வியாழன், 28 ஜனவரி, 2016

திருமண தடை நீக்கும் திருப்பதிகம் திருமருகல்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மாணிக்கவண்னர், ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வண்டுவார் குழலி

திருமுறை : இரண்டாம் திருமுறை 18 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

சர்ப்பதோஷத்தால் திருமணம் தள்ளிப் போவதைத் தவிர்ப்பதற்கு ஓதவேண்டிய பதிகம், பாண்டிய நாட்டு வணிகனாகிய தாமன் என்பவன் தன் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன் மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். ஆனால் வாக்களித்தடி நடக்காமல், அவனுடைய பெண்களுக்கு பருவம் வந்த காலத்து ஒவ்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்து கொடுத்தான். அதனை உணர்ந்த ஏழாவது பெண் தாய் தந்தையர் அறியாமல் தன் மாமனோடு வெளியேறி பெரியவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் புரிந்து கொள்ள நிச்சயித்தனர். 


திருமருகலையடைந்து ஒரு திருமடத்தில் அவர்கள் இருவரும் இரவு தங்கினர். அன்றிரவு அந்தச் செட்டி குமரனை வினையின் காரணமாக பாம்பு தீண்டியது. அவன் இறந்தான். இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட அந்தப் பெண் இறைவனை நோக்கி முறையிட்டுப் புலம்பினாள். சுவாமி தரிசனத்திற்காக வந்த திருஞானசம்பந்த சுவாமிகள் திரு உள்ளத்தை இவள் அழுகை ஒலி அருள் சுரக்கச் செய்தது. இளம் பெண்ணின் அழுகைக் குரலையும் அவளின் நிராதரவான நிலையையும் கண்டு இரக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைவன் மேல்

"சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்..."

என்று தொடங்கும் பதிகம் பாட சுற்றிலும் உள்ளோர் அதிசயிக்கும்படி வனிகன் உயிர்பெற்று எழுந்தான். பிறகு அந்த பெண்ணிற்கும் வணிகனுக்கும் இறைவன் முன்னிலையில் சம்பந்தர் மணம் நடத்தி வாழ்த்தி அருளினார். திருமணம் ஆகி ஏதேனும் காரணங்களால் பிரிந்து வாழும் தம்பதியினர் இத்தலத்து இறைவனிடம் வேண்டிக் கொண்டு வழிபட்டால் பிரிந்தர் கூடி வாழ்வர் என்பது நிச்சயம். திருமாலை விட்டுப் பிரிந்த மஹாலக்ஷ்மியும் இத்தலத்திற்கு வந்து சிவனை வழிபாடு செய்து மீண்டும் திருமாலுடன் இணைந்து வாழ அருள் பெற்றாள் என்று தலபுராணம் கூறுகிறது.


பாடல் எண் : 01
சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல் 
உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே.

பாடல் விளக்கம்‬:
நீர் நிலைகளில் குவளை மலர்கள் மலர்ந்து மணம் செய்யும் திருமருகலைத் தனக்குரிய ஊராக உடைய பெருமானே! இப்பெண், சடையாய் என்றும் விடையாய் என்றும் நீயே எனக்குப் புகலிடம் என்றும் கூறி அஞ்சி மயங்கி விழுகின்றாள். உன்னையே நினைந்து புலம்பும் இவள் மனவருத்தத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத் தக்கதோ?.


பாடல் எண் : 02
சிந்தாய் எனுமால் சிவனே எனுமால்
முந்தாய் எனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல் 
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே.

பாடல் விளக்கம்‬:
பூங்கொத்துக்கள் குவளை மலர் ஆகியன மலர்ந்து மணம் பரப்பும் திருமருகலில் எழுந்தருளிய எம் தந்தையே! இவள் உன்னை நினைந்து, சிந்தையில் நிறைந்துள்ளவனே! என்றும் சிவனே என்றும், எல்லோர்க்கும் முற்பட்டவனே என்றும், முதல்வனே என்றும் புலம்பி நைகின்றாள். இவள் துன்பத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத் தக்கதோ?.


பாடல் எண் : 03
அறையார் கழலும் அழல் வாய் அரவும்
பிறையார் சடையும் உடையாய் பெரிய 
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை 
இறையார் வளை கொண்டு எழில் வவ்வினையே.

பாடல் விளக்கம்‬:
ஒலிக்கின்ற வீரக்கழலையும், கொடிய விடம் பொருந்திய வாயினை உடைய பாம்பையும் பிறையணிந்த சடையினையும் உடையவனே! பெருமைக்குரிய வேதங்களைக் கற்றுணர்ந்த மறையவர் வாழும் திருமருகலில் மகிழ்ந்து உறைபவனே! இப்பெண்ணை அவள் முன்கையில் அணிந்திருந்த வளையல்களைக் கவர்ந்ததோடு அழகையும் கவர்ந்தாயே! இதுதகுமோ?.


பாடல் எண் : 04
ஒலி நீர் சடையில் கரந்தாய் உலகம் 
பலி நீ திரிவாய் பழியில் புகழாய்
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை 
மெலி நீர் மையள் ஆக்கவும் வேண்டினையே.

பாடல் விளக்கம்‬:
முழங்கி வந்த கங்கையைத் தன் சடைமிசை மறைத்தவனே! உலகெங்கணும் சென்று பலியேற்றுத் திரிபவனே! குற்றம் அற்ற புகழாளனே! நீர் நிறைந்த திருமருகலைத் தனது இடமாகக் கொண்டு மகிழ்பவனே! இப்பெண்ணை மெலியும் நீர்மையள் ஆக்கவும் விரும்பினையோ?.


பாடல் எண் : 05
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன 
மணி நீலகண்டம் உடையாய் மருகல்
கணி நீலவண்டார் குழலாள் இவள்தன் 
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே.

பாடல் விளக்கம்‬:
தெளிந்த நீல நிறம் பொருந்திய மேகம் தோன்றினாற் போன்ற அழகிய நீலகண்டத்தை உடையவனே! திருமருகலை வந்தடைந்த, நீலவண்டுகளின் தொகுதியோ எனக்கருதக் கூடிய கூந்தலை உடைய இளைய இப்பெண்ணின் ஒளிபொருந்திய கண்கள் கலங்குமாறு இவளுக்கு அயர்வை உண்டாக்கி விட்டாயே. இது தகுமோ?.


பாடல் எண் : 06
பலரும் பரவப்படுவாய் சடைமேல் 
மலரும் பிறை ஒன்று உடையாய் மருகல்
புலரும் தனையும் துயிலாள் புடை போந்து 
அலரும் படுமோ அடியாள் இவளே.

பாடல் விளக்கம்‬:
பலராலும் பரவிப் போற்றப் படுபவனே! சடையின் மேல் விளங்கித் தோன்றும் பிறை ஒன்றை உடையவனே! திருமருகலை வந்தடைந்த இப்பெண் விடியும் அளவும் துயிலாதவளாய்த் துயருறுகிறாள். அடியவளாகிய இவள் மீது பழிமொழி வருவது தக்கதோ?.


பாடல் எண் : 07
வழுவாள் பெருமான் கழல் வாழ்க எனா 
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாள் உடையாய் மருகல் பெருமான்
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே.

பாடல் விளக்கம்‬:
மழுப்படையை உடையவனே! மருகற் பெருமானே! தவறாமல் "பெருமான் திருவடிகள் வாழ்க" என்று கூறிக் கொண்டே துயில் எழுந்து இரவும் பகலும் உன்னையே நினைந்து தொழுபவளாகிய இவளைத் துயருக்குரியவள் ஆக்கினையே! இது தகுமோ?.


பாடல் எண் : 08
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப
துலங்க விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலம்கொள் மதில்சூழ் மருகல் பெருமான்
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே.

பாடல் விளக்கம்‬:
இலங்கைக்கு அரசனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது, அவனது ஆற்றல் அழியுமாறு, விளங்கும் தனது காற்பெருவிரலை ஊன்றிய அளவில் அவன் செய்வதறியாது இடர்ப்பட்டு மீண்டு, வலமாக வந்து பணிந்து வரம் கொண்ட மருகற்பெருமானே! மாலை சூடி மணம் கொள்ள இருந்த இவளுக்குத் துன்பம் வரச்செய்தனையே! இது தக்கதோ?.


பாடல் எண் : 09
எரியார் சடையும் அடியும் இருவர் 
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே
மரியார் பிரியா மருகல் பெருமான்
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே.

பாடல் விளக்கம்‬:
நெருப்புப் போலச் சிவந்த சடையையும், அடியையும் திருமால் பிரமன் ஆகிய இருவர் அறியமுடியாதவாறு ஒளிப்பிழம்பாய் உயர்ந்து தோன்றியவனே! பிறவி நீங்கிய முக்தர்கள் வாழும் திருமருகலில் விளங்கும் பெருமானே! அரியவளாக இத்தலத்துக்கு வந்த இவளைத் துன்புறச்செய்தாயே! இது தக்கதோ?.


பாடல் எண் : 10
அறிவில் சமணும் அலர் சாக்கியரும் 
நெறி அல்லன செய்தனர் நின்று உழல்வார்
மறி ஏந்து கையாய் மருகல் பெருமான்
நெறியார் குழலி நிறை நீக்கினையே.

பாடல் விளக்கம்‬:
அறிவற்ற சமணர்களும் எங்கும் பரவி வாழும் சாக்கியர்களும் நெறியல்லனவற்றைச் செய்து நின்று உழல்பவராவர். மான் கன்றை ஏந்திய கையை உடையவனே! மருகற் பெருமானே! உன்னை நினையும் அடர்ந்த கூந்தலினளாய இப்பெண்ணின் மனத்தைச் சிதறுண்ணச்செய்தீரே, இது தகுமோ?.


பாடல் எண் : 11
வயஞானம் வல்லார் மருகல் பெருமான் 
உயர் ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார் 
வியன் ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே.

பாடல் விளக்கம்‬:
தன்மயமாக்கும் திருவருள் ஞானம் பெற்றார் வாழும் மருகற் பெருமான் திருவடிகளை உயர் ஞானம் உணர்ந்து நினைதலால் பதி இயல்புற்ற ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களைப் பாடவல்லார் புகழ், அகன்ற இவ்வுலக மெல்லாம் விளங்கித்தோன்றும்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

திங்கள், 25 ஜனவரி, 2016

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நட்சத்திர ஸ்லோகம்

ஆதிசங்கரர், ஒவ்வொரு நட்சத்திரத்தினருக்கும் அருளிய ஸ்ரீ சிவ பஞ்சாட்சர நட்சத்திர மாலா ஸ்லோகத்தை தினமும் படியுங்கள். சகல பாக்கியமும், செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.


01 அசுவினி

ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய 


02 பரணி

கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய 


03 கார்த்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய 


04 ரோகிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய 


05 மிருகசீரிடம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய 


06 திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய 


07 புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய 


08 பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய 


09 ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய 


10 மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்ாத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய 


11 பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய 


12 உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய 


13 அஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய 


14 சித்திரை

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய 


15 சுவாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய 


16 விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய 


17 அனுஷம்

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய 


18 கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய 


19 மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய 


20 பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய 


21 உத்திராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய 


22 திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய 


23 அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய 


24 சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய 


25 பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய 


26 உத்திரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய 


27 ரேவதி

சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய. 


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

நட்சத்திரத் தேவார திருமுறைப் பாடல்கள் 02


14 சித்திரை நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே. 01:52:03

பாடல் விளக்கம்‬:
திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண்புக அவனைக் கொல்ல வந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து, "என் அடியவன் உயிரைக் கவராதே" என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.


15 சுவாதி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
“ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.! 01:116:02

பாடல் விளக்கம்‬:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு "கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே" என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


16 விசாகம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் 

விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம் தான் விரித்து ஓத வல்லானை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்ன நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்ணு மூன்று உடைக் கம்பன் எம்மானை காணக் கண் அடியேன் பெற்ற ஆறே!.  07:61:07

பாடல் விளக்கம்‬:
தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும், வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும், தன்னை அடைந்தவர் கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும், நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய, எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய, `உமை` என்னும் நங்கை, எந்நாளும் துதித்து வழிபடப் பெற்ற, கண்களும் மூன்று உடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.


17 அனுஷம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே. 01:23:05

பாடல் விளக்கம்‬:
ஆண் மயில் போலும் கட்புலனாகிய மென்மையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், அசுரர்களின் முப்புரங்கள் கெடுமாறு அவற்றை எரித்தவனும் ஆகிய எம் தந்தையாகிய சிவபிரானது, குயில்கள் நிறைந்து வாழும் சோலைகளை உடைய திருக்கோலக்காவைப் பலகாலும் நினைக்கப் பாவங்கள் நீங்கும்.


18 கேட்டை நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்றங்கு 
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே. 05:78:03

பாடல் விளக்கம்‬:
முல்லையையொத்த நல்ல சிரிப்புடைய உமை ஒரு பங்கில் உடையவரும், தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் உறையும் அருட்செல்வரும், முல்லை நிலத்து ஏற்றினை வாகனமாக உடைய வரும் ஆகிய கோடிகா இறைவரே என்று விரைந்து ஏத்துவார்க்குக் குற்றம் ஒன்றும் இல்லை.


19 மூலம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

கீளார் கோவணமும் திருநீறு மெய் பூசி உன்தன் 
தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ
வாளார் கண்ணி பங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே. 07:24:02

பாடல் விளக்கம்‬:
கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து, திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே, யாவர்க்கும் தலைவனே, வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே, திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, அடியேன், உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன்; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன்? என்னை நீ ஏற்றுக்கொள்.


20 பூராடம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

நின்னாவார் பிறர் அன்றி நீயே ஆனாய் 
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்தும் ஆனாய்
மன்னனாய் மன்னவர்க்கோர் அமுதம் ஆனாய் 
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் 
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே. 06:95:07

பாடல் விளக்கம்‬:
உனக்கு ஒப்பாக சொல்லக்கூடிய தன்மை உடையவர் எவரும் இல்லாததால், உனக்கு ஒப்பாக நீ ஒருவனே உள்ளாய்: அன்புடன் உன்னை நினைப்பவர் மனத்தினில் வித்தாக முளைத்து அவர்கள் உன்னை உணரும் வண்ணம் அருள் புரியும் தலைவனாக உள்ளாய்; உலகில் உள்ளவர்கள் அனைவருக்கும் மன்னவனாய் விளங்குகின்றாய்; மன்னவர்களுக்கு ஒப்பற்ற அமுதமாகவும், நான்கு மறைகளாகவும், அவற்றின் ஆறு அங்கங்களாகவும், பொன் மற்றும் மணி போன்ற செல்வங்களாகவும், செல்வத்தை அனுபவிக்கும் போகமாகவும், உலகத்தவரின் புகழ்ச் சொற்களுக்குத் தகுதி படைத்தவனாகவும், விளங்கும் உன்னை நான் எவ்வாறு புகழ்வேன். நீ எவ்வாறெல்லாம் ஆனாய், என்னவெல்லாம் ஆனாய் என்று நினைத்து வியப்பதை அன்றி, சிற்றறிவு உடைய ஏழையாகிய நான் என்ன சொல்லி உன்னை புகழ முடியும்.


21 உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

குறைவிலா நிறைவே குணக் குன்றே கூத்தனே குழைக் காது உடையானே
உறவிலேன் உனையன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறை வண்டார் பொழில் சூழ்திரு ஆரூர்ச் செம்பொனே திரு ஆவடுதுறையுள் 
அறவனே எனை 'அஞ்சல்' என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!. 07:70:06

பாடல் விளக்கம்‬:
"குறை" எனப்படுவது ஒன்றேனும் இல்லாத நிறைவுடையவனே, இறைமைக் குணங்கள் எல்லாவற்றானும் இயன்றதொரு மலை எனத் தக்கவனே, கூத்துடையவனே, குழையணிந்த காதினையுடையவனே, சிறையையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாரூரில் உள்ள, செம்பொன் போல்பவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, அடியேனும் உன்னையன்றி உறவினர் ஒருவரையும் உடையேன் அல்லேன்; எனக்கு உறவாரும் உன்னையன்றி வேறு யாவர் உளர்! ஆதலின், யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால், உனக்கு வருவதொரு தாழ்வுண்டோ! என்னை, `அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள்செய்யாய்.


22 திருவோணம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியினுரி தோலார்
நாதாவெனவு நக்காவெனவு நம்பா வெனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே. 01:67:01

பாடல் விளக்கம்‬:
நாதனே எனவும், நக்கனே நம்பனே எனவும் கூறி நின்று தம் திருவடிகளைப்பரவும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் திருப்பழனத்து இறைவர் வேதங்களை ஓதிக் கொண்டு மார்பில் வெண்மையான பூணூலையணிந்து கொண்டு வெண்மையான எருதின் மிசை ஏறிப் பூதகணங்கள் புடைசூழப் புலியின் தோலை அணிந்து பொலிவுபெற வருவார்.


23 அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய 
பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம் பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான் திருவேதிகுடி 
நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே. 04:90:06 

பாடல் விளக்கம்‬:
எண்ணையும் எழுத்தையும் பெயர்களையும் அறிபவராகிய தாம் மொழிய அவற்றைக் கேட்டுப் பண்ணோடு இயைந்த பாடல்களைப் பாடும் தேவர்கள் பணிந்து தெளிந்து கொள்ளுமாறு, அழுத்தமான வினைகளைப் போக்கும் பெருமானாய்த் திருவேதிகுடியில் உறையும் கிட்டுதற்கு அரிய அமுதமாக உள்ள சிவபெருமானை நாம் அடைந்து அருட்கடலில் ஆடுவோம்.


24 சதயம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

கூடிய இலயம் சதி பிழையாமை கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று 
தேடிய வானோர் சேர் திருமுல்லைவாயிலாய் திருப்புகழ் விருப்பால் 
பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே!. 07:69:02

பாடல் விளக்கம்‬:
உன் தேவியாகிய கொடிபோலும் இடையினையுடைய உமையவள் கண்டு மகிழுமாறு, பல திறங்களும் கூடிய கூத்தினை, தாளவொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற அழகனே, அரிய வேதத்தின் முடிந்த பொருளாய் உள்ளவனே, கருணையாகிய அழகினையுடைய கண்களையுடையவனே, `இறைவனே , நீ எங்குள்ளாய்?` என்று தேடிய தேவர்கள், நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர்கின்ற திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழைப் பலவிடங்களிலும் சென்று விருப்பத்தோடே பாடிய அடியேன், மேலும் அங்ஙனமே பாடுதற்கு, யான் படுகின்ற துன்பத்தை நீ நீக்கியருளாய்.


25 பூரட்டாதி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்க முறுவலிப்பும்
துடி கொண்ட கையும் துதைந்த வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித் தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்கூத்தன் குரைகழலே. 04:81:07

பாடல் விளக்கம்‬:
பாவியாகிய எனது நெஞ்சினில், சிவபிரானின் தலையில் அணிந்துள்ள ஊமத்தைப் பூவும், மூன்று கண்களின் பார்வையும், கண்களில் தென்படும் புன்சிரிப்பும், ஒலிக்கும் உடுக்கையை ஏந்திய திருக்கரமும், மேனியில் முழுதும் பூசிய வெண்ணீறும், சுருண்ட கூந்தலைக் கொண்ட பார்வதி தேவியை தனது உடலில் கொண்டுள்ள பாங்கும், இடையில் உடுத்திய புலித்தோலும், ஒலிக்கும் கழல்களை அணிந்த திருவடிகளும் நிலையாக இடம் பெற்றுள்ளன.


26 உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

நாளாய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே. 01:62:01

பாடல் விளக்கம்‬:
அறியாமையை உடைய மனமே! உலகில் உயிர் வாழும் நாள்கள் பல போவதற்கு முன்னரே நீலகண்டனாய சிவபிரானுக்கே அடியவராக விளங்கி அவனிடத்து அன்பு செய்வோம். அவ்வரனது திருநாமங்களைப் பலகாலும் கேட்பாயாக. அவ்வாறு கேட்பின் நம் சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு அருள்புரிந்து நம் மனமாறுபாடுகளையும் அவன் தீர்த்து அருள்வான். அவ்விறைவன் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.


27 ரேவதி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாருமாகில் நோக்கி நீ அருள் செய்வாயே. 04:76:06

பாடல் விளக்கம்‬:
நாயினும் கீழான தன்மை உடைய அடியேனை, சூலை நோய் கொடுத்து, நல்ல நெறியாகிய சிவநெறியினை எனக்குக் காட்டி, என்னை ஆட்கொண்ட இறைவனே, பல பாம்புகளை உடலில் அணிந்திருந்தாலும் அமுதமாக எனக்குத் தோன்றும் இறைவனே, நீ எனது உள்ளத்தில், அமுதம் போன்று எனக்கு இனியவனாக, வந்து தங்கிவிட்டாய்: எனது உள்ளத்தில் இவ்வாறு வந்து தங்கியதால் என்னை எந்த மலமும் அணுகாது. ஒருகால் பழைய தொடர்பு காரணமாக ஏதாவது மலம் என்னை வந்து சார்ந்தால், இறைவனே நீ தான் அருள் புரிந்து, அந்த நோயினை நீக்கவேண்டும்.

|| --- --- நட்சத்திர தேவாரப்பாடல் முற்றிற்று --- --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

நட்சத்திரத் தேவார திருமுறைப் பாடல்கள் 01


01 அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

தக்கார்வம் எய்திச் சமண் தவிர்ந்து சரண் புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிக வடமேரு என்னும்
திக்கா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே. 04:096:09

பாடல் விளக்கம்:
சான்றோர்கள் வாழும் தில்லைப் பதியினில், மிகவும் விருப்புடன் அமர்ந்தவனே, வடமேரு என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வடதிசைக்கு உரியவனே, திருச்சத்திமுற்றத்தில் உறையும் சிவக்கொழுந்தே, சமண சமயத்தைச் சார்ந்து வெகுகாலம் இருந்த நான் சமண சமயத்தை விட்டொழிந்து, நான் வந்த மரபுக்கு உரிய சிவவழிபாட்டினை மேற்கொண்டு உன்னை அடைக்கலமாக அடைந்தேன். இனிமேல் உன்னைப் பற்றிய செய்திகள் அல்லாமல் எந்த சமயநெறியின் மீதும் எனக்கு விருப்பம் இல்லை, அவைகளால் நான் அடையக்கூடிய பயனும் ஏதும் இல்லை.

மிக்கார் = சான்றோர். மற்றவர்களை விட ஒழுக்கத்தில் மிக்கவர். தக்கார்வம்=தகுந்த ஆர்வம். தான் வந்த மரபுக்குத் தகுந்த ஆர்வம். சூலை நோயினால் வருந்தி, மந்திர தந்திரங்கள் ஏதும் பயன் அளிக்காத நிலையில், தனது தமக்கையாரை அணுகியபோது, அவர் காட்டிய வழியில், அவர்களின் மரபுக்கு தகுந்தவாறு சிவபிரானின் வழிபாடு செய்தது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.


02 பரணி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

கரும்பினும் இனியான் தன்னை காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானை
பெரும் பொருள் கிளவியானை பெருந்தவ முனிவர் ஏத்தும் 
அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே. 04:074:03

பாடல் விளக்கம்:
கரும்பைவிட மிக்கசுவை உடையவனாய், சூரியன் போன்ற ஒளி உடையவனாய், கடலில் தோன்றிய அமுதம் போல்பவனாய், பிறப்பு, இறப்பு இல்லாதவனாய், மகா வாக்கியப் பொருளாய் இருப்பவனாய் உள்ள, பெரிய தவத்தை உடைய முனிவர்கள் துதிக்கும் அரிய பொன் போன்ற பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.


03 கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே. 04:043:08

பாடல் விளக்கம்‬:
பார்வதிபாகராய், முருகனை மகனாகக் கொண்டவராய் மல்லிகை கொன்றை இவற்றாலாய முடி மாலையைச் சூடிக் கல்வியைக் கரை கண்ட சான்றோர் வாழும் காஞ்சி நகரிலே, சூரியன் விளக்கமுற அவனொளிக்கு உள்ளொளியாய் மேற்றளியனார் விளங்குகின்றார்.


04 ரோகிணி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் 
அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனையாளும் 
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே. 07:023:02

பாடல் விளக்கம்‬:
திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்றவனே, நீயே உன் அடியவனாகிய யான் இப்பூமியிலே எங்காயினும் இருந்து உன்னை நினைத்தால், அங்கே வந்து என்னோடு கூடி நின்று, என் வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகன்.


05 மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி 
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி 
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி 
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி. 06:55:07

பாடல் விளக்கம்‬:
பண்ணாகவும், பண்ணிலிருந்து பிறக்கும் இசையாகவும் நிற்பவனே, உன்னை உள்ளத்தில் தியானிப்பவர்களின் பாவத்தை அறுப்பவனே, எண்ணாகவும், எழுத்தாகவும், எழுத்துக்கள் அடங்கிய சொற்களாகவும் உள்ளவனே, எனது சிந்தையில் நீங்காது இருப்பவனே, விண்ணாகவும், மண்ணாகவும், தீயாகவும், மற்றும் உள்ள நீராகவும், காற்றாகவும் இருப்பவனே, மேலோர்களுக்கேல்லாம் மேலான தலைவனே, கண்ணின் மணியாகத் திகழ்பவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன்.


06 திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

கவ்வைக் கடல் கதறிக் கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற 
கொவ்வைத்துவர் வாயார் குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார், 
அவ் அத்திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே. 07:82:03

பாடல் விளக்கம்‬:
ஓசையையுடைய கடல், முழக்கம் செய்து, தான் கொணர்ந்த முத்துக்களைக் கரையின்கண் சேர்க்க, அங்கு, கொவ்வைக் கனிபோலும் சிவந்த வாயையுடைய மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வழிபட்டு மீள்கின்ற வரது திருவடிகளை வணங்குவோர், தாம் தாம் வாழ்கின்ற நாட்டிற்கு அரசராய் விளங்குவர்; அவ்வரசிற்குரியவளாகிய திருமகள்அவர் களை விட்டு நீங்காள்.


07 புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

மன்னு மலைமகள் கையால் வருடின மாமறைகள்
சொன்ன துறை தொறும் தூப்பொருளாயின தூக் கமலத்து
அன்ன வடிவின அன்புடைத் தொண்டர்க்கு அமுது அரும்பி
இன்னல் களைவன இன்னம்பரான் தன் இணையடியே. 04:100:01 

பாடல் விளக்கம்‬:
நிலையான தன்மை கொண்ட இமயமலையின் பெண்ணாக கருதப்படும் பார்வதி தேவியின் கைகளால் வருடப்பட்டவை, சிவபெருமானின் திருப்பாதங்கள்: இந்த பாதங்கள் வேதங்களின் எல்லாத் துறைகளிலும் கூறப்படும் விஷயங்களின் உட்பொருளாக விளங்குவன: தூய்மையான தாமரை மலர் போன்று சிவந்தும் மென்மையாகவும் காணப்படும் இந்த பாதங்கள், தன்னிடத்தில் அன்பு கொண்டுள்ள அடியார்களுக்கு, அவர்கள் பெருந்துன்பமாக கருதும் பிறவிப் பிணியினை நீக்கி வீடுபேறு எனப்படும் அமுதம் அளிப்பன ஆகும். இத்தகைய சிறப்புகள் பெற்றவை இன்னம்பரில் வீற்றிருக்கும் பெருமானின் இணை அடிகள் ஆகும்.


08 பூசம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

பொரு விடை ஒன்று உடைப் புண்ணிய மூர்த்தி புலியதளன்
உருவுடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் 
திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன் 
திருவடியைக் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?. 04:80:02

பாடல் விளக்கம்‬:
போரிடும் காளை ஒன்றினையுடைய புண்ணிய வடிவினனாய், புலித்தோல் ஆடையனாய், அழகிய பார்வதி மணாளனாய், அந்தணர்கள் வாழ்கின்ற பதியாய் உலகத்தவருக்கெல்லாம் பேரின்பச் செல்வத்தை நல்கும் தில்லையிலுள்ள சிற்றம்பலத்துக் கூத்து நிகழ்த்தும் பெருமானுடைய திருவடிகளைக் கண்ட கண்களால், காண்பதற்குப் பிறிதொருபொருள் யாதுள்ளதோ!.


09 ஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய வல்லானை செந்தீ முழங்க
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச் சிற்றம்பலத்து
பெருநட்டம் ஆடியை வானவர் கோன் என்று வாழ்த்துவனே. 04:81:01

பாடல் விளக்கம்‬:
தேவர்களைக் காப்பதற்காக விடம் உண்டதால் நிலையான கருமை நிறத்தைத் தனது கழுத்திலே பெற்று நீலகண்டனாய்த் திகழும், உலகங்களுக்கு தலைவனும், தனது அடியார்கள் வேண்டுவன எல்லாம் வழங்கும் கற்பகமாக உள்ளவனும், தாங்கள் பெற்ற வரத்தினைக் கொண்டு போரில் ஈடுபட்ட திரிபுரத்து அரக்கர்களை அழிக்க வல்லவனும், ஊழிக் காலத்தில் ஊழித்தீ முழங்கி ஒலிக்கும் போது ஆனந்த நடனம் ஆடுபவனும் ஆகிய, தில்லை நகருக்குத் தலைவனான, சிற்றம்பலத்தில் பெருமை மிக்க நடனம் ஆடும் சிவபிரானை வானவர் தலைவன் என்று வாழ்த்துவேன்.


10 மகம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

பொடியார் மேனியனே புரி நூல் ஒருபால் பொருந்த
வடியார் மூவிலை வேல் வளர் கங்கையின் மங்கையொடும் 
கடியார் கொன்றையனே கடவூர் தனுள் வீரட்டத்து எம் 
அடிகேள் என் அமுதே எனக்கார் துணை நீ அலதே. 07:28:01

பாடல் விளக்கம்‬:
திருவெண்ணீறு நிறைந்த திருமேனியை உடையவனே, புரியாகிய நூல், ஒருபால் மாதினோடும் மற்றொரு பாற் பொருந்தி விளங்க, கூர்மை பொருந்திய முத்தலை வேல் (சூலம்) நீங்காதிருக்கின்ற அகங்கையினை உடைய, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே, திருக்கடவூரினுள், வீரட்டம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே, என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லது வேறு யார் துணை!.


11 பூரம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் 

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல் மேவி அருமறை சொன்னது என்னே 
சேலடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே. 01:048:01 

பாடல் விளக்கம்‬:
சேல் மீன்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! வேதம் முதலிய நூல்களில் விதிக்கப்பட்ட முறைகளினால் உன் திருவடிகளை அடைதற்கு முயன்றும் அஞ்ஞானம் நீங்காமையால் சனகாதி முனிவர்களாகிய நால்வர் உன்னை அடைந்து உண்மைப் பொருள் கேட்க, அவர்கள் தெளிவு பெறுமாறு கல்லால மர நிழலில் வீற்றிருந்து அருமறை நல்கிய நல்லறத்தை எவ்வாறு அவர்கட்கு உணர்த்தியருளினாய்? கூறுவாயாக..


12 உத்திரம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

போழும் மதியும் புனக்கொன்றை புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச் சோதீ உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கு அங்கே வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ. 07:77:08

பாடல் விளக்கம்‬:
பகுக்கப்பட்ட சந்திரனும், புனங்களில் உள்ள கொன்றை மலரும், நீரும் பொருந்திய முடியையுடைய புண்ணிய வடிவினனே, சுற்றி ஊர்கின்ற பாம்பை அணிந்த, சுடர்களையுடைய ஒளி வடிவினனே, உன்னை வணங்குகின்றவர்களது துன்பம் நீங்கு மாறும், ஆங்காங்கு வாழ்கின்றவர்கள் விருப்பத்தினால் வைத்த உள்ளங்கள் அவர்களைச் செலுத்தி மூழ்குவிக்குமாறும், மறித்து வீசுகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், ஓலம்!


13 அஸ்தம் நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல்

வேதியா வேதகீதா விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கி நின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே. 04:62:01

பாடல் விளக்கம்‬:
மறைகளையும் அதன் பொருளையும் நன்கு உணர்ந்தவனே, மறைகளால் புகழப்படும் பெருமானே, விண்ணவர்கள் அனைவருக்கும் மூத்தவனே, என்று உனது திருநாமங்களை ஓதியவாறே, உனது திருமேனியின் மீது மலர்கள் தூவி, ஒன்றிய மனத்துடன்  வழிபட்டு வரும் அடியேன், உனது திருப்பாதங்களைக் காண நான் ஆசைப்படுகின்றேன். பார்வதி தேவியை உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனே, படர்ந்து காணப்படும் சடையில் சந்திரனைச் சூடிய பெருமானே, அனைவர்க்கும் முந்தியவனே, ஆலவாயில் அப்பனே, உனது திருவடிகளை அடியேன் காணுமாறு நீ அருள் புரியவேண்டும்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||