வியாழன், 18 ஆகஸ்ட், 2016

கண்ணுதலோன் கண் அளித்தான் - திருவாரூர்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஏகாம்பரநாதர், ஸ்ரீ தழுவக்குழைந்த நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஏலவார்குழலி, ஸ்ரீ காமாட்சியம்மை

திருமுறை : ஏழாம் திருமுறை 095 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

கண்களில்(வலக்கண்) உள்ள கோளாறு நீங்குவதற்கும் பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய திருப்பதிகம்.


சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணம் செய்து கொண்டபோது, திருவொற்றியூர் எல்லையைத் தாண்டுவதில்லை என்று தாம் செய்திருந்த சபதத்தை மறந்து எல்லையைக் கடந்தாராம். அவரது கண்ணொளி மறைந்தது. திருவொற்றியூரிலிருந்து கண் இரண்டும் இழந்து புறப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதரை "ஆலம் தான் உகந்து" பதிகத்தைப் பாடியபோது, அதில் காமாட்சி அம்மையாரைப் பாராட்டியிருந்ததால், ஈசனுக்கு இடப்பாகம் கொண்டிருந்த காமாட்சி அம்மையார் அருளால் அவருக்கு இடக்கண் பார்வை கிடைத்தது. பல தலங்களில் துதித்துவிட்டுத் திருவாரூரை அடைந்து திருமூலட்டானப் பெருமானை இறைஞ்சி "மீளா அடிமை உமக்கே" பதிகம் பாடியபோது வலக்கண் ஒளியையும் சுந்தரமூர்த்தி நாயனார் பெற்றதாக வரலாறு.

பாடல் எண் : 01
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே 
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் 
வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானிரே, உம்மையன்றிப் பிறரை விரும்பாமலே, உமக்கே என்றும் மீளாத அடிமை செய்கின்ற ஆட்களாகி, அந்நிலையிலே பிறழாதிருக்கும் அடியார்கள், தங்கள் துன்பத்தை வெளியிட விரும்பாது, மூண்டெரியாது கனன்று கொண்டிருக்கின்ற தீயைப்போல, மனத்தினுள்ளே வெதும்பி, தங்கள் வாட்டத்தினை முகத்தாலே பிறர் அறிய நின்று. பின்னர் அத்துன்பம் ஒருகாலைக் கொருகால் மிகுதலால் தாங்க மாட்டாது, அதனை, உம்பால் வந்து வாய் திறந்து சொல்வார்களாயின், நீர் அதனைக் கேட்டும் கேளாததுபோல வாளாவிருப்பீர்; இஃதே நும் இயல்பாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 02
விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக்கு அடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் 
மற்றைக் கண் தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
அடிகளே, நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர், ஏனெனில், யான் உமக்கு ஒற்றிக் கலம் அல்லேன், உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட்பட்டேன், பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை, இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கிவிட்டீர், எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர்? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர். எனக்குப் பழியொன்றில்லை, பன்முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர்; மற்றொரு கண்ணைத் தர உடன் படாவிடின் நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 03
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலியவை போல 
என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணாது 
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
அன்றிற் பறவைகள் நாள்தோறும் தப்பாது வந்து சேர்கின்ற, சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே, கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக்கன்றுகள் போல, நாள்தோறும் தப்பாது பாடியே உம்மிடத்துப் பயன் பெறுகின்ற அடியார்கள், பலநாள் பாடிய பின்னும் தங்கள் கண் காணப்பெறாது, குன்றின் மேல் முட்டிக் குழியினுள் வீழ்ந்து வருந்துவராயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 04
துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத்துறை ஆள்வீர்
இருக்கை திருவாரூரே உடையீர் மனமே என வேண்டா
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் 
வருத்தி வைத்து மறுமைப் பணித்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
இருக்குமிடம் திருவாரூராகவே உடையவரே, நீர் இன்னும், "திருத்துருத்தி, திருப்பழனம்" என்பவைகளையும் ஊராகக் கொண்டு வாழ்வீர், திருச்சோற்றுத்துறையையும் ஆட்சி செய்வீர், ஆதலின் உமக்கு இடம் அடியவரது மனமே எனல் வேண்டா, அதனால் உம்பால் அன்பு மிக்க அடியார்கள், தங்கள் அல்லலை உம்மிடம் வந்து சொன்னால், நீர் அவர்களை இப்பிறப்பில் வருத்தியே வைத்து, மறுபிறப்பிற்றான் நன்மையைச் செய்வதாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 05
செந்தண் பவளம் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமாறு உமக்கு ஆட்பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணாது 
வந்து எம்பெருமான் முறையோ என்றால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
எங்கள் தலைவரே, இது, செவ்விய தண்ணிய பவளம் போலும் இந்திரகோபங்கள் விளங்குகின்ற சோலையையுடைய திருவாரூர் தானோ? நன்கு காண இயலாமையால் இதனைத் தெளிகின்றிலேன், உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன், இது தானோ? இசை வண்ணங்கள் பலவும் அமைந்த பாடலால் உம்மைப் பாடுகின்ற அடியார்கள், தங்கள் கண் காணப்பெறாது, உம்பால் வந்து, "எம்பெருமானே முறையோ" என்று சொல்லி நிற்றல் ஒன்றே உளதாகுமானால், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 06
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையீரே
தனத்தால் இன்றி தாம்தாம் மெலிந்து தங்கண் காணாது 
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
தினையது தாள்போலும் சிவந்த கால்களையுடைய நாரைகள் திரளுகின்ற திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற, முல்லை நிலத்தில் உள்ள கொன்றையினது மலரால் ஆகிய பொன்மாலை போலும் மாலையை அணிந்த, திரிக்கப்பட்ட புல்லிய சடையையுடையவரே, உம் அடியவர், தாம் பொருளில்லாமையால் இன்றி, தங்கள் கண் காணப்பெறாது வருந்தி, மனத்தினுள்ளே வாட்ட முற்றிருப்பதானால், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 07
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே 
ஏயெம் பெருமான் இதுவே ஆமாறு உமக்கு ஆட்பட்டோர்க்கு
மாயம் காட்டிப் பிறவி காட்டி மறவா மனம் காட்டிக்
காயம் காட்டிக் கண்ணீர் கொண்டால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
ஆண் பறவைக் கூட்டம், பெண்ப றவைக் கூட்டத்துடன் வந்து சேர்கின்ற சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்றவரே, எங்களுக்குப் பொருந்திய பெருமானிரே, உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் இதுதானோ? நீர் எனக்கு உம்மை மறவாத மனத்தைக் கொடுத்து, பின்பு ஒரு மாயத்தை உண்டாக்கி, அது காரணமாகப் பிறவியிற் செலுத்தி, உடம்பைக் கொடுத்து, இப்போது கண்ணைப் பறித்துக்கொண்டால், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 08
கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி 
இழியாக் குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாது ஏத்துவோம்
பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம்
வழிதான் காணாது அலமந்து இருந்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
அடிகளே, யாங்கள் இழிவில்லாத உயர் குலத்திலே பிறந்தோம், அதற்கேற்ப உம்மை இகழ்தல் இன்றி, நீர், கழியும், கடலும், மரக்கலமும் நிலமுமாய்க் கலந்து நின்ற தன்மையைச் சொல்லும் சொற்களையுடையேமாய்த் துதிப்போம், அவ்வாறாகலின், எம்மை வருத்துதலால் உமக்குப் பழி உண்டாதலை நினையீர், அதனால், உம்மைப்பாடும் அடியேமாகிய யாங்கள், வழியைக் காண மாட்டாது அலைந்து வாழ்வதாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 09
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிறரெல்லாம்
காய் தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதிக் கொண்டக்கால்
நாய் தான் போல நடுவே திரிந்தும் உமக்கு ஆட்பட்டோர்க்கு 
வாய் தான் திறவீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே, விரும்பப்பட்டது காயே எனினும், விரும்பிக் கைக் கொண்டால், அது கனியோடொப்பதேயன்றோ? அதனால் உம்மைத் தவிரப் பிறரெல்லாம், பேயோடு நட்புச் செய்யினும், பிரிவு என்பதொன்று துன்பந்தருவதே என்று சொல்லி, அதனைப் பிரிய ஒருப்படார், ஆனால், நீரோ, உமது திருவோலக்கத்தின் நடுவே நாய் போல முறையிட்டுத் திரிந்தாலும், உமக்கு ஆட்பட்டவர்கட்கு, வாய் திறந்து ஒருசொல் சொல்லமாட்டீர், இதுவே உமது நட்புத் தன்மையாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 10
செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூலட்டானம்மே இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம் 
வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
திருமூலட்டானத்தையே பொருந்தி இடமாகக் கொண்டவரே, இது செருந்தி மரங்கள் தமது மலர்களாகிய செம்பொன்னை மலர்கின்ற திருவாரூர் தானோ? இருத்தல், நிற்றல், கிடத்தல் முதலிய எல்லா நிலைகளினும் உம்மை இகழாது துதிப்பேமாகிய யாம், உம்பால் வருத்தமுற்று வந்து, ஒரு குறையை வாய் விட்டுச் சொன்னாலும், நீர் வாய் திறவாதிருப்பிராயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.


பாடல் எண் : 11
காரூர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் 
வாரூர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்து போதீரே.

பொருளுரை:
பல நூல்களும் ஆகி, கருமை மிக்க கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடைய, திருவாரூர்த் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற கச்சுப் பொருந்திய தனங்களையுடையவளாகிய உமாதேவியது பாகத்தைக் கொண்டவரே, இவ்வுலகில் உள்ள ஊரெல்லாம் அறிய, நீர், உமது திருவடிப் பெயரைப்பெற்ற நம்பியாரூரனாகிய எனது கண்ணைப் பறித்துக் கொண்டீர், அதனால் நீர் தாம் பழியுட்பட்டீர், இனி நீர் இனிது வாழ்ந்து போமின்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக