ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

நந்திதேவரின் நடனம்

சிவபெருமான் பிரதோஷ காலம் எனப்படும் சந்தியா வேளையில் (மாலை 4.30 மணிமுதல் 6.00 மணி வரை) நந்திதேவரின் இருகொம்புகளுக்கிடையே உமையம்மை, தேவர்கள் கண்டு மகிழ திருநடனம் புரிந்தார் என்பதும்; பிரதோஷ வேளையில் சிவலிங்கத்தை நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே தரிசித்து வணங்கவேண்டும் என்பதும் வரலாறு.


காசிப முனிவரின் குமாரர்களே தேவர்களும் அசுரர்களும். நற்குணம் படைத்தவர்கள் சுரர் (தேவர்) என்றும், துர்குணம் படைத்தவர்கள் அசுரர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் ஒருவரையொருவர் அடக்கியாள நினைத்து அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். அசுரர்கள் கடுந்தவமியற்றி இறைவனிடமிருந்து வரம்பெற்று, அதன் வலிமையால் தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர்.

பிருகு முனிவரின் மகனான பார்க்கவர் காசியில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு கடுந்தவம் மேற்கொண்டார். அவருக்குக் காட்சியளித்த சிவபெருமான், அவர் வேண்டிக்கொண்டபடி இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தருளினார். சிவபெருமானிடம் வரம்பெற்ற பார்க்கவரை அசுரர்கள் தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டனர். பார்க்கவரே அசுர குரு சுக்ராச்சாரியார்.

அதன் பிறகு நடைபெற்ற தேவாசுர யுத்தத்தில், இறந்துபோன அசுரர்களை சுக்ராச்சாரியார் மிருதசஞ்சீவினி மந்திரத்தைக்கொண்டு உயிர்ப்பித்தார். அதனால் அசுரர் படை குறைவடையாமல் இருந்தது. அந்த மந்திரத்தை அறிந்திராததால் தேவர்கள் கவலைகொண்டனர்.

தேவகுரு பிரகஸ்பதியின் மகன் "கசன்" என்பவன். அவனை சுக்ராச்சாரியாரிடம் சென்று எப்படியேனும் அந்த மந்திரத்தை அறிந்துவருமாறு அனுப்பி வைத்தனர் தேவர்கள். கசன் சுக்ராச்சாரியாரிடம் சென்று சீடனாகச் சேர்ந்து நன்முறையில் அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தான். கசனை சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி விரும்பினாள். இதனிடையே மந்திரத்தைக் கற்றுச் செல்வதற்காகத்தான் கசன் வந்திருக்கிறான் என்பதை அறிந்த அசுரர்கள் அவனைக் கொன்றுவிட்டனர். 

ஆனால் தேவயானியின் வேண்டுகோளையேற்று சுக்ராச்சாரியார் கசனை உயிர்ப்பித்தார். இவ்வாறு அசுரர்கள் கசனைக் கொல்வதும், சுக்ராச்சாரியார் உயிர்ப்பிப்பதும் தொடர்ந்தது. இதனால் கோபமடைந்த அசுரர்கள் கசனை எரித்துச் சாம்பலாக்கி, அச்சாம்பலை சுக்ராச்சாரியார் அருந்தும் பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர். நடந்ததை அறிந்த தேவயானி மிகவும் துயருற்று தன் தந்தையிடம் இதைத் தெரிவித்தாள். கசன் இப்போது சுக்ராச்சாரியார் வயிற்றுக்குள் இருப்பதால் மந்திரம் சொல்லி அவனை உயிர்ப்பித்துவிடலாம். ஆனால் கசன் வெளியே வரும்போது சுக்ராச்சாரியார் வயிறு பிளந்து இறப்பார். இதற்கு என்ன செய்வதென்று சுக்ராச்சாரியார் யோசித்தார். 

சுக்ராச்சாரியார் தன் வயிற்றில் இருக்கும் கசனுக்கு மிருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசிப்பதாகவும், பின்னர் அந்த மந்திரத்தின் மூலம் அவனை உயிர்ப்பிப்பதாகவும், வெளியே வந்தபின் அவன் தன்னை உயிர்ப்பிக்கவேண்டுமென்றும் கூறி மந்திரத்தைச் சொல்லி அவனை உயிர்ப்பித்தார். அவன் வெளியே வந்தபின் சுக்ராச்சாரியாரை உயிர்ப்பித்தான்.

கசன் உயிருடன் வந்ததனால் மகிழ்ச்சியடைந்த தேவயானி அவனிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டாள். ஆனால் கசன், "சுக்ராச்சாரியார் வயிற்றிலிருந்து வெளிப்பட்டதால் நான் உனக்கு சகோதரனாகிறேன்'' என்று கூறி, அவளைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டான். இதனால் கோபமடைந்த தேவயானி, "நீ கற்ற மந்திரம் உனக்கு பலிக்காது'' என்று சாபமிட்டாள். ""எனக்கு பலிக்காவிட்டாலும், எம்முடையவருக்கு பலிக்கும்'' என்று சொல்லி தேவலோகம் சேர்ந்தான். அங்கு தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறி, தான் கற்றுவந்த மந்திரத்தை அவருக்கு உபதேசித்தான். அதன் பிறகு நடந்த தேவாசுர யுத்தத்தில் இருவர் சேனைகளும் குறைவடையாததால் யுத்தம் தீவிரமாக நடந்தது.

யுத்தம் முடிவடைய வேண்டுமெனில் தாங்கள் அசுரர்களைவிட வலிமைபெற வேண்டும் என்பதை உணர்ந்த தேவர்கள், "சாவா மூவா நலம்" பெற வழிதேடினர். அவர்கள் தேவகுருவான பிரகஸ்பதியிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் "நரை, திரை, மூப்பு, மரணம் பற்றிய ரகசியம் அறிந்தவர் அகத்தியர் ஒருவரே. அவரிடம் சென்று கேளுங்கள்'' என்று கூறினார். அனைவரும் அகத்தியரிடம் சென்றனர். அகத்தியர், "கயிலை சென்று சிவபெருமானை வழிபடுங்கள். அவர் திருப்பார்வை பட்டாலே நரை, திரை, மூப்பு உங்களை அணுகாது'' என்று கூறினார்.

ஆனால் தேவர்கள் அகத்தியர் கூறியபடி கயிலை செல்லாமல், பிரம்மதேவனிடம் சென்றனர். பிரம்மா அவர்களை விஷ்ணு பகவானிடம் அழைத்துச் சென்றார். தேவர்கள் வேண்டுதலைக் கேட்ட விஷ்ணு பகவான், "பாற்கடலைக் கடைந்து அதில் வெளிப்படும் அமிர்தத்தை உண்டால் மரணமிலா வாழ்வு கிட்டும். அசுரர்களின் உதவியுடன் பாற்கடலைக் கடையுங்கள்'' என்று கூறினார்.

அன்று தசமி திதி. விஷ்ணு பகவான் கூறியபடி தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடையத் தொடங்கினர். வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் மேருமலையை மத்தாகவும் கொண்டு பாற்கடல் கடையப்பட்டது. மத்தாக இருந்த மேருமலை கடலில் அமிழ்ந்துவிடாமலிருக்க விஷ்ணு பகவான் ஆமையாக மாறி தன் முதுகில் தாங்கிக்கொண்டார். கடைந்தபோது கயிறாக இருந்த வாசுகிப்பாம்பு கக்கிய விஷமும், ஆழ்கடலிலிருக்கும் ஆலம் என்ற விஷமும் வெளிவந்தன. அந்த ஆலகால விஷம் அனைவரையும் துரத்தியது. அனைவரும் அஞ்சியோடினர். 

விஷ்ணு பகவான் நஞ்சுடன் போரிட்டார். அவரால் நஞ்சை எதிர்க்க முடியவில்லை. நஞ்சுடன் போரிட்டதால் அவர் மேனி நீலநிறமாகியது. அப்போதுதான் தேவர்கள் தாங்கள் அகத்தியர் கூறியபடி கயிலை சென்று சிவபெருமானை வணங்காமல் வந்ததை நினைவு கூர்ந்தனர். அனைவரும் கயிலை நோக்கி ஓடினர். தேவர்கள் சிவபெருமானை வலமாக வந்தபோது ஆலகாலம் எதிர்த் திசையில் துரத்தியது. அவர்கள் சென்ற வழியே திரும்பி இடமாக வந்தபோது அங்கும் துரத்தியது. இப்படி இடமும் வலமுமாக நஞ்சு துரத்த, தேவர்கள் சிவபெருமான் இருப்பிடத்தை அடைந்தனர்.

நந்தியின் அனுமதி பெற்று தேவர்கள் உள்ளே சென்று சிவபெருமானை தரிசித்து தங்களைக் காக்குமாறு வேண்டினர். சிவபெருமான் நந்தியிடமும் சுந்தரரிடமும் அந்த விஷத்தைக் கொண்டுவரும்படி கூறி, பிரபஞ்சத்தையும் தேவர்களையும் காக்க அவ்விஷத்தை தானே உண்டார். விஷம் அவரது வயிற்றுக்குள் சென்றாலோ, வெளியே உமிழப்பட்டாலோ பலகோடி அண்டங்கள் அழிந்துவிடும் என்பதால், தேவி விஷத்தை ஈசனின் கண்டத்திலேயே நிறுத்தினாள். சிவபெருமான் நஞ்சை உண்டது ஏகாதசி திதி தினம்.

சிவபெருமான் தேவர்களிடம் மறுபடியும் பாற்கடலைக் கடையுமாறும், அதில் வரும் பொருட்களைப் பெற்றுகொள்ளும்படியும் கூறினார். தேவர்களும் அசுரர்களும் மீண்டும் கடையத் தொடங்கினர். ஏகாதசியன்று இரவு முழுவதும் கடைந்தபோது காமதேனு, கற்பகவிருட்சம், திருமகள் என பலவும் வெளிவந்தன. துவாதசியன்று அமிர்தம் தோன்றியது. திருமால் மோகினி வடிவெடுத்து, அசுரர்களை ஏமாற்றிவிட்டு தேவர்களுக்கு அமிர்தத்தைப் பகிர்ந்தளித்தார்.

அமிர்தம் கிடைக்காததால் அசுரர்கள் கோபம் கொண்டு தேவர்களுடன் போரிட்டனர். ஆனால் அமிர்தம் உண்டு வலிமைபெற்ற தேவர்களுடன் போரிட முடியாமல் அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். தேவர்கள் மகிழ்ச்சியடைந்து, தங்களுக்கு அருள்பாலித்த இறைவனை மறந்து ஆடிப்பாடி குதூகலித்தனர். மறுநாள் திரயோதசி திதியன்று நந்திதேவர் அருளால் தேவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, கயிலை சென்று சிவபெருமானை வழிபட்டனர்.

தேவர்களின் வேண்டுதலையேற்று சிவபெருமான் அன்று மாலை மூன்றேமுக்கால் நாழிகை நேரம் உமாதேவி, தேவர்கள், முனிவர்கள் காண நடனமாடினார். அந்த வேளையே பிரதோஷ காலம் எனப்பட்டது. சிவபெருமானின் இந்த நடனத்தைக் கண்டு நந்திதேவர் ஆனந்த மிகுதியால் உடல் பருத்து, லேசாக சித்தம் கலங்கிய நிலையை அடைந்தார். 

பார்வதி தேவி நந்திக்கு சிவப்பரிசி, வெல்லம் கலந்து மருந்தாகக் கொடுத்து, இறைவனை வழிபட்டு தெளிவடையச் செய்தாள். சித்தம் தெளிந்து மகிழ்ந்த நந்தி, அதற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரதோஷ காலத்தில் தன் தலையில் இரண்டு கொம்புகளுக்கும் இடையே இறைவனையும் இறைவியையும் வைத்து, கால்களை மாற்றி வைத்து, "ஆயிரங்கால் மாற்று நடனம்" என்ற நடனத்தை நிகழ்த்தினார். இதன் காரணமாகவே பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே இறைவனையும் இறைவியையும் தரிசிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.

நன்றி : பிரணவி 


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

அருணாசலத்தில் அஷ்டலிங்க வழிபாடு

நினைத்தாலே முக்தி கிடைக்கும் திருவண்ணாமலையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால், அனைத்து பலன்களும் கிடைக்கும். கிரிவலம் செல்வோர் இந்த லிங்கங்களை வழிபடுவது மிகவும் அவசியம். மகான்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த இந்தப் புண்ணியத் தலத்தில் சில நிமிடங்களாவது இருக்க வேண்டுமே என்று நினைப்போரும் உண்டு. இதனால் தான் நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வருகை தந்து, அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.

திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் அண்ணாமலையாரை வழிபட்டு, 14 கி.மீ. தொலைவு கிரிவலம் வந்து கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால் நன்மைகள் சேரும்; தீமைகள் விலகும். கிரிவலப் பாதையில் எண்ணற்ற கோயில்கள், மடங்கள், ஆசிரமங்கள் நிரம்பியுள்ளன. இங்கேயே அஷ்ட லிங்கங்களும் உள்ளன.


இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என்று 8 லிங்கங்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்கள், புண்ணியங்கள் உள்ளிட்டவற்றை எமனிடம் அளிப்பது இந்த அஷ்ட திக் பாலகர்கள் தான். இவர்களே அண்ணாமலையில் அஷ்ட லிங்கங்களாக அமைந்திருந்து பூமியைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த லிங்கங்கள் மனிதனுடைய ஒவ்வொரு காலகட்டத்தைக் குறிக்கின்றன. இவற்றை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு நன்மைகள் பயக்கும்.

01. இந்திர லிங்கம்: கிரிவலம் வரும் வழியில், கோயிலின் கிழக்கு கோபுரத்துக்கு அருகே கிழக்கு திசையில் இந்திர லிங்கம் உள்ளது. தேவர்களின் தலைவரான இந்திரன் தனது பதவியை நிலை நிறுத்திக் கொள்ள திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்துள்ளார். அப்போது கிழக்குத் திசையில் ஒரு இடத்தில் வந்தபோது மின்னத் தொடங்கியுள்ளது. அப்போது அண்ணாமலையாரின் திருஅருள் என்பதை அறிந்த இந்திரன் தனது பதவி நிலைக்க சிவனிடம் வேண்டினார். அப்போது இந்திரனுக்கு சுயம்பு லிங்கமாக சிவன் காட்சியளித்தார். இதுவே இந்திர லிங்கமாகும். இந்திர லிங்கத்தை வழிபட்டால் திருமகளின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும். பதவி உயர்வு, பணிமாற்றம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

02. அக்னி லிங்கம்: கிரிவலப் பாதையில் இரண்டாவதாகவும், வலது புறத்தில் உள்ளது அக்னி லிங்கம். தென்கிழக்குத் திசை பஞ்ச பூதங்களில் அக்னி தலமே திருவண்ணாமலை என்பதால், இந்த லிங்கத்துக்கு தனி இடம். வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது. அக்னி லிங்கத்தின் கீழ் திசையில் அக்னி தீர்த்தம் உள்ளது. எதிரில் இருப்பது அக்னி மண்டபம். அக்னி லிங்கத்தின் அருகேயே ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம் உள்ளது. கிரிவலப் பாதையில் 3 ருத்ர மூர்த்திகள் அங்கப் பிரதட்சிணம் செய்தனர். அவர்களின் திருமேனிகள் ஜோதியாக மாறியது. ஒரு செவ்வாய்க்கிழமை அவர்கள் கிரிவலம் வந்தபோது, குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது பனிமலை போன்ற குளிர்ச்சியை உணர்ந்தனர். அந்த இடமே சுயம்பு லிங்கமான அக்னி லிங்கம் என்கிறது ஆலய வரலாறு. அக்னி லிங்கத்தை வழிபட நோய்கள், பயம் நீங்கும். எதிரிகள் தொல்லை எரிந்து சாம்பலாகும்.

03 எம லிங்கம்: கிரிவலப் பாதையில் மூன்றாவதாக உள்ளது எம லிங்கம் ஆகும். தெற்கு திசைக்குரியது. தென் திசையில் எம தீர்த்தம் உள்ளது. எமன் திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்தபோது, அவரது பாதம் பட்ட அடிச்சுவடுகள் எல்லாம் தாமரைப் பூக்களாக மாறின. அந்த இடத்தில் செம்பொன் பிரகாசமாக ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எம லிங்கம். பூமியில் உள்ள மனிதர்களின் ஆயுள் முடியும்போது அவர்களின் உயிரை எடுக்கச் செல்லும் எம தூதர்கள் வானுலகில் இருந்து பூமிக்கு வந்து, இங்கு வழிபட்ட பின்னரே உரிய பகுதிக்குப் பயணிப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. எமலிங்கத்தை வழிபட்டால் எம பயம் நீங்கும். நீதி நெறி நிலைக்கும். பொருள் வளம் பெருகும்.

04 நிருதி லிங்கம்: கிரிவலப் பாதையில் நான்காவதாக நிருதி லிங்கம் உள்ளது. இதன் திசை தென்கிழக்கு. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. மண் என்ற வார்த்தையின் தூய தமிழ்ப் பெயர் நிருதி ஆகும். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான நிருதீஸ்வரர் கிரிவலம் வந்தபோது. குறிப்பிட்ட இடத்தில் குழந்தையின் ஒலியும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அப்போது நிருதீஸ்வரர் அங்கு நின்று, அண்ணாமலையாரை வணங்கினார். அண்ணாமலையார் தோன்றிய இடமே நிருதி லிங்கம். இந்த இடம், சிவன் பார்வதிக்கு காட்சியளித்த இடம். இங்கிருந்து பார்த்தால் அண்ணாமலையின் வடிவம் சுயம்புவான ரிஷபமாகத் தெரியும்! நிருதி லிங்கத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். மகப்பேறு கிடைக்கும். ஜன்ப சாபம் நீங்கும். புகழ் வந்து நிலைக்கும்.

05 வருண லிங்கம்: கிரிவலப் பாதையில் ஐந்தாவதாக உள்ளது வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. இதன் அருகே வருண தீர்த்தம் உள்ளது. இந்த லிங்கத்தை சனி பகவான் ஆட்சி செய்கிறார். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவர், மழைக்கு அதிதேவதையாகிய வருண பகவான். இவர் முட்டிக் கால் போட்டும், ஒற்றைக் காலால் நொண்டியும் கிரிவலம் வந்தார். அப்போது ஓரிடத்தில் வானத்தைத் தொடும் அளவுக்கு நீருற்று எழுந்தது. அந்நீரைத் தெளித்து அண்ணாமலையாரை வணங்கிட, அங்கு வருண லிங்கம் தோன்றியது!. வருண லிங்கத்தை வழிபட்டால் சிறுநீரக நோய்கள், சர்க்கரை நோய், நீர் சார்ந்த சகல நோய்கள், கொடிய நோய்கள் நீங்கும். உடல் நலம் செழிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

06. வாயு லிங்கம்: கிரிவலப் பாதையில் ஆறாவதாக வாயு லிங்கமும் இதன் அருகே வாயு தீர்த்தமும் உள்ளது. வடமேற்கு திசைக்குரியது. வாயு பகவான் சுழிமுனையில் சுவாசத்தை நிலைகொள்ளச் செய்தவாறு கிரிவலம் வந்தார். அப்போது அடி அண்ணாமலையைத் தாண்டியதும், ஓரிடத்தில் நறுமணம் வீசியது. அங்கே பஞ்சகிருத்திகா செடியின் பூக்கள் மலர்ந்த நேரத்தில் சுயம்புவாக வாயு லிங்கம் உருவானதாக வரலாறு. வாயு லிங்கத்தை வழிபட்டால் சுவாசம் சார்ந்த நோய்கள், இதய நோய்கள் குணமாகும். பெண்களுக்கு நலமும், மன நிம்மதியும் உண்டாகும். கண்திருஷ்டி நீங்கும்.

07. குபேர லிங்கம்: கிரிவலப் பாதையில் உள்ள ஏழாவது லிங்கமாக இருப்பது குபேர லிங்கம். வடதிசைக்குரிய இந்த லிங்கத்தின் அருகே குபேர தீர்த்தம் உள்ளது. குபேரன் கண் மூடி தியானித்து, தலை மீது கரம் குவித்தவாறு குதிகாலால் கிரிவலம் வந்தார். அப்படி பல யுகங்கள் கழிந்த பிறகு ஒரு நாள் திருமாலும், மகாலட்சுமியும் அண்ணாமலையை சக்கரபாணி கோலத்தில் தரிசனம் செய்வதைக் கண்டார். அந்த இடத்தில் உண்டான லிங்கமே குபேரலிங்கம் என்கின்றனர். முறையற்ற வழியில் பணம் சேர்த்தவருக்கு பிராயசித்த ஸ்தலம் குபேர லிங்கம். குபேர சம்பத்து தரும் இடம் இது. இங்கு வழிபட்டால் செல்வம் சேரும்.

08. ஈசானிய லிங்கம்: கிரிவலத்தில் எட்டாவது லிங்கமாக இருப்பது ஈசானிய லிங்கம். இது வட கிழக்கு திசைக்குரியது. அதிகார நந்தி எனப்படும் நந்தி பகவான் கிரிவலம் வந்தபோது, அண்ணாமலையின் தரிசனம் இந்த இடத்தில் கிட்டியதாக தெரியவருகிறது. இங்கு வழிபட்டால் சனித் தொல்லையிலிருந்து விடுபடலாம். இங்கு தியானித்தால் நன்மைகள் சேரும். தவம் பலிக்கும். சிவனின் அருள் கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம்.

நன்றி : பாரத் தி.நந்தகுமார்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

புதன், 24 ஆகஸ்ட், 2016

கண்ணன் குசேலன் நட்பு


இன்றைக்கு திரைப்படங்களில் "நண்பேன்டா' என்னும் புதிய தமிழ்ச் சொல்லை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். தன் நண்பன் தனக்கு எல்லா வகையிலும் உதவி செய்கிறான் என்பதை பெருமையாகவும் அழுத்தமாகவும்  சொல்வதற்காகவே இந்தச் சொல் கையாளப்பட்டது.

ஸ்ரீமத் பாகவதத்தை எழுதிய வியாச மகரிஷி தன் மகன் சுகதேவருக்கு அதை உபதேசித்தார். சுகதேவர் மூலம் பாகவதம் வெளியுலகிற்கு எடுத்துச் சொல்லப்பட்டது. தன் நண்பன் குசேலருக்கு கிருஷ்ணர் உதவிய நிகழ்வை, கங்கைக் கரையில் பரீட்சித்து மன்னனுக்கு விவரித்தார் சுகதேவர்.

மகாவிஷ்ணுவின் அவதாரமான கண்ணன் இளம் வயதில் உலக நியதிக்கு உட்பட்டு, சாந்தீப முனிவரின் ஆசிரமத்தில் தங்கி, அவருக்குப் பணிவிடை செய்து, வேதம், சாஸ்திரம் மற்றும் இதர கலைகளைக் கற்றார். அந்த குருகுலத்தில் கண்ணனுடன் சுதாமன் (சுதாமா) என்கிற அந்தணச் சிறுவனும் தங்கியிருந்தான். கிருஷ்ணனும் சுதாமனும் நல்ல நண்பர்களாக இருந்தனர். 

ஒருகாலகட்டத்தில் குருகுலப் படிப்பு முடிந்தவுடன் கண்ணன் துவாரகைக்குச் சென்றுவிட்டார். சுதாமன் தமது குலவழக்கப் படி பணிகளைச் செய்து வந்தார். அவருக்கும் சுசீலை என்னும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது இல்வாழ்க்கையில் பல பிள்ளைகள் பிறந்தனர். குடும்பம் பெரிதானதால் அதற்கேற்ற வருவாய் இல்லாமல் சுதாமன் மிகவும் சிரமப்பட்டார். சுதாமன் பழைய கந்தலாடையை உடுத்தி வந்ததால் அவரை குசேலர் (பழைய ஆடையை உடுத்துபவர்) என்ற பெயரில் மக்கள் அழைத்தனர். அதுவே அவரது பெயராக பிற்காலத்தில் நிலைத்து விட்டது.

குடும்பத்தில் வறுமை நாளுக்கு நாள் அதிகரித்தது. பல நாட்கள் பட்டினியாக இருக்க நேர்ந்ததால் குசேலரும் அவரது மனைவியும் மெலிந்து போனார்கள். பிள்ளைகளும் வாடிப்போயினர். இந்த நிலையில் ஒருநாள் அவரது மனைவி, "பால்ய பருவத்தில் உங்களது நண்பராக இருந்த கிருஷ்ணன் இப்போது துவாரகைக்கு அரசராக உள்ளார். அவரிடம் நேரில் சென்று நமது குடும்ப நிலையை எடுத்துக்கூறி ஏதாவது உதவியைப் பெற்றுவாருங்கள்'' என்று கணவனிடம் வேண்டினாள்.

இதைக்கேட்ட குசேலர் துவாரகைக்குச் செல்ல சம்மதித்தார். தன்னுடைய குடும்ப வறுமை நீங்கும் என்பதைவிட, நீண்ட நாட்களுக்குப்பிறகு தனது ஆருயிர் நண்பனை நேரில் காணும் ஆவலே அவர் சம்மதித்ததற்குக் காரணம். இதுதான் குசேலரின் உண்மையான நட்புக்கு எடுத்துக்காட்டாகும். ஒரு அரசரைப் பார்க்கச் செல்லும்போது வெறும் கையோடு செல்லாமல் ஏதாவது கொண்டு செல்லவேண்டும் என்னும் மரபை அறிந்த குசேலர், "கிருஷ்ணனுக்குக் கொடுக்க வீட்டில் ஏதாவது உள்ளதா?'' என்று கேட்டார். ஆனால் எதுவுமில்லை. உடனடியாக அவரது மனைவி அக்கம்பக்க வீடுகளுக்குச் சென்று கொஞ்சம் அவலை சேகரித்து வந்து ஒரு பழைய துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி கணவனிடம் கொடுத்தாள்.

பகவான் கிருஷ்ணனை நேரில் பார்க்கப் போகிறோம் என்கிற மனமகிழ்ச்சியுடன் குசேலர் துவாரகை நோக்கி நடக்கத் தொடங்கினார். அவர் துவாரகையை அடைந்தபோது அந்த நகரின் செழிப்பையும்- குறிப்பாக கிருஷ்ணருடைய அரண்மனையின் செல்வச் செழிப்பையும் கண்டு பிரமித்தார். தேவலோகம் போன்று காட்சியளித்த அந்த அரண்மனையின் உள்ளே, அந்தப்புரத்தில் தனது மனைவி ருக்மணியுடன் ஊஞ்சலில் வீற்றிருந்த கிருஷ்ணருக்கு குசேலர் வந்திருக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டதும் கண்ணன் குசேலரை வரவேற்க துள்ளிக் குதித்து அரண்மனையின் பிரதான வாயிலுக்கு ஓடிவந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது நண்பனைப் பார்த்தவுடன் ஆரத்தழுவிக்கொண்டார். அன்பின் மிகுதியால் இருவரும் ஆனந்தக் கண்ணீருடன் நலம் விசாரித்துக்கொண்டனர்.

பின்னர் குசேலரை உள்ளே அழைத்துச் சென்ற கண்ணன் அவரை ஒரு இருக்கையில் அமர்த்தி, தன் மனைவி ருக்மணியுடன் பாதபூஜை செய்து முறைப்படி வரவேற்றார். பின்னர் பலவிதமான பண்டங்கள் கொண்ட உயர்ந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தார். பணியாட்களைக்கொண்டு பரிமாறாமல், கிருஷ்ணனும் ருக்மணியுமே பரிமாறினர். பரம ஏழையான தனக்கு கிருஷ்ணன் காட்டிய தூய அன்பையும் மரியாதையையும் கண்டு திக்குமுக்காடிய குசேலர், மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டார்.

விருந்துக்குப் பின்னர், தன்னைக்காண நீண்ட தூரம் நடந்தே வந்ததால் களைப்புடன் இருந்த குசேலரை அழகிய கட்டிலில் அமர்த்தி, அவரது கால்களை கிருஷ்ணர் தமது கைகளால் பிடித்துவிட்டார். குருகுல வாழ்க்கை சம்பவங்களை இருவரும் நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர்.

இப்படி மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில், கிருஷ்ணன் தன் நண்பனிடம், "எனக்காக என்ன கொண்டு வந்தாய்?'' என உரிமையுடன் கேட்டார். செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் வடிவான ருக்மணியுடன் வாழும் கிருஷ்ணனுக்கு வெறும் அவலை எப்படிக் கொடுப்பதென்று குசேலர் தயங்கினார். அதையுணர்ந்த கிருஷ்ணன் குசேலரின் இடுப்பில் தொங்கிய சிறிய துணி மூட்டையைத் தானே எடுத்து, அதிலிருந்த அவலில் ஒருபிடி எடுத்து மகிழ்ச்சியுடன் உண்டார். அன்பின் பெருக்குடன் பக்தர்கள் கொடுக்கும் சாதாரணமான பொருளும் இறைவனுக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தரும் என்பதை இந்தச் சம்பவம் நமக்குக் காட்டுகிறது. 

அன்றிரவு குசேலரை அந்தப்புரத்திலிருக்கும் அறையில் தங்க வைத்தார் கிருஷ்ணன். தான் துவாரகைக்கு வந்த நோக்கத்தை மறந்து, கிருஷ்ணனின் அன்பையே நினைத்த வண்ணம் அன்றைய இரவைக் கழித்தார் குசேலர். மறுநாள் கிருஷ்ணனிடம் விடைபெற்றுச் செல்லும்போதும் கூட மனைவி சொல்லி அனுப்பிய செய்தியைத் தெரிவிக்கவில்லை. கிருஷ்ணனைக் கண்ட மனநிறைவுடன் ஊருக்குத் திரும்பினார்.

நடந்தே தன் ஊரை அடைந்த குசேலருக்கு அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தனது குடிசை இருந்த இடத்தில் ஒரு பெரிய மாளிகை இருப்பதைக் கண்டு வியந்தார். சில பணியாட்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர். மாளிகைக்குள் அவரது மனைவி, பிள்ளைகளெல்லாம் புதிய பட்டாடை அணிந்து, பலவிதமான அணிகலன்கள் பூண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். தான் ஏதும் கேட்காமலேயே தனது நண்பனான இறைவன் தனக்கு இத்தகைய பேருதவி செய்ததை நினைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

அவரது மாளிகையில் பொன்னும் பொருளும் குவிந்திருந்தாலும், குசேலர் மட்டும் ஆடம்பரத்தை நாடாமல் செல்வப்பற்றற்று பழைய நிலையிலே இருந்து, எப்போதும் கிருஷ்ணனின் நினைவுடனே வாழ்ந்தார். தூய நட்புக்கு இலக்கணமாக கிருஷ்ணனும் குசேலரும் விளங்கினர். இத்தகைய குசேலரின் வரலாற்றைக் கேட்டாலோ, படித்தாலோ கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிட்டுமென்பது பெரியோர் வாக்கு. 

நன்றி : முனைவர் இரா. இராஜேஸ்வரன் 



|| ------ நமோ நாராயணாய ------ || 

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

திருமணத் தடை நீக்கும் திருமணஞ்சேரி

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ உத்வாக நாதசுவாமி, ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கோகிலாம்பாள், ஸ்ரீ யாழின் மென்மொழியம்மை

திருமுறை : இரண்டாம் திருமுறை 016 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் இனிதே கைகூடும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும். இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தனது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவர் என்பது அனுபவ உண்மையாகும்.

பாடல் எண் : 01
அயிலாரும் அம்பு அதனால் புரம் மூன்றெய்து
குயிலாரும் மென்மொழியாள் ஒருகூறாகி 
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப் 
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே.

பொருளுரை:
கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்து, குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு கூற்றில் உடையவனாகி, மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றார்க்குப் பாவம் இல்லை.


பாடல் எண் : 02
விதியானை விண்ணவர் தாம் தொழுது ஏத்திய 
நெதியானை நீள்சடைமேல் நிகழ்வித்த வான் 
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் 
பதியானை பாடவல்லார் வினை பாறுமே.

பொருளுரை:
நீதி நெறிகளின் வடிவினன். தேவர்கள் வணங்கித் தமது நிதியாகக் கொள்பவன். நீண்ட சடைமீது வானத்து மதியைச் சூடியவன். வளமான பொழில்கள் சூழ்ந்த திருமணஞ்சேரியைத் தனது பதியாகக் கொண்டவன். அவனைப் பாடவல்லார் வினைகள் அழியும்.


பாடல் எண் : 03
எய்ப்பானார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய 
இப்பாலாய் எனையும் ஆள உரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி 
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே.

பொருளுரை:
வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகிய இன்பம் தரும் தேன் அளித்து இவ்வுலகத்துள்ளோனாய் அருள்புரிபவன். என்னையும் ஆட்கொண்டருளும் உரிமையன். செல்வங்களாக உள்ள மாடவீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். அவனை மேவி வழிபடுவார் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 04
விடையானை மேலுலகு ஏழும் இப்பாரெலாம் 
உடையானை ஊழிதோறு ஊழியுளதாய 
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி 
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே.

பொருளுரை:
விடை ஊர்தியன். மேலே உள்ள ஏழு உலகங்களையும் இம்மண்ணுலகையும் தன் உடைமையாகக் கொண்டவன். பல்லூழிக் காலங்களாய் விளங்கும் படைகளை உடையவன். அடியவர் பண்ணிசைபாடி வழிபடும் திருமணஞ்சேரியை அடைந்து வாழ்பவன். அவனை அடையவல்லார்க்கு அல்லல் இல்லை.


பாடல் எண் : 05
எறியார் பூங்கொன்றையினோடும் இளமத்தம் 
வெறியாரும் செஞ்சடையார மிலைந்தானை
மறியாரும் கையுடையானை மணஞ்சேரிச் 
செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.

பொருளுரை:
ஒளிபொருந்திய கொன்றைமலர்களோடு புதிய ஊமத்தம் மலர்களை மணம் கமழும் தன் செஞ்சடை மீது பொருந்தச் சூடியவன். மான் கன்றை ஏந்திய கையினன். திருமணஞ்சேரியில் செறிந்து உறைபவன். அவனைப் புகழ்ந்து போற்ற வல்லவர்களை இடர்கள் அடையா.


பாடல் எண் : 06
மொழியானை முன்னொரு நான்மறை ஆறு அங்கம் 
பழியாமைப் பண்ணிசையான பகர்வானை
வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி 
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே.

பொருளுரை:
முற்காலத்தே நான்மறைகளையும், ஆறு அங்கங்களையும் அருளியவன். அவற்றைப் பண்ணிசையோடு பிறர் பழியாதவாறு பகர்பவன். வேதாகம விதிகளைப் பின்பற்றி, வானவர்கள் வந்து துதிக்குமாறு திருமணஞ்சேரியில் விளங்குபவன். அத்தலத்தை இகழாமல் போற்ற வல்லவர்க்கு இன்பம் உளதாம்.


பாடல் எண் : 07
எண்ணானை எண்ணமர் சீர் இமையோர்கட்குக் 
கண்ணானை கண்ணொரு மூன்றும் உடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப் 
பெண்ணானை பேச நின்றார் பெரியோர்களே.

பொருளுரை:
யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவன். தம் உள்ளத்தே வைத்துப் போற்றும் புகழ்மிக்க சிவஞானிகட்குக் கண் போன்றவன். மூன்று கண்கள் உடையவன். அட்டமூர்த்தங்களில் மண் வடிவானவன். சிறந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமையம்மையோடு கூடியவனாய் விளங்கும் அவ்விறைவன் புகழைப்பேசுவோர் பெரியோர் ஆவர்.


பாடல் எண் : 08
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை உடையானை
மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி 
பிடித்தாரப் பேண வல்லார் பெரியோர்களே.

பொருளுரை:
கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த இராவணனின் அழகிய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்தவன். மாறுபாடற்ற செம்மை நிலையை உடையவன். வண்டுகள் தேனை மடுத்து உண்ணுதற்கு இசைபாடிச் சூழும் திருமணஞ்சேரியில் உறையும் அவ்விறைவன் திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொள்வார் பெரியார்கள்.


பாடல் எண் : 09
சொல்லானைத் தோற்றம் கண்டானும் நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார் நன்மாதவர் ஏத்தும் மணஞ்சேரி 
எல்லாமாம் எம்பெருமான் கழல் ஏத்துமே.

பொருளுரை:
வேதாகமங்களைச் சொல்லியவன். உலகைப் படைக்கும் நான்முகன் திருமால் ஆகியோர்களாற் கற்றுணரப்படாத பெருமையன். தாம் அறிந்தவற்றைச் சொல்லித் தொழுது உயர்வுறும் அன்பர்களும் பெரிய தவத்தினை உடையவர்களும் தொழுது வணங்கும் திருமணஞ்சேரியில் உலகப் பொருள்கள் எல்லாமாக வீற்றிருக்கும் அப்பெருமான் திருவடிகளை ஏத்துவோம்.


பாடல் எண் : 10
சற்றேயும் தாம் அறிவில் சமண் சாக்கியர் 
சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி 
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே.

பொருளுரை:
சிறிதேனும் தாமாக அறியும் அறிவு இல்லாத சமண புத்தர்களின் உரைகள் பொருளற்றனவாய் ஒழியும் வண்ணம் ஒப்பற்ற செம்பொருளாய் விளங்கும் சிவபெருமானை வற்றாத நீர் நிலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியை அடைந்து வழிபட்டு அவனையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களை வினைகள் பற்றா.


பாடல் எண் : 11
கண்ணாரும் காழியர்கோன் கருத்தார்வித்த
தண்ணார் சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க்கு இல்லை பாவமே.

பொருளுரை:
கண்களுக்கு விருந்தாய் அமையும் சீகாழிப்பதியில் விளங்கும் சிவபிரானின் திருவுள்ளத்தை நிறைவித்த இனிய புகழ்பொருந்திய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்மாலையை, வளம் நிறைந்த மண்சேர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியை அடைந்து பண் பொருந்தப்பாடிப் போற்றுவார்க்குப் பாவம் இல்லை.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கண்ணுதலோன் கண் அளித்தான் - திருவாரூர்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஏகாம்பரநாதர், ஸ்ரீ தழுவக்குழைந்த நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஏலவார்குழலி, ஸ்ரீ காமாட்சியம்மை

திருமுறை : ஏழாம் திருமுறை 095 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

கண்களில்(வலக்கண்) உள்ள கோளாறு நீங்குவதற்கும் பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய திருப்பதிகம்.


சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணம் செய்து கொண்டபோது, திருவொற்றியூர் எல்லையைத் தாண்டுவதில்லை என்று தாம் செய்திருந்த சபதத்தை மறந்து எல்லையைக் கடந்தாராம். அவரது கண்ணொளி மறைந்தது. திருவொற்றியூரிலிருந்து கண் இரண்டும் இழந்து புறப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதரை "ஆலம் தான் உகந்து" பதிகத்தைப் பாடியபோது, அதில் காமாட்சி அம்மையாரைப் பாராட்டியிருந்ததால், ஈசனுக்கு இடப்பாகம் கொண்டிருந்த காமாட்சி அம்மையார் அருளால் அவருக்கு இடக்கண் பார்வை கிடைத்தது. பல தலங்களில் துதித்துவிட்டுத் திருவாரூரை அடைந்து திருமூலட்டானப் பெருமானை இறைஞ்சி "மீளா அடிமை உமக்கே" பதிகம் பாடியபோது வலக்கண் ஒளியையும் சுந்தரமூர்த்தி நாயனார் பெற்றதாக வரலாறு.

பாடல் எண் : 01
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே 
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் 
வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானிரே, உம்மையன்றிப் பிறரை விரும்பாமலே, உமக்கே என்றும் மீளாத அடிமை செய்கின்ற ஆட்களாகி, அந்நிலையிலே பிறழாதிருக்கும் அடியார்கள், தங்கள் துன்பத்தை வெளியிட விரும்பாது, மூண்டெரியாது கனன்று கொண்டிருக்கின்ற தீயைப்போல, மனத்தினுள்ளே வெதும்பி, தங்கள் வாட்டத்தினை முகத்தாலே பிறர் அறிய நின்று. பின்னர் அத்துன்பம் ஒருகாலைக் கொருகால் மிகுதலால் தாங்க மாட்டாது, அதனை, உம்பால் வந்து வாய் திறந்து சொல்வார்களாயின், நீர் அதனைக் கேட்டும் கேளாததுபோல வாளாவிருப்பீர்; இஃதே நும் இயல்பாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 02
விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக்கு அடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் 
மற்றைக் கண் தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
அடிகளே, நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர், ஏனெனில், யான் உமக்கு ஒற்றிக் கலம் அல்லேன், உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட்பட்டேன், பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை, இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கிவிட்டீர், எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர்? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர். எனக்குப் பழியொன்றில்லை, பன்முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர்; மற்றொரு கண்ணைத் தர உடன் படாவிடின் நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 03
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலியவை போல 
என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணாது 
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
அன்றிற் பறவைகள் நாள்தோறும் தப்பாது வந்து சேர்கின்ற, சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே, கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக்கன்றுகள் போல, நாள்தோறும் தப்பாது பாடியே உம்மிடத்துப் பயன் பெறுகின்ற அடியார்கள், பலநாள் பாடிய பின்னும் தங்கள் கண் காணப்பெறாது, குன்றின் மேல் முட்டிக் குழியினுள் வீழ்ந்து வருந்துவராயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 04
துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத்துறை ஆள்வீர்
இருக்கை திருவாரூரே உடையீர் மனமே என வேண்டா
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் 
வருத்தி வைத்து மறுமைப் பணித்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
இருக்குமிடம் திருவாரூராகவே உடையவரே, நீர் இன்னும், "திருத்துருத்தி, திருப்பழனம்" என்பவைகளையும் ஊராகக் கொண்டு வாழ்வீர், திருச்சோற்றுத்துறையையும் ஆட்சி செய்வீர், ஆதலின் உமக்கு இடம் அடியவரது மனமே எனல் வேண்டா, அதனால் உம்பால் அன்பு மிக்க அடியார்கள், தங்கள் அல்லலை உம்மிடம் வந்து சொன்னால், நீர் அவர்களை இப்பிறப்பில் வருத்தியே வைத்து, மறுபிறப்பிற்றான் நன்மையைச் செய்வதாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 05
செந்தண் பவளம் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமாறு உமக்கு ஆட்பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணாது 
வந்து எம்பெருமான் முறையோ என்றால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
எங்கள் தலைவரே, இது, செவ்விய தண்ணிய பவளம் போலும் இந்திரகோபங்கள் விளங்குகின்ற சோலையையுடைய திருவாரூர் தானோ? நன்கு காண இயலாமையால் இதனைத் தெளிகின்றிலேன், உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன், இது தானோ? இசை வண்ணங்கள் பலவும் அமைந்த பாடலால் உம்மைப் பாடுகின்ற அடியார்கள், தங்கள் கண் காணப்பெறாது, உம்பால் வந்து, "எம்பெருமானே முறையோ" என்று சொல்லி நிற்றல் ஒன்றே உளதாகுமானால், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 06
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையீரே
தனத்தால் இன்றி தாம்தாம் மெலிந்து தங்கண் காணாது 
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
தினையது தாள்போலும் சிவந்த கால்களையுடைய நாரைகள் திரளுகின்ற திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற, முல்லை நிலத்தில் உள்ள கொன்றையினது மலரால் ஆகிய பொன்மாலை போலும் மாலையை அணிந்த, திரிக்கப்பட்ட புல்லிய சடையையுடையவரே, உம் அடியவர், தாம் பொருளில்லாமையால் இன்றி, தங்கள் கண் காணப்பெறாது வருந்தி, மனத்தினுள்ளே வாட்ட முற்றிருப்பதானால், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 07
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே 
ஏயெம் பெருமான் இதுவே ஆமாறு உமக்கு ஆட்பட்டோர்க்கு
மாயம் காட்டிப் பிறவி காட்டி மறவா மனம் காட்டிக்
காயம் காட்டிக் கண்ணீர் கொண்டால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
ஆண் பறவைக் கூட்டம், பெண்ப றவைக் கூட்டத்துடன் வந்து சேர்கின்ற சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்றவரே, எங்களுக்குப் பொருந்திய பெருமானிரே, உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் இதுதானோ? நீர் எனக்கு உம்மை மறவாத மனத்தைக் கொடுத்து, பின்பு ஒரு மாயத்தை உண்டாக்கி, அது காரணமாகப் பிறவியிற் செலுத்தி, உடம்பைக் கொடுத்து, இப்போது கண்ணைப் பறித்துக்கொண்டால், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 08
கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி 
இழியாக் குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாது ஏத்துவோம்
பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம்
வழிதான் காணாது அலமந்து இருந்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
அடிகளே, யாங்கள் இழிவில்லாத உயர் குலத்திலே பிறந்தோம், அதற்கேற்ப உம்மை இகழ்தல் இன்றி, நீர், கழியும், கடலும், மரக்கலமும் நிலமுமாய்க் கலந்து நின்ற தன்மையைச் சொல்லும் சொற்களையுடையேமாய்த் துதிப்போம், அவ்வாறாகலின், எம்மை வருத்துதலால் உமக்குப் பழி உண்டாதலை நினையீர், அதனால், உம்மைப்பாடும் அடியேமாகிய யாங்கள், வழியைக் காண மாட்டாது அலைந்து வாழ்வதாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 09
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிறரெல்லாம்
காய் தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதிக் கொண்டக்கால்
நாய் தான் போல நடுவே திரிந்தும் உமக்கு ஆட்பட்டோர்க்கு 
வாய் தான் திறவீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே, விரும்பப்பட்டது காயே எனினும், விரும்பிக் கைக் கொண்டால், அது கனியோடொப்பதேயன்றோ? அதனால் உம்மைத் தவிரப் பிறரெல்லாம், பேயோடு நட்புச் செய்யினும், பிரிவு என்பதொன்று துன்பந்தருவதே என்று சொல்லி, அதனைப் பிரிய ஒருப்படார், ஆனால், நீரோ, உமது திருவோலக்கத்தின் நடுவே நாய் போல முறையிட்டுத் திரிந்தாலும், உமக்கு ஆட்பட்டவர்கட்கு, வாய் திறந்து ஒருசொல் சொல்லமாட்டீர், இதுவே உமது நட்புத் தன்மையாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 10
செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூலட்டானம்மே இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம் 
வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
திருமூலட்டானத்தையே பொருந்தி இடமாகக் கொண்டவரே, இது செருந்தி மரங்கள் தமது மலர்களாகிய செம்பொன்னை மலர்கின்ற திருவாரூர் தானோ? இருத்தல், நிற்றல், கிடத்தல் முதலிய எல்லா நிலைகளினும் உம்மை இகழாது துதிப்பேமாகிய யாம், உம்பால் வருத்தமுற்று வந்து, ஒரு குறையை வாய் விட்டுச் சொன்னாலும், நீர் வாய் திறவாதிருப்பிராயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 11
காரூர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் 
வாரூர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
பல நூல்களும் ஆகி, கருமை மிக்க கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடைய, திருவாரூர்த் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற கச்சுப் பொருந்திய தனங்களையுடையவளாகிய உமாதேவியது பாகத்தைக் கொண்டவரே, இவ்வுலகில் உள்ள ஊரெல்லாம் அறிய, நீர், உமது திருவடிப் பெயரைப்பெற்ற நம்பியாரூரனாகிய எனது கண்ணைப் பறித்துக் கொண்டீர், அதனால் நீர் தாம் பழியுட்பட்டீர், இனி நீர் இனிது வாழ்ந்து போமின்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

புதன், 17 ஆகஸ்ட், 2016

கண்ணுதலோன் கண் அளித்தான் - திருக்கச்சியேகம்பம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஏகாம்பரநாதர், ஸ்ரீ தழுவக்குழைந்த நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஏலவார்குழலி, ஸ்ரீ காமாட்சியம்மை

திருமுறை : ஏழாம் திருமுறை 061 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

கண்களில்(இடக்கண்) உள்ள கோளாறு நீங்குவதற்கும் பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய திருப்பதிகம்.


வன்தொண்டராம் சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தடியில் "உன்னைப் பிரியேன்" என்று சத்தியம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். சிவபெருமானை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டு பின் திருவாரூர் செல்வதற்காக சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து திருவொற்றியூரில் இருந்து சத்தியத்தை மீறி புறப்பட்டதால் சுந்தரர் தனது இரு கண் பார்வையும் இழந்தார். அப்படி பார்வை இழந்த கண்களில் இடக்கண் பார்வையை சுந்தரர் காஞ்சீபுரம் தலத்தில் பதிகம் பாடி பெற்றார். பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "காணக் கண் அடியேன் பெற்றவாறே" என்று உள்ளம் உருகிப் பாடியுள்ளார். நல்ல தமிழ்ப் பாடலாகிய இக்கதிகத்திலுள்ள 10 பாடலகளையும் பாட வல்லவர் நன்னெறியால் பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர் என்றும் குறிப்பிடுகிறார்.

ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடிவிட்டார். இதன் காரணமாக எல்லா உலகங்களும் இருளில் மூழ்கின. உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இருள் அகற்றினார். அம்பிகை விளையாட்டாக கண்களை மூடினாலும் அதனால் எல்லா ஜீவராசிகளுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்காக பூவுலகிற்குச் சென்று பிராயச்சித்தமாக தன்னை நோக்கி தவம் இயற்றுமாறு அம்பிகையைப் பணித்தார். அம்பிகையும் இந்த பூவுலகிற்கு வந்து புனித தலமான இந்த காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கிப் பூஜித்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். 

வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி அம்பிகை லிங்கத்தை தழுவி கட்டிக்கொண்டார். அவ்வாறு உமையம்மை தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார். இவ்வாறு இறைவி இறைவனை வழிபட்ட இந்த வரலாறு திருக் குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்திலும், காஞ்சிப் புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இறைவனுக்குத் தழுவக் குழைந்த நாதர் என்றும் பெயர். இவ்வாறு அம்பிகை இறைவனைக் கட்டி தழுவிக் கொண்டதை சுந்தரர் தனது பதிகத்தில் (71வது பதிகம் - 10வது பாடல்) அழகாக குறிப்பிடுகிறார்.

பாடல் எண் : 01
ஆலந்தான் உகந்து அமுது செய்தானை 
ஆதியை அமரர் தொழுது ஏத்தும் 
சீலந்தான் பெரிதும் உடையானைச் 
சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கால காலனைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
நஞ்சினைத் தான் விரும்பி உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும், யாவர்க்கும் முதல்வனும், தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும், தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும், மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய "உமை" என்னும் நங்கை தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், காலகாலனும் ஆகிய திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 02
உற்றவர்க்கு உதவும் பெருமானை 
ஊர்வது ஒன்று உடையான் உம்பர் கோனைப்
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப் 
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றமில் புகழாள் உமை நங்கை 
ஆதரித்து வழிபடப் பெற்ற 
கற்றை வார்சடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே

பொருளுரை:
தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய்கின்ற பெருமானும், ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும், தேவர்கட்குத் தலைவனும், தன்னை விடாது பற்றினவர்க்கு, பெரிய பற்றுக் கோடாய் நிற்பவனும், தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று, அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய அழிவில்லாத புகழையுடையவளாகிய "உமை" என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற, கற்றையான நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 03
திரியும் முப்புரம் தீப்பிழம்பாகச்
செங்கண் மால்விடைமேல் திகழ்வானைக் 
கரியின் ஈருரி போர்த்து உகந்தானைக் 
காமனைக் கனலா விழித்தானை
வரிகொள் வெள்வளையாள் உமை நங்கை 
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
பெரிய கம்பனை எங்கள் பிரானை 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து, அக்காலை சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும், மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும், வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய "உமை" என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 04
குண்டலம் திகழ் காதுடையானைக் 
கூற்று உதைத்த கொடுந்தொழிலானை
வண்டலம் பும்மலர்க் கொன்றையினானை 
வாளராமதி சேர் சடையானைக்
கெண்டையந் தடங்கண் உமை நங்கை 
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்டம் நஞ்சுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும், கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய, கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய "உமை" என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற, கண்டத்தில் நஞ்சினையுடைய திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 05
வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை 
வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை 
அருமறை அவை அங்கம் வல்லானை
எல்லையில் புகழாள் உமை நங்கை 
என்று ஏத்தி வழிபடப் பெற்ற 
நல்ல கம்பனை எங்கள் பிரானை 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
யாவரையும் வெல்லும் தன்மையுடைய, வெள்ளிய மழு ஒன்றை உடையவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும், அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும், அரிய வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய, அளவற்ற புகழை உடையவளாகிய "உமை" என்னும் நங்கை எந்நாளும் துதித்து வழி படப்பெற்ற, நன்மையையுடைய திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு!.


பாடல் எண் : 06
திங்கள் தங்கிய சடை உடையானைத் 
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும் 
சங்க வெண்குழைக் காது உடையானைச் 
சாம வேதம் பெரிது உகப்பானை
மங்கை நங்கை மலைமகள் 
கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கங்கையாளனைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
பிறை தங்கியுள்ள சடையையுடையவனும், தேவர்க்குத் தேவனும், வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற, வெள்ளிய குழையை அணிந்த காதினையுடையவனும், சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய, என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி, துதித்து வழிபடப்பெற்ற, கங்கையை அணிந்த, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 07
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை 
வேதம் தான் விரித்து ஓத வல்லானை 
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை 
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்ணு மூன்றுடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும், வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும், தன்னை அடைந்தவர்கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும், நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய, எண்ணில்லாத பழையவான புகழை உடையவளாகிய "உமை" என்னும் நங்கை எந்நாளும் துதித்து வழிபடப் பெற்ற, கண்களும் மூன்று உடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 08
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் 
சிந்தையில் திகழும் சிவன் தன்னைப்
பந்தித்த வினைப்பற்று அறுப்பானைப் 
பாலொடு ஆனஞ்சும் ஆட்டு உகந்தானை
அந்தமில் புகழாள் உமை நங்கை 
ஆதரித்து வழிபடப் பெற்ற 
கந்த வார்சடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
நாள்தோறும் தன்னையே சிந்தித்து, துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்குகின்ற மங்கலப் பொருளானவனும், உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும், பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய, முடிவில்லாத புகழையுடையவளாகிய "உமை" என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற, கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய, நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 09
வரங்கள் பெற்று உழல் வாளரக்கர் தம் 
வாலிய புரமூன்று எரித்தானை
நிரம்பிய தக்கன் தன்பெரு வேள்வி 
நிரந்தரம் செய்த நிர்க்கண்டகனைப்
பரந்த தொல்புகழாள் உமை நங்கை 
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கரங்கள் எட்டுடைக் கம்பன் எம்மானை 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால், வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும், தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய பரவிய, பழைய புகழையுடையவளாகிய "உமை" என்னும் நங்கை முன்னிலையாகவும், படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற, எட்டுக் கைகளையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 10
எள்கல் இன்றி இமையவர் கோனை 
ஈசனை வழிபாடு செய்வாள் போல் 
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை 
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி 
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட 
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பொருளுரை:
தேவர் பெருமானாகிய சிவபெருமானை, அவனது ஒரு கூறாகிய உமாதேவி தானே தான் வழிபடவேண்டுவது இல்லை என்று இகழ்தல் செய்யாது வழிபட விரும்பி, ஏனை வழிபாடு செய்வாருள் ஒருத்தி போலவே நின்று, முன்னர் உள்ளத்துள்ளே நினைந்து செய்யும் வழிபாட்டினை முடித்து, பின்பு, புறத்தே வழிபடச் சென்று, அவ்வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டு, தான் அவ்விடத்துக் கம்பையாற்றின்கண் பெருவெள்ளத்தைத் தோற்றுவித்து வெருட்ட, வஞ்சிக்கொடி போல்பவளாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக்கொள்ள, அதன்பின் அவள்முன் வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு, வியப்பு!.


பாடல் எண் : 11
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானைப் 
பெரிய எம்பெருமான் என்று எப்போதும் 
கற்றவர் பரவப்படுவானைக் 
காணக் கண் அடியேன் பெற்றது என்று 
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக் 
குளிர் பொழில் திருநாவல் ஆரூரன் 
நற்றமிழ்வை ஈரைந்தும் வல்லார் 
நன்நெறி உலகு எய்துவர் தாமே.

பொருளுரை:
குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூரனாகிய நம்பியாரூரன், ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும், மெய்ந் நூல்களைக் கற்றவர்கள் "இவன் எம் பெரிய பெருமான்" என்று எப்போதும் மறவாது துதிக்கப்படுபவனும், யாவர்க்கும் தலைவனும், கூத்தாடுதலை உடையவனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர். நன்னெறியாற் பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||