புதன், 21 செப்டம்பர், 2016

நலம் தரும் திருப்பதிகம் 09 திருநெல்வாயில் அரத்துறை

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அரத்துறைநாதர், ஸ்ரீ ஆனந்தீஸ்வரர், ஸ்ரீ தீர்த்தபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அரத்துறை நாயகி, ஸ்ரீ ஆனந்த நாயகி, ஸ்ரீ திரிபுர சுந்தரி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 003 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

"இத்திருப்பதிகத்தினை பக்தியுடன் படித்தால் எந்த பிரச்னையிலும் தெளிவான முடிவை எடுக்கலாம். ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும்."

ஸ்ரீ அரத்துறைநாதர்

பாடல் எண் : 01
கடவுளைக் கடலுள் எழும் நஞ்சுண்ட
உடலுளானை ஒப்பாரி இலாத எம்
அடலுளானை அரத்துறை மேவிய
சுடருளானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பொருளுரை:
சொற்களையும் உணர்ச்சிகளையும் கடந்தவனை, பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்ட பின்னரும் உடல் அழியாமல் இருந்தவனை, தனக்கு ஒப்பாகச் சொல்வதற்கு எவரும் இல்லாதவனை, தான் நினைத்தபோது வெளிப்பட்டு தான் நினையாதபோது மறைந்து நிற்கும் வல்லமை படைத்தவனை, அரத்துறை தலத்தில் உறைபவனை, ஞானச்சுடராக விளங்குபவனை, காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.


பாடல் எண் : 02
கரும்பு ஒப்பானைக் கரும்பினில் கட்டியை
விரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
அரும்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பொருளுரை:
தன்னை நினைக்கும் அடியார்களுக்கு கரும்பு போன்று இனிப்பவனும், முறைப்படி வழிபட்டு தியானம் செய்யும் ஞானிகளுக்கு கரும்பு கட்டி போன்று இருப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் அந்தந்த உயிர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயன்களை விளைவிப்பவனும், விண்ணோர்கள் காண முடியாதவனும், அனைத்து உயிர்களுடனும் கலந்து அரும்பு போன்று குவிந்து மறைந்து காணப்படுபவனும், தனக்கு விருப்பமான எட்டு அக மலர்களை வளர்த்துக் கொண்டு தன்னை வழிபடும் அடியார்களின் மனதினில் உள்ள அக மலர்களின் பயனாகிய பக்தி எனப்படும் தேனினைப் பருகுவதற்கு அத்தகைய மனங்களைச் சுற்றித் திரியும் தேன் வண்டாக இருப்பவனும் ஆகிய அரத்துறை இறைவனைக் காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.


பாடல் எண் : 03
ஏறு ஒப்பானை எல்லா உயிர்க்கும் இறை
வேறு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
ஆறு ஒப்பானை அரத்துறை மேவிய
ஊறு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பொருளுரை:
பெருமை உடையவனும், ஒவ்வொரு உயிரினுள்ளும் தனித்தனியாக கலந்து இருப்பவனும், விண்ணோர்கள் அறிய முடியாதவனும், தன்னில் குளிப்போரின் உடலை தூய்மை செய்தும் அவர்கள் குளிக்கும் சமயத்தில் ஆனந்தம் அளிக்கும் ஆறு போன்று, தன்னை உணர்ந்து வழிபடும் அடியார்களின் மனதினை தூய்மைப்படுத்தி, அவர்கள் இறையுணர்வுடன் திளைக்கும் சமயங்களில் அவர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பவனும், அரத்துறை தலத்தில் உறைபவனும், தங்களது அறியாமையை நீக்கிகொண்டு மெய்ப்பொருளை உணரும் அடியார்களின் மனதினில் ஊற்று போன்று ஊறி பெருக்கெடுப்பவனும் ஆகிய இறைவனை காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.


பாடல் எண் : 04
பரப்பு ஒப்பானைப் பகல் இருள் நன்னிலா
இரப்பு ஒப்பானை இளமதி சூடிய
அரப்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரப்பு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பொருளுரை:
சூரியனின் ஒளி போன்று பரந்த இடத்தில் எங்கும் ஒன்று போன்று அனைத்து உயிர்களுக்கும் உடனிருந்து கருணை புரிபவனும், சந்திரனின் ஒளி படிப்படியாக வளர்வது போன்று உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப அவைகளின் ஞானத்தை படிப்படியாக வளரச் செய்பவனும், சந்திரனைத் தனது சடையில் சூடியவனும், தனது ஐந்து தொழில்களையும் சிரமமோ அல்லது பெரிய முயற்சியோ தேவைப்படாமல், நினைத்த மாத்திரத்தில் விளையாட்டாகச் செய்பவனும் ஆகிய அரத்துறை இறைவன் தன்னிடத்தில் அன்பு கொள்ளும் அடியார்களின் மனதினில் பால் சுரப்பது போன்று சுரக்கின்றான். இத்தகைய பண்புகள் கொண்ட சிவபெருமானை அன்புடன் காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.


பாடல் எண் : 05
நெய் ஒப்பானை நெய்யில் சுடர் போல்வதோர்
மெய் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
ஐ ஒப்பானை அரத்துறை மேவிய
கை ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பொருளுரை:
பாலில் மறைந்துள்ள நெய், தயிரினைக் கடைந்தால் வெளிப்படுவது போன்று நமது உள்ளத்தில் இறையுணர்வு கொண்டு கடைந்தால் நமக்கு வெளிப்படுபவனும், நெய்ச்சுடர் போன்ற உருவினனும், தேவர்கள் அறிய முடியாதவனும், நமக்கு பெரிய வியப்பாகத் தோன்றுபவனும், இடர்கள் நம்மை எதிர் நோக்கும் போது நமக்கு கை போன்றும் ஊன்றுகோல் போன்றும் உதவி செய்பவனை, அரத்துறை தலத்தில் உறையும் சிவபெருமானை காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.


பாடல் எண் : 06
நெதி ஒப்பானை நெதியில் கிழவனை
விதி ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
அதி ஒப்பானை அரத்துறை மேவிய
கதி ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பொருளுரை:
வாழ்க்கை மற்றும் உலகத்தின் ஒழுங்குமுறையாக இருப்பவனும், அந்த ஒழுங்குமுறையின் தலைவனாக இருப்பவனும், உயிர்கள் சென்ற பிறவிகளில் சேமித்து வைத்த வினைகளின் பயனாக இருப்பவனும், தேவர்களால் அறிய முடியாதவனும், உயிர்களின் உணர்வினைக் கடந்து நிற்பவனும், அனைத்து உயிர்களும் சரண் அடையத் தக்க இடமாக இருப்பவனும் அரத்துறை தலத்தில் உறைபவனும் ஆகிய சிவபெருமானை சென்று காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.


பாடல் எண் : 07
புனல் ஒப்பானைப் பொருந்தலர் தம்மையே
மினல் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
அனல் ஒப்பானை அரத்துறை மேவிய
கனல் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பொருளுரை:
உயிர்களை வளர்க்கும் தண்ணீர் போன்று அனைத்து உயிர்களுடனும் கலந்து நின்று உயிர்களின் ஞானத்தை வளர்ப்பவனும், சிவநெறியில் பொருந்தாத பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களுக்கு இடி போன்றவனும், பகைவர்களுக்கு அனல் போன்றவனும், விண்ணோர்களால் அறிய முடியாதவனும், உயிர்களுடன் கலந்து என்றும் அணையாத தீ போல நின்று உயிர்களின் அறியாமையை ஒழித்து ஓங்கி வளரும் ஞானமாக இருப்பவனும் ஆகிய அரத்துறை இறைவனை காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.


பாடல் எண் : 08
பொன் ஒப்பானைப் பொன்னில் சுடர் போல்வதோர்
மின் ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
அன் ஒப்பானை அரத்துறை மேவிய
தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பொருளுரை:
பொன்னின் நிறத்தை ஒத்த திருமேனியை உடையவனும், பொற்சுடர் போன்றும் மின்னல் போன்றும் மிளிரும் சோதியானை, தேவர்களால் அறிய முடியாதவனும், அன்னையை ஒத்து நம்மை கருணையுடன் பேணி வளர்ப்பவனும் ஆகிய அரத்துறை இறைவனைக்  காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம். அவன் தனக்கு நிகராக வேறு எவரும் இல்லாமையால், தன்னையே தனக்கு நிகராகக் கொண்டவன் ஆவான்.


பாடல் எண் : 09
காழி யானைக் கனவிடை ஊருமெய்
வாழி யானை வல்லோரும் என்று இன்னவர்
ஆழியான் பிரமற்கும் அரத்துறை
ஊழி யானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பொருளுரை:
பல ஊழிகளைக் கடந்து நிற்கும் சீர்காழி தலத்தின் இறைவனாக இருப்பவனும், பெருமையை உடைய இடபத்தை வாகனமாகக் கொண்டு அதன் மேல் ஊர்பவனும், அழியும் தன்மை கொண்ட மற்றவர்களின் உடல் போலன்றி நிலையாக வாழும் உடலினை உடையவனும், வல்லவர்கள் என்று நாம் கருதும் பிரமனும் திருமாலும் ஊழிக்காலத்தில் ஒடுங்கும் இடமாகத் திகழ்பவனும் ஆகிய அரத்துறை காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.


பாடல் எண் : 10
கலை ஒப்பானைக் கற்றாற்கு ஓர் அமுதினை
மலை ஒப்பானை மணிமுடி ஊன்றிய
அலை ஒப்பானை அரத்துறை மேவிய
நிலை ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பொருளுரை:
உயிர்களின் அறியாமையை நீக்கி, உயிர்களை இறையுணர்விலும் போகத்திலும் செலுத்துவதில் கலை போன்றவனும், சிவநெறியினைக் கற்றவர்களுக்கு அமுதமாக இனிப்பவனும், பல நற்பண்புகளைக் கொண்டு, வளங்களைக் கொண்டு, அனைவரையும் விடவும் ஓங்கி உயர்ந்து நிற்பதில் மலை போன்றவனும், எங்கும் பரந்து காணப்படும் நிலையிலும், தன்னுள் மூழ்கித் திளைக்கும் அடியார்களுக்கு வீடுபேறு எனப்படும் உயர்த்த செல்வதை அளிப்பதில் கடல் போலவும், இருக்கும் இறைவன் அரத்துறை தலத்தில் நிலைபெற்று இருக்கின்றான். அந்த இறைவனை காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.

இந்த பதிகத்தின் பல பாடல்களில் சிவபெருமானை விண்ணோரும் அறிகிலார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். விண்ணோரும் அறிய முடியாத ஆற்றல் படைத்தவனை மனிதர்களாகிய நாம் எவ்வாறு அறிவது. நாம் அவனை அறிந்து கொள்வதற்குத் தான், அவனது தன்மையை புரிந்து கொள்வதற்காகத் தான், ஒப்பில்லாதவனாக இறைவன் திகழ்ந்தாலும், நாம் அறிந்த உலகப் பொருட்களைச் சுட்டிக் காட்டி அப்பர் பிரான் விளக்கும் நேர்த்தியை நாம் இந்த பதிகத்தில் காணலாம். மேலும் விண்ணோர்களும் அறிய முடியாத இறைவனை, நாம் எப்படி அறிவது என்பதையும் உணர்த்தும் பாடல்களாக இந்த பதிகத்தின் பாடல்கள் அமைந்திருப்பதை நாம் காணலாம். அப்பர் பிரான் அறிவித்த வண்ணம், அவனது தன்மையை, பண்பினை நாம் புரிந்து கொண்டு, அவனைக் கண்டு தொழுது வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

நன்றி: என். வெங்கடேஸ்வரன்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

துர்காஷ்டகம்


வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள்
அம்மையானவள் அன்பு தந்தையானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்று முழுமை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


உயிருமானவள் துர்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்ப தோணியானவள்
அன்பு உற்றவள் துர்கா அபயவீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


குருவுமானவள் துர்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவுமானவள் திரிசூலி மாயவள்
திருநீற்றில் நின்றிட என்னுள் திகழும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே
கருணை துர்கையே வீர சுகன துர்கையே
அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே
அன்பு துர்கையே ஜெயதுர்கை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

மஹாளய பட்சம்

மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என வலியுறுத்துகிறது இந்து மதம். அவை பிதுர்யக்ஞம், தேவயக்ஞம், பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது ஆகியவை. இவற்றுள் பிதுர் யக்ஞம் மிகவும் புனிதமானது எனக் கருதி முன்னோர் அதனைக் கடைபிடித்து வந்ததுடன் நம்மையும் மேற்கொள்ள அறிவுறுத்தினர். தென்புலத்தார் வழிபாடு என இதன் சிறப்பை வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

"தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை"
- அதிகாரம் : இல்வாழ்க்கை குறள் எண் : 43

பொருள்: இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம்.

என்று இல்லறத்தானின் கடமையாக வலியுறுத்தியுள்ளார். இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களும்! பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர். பொதுவாக புரட்டாசி மாதம், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே (நாட்களே) மஹாளய பட்சமாகும். 

தில்லை திருச்சித்திரகூடம் ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் 
நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த அவர்களுக்கும், முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பண முறை உள்ளது.

இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவே தான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள்.

அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.

சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீ ராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீ தத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழிகூறினார்.

மஹா கல்யாணம் ஆலயம் - இருப்பிடம் என்ற பொருளில் கல்யாணத்திற்கு இருப்பிடமாயிருப்பதால் மஹாளயம் என்று பெயர் வந்ததாகவும் கருதலாம். திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். "மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது'' என்பது பழமொழி. 

இனம் புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் - குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான். இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.

இவ்வருடம் வருகிற (17.09.2016) தேதி மஹாளய பட்சம் ஆரம்பம். (30.09.2016) மஹாளய அமாவாசை. இந்த தருணத்தில் நீத்தார் கடனை நீக்கமற செய்வோம். நீங்காத பேறு பெறுவோம்.

மஹாளய பட்ச தர்ப்பண பலன்கள்

பிரதமை - செல்வம் பெருகும் (தனலாபம்)

துவிதியை - வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)

திருதியை - திருப்திகரமான இல்வாழ்க்கை (வரன்) அமையும்

சதுர்த்தி - பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)

பஞ்சமி - விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)

சஷ்டி - தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)

சப்தமி - மேலுலகோர் ஆசி

அஷ்டமி - நல்லறிவு வளரும்

நவமி - ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை

தசமி - தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்

ஏகாதசி - வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்

துவாதசி - தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்

திரியோதசி - நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்

சதுர்த்தசி - முழுமையான இல்லறம் (கணவன் - மனைவி ஒற்றுமை)

அமாவாசை - மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்

ஆதாரம் : யஜூர் வேத ஆபஸ்தம்ப தர்ப்பணம்

தொகுப்பு : பொன்னம்பலத்தாடும்_ஐயன்



|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||