கை கொட்டி வா என்று அழைத்துக்
குஞ்சர முகன் கந்தனுக்கு இளையன் என்று எனைக் கூறினால் ஈனம் உண்டோ
அலை கடலிலே தோன்றும் ஆராத அமுதமே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (19)


கருநீல வடிவமார் மாடேறி உத்தண்ட கன தண்ட வெம் பாசமும்
கைக்கொண்டு சண்டமா காலன் முன் எதிர்க்க மார்க்கண்டன் வெகுண்டு நோக்க
இரு நீலகண்டன் எனும் நின்பதியை உள்ளத்தில் இன்பு கொண்டு அருச்சனை செய
ஈசன் அவ் இலிங்கம் பிளப்ப நின்னொடு தோன்றி யமனைச் சூலத்தில் ஊன்றிப்
பெருநீல மலையென நிலத்தில் அன்னவன் விழப் பிறங்கு தாளால் உதைத்துப்
பேசுமுனி மைந்தனுக்கு அருள் செய்தது உனதரிய பேரருளின் வண்ணம் அல்லவோ
வருநீல மடமாதர் விழியென்ன மலர் வாவி வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (20)


கைப்போது கொண்டு உன் பதப்போது தன்னில் கணப்போதும் அர்ச்சிக்கிலேன்
கண் போதினால் உன் முகப்போது தன்னை யான் கண்டு தரிசனை புரிகிலேன்
முப்போதில் ஒரு போதும் என் மனப்போதிலே முன்னி உன் ஆலயத்தின்
முன்போதுவார் தமது பின் போத நினைகிலேன் மோசமே போய் உழன்றேன்
மைப் போதகத்திற்கு நிகரெனப் போது எருமைக் கடா மீது ஏறியே
மாகோர காலன் வரும் போது தமியேன் மனம் கலங்கித் தியங்கும்
அப்போது வந்து உன் அருட்போது தந்தருள் ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (21)


மிகையும் துரத்த வெம் பிணியும் துரத்த வெகுளியானதும் துரத்த
மிடியும் துரத்த நரை திரையும் துரத்த மிகு வேதனைகளும் துரத்த
பகையும் துரத்த வஞ்சனையும் துரத்த பசி என்பதும் துரத்த
பாவம் துரத்த பதி மோகம் துரத்தப் பல காரியமும் துரத்த
நகையும் துரத்த ஊழ் வினையும் துரத்த என் நாளும் துரத்த வெகுவாய்
நா வறண்டு ஓடிக் கால் தளர்ந்திடும் என்னை நமனும் துரத்துவானோ
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே. ......... (22)


சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச தனயை மாதேவி நின்னைச்
சத்யமாய் நித்யம் உள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோய் இன்மை கல்வி தன தானியம் அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுக ஆனந்த வாழ்வு அளிப்பாய்
சுகிர்த குணசாலி பரிபாலி அநுகூலி திரிசூலி மங்கள விசாலி
மகவு நான் நீ தாய் அளிக்கொணாதோ மகிமை வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே. ......... (23)


குறிப்பு: இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கடவூர் அபிராமி அம்மை திருப்பதிகம் முற்றிற்று --- ||

|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக