ஞாயிறு, 31 ஜூலை, 2016

அற்புதங்கள் நிறைந்த ஆடி அமாவாசை

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீ ஐயாரப்பர்

ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்குரிய தினமென்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதமிருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் முன்னோர் கூற்று.

விரதம் சரி... அது என்ன கதை? அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமமிக்க அவன் வாரிசு இல்லாத காரணத்தால் மிகுந்த துயரத்திலிருந்தான். எனவே அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி வாக்கு, "உனது மகன் இளமைப் பருவத்தை எட்டும்போது இறந்துபோவான்" என்று கூறியது. அதைக் கேட்ட மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளிகோவில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, "உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர்பெறுவான்' என்ற குரல் கேட்டது.

இளமைப்பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம்முடிக்க பெண் தேடியபோது யாரும் அதற்கு முன்வரவில்லை. அரசன் நிறைய பொன் தருவதாக அறிவித்தான். அப்போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம்பெண்ணை, அவளது உறவினர்கள் ஏமாற்றி இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டுபோய் விட்டனர். 

அப்பாவியான அந்தப்பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடியும்வரை அவனருகிலேயே கண்ணுறங்காமல் காத்திருந்தாள். விடிந்தபின் தன் கணவன் இறந்துவிட்டானென்ற உண்மை தெரியவந்தது. அழுதாள்... அரற்றினாள்... தவித்தாள்... தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். ஈசனின் அனுமதியோடு இறந்து கிடந்த இளவரசனை உயிர்பெற்றெழச் செய்தாள்.

இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண், "இருண்டு போன என் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே, இந்த நாளில் தங்களை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, "ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் உனது கதையைப் படித்துவிட்டு, மறுநாள் விரதமிருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து என்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும். அவர்கள் இல்லத்தில் அஷ்டலட்சுமி கடாட்சம் நிலவும்' என சொல்லி மறைந்தாள்.

ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான கடல் நீராடல் நடக்கிறது. அக்னி தேவனே நீராடிய தினம் என்பது நம்பிக்கை. ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டபோது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்தநொடியே அக்னி தேவன் அலறினான். சீதாதேவியின் கற்புக்கனல் அவனை சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்துக்கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது. எனவே அக்னி தீர்த்தம் எனப் பெயர் வந்தது. "அக்னி நீராடிய கடலில் நீராடுவோரின் பாவங்கள் தீரும்' என ஆசியளித்தாள் சீதாதேவி.

இன்றும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன்னுள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவிபோல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசையன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களைச் செய்வதும் விசேஷமானது.

இராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் ராமேஸ்வரம். சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுமட்டுமே. மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோவிலுக்குள் உள்ளன. "ராமேஸ்வரம் சென்றும் குளிக்காததுபோல' என்றொரு சொல்வழக்கு உண்டு. வேறெந்த தீர்த்த தலத்தில் குளிக்காவிட்டாலும், இங்கு புனித நீராடுவது அவசியமென்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இங்கு ஆடி மாதத்தில் அம்பிகை பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டுமல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தலமாகவும் இது விளங்குகிறது. 

தட்சிணாயன காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். முன்னோர் வழிபாட்டை ஆடி அமாவாசையன்று காலையே துவங்கிவிட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தக்கரைக்குச் சென்று தர்ப்பணம் செய்துவரவேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பிச் சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்கவேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்தபிறகு, காகத்திற்கு உணவிடவேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிடவேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்தால் முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம்.

அமாவாசையின் முக்கியத்துவம் பற்றிய ஒரு சம்பவத்தைக் காண்போமா... குருக்ஷேத்ர யுத்தத்திற்குமுன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக சகாதேவனிடம் ஜோதிடம் கேட்கச் சென்றான் துரியோதனன். "போரில் வெற்றிபெறவேண்டுமானால், எந்த நேரத்தில் களபலி கொடுக்கவேண்டும்?' எனக் கேட்டான். 

துரியோதனன் தன் எதிரியாக இருந்தாலும், உண்மையின் இருப்பிடமான சகாதேவன், "பூரண அமாவாசையன்று போரைத் துவங்கினால் வெற்றி உறுதி" என்றான். துரியோதனனும், அதேநாளில் களபலி கொடுக்கத் தயாரானான். அப்போது கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். திடீரென அமாவாசைக்கு முதல் நாளே ஒரு குளக்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்தார். இதைப் பார்த்து ஆச்சரியம் கொண்ட சூரியனும் சந்திரனும் பூலோகத்திற்கு வந்தனர். "நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேரும் நாள்தானே அமாவாசை! ஆனால் நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களே... இது முறையானதா?' என்றனர்.

அதற்கு கிருஷ்ணன், "இப்போது நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள்; எனவே இன்று தான் அமாவாசை..." என சமயோசிதமாக பதில் சொல்லிவிட்டார். சகாதேவன் சொன்னபடி களபலி கொடுத்தான் துரியோதனன்; ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய்விட்டது. இதனால் நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது. 

ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல; தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள செதலபதி எனப்படும் திலதர்ப்பணபுரி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர். எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை நித்ய அமாவாசை தலம் என்பர். இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்துகொள்ளலாம்.

ராமபிரான் இத்தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்துள்ளார். இந்த பிண்டங்கள், பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது. திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 22 கிலோமீட்டர் தூரத்தில் பூந்தோட்டம் கிராமம் உள்ளது. இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ள கூத்தனூர் சென்று, அருகிலுள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலும், அங்கிருந்து சற்று தூரத்தில் சிவபார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலும் உள்ளன. ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த தலங்களுக்கும் சென்று வரலாம்.

அறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோவிலைப்பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார். கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். 

இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய "மாதர்பிறைக் கண்ணியானை' என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலை நாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில், இங்கு கோவில் பிராகாரத்தில் "ஐயாறப்பா" என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டது. அதில் முல்லைப்பூ நிறத்திலான பத்துக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்த தேரினைச் செலுத்தும்போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால் சந்திரன் படிப்படியாகத் தேய்ந்து ஒரு கலையோடு காட்சிதரும் நிலையில் இருப்பான். அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமாகும். பௌர்ணமிக்குப் பிறகு 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக்கொள்கின்றனர். அதனால் தேய்ந்து ஒளியிழந்த சந்திரன் "அமை" என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது.

அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன் முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச் சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஒருசமயம் கவுசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது, "இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும்" என்று ரிஷிகள் கூறினார்கள். ஆனால் கவுசிக முனிவர், "என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும்" என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும் விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார். பல வருடங்கள் தவம் புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை. இறுதியில் திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார். கவுசிக முனிவரின் உறுதியான தவத்தினைப் போற்றிய இறைவன் ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்தருளினார். 

முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. உடனே கவுசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.

ஆடி அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்னதானமும் செய்தால், நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம். இத்தலம் தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் வழியில்- திருக்கண்டியூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அற்புதங்கள் நடந்த ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய பிதுர் பூஜை மட்டுமின்றி, இறைவழிபாட்டிலும் ஈடுபட்டு தங்களால் இயன்ற தான தர்மங்கள் செய்தால் என்றும் வாழ்வில் வசந்தம் காணலாம்.

"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"

ஆக்கம் : பகவான்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

சனி, 30 ஜூலை, 2016

நலம் தரும் திருப்பதிகம் 06 திருவாரூர்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வன்மீகநாதர், ஸ்ரீ புற்றிடங்கொண்டார், ஸ்ரீ தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அல்லியம் பூங்கோதை, ஸ்ரீ கமலாம்பிகை, ஸ்ரீ நீலோத்பலாம்பாள்

திருமுறை : ஏழாம் திருமுறை 08 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

சிலரது மனதில் காரணமே இல்லாமல், 'இப்படி நடந்து விடுமோ, அப்படி நடந்து விடுமோ' என்ற பயம் இருக்கும். இதை அடியோடு அழித்து, எதையும் தாங்கும் இதயமும், எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் பெற திருவாரூர் தியாகராஜரை மனதில் நினைத்து இந்தப் பாடல்களைப் பாடுங்கள்.


சுந்தரர் சேரர்பெருமானுடன் பாம்பணி மாநகரில் திருப்பாதாளீச்சுரரை வணங்கி அருகில் உள்ள பல பதிகளையும் தொழுது திருவாரூர் வந்தணைந்தார். திருவாரூரில் வாழ்வார்கள் எதிர்கொள்ளத் திருக்கோயில் சென்று பாடியருளிய இத்திருப்பதிகம்

பாடல் எண் : 01
இறைகளோடு இசைந்த இன்பம் இன்பத்தோடு இசைந்த வாழ்வு
பறை கிழித்தனைய போர்வை பற்றியான் நோக்கினேற்குத்
திறை கொணர்ந்து ஈண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி 
அறைகழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.

பொருளுரை:
தேவர்கள் செம்பொன்னையும், மணிகளையும் திறையாகக் கொணர்ந்து திரண்டு வந்து, நினது ஒலிக்கும் கழலையணிந்த திருவடிகளை, மலர் தூவி வணங்குகின்ற, திருவாரூரில் உள்ள தந்தையே, பறையைக் கிழித்தாற் போன்ற உடம்பைப் பற்றி நின்று பார்த்தேனாகிய எனக்கு, அவ்விடத்துச் சிறுபொருள்களோடு பொருந்தி வந்த இன்பத்தையும், அவ்வின்பத்தோடு பொருந்தி நிகழ்ந்த இல்வாழ்க்கையையும் அஞ்சுதலுடையனாயினேன்.


பாடல் எண் : 02
ஊன்மிசை உதிரக் குப்பை ஒரு பொருளிலாத மாயம்
மான்மறித்தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
ஆனல் வெள்ளேற்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே.

பொருளுரை:
வெள்ளிய நல்ல ஆனேற்றையுடையவனே, திருவாரூரில் உள்ள தந்தையே, இறைச்சியை உள்ளடக்கி ஓடுகின்ற குருதிக்குப் பையாய் உள்ள இவ்வுடம்பு, பொருட்டன்மையாகிய உண்மையை உடைத்தல்லாத பொய்ப்பொருள் ஆதலின், அத்தன்மையை அறியாத, மான் மருண்டாற் போலும் பார்வையினையுடைய பெண்டிரே மதிக்கின்ற இந்த மானிடப் பிறவி வாழ்வினை, இன்புற்று வாழ்வதொரு வாழ்வாக விரும்புகின்றிலேன் அத்துன்ப நிலைக்கு அஞ்சுதலுடையனாயினேன்.


பாடல் எண் : 03
அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோடு அஞ்சு நான்கும்
துறுபறித்தனைய நோக்கிச் சொல்லிற்று ஒன்றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும் நாள்தொறும் வணங்குவார்க்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.

பொருளுரை:
மணம் கமழும் பூவும், நீருங் கொண்டு உன்னை நாள் தோறும் வழிபடுவார்க்கு மெய்யுணர்வைத் தருகின்ற, திருவாரூரில் உள்ள தந்தையே, பூதங்கள் ஐந்தும், ஞானேந்திரியம் கன்மேந்திரியம் என்னும் இந்திரியங்கள் பத்தும், தன்மாத்திரை ஐந்து அந்தக்கரணம் மூன்று என்னும் நுண்ணுடம்புறுப்புக்கள் எட்டும், தாத்துவிகங்கள் அறுபதும், காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் என்னும் வித்தியா தத்துவங்களாகிய ஆறும், சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி என்னும் ஆகிய எல்லாம் புதராக, வேறாகக் கண்டு சொல்லின். அவற்றை அறிவுடைய தம்மியல்பாக ஒருவருங் கூறார். ஆதலின் தம்மை யானாகவே மயங்கும் வண்ணம் என் இயல்பை மறைத்து நிற்கின்ற அவற்றிற்கு அடியேன் அஞ்சுதலுடையனாயினேன்.


பாடல் எண் : 04
சொல்லிடில் எல்லை இல்லை சுவையிலாப் பேதை வாழ்வு
நல்லதோர் கூரை புக்கு நலமிக அறிந்தேன் அல்லேன்
மல்லிகை மாட நீடு மருங்கொடு நெருங்கி எங்கும்
அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.

பொருளுரை:
மேல் மாடங்கள் உயர்ந்துள்ள இடங்களிலெல்லாம், வண்டுகள் மல்லிகை மலரின் அகவிதழில் வீழ்ந்துகிண்டுகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, யான், ஓட்டைக் குடில்களுள் துச்சிலிருந்து வாழ்ந்த, பேதைக்குரித்தாய, துன்பமே நிறைந்த வாழ்க்கைகளைச் சொல்லப்புகின் அவற்றிற்கு ஓர் எல்லை இல்லை. அங்ஙனமாகவும், நல்லதொரு புக்கிலுட் குடிபுகுந்து இன்பம் மிக வாழும் நெறியினை அறிந்திலேன் அதனால் அஞ்சுதலுடையனாயினேன்.


பாடல் எண் : 05
நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லாக்
குரம்பை வாய்க் குடியிருந்து குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை மாதவித் தொகுதி என்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.

பொருளுரை:
புன்னையும் மாதவியுமாகிய அவற்றையுடைய சோலைக்கண். யாவரும் விரும்புமாறு மணங்கமழ்கின்ற பேரரும்புகள் எந்நாளும் வாய்மலர்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, அடியேன், எலும்புகளை நரம்பாற் கட்டின, விருப்பத்தோடு சிறிதும் இசை வில்லாத (அருவருப்பைத் தருவதான) குடிசைக்கண் குடியிருத்தலால், நன்மாளிகையில் வாழும் உயர்ந்தார் நடுவுள்ளிருந்து வாழ இயலாதவனாயுள்ளேன் அதனால் அஞ்சுதலுடையனாயினேன்.


பாடல் எண் : 06
மணமென மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம்
பிணமெனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடைச் சோலை தோறும் பைம்பொழில் விளாகத்து எங்கள்
அணை வினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.

பொருளுரை:
வயல்களின் நடுவேயுள்ள சோலைகளிலெல்லாம், பசிய இளமரக்காக்களை உடைய விளையாடுமிடங்களில், மக்கட்குத் தங்குமிடங்களைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, உலகில் தாய், தந்தை, சுற்றத்தார் என்போர் முன்பு (இளமையில்) தம் மக்கட்குத் திருமணம் நிகழா நின்றது என மகிழ்வார்கள். பின்பு அவர் தாமே அவர்ளை, "பிணம்" என்று சொல்லி ஊரினின்றும் அகற்றிப் புறங்காட்டிற் கொண்டுபோய் எரிப்படுத்து நீங்குவர் ஆதலின் இத்தன்மைத்தாகிய பிறவியை அடியேன் விரும்புகின்றிலேன். அதன்கண் வீழ்தற்கு அஞ்சுதலுடையனாயினேன்.


பாடல் எண் : 07
தாழ்வெனும் தன்மை விட்டுத் தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்
ஆழ்குழிப் பட்ட போது அலக்கணில் ஒருவர்க்கு ஆவர்
யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.

பொருளுரை:
மக்கள் யாழிசைத்து இன்புற்றிருக்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, உலகத்தார் பொருள் ஒன்றனையே பெரிதாக மனத்துட்கொண்டு, அதனால் பெருமையுடன் வாழ்வதையே விரும்பி, பணிவு என்னும் பெருந்தன்மையை விட்டு, மறுமை நலத்தின் பொருட்டு வறியார்க்கு ஒன்று ஈதலை இலராகியே வாழ்வர். துன்பத்துள் அகப்பட்டவர்க்கு அப்போது உதவியாய் நில்லாது, துன்பமின்றி இன்புற்றிருக்கின்ற மற்றொருவருக்கு உதவியாவர். அவரது தன்மையைக் கண்டு அவரொடு கூடி வாழ்வதற்கு அஞ்சுதலுடையனாயினேன்.


பாடல் எண் : 08
உதிரநீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்கு கைம்மேல்
வருவதோர் மாயக் கூரை வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனும் தேடிக் கழலிணை காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே.

பொருளுரை:
கருமை நிறத்தையுடைய திருமாலும், பிரமனும் தேடித் திருவடியைக் காணமாட்டாத அருமையையுடையோனாய் நின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண் குவியலைக் கொண்டு எடுத்ததாகிய மலக் குகையின் மேல் காணப்படுவதாகிய, விரையக்கெடும் தோலாகிய கூரையினுள்ளே வாழ்வதாகிய இழிந்த வாழ்க்கையை அடியேன் விரும்புகின்றிலேன். அதனது தீமைகள் பலவும் அறிந்து அதற்கு அஞ்சுதலுடையனாயினேன்.


பாடல் எண் : 09
பொய்த் தன்மைத்தாய மாயப் போர்வையை மெய்யென்று எண்ணும்
வித்தகத்தாய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன்
முத்தினைத் தொழுது நாளும் முடிகளால் வணங்குவார்க்கு
அத்தன்மைத்தாகும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.

பொருளுரை:
முத்துப்போல அரிதிற் கிடைக்கும் நின்னை நாள் தோறும் தொழுது, தலையால் வணங்கும் அன்பர்கட்கு அத்தன்மையதாகிய சிறந்த பொருளாய் நின்று பெரும்பயனைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, நிலையாத தன்மையையுடைய உடம்பை நிலையுடையதாகக் கருதும் சதுரப்பாட்டினை யுடையதாகிய இவ்வுலக வாழ்க்கையை அடியேன் இன்றியமையாததாக நினைத்து விரும்பும் தன்மையில்லேன் அதற்கு அஞ்சுதலுடையனாயினேன்.


பாடல் எண் : 10
தஞ்சொலார் அருள் பயக்கும் தமியனேன் தடமுலைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் ஆஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே.

பொருளுரை:
பற்றுக் கோடாதற்குப் பொருந்தாத மகளிர் பொருட்டு மனம் உடைகின்ற தமியேனாகிய நம்பியாரூரன், அவரது பெருத்த தனங்களின் இன்பத்திலே அச்சந்தோன்றப் பெற்றவனாய், அழகிய சொற்களையுடைய மகளிர் ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருவாரூரிலுள்ள தந்தையைச் செவ்விய சொற்களால் வேண்டிப் பாடிய இப்பாடல்களை எண்ணிப் பாட வல்லவர், நஞ்சை அணிகலமாகத் தாங்கிய கண்டத்தையுடைய எங்கள் பெருமானை அடைவார்கள்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- |

செவ்வாய், 26 ஜூலை, 2016

நலம் தரும் திருப்பதிகம் 05 திருஅண்ணாமலை

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அருணாசலேஸ்வரர், ஸ்ரீ அண்ணாமலையார்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அபீதகுஜாம்பாள், ஸ்ரீ உண்ணாமுலை

திருமுறை : ஐந்தாம் திருமுறை 04 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

"ஆயுள் முழுவதும் ஆனந்தமாக வாழ ஒத வேண்டிய திருப்பதிகம்."

ஆரோக்கியம், செல்வ வளம் இரண்டும் ஒருவருக்கு கிடைத்து விட்டால் ஆயுள் முழுவதும் ஆனந்தம் தான். இதை அனைவருக்கும் வழங்கும் அண்ணாமலையாரை ஒருநாளும் நான் மறக்க மாட்டேன் என திருநாவுக்கரசர் இந்த தேவாரப்பாடலில் குறிப்பிட்டுள்ளார். தினமும் மாலையில் விளக்கேற்றியதும் படித்தால் ஆனந்தம் வீட்டில் நிலைத்திருக்கும். 


பாடல் எண் : 01
வட்டனைம் மதிசூடியை வானவர்
சிட்டனைத் திருஅண்ணாமலையனை
இட்டனை இகழ்ந்தார் புரம் மூன்றையும் 
அட்டனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
கந்தையுடை அணிந்தானும், மதிசூடியும், வானவர்க்கு உயர்ந்தானும், திருவண்ணாமலை வடிவினனும், விருப்பம் உடையானும், இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் அட்டானும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ.


பாடல் எண் : 02
வானனைம் மதி சூடிய மைந்தனைத்
தேனனைத் திருஅண்ணாமலையனை
ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
வானத்துள்ளவனும், பிறைசூடிய பேராற்றல் உடையவனும், தேனென இனிப்பவனும், திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும், பன்றிக்கொம்பை அணிந்தவனும், இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் எய்த விடையேறுடையவனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 03
மத்தனைம் மதயானை உரித்த எம்
சித்தனைத் திருஅண்ணாமலையனை
முத்தனைம் முனிந்தார் புரம் மூன்று எய்த
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
ஊமத்தமலர் அணிந்தவனும், யானைத் தோலை உரித்துப் போர்த்து எம் சித்தத்துறைபவனும், திருஅண்ணாமலைத் தலத்துக்குடையவனும், முத்தனும், முனிந்தார் புரங்கள் மூன்றையும் எரியுண்ணச்செய்த அத்தனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 04
காற்றனைக் கலக்கும் வினை போயறத்
தேற்றனைத் திருஅண்ணாமலையனைக்
கூற்றனைக் கொடியார் புரம் மூன்று எய்த
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
காற்றாகியுள்ளவனும், கலக்குகின்ற வினைகள் விட்டு நீங்கத் தோற்றம் புரிபவனும், திருவண்ணாமலைத் தலத்துக்குடையவனும், உலகினை நன்றுந் தீதுமாய்க் கூறுசெய்து வகுத்தவனும், கொடியவர் புரங்கள் மூன்றையும் எய்த வீரநெறி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 05
மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
தென்னனைத் திருஅண்ணாமலையனை
என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த
அன்னை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
மின் ஒளியுருவாயவனும், வினைகளைப் போக்கி என்னை ஆட்கொண்ட அழகியவனும், திருவண்ணாமலைத் தலத்துக்குடையவனும், என்னை உடையவனும், இகழ்ந்தவர் புரங்கள் மூன்றையும் எய்த அத்தன்மையனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 06
மன்றனைம் மதியாதவன் வேள்வி மேல்
சென்றனைத் திருஅண்ணாமலையனை
வென்றனை வெகுண்டார் புரம் மூன்றையும் 
கொன்றனைக் கொடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
ஐந்துவகை மன்றங்களில் (சபைகளில்) எழுந்தருளியிருப்பவனும், மதியாத தக்கன் வேள்வியின் மேல் உருத்துச் சென்றவனும், திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும், புலனைந்தும் வென்ற வென்றி உடையவனும், சினந்தார் புரங்கள் மூன்றையும் கொன்றவனும் ஆகிய பெருமானைக் கொடியவனாகிய அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 07
வீரனை விடம் உண்டனை விண்ணவர்
தீரனைத் திருஅண்ணாமலையனை
ஊரனை உணரார் புரம் மூன்று எய்த
ஆரனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
வீரச்செயல்களைப் புரிந்தவனும், விடம் உண்டவனும், விண்ணவர்க்கு அச்சம் நீக்குபவனும், திருவண்ணாமலை வடிவினனும், மருத நிலத்தை இடங்கொண்டவனும், உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும், ஆத்திமாலை சூடியவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 08
கருவினைக் கடல்வாய் விடம் உண்ட எம்
திருவினைத் திருஅண்ணாமலையனை
உருவினை உணரார் புரம் மூன்று எய்த
அருவினை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
கருவாயிருந்து காப்பவனும், கடலெழு நஞ்சு உண்ட எம்திருவாகியவனும், திருவண்ணாமலை வடிவினனும், உருவத்திருமேனி உடையவனும் உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும், அருவத்திருமேனி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 09
அருத்தனை அரவை ஐந்தலை நாகத்தைத்
திருத்தனைத் திருஅண்ணாமலையனைக்
கருத்தனைக் கடியார் புரம் மூன்று எய்த
அருத்தனை அடியேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
பொருள் வடிவாயுள்ளவனும், ஐந்தலையுடைய நாகத்தைத் திருந்த அணிந்தவனும், திருவண்ணாமலை வடிவினனும், தலைவனானவனும், தீக்குணங்களைக் கடியாதார் புரங்கள் மூன்றையும் எய்தவனும், உயிர்களுக்கு வினைப்பயனைப் பிறழாது நுகர்விப் போனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.


பாடல் எண் : 10
அரக்கனை அலற அவ்விரல் ஊன்றிய
திருத்தனைத் திரு அண்ணாமலையனை
இருக்கமாய் என் உடலுறு நோய்களைத் 
துரக்கனைத் தொண்டனேன் மறந்து உய்வனோ.

பொருளுரை:
இராவணன் அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றிய திருத்தமானவனும், திருவண்ணாமலை வடிவினனும், இரக்கம் கொண்டு என் உடலில் உற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலுங் கூடுமே?.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- |