புதன், 30 நவம்பர், 2016

05 திருவாசகம் - திருச்சதகம் 10 ஆனந்தாதீதம்

"பேரின்பத்தில் தன்னை மறந்த நிலை நீங்காதிருத்தல் ஆனந்தாதீதம் என்பதாம்."


பாடல் எண் : 01
மாறிலாத மாக் கருணை வெள்ளமே 
வந்து முந்தி நின்மலர் கொள்தாள் இணை
வேறிலாப் பதப்பரிசு பெற்ற நின் 
மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
ஈறிலாத நீ எளியை ஆகி வந்து 
ஒளிசெய் மானுடமாக நோக்கியும்
கீறிலாத நெஞ்சு உடைய நாயினேன் 
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.

பொருளுரை:
இறைவனே! உன் மெய்யன்பர் முந்தி வந்து உன் திருவடிக்கு அன்பு செய்து உன் மெய்ந்நிலையை அடைந்தார்கள். முடிவில்லாத பெரியோனாகிய நீ ஒளியையாகி எழுந்தருளி என்னைக் கடைக்கண் நோக்கியருளியும் மனமுருகாத நான் கடைப்பட்டேன். இது என் தீவினைப் பயனேயாம்.


பாடல் எண் : 02
மை இலங்கு நல் கண்ணி பங்கனே 
வந்து எனைப் பணிகொண்ட பின்மழக்
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் 
அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்
மெய் இலங்கு வெண் நீற்று மேனியாய் 
மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
பொய்யில் இங்கு எனைப் புகுதவிட்டு நீ 
போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே.

பொருளுரை:
இறைவனே! நீயே எழுந்தருளி என்னை ஆட்கொண்ட பிறகு உன்னை எளிதாய் நினைத்ததே அன்றி அரிதாய் நினைத்தேனில்லை. ஆயினும் உன் மெய்யடியார் உன் உண்மை நிலையையடைய, நானொருவனுமே இந்தவுலகத்தில் தங்கியிருக்க விட்டு நீ போவது உனக்குத் தகுதியாமோ?.


பாடல் எண் : 03
பொருத்தம் இன்மையேன் பொய்ம்மை உண்மையேன்
போத என்று எனைப் புரிந்து நோக்கவும்
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் 
மாண்டிலேன் மலர்க் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் 
நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை
இருத்தினாய் முறையோ என் எம்பிரான் 
வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே.

பொருளுரை:
பொய்யனாகிய என்னை விரும்பி நோக்கவும் நோக்கின உதவியை நினைந்து நான் வருந்தி மாண்டிலேன். இறைவனே! உன் அன்பரும் நீயும் சிவபுரத்துக்கு எழுந்தருளி என்னை இவ்வுலகத்தில் இருத்துதல் உனக்கு முறையாமோ? என் தீவினைக்கு இறுதி இல்லையோ!.


பாடல் எண் : 04
இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே 
ஏலம் ஏலும் நற்குழலி பங்கனே
கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு 
என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் 
ஏது கொண்டு நான் ஏது செய்யினும்
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் 
காட்டி மீட்கவும் மறுவில் வானனே.

பொருளுரை:
இறைவனே! எனக்கு உன் திருவடிக் கண் அன்பு இல்லையாகவும், கல்லைக் குழைத்த வித்தையைக் கொண்டு என்னைத் திருத்தி உன் திருவடிக்கு அன்பனாக்கினாய். ஆதலால் உன் கருணைக்கு ஓர் எல்லை இல்லை.


பாடல் எண் : 05
வான நாடரும் அறி ஒணாத நீ
மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ 
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊனை நாடகம் ஆடு வித்தவா 
உருகி நான் உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா 
நைய வையகத்து உடைய விச்சையே.

பொருளுரை:
இறைவனே! தேவர்கள், மறைகள், ஏனை நாட்டவர்கள் ஆகியோர்க்கும் அரியையான நீ, அடியேனை ஆட்கொள்ளுதல் முதலாயினவற்றை நோக்கும் இடத்தில், அஃது எனக்கு இவ்வுலக சம்பந்தமான அஞ்ஞானம் அழிதற்கேயாகும்.


பாடல் எண் : 06
விச்சது இன்றியே விளைவு செய்குவாய் 
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும் 
புலையனேனை உன் கோயில் வாயிலில்
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு 
உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்ததோர்
நச்சு மாமரம் ஆயினும் கொலார் 
நானும் அங்ஙனே உடைய நாதனே.

பொருளுரை:
இறைவனே! எல்லா உலகங்களையும் வித்தில்லாமல் தோற்றுவிப்பாய். என்னை உன் கோயில் வாயில் பித்தனாக்கி, உன் அன்பரது திருப்பணிக்கும் உரியேனாகச் செய்தனை. உலகத்தார், தாம் வளர்த்தது ஆதலின் நச்சு மரமாயினும் வெட்டார்; அடியேனும் உனக்கு அத்தன்மையேன்.


பாடல் எண் : 07
உடைய நாதனே போற்றி நின் அலால் 
பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி
உடையனோ பணி போற்றி உம்பரார் 
தம் பராபரா போற்றி யாரினும்
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் 
கருணையாளனே போற்றி என்னை நின்
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் 
அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே.

பொருளுரை:
நீ என்னை உடையவன் ஆதலால் எனக்கு உன்னை அல்லது வேறு புகலிடம் ஏதேனும் உளதோ? பகர்ந்தருள்வாயாக. தேவர்களுக்கெல்லாம். மேலாகிய மேலோனே! உன்னை வணங்குகிறேன். இனி யானோ எவர்க்கும் கீழ்ப்பட்டவன். அத்தகைய என்னை உன் கருணையினால் உனக்கு அடிமையாக்கினாய். எனக்குத் தொடக்கமும் முடிவும் நீயே. அத்தகைய அப்பனே! உன்னை வணங்குகிறேன்.


பாடல் எண் : 08
அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே 
அகம்நெக அள்ளூறு தேன்
ஒப்பனே உனக்கு உரிய அன்பரில் 
உரியனாய் உனைப் பருக நின்றதோர் 
துப்பனே சுடர் முடியனே துணை 
யாளனே தொழும்பாளர் எய்ப்பினில்
வைப்பனே எனை வைப்பதோ சொலாய் 
நைய வையகத்து எங்கள் மன்னனே.

பொருளுரை:
எனக்குத் தந்தையே! அமிர்தமே! ஆனந்தமே! உள்ளம் உருகுதற்கும் வாய் ஊறுதற்கும் ஏதுவாயுள்ள தேன் போன்றவனே! உனக்கு உரிமையுடைய மெய்யன்பரைப் போல நானும் உரிமையாளனாகி உன்னைப் புசித்து உயிர் வாழ்வதற்கான ஒப்பற்ற உணவே! ஒளி விளங்கும் திருமுடியை உடையவனே! மாறாத் துணையாய் இருப்பவனே! தொண்டர் தளர்வுற்று இருக்கும் பொழுது உதவும் செல்வமே! இப்பொய் உலக வாழ்க்கையில் நான் துன்புற்று இருக்கும்படி வைப்பது முறையாகுமோ? எங்கள் அரசே! கூறுவாயாக.


பாடல் எண் : 09
மன்ன எம்பிரான் வருக என் எனை 
மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என் எனை 
முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள்
பின்ன எம்பிரான் வருக என் எனைப்
பெய்கழற்கண் அன்பாய் என் நாவினால்
பன்ன எம்பிரான் வருக என் எனைப் 
பாவ நாச நின் சீர்கள் பாடவே.

பொருளுரை:
என்றும் நிலை பேறுடைய எங்கள் தலைவனே! அடியேனை வருக என்று கட்டளை இடுவாயாக. திருமாலுக்கும் நான்முகனுக்கும் மூலப்பொருளே! என்னை வருக என்று ஏற்றுக் கொள்வாயாக. சம்கார காலத்தில், எல்லாம் ஒடுங்கி இருக்கும் போது எஞ்சித்தன்மயமாயிருக்கும் எம் தலைவ, என்னை வருக என்று அழைப்பாயாக. உன்னை வந்து அடைந்தவர்களது பாவத்தைப் போக்குபவனே! நான் உன்னைப் புகழவும் உனது சிறப்பினைப் பாடவும் என்னை உன்னோடு சேர்த்துக் கொள்வாயாக.


பாடல் எண் : 10
பாட வேண்டும் நான் போற்றி நின்னையே 
பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு
ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து 
ஆடும் நின் கழல் போது நாயினேன்
கூட வேண்டும் நான் போற்றி இப்புழுக் 
கூடு நீக்கு எனைப் போற்றி பொய் எலாம்
வீட வேண்டும் நான் போற்றி வீடு தந்து 
அருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே.

பொருளுரை:
இறைவனே! நான் உன்னைப் பாடுதல் வேண்டும். பாடிப்பாடி நைந்து உருகி நெக்கு நெக்கு ஆடவேண்டும். நான் அம்பலத்தாடும் நின் மலர்க்கழல் அடையும்படி செய்தல் வேண்டும். நீ இந்த உடம்பை ஒழித்து வீடு தந்தருளல் வேண்டும். உனக்கு வணக்கம் செய்கிறேன்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

05 திருவாசகம் - திருச்சதகம் 09 ஆனந்த பரவசம்

 "பேரின்ப அனுபவத்தில் தன்னை மறந்திருத்தல் ஆனந்த பரவசமாகும்."


பாடல் எண் : 01
விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம்
பிச்சைத் தேவா என் நான் செய்கேன் பேசாயே.

பொருளுரை:
இறைவனே! பொய்க்கு வேறொரு இடம் இல்லை என்று என்னை இங்கு வைத்தாய். உன் மெய்யன்பர் யாவரும் உன் திருவடியை அடைந்தார்கள். நான் பிறவி அச்சமாகிய கடலில் மூழ்குதலன்றி வேறு என்ன செய்யக் கடவேன்?.


பாடல் எண் : 02
பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே
பூசப்பட்டேன் பூதலரால் உன் அடியான் என்று
ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது அமையாதால்
ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே.

பொருளுரை:
உன் அடியாருள் ஒருவனாகச் சொல்லப்பட்டேன். திருவெண்ணீற்றால் பூசப்பட்டேன். இறைவனே! உன் அடியவன் என்று உலகத்தோரால் இகழப்பட்டேன். இவ்வளவும் போதாது என்று மேலும் உனக்கு ஆசைப்பட்டேன். அடிமைப்பட்டேன்.


பாடல் எண் : 03
அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டிலை கொல்லோ
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்
செடிசேர் உடலம் இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே.

பொருளுரை:
நான் உன் அடியனல்லேனோ? நீ என்னை ஆட்கொண்டது இல்லையோ? உன் அடியார் எல்லோரும் உன் திருவடியை அடையவும் நான் இந்த உடம்பை ஒழியாதிருக்கிறேன். கொடியேன் உன்னைக் காணும் வழி கண்டிலேன்.


பாடல் எண் : 04
காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும்
பாணே பேசி என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆரமுதே அத்தா செத்தே போயினேன்
ஏண் நாண் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே.

பொருளுரை:
பரஞ்சோதியே! ஆணே! பெண்ணே! ஆர் அமுதே! அத்தா! எம்மானே! உன்னை அடையும் மார்க்கத்தை நான் கண்டிலேன். அன்று உன்னைக் கண்டபின் நான் வீண்பேச்சுப் பேசி ஒரு நலனையும் அடைந்திலேன். செத்துப்போன நிலையில் இப்போது இருக்கிறேன். என் கீழ்மையைக் குறித்து நான் வெட்கப்பட வில்லை. மேல்நிலை அடைவதற்கான ஆற்றல் என்னிடத்து இல்லை. நான் எப்படி உய்வேன்?.


பாடல் எண் : 05
மானேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையோனே
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமாநகர் குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே.

பொருளுரை:
மான் விழி போன்ற விழிகளையுடைய உமாதேவியாரின் பாகா! வேத வேதாந்தத்துக்கு எட்டாத மறைபொருளே! தேனே! அமிர்தமே! மனத்துக்கு எட்டாதவனே! என் குற்றத்தை மன்னித்து அருளும் அரசே! என் குறைபாட்டை நான் பரிந்து உன்னிடம் முறையிட்டேன். அதாவது உன் அடியார்கள் உனக்கு உரியவர்கள் ஆயினர். நானோ பொய்யாகிய பிரபஞ்சத்துக்கு உரியனாய், நானும் பிரபஞ்சமும் உனக்கு வேறாக இருந்து வருகிறோம்.


பாடல் எண் : 06
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய்யன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே.

பொருளுரை:
ஆன்மாவாகிய நானும் உலகம் ஆகிய மாயையும் உனக்குப் புறம்பானோம். உன்பால் பத்தி பண்ணுவதற்கான உறுதியான தெய்வீகத் தன்மை என்னிடம் இல்லை. உன்னைத் தவிர வேறு எதையும் அறியாத பரிபக்குவ உயிர்கள் தங்கள் ஆன்ம போதத்தை அகற்றி உன்பால் இரண்டறக் கலந்தன. அதற்காக அவர்கள் பத்தி மார்க்கத்தைத் தீவிரமாகக் கையாண்டனர்.


பாடல் எண் : 07
தாராய் உடையாய் அடியேற்கு உன்தாள் இணை அன்பு
போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்தாங்கு உன்தாள் இணை அன்புக்கு
ஆரா அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே.

பொருளுரை:
இறைவனே! அடியேன் உன் திருவடிக்கு அன்பு செய்யும்படிச் செய்தருள வேண்டும். அடியார் முத்தியுலகம் புக, யான் புறம் போந்தேன். ஊர்ப் பசுக்கள் மேய்தற்கு வரக் கூடவே குருட்டுப் பசுவும் வந்ததுபோல, அன்பர் உன் திருவடிகளுக்கு அன்பு செய்ய நானும் அன்பு செய்ய விரும்பி அழுகின்றேன்.


பாடல் எண் : 08
அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல் சேர்ந்த
மெழுகே அன்னார் மின்னார் பொன்னார் கழல் கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப் பணிகேனே.

பொருளுரை:
உன்னிடத்து மெய்யன்பு உடையவராய் ஒளி பொருந்திய பொன் போன்ற உன் திருவடிகளைக் கண்டு தீயில் இட்ட மெழுகை ஒத்தவராய் உன் அன்பர்கள் தொழுது உன்னைப் பின் பற்றினர். அவர்களைப் பின்பற்றாமல் நான் புன்மைக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறேன். எம்முறையைக் கையாண்டு நான் உன்னை வழுத்துவது என்று எனக்கு விளங்கவில்லை.


பாடல் எண் : 09
பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய அடியார்க்கு உன்
அணியார் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால்
திணியார் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித்
தணியார் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே.

பொருளுரை:
இறைவனே! அடியவர்க்குப் பிறவிப் பிணியை நீக்கியருளி உன் திருவடியைத் தந்தருள்வது அருமையானால், மனக்கோட்டத்தை உடையவனாகிய என் வினைகளை நீறாக்கி உன் திருவடியை எனக்குத் தந்தருள்வது அருமையே. ஆயினும் எனக்கு உன்னை அன்றி வேறு புகலிடம் இல்லாமையால் என்னைத் திருத்தி ஆட்கொண்டு உன் திருவடியைத் தந்தருளல் வேண்டும்.


பாடல் எண் : 10
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே.

பொருளுரை:
இறைவனே! நானும் என் மனம் முதலியனவும் பொய்ம்மையுடையவர்கள் ஆனோம். ஆனால் அழுதால் உன்னைப் பெறலாமோ? தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! நான் உன்னைப் பெறும் வழியை எனக்கு அறிவித்தல் வேண்டும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

05 திருவாசகம் - திருச்சதகம் 08 ஆனந்தத்து அழுந்தல்



பாடல் எண் : 01
புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பது அன்று இது என்ற போது நின்னொடு என்னொடு என்னிதாம்
புணர்ப்பது ஆக அன்றிதாக அன்பு நின் கழல்கணே
புணர்ப்பது ஆக அங்கணாள புங்கம் ஆன போகமே.

பொருளுரை:
ஆண்டவனே! உன்னோடு மாறுபட்டுத் திரிகின்ற அடிமையை நால்வகை உபாயங்களாலும் உன்னடிமை என்று உன்னோடு கூட்டிக் கொள்வது போல, மெய்யடியார் குணங்கள் ஒன்றும் இல்லாத என்னை, ஆசாரிய மூர்த்தமாய் எழுந்தருளித் தடுத்து ஆட்கொண்டு மெய்யடியார் மீது வைக்கும் அருள் நோக்கத்தை அடியேன் உணர்வுக்கு உள்ளும் புறமுமாக வைத்தருளினை! பிரமாதிகளுக்கும் அரிய இவ்வருள் நோக்கம் அடியேனுக்குக் கிடைத்தல் அரிதென்று அதன் அருமை அறிந்தபோது எனதாயிருந்த சகசமலம் ஒன்றும் என்னை நின்னொடு இரண்டறக் கூட்டுவதாகவும், இப்பிரபஞ்சத்தின் மேல் நின்ற அன்பு உன் திருவடிக்கண் மீளாது நிற்பதாகவும் ஆயின. அழகிய கண்ணாளா! திருமால், பிரமன் அகியவருடைய உலக போகங்களையும் கடந்து இருக்கும் சிவானந்த போகமே! இந்தக் காருண்ணியத்துக்கு நாயேனால் செய்யப்படுவதாகிய கைம்மாறும் உண்டோ?.


பாடல் எண் : 02
போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தர ஆதி இன்பமும்
ஏகநின் கழல் இணை அலாது இலேன் என் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக்கணே
ஆக என்கை கண்கள் தாரை ஆறதாக ஐயனே.

பொருளுரை:
ஐயனே! இந்திரன் முதலியோருடைய போகங்களையும் விரும்பிலேன். உன் திருவடியையன்றி மற்றோர் பற்று மிலேன். என்கைகள் உன்னை அஞ்சலிக்கவும் என் கண்களில் நீர் ஆறு போலப் பெருகவும் வேண்டும்.


பாடல் எண் : 03
ஐய நின்னது அல்லது இல்லை மற்றொர் பற்று வஞ்சனேன்
பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என் எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல்கணே
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே.

பொருளுரை:
ஐயனே! உன்னையன்றி வேறொரு பற்றிலேன். நான் முழுப் பொய்யனாயினும் உன் திருவடியை அடைந்த மெய்யன்பரது அன்பு போன்ற அன்பை எனக்கு அருள் புரிய வேண்டும்.


பாடல் எண் : 04
வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ
பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும் என்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே.

பொருளுரை:
இறைவா! எனது உயிர்போதத்தை நீக்கிச் சிவபோதத்தை உறுதியாக்கி, என்மீது இரக்கம் வைத்து எனக்குப் பேரன்பைக் கொடுத்து அருளுக. பேரன்பு பூண்டு உன்னைப் போற்றும் வாய்ப்புக் கிடைக்கும் இடத்துப் பிறப்பு இறப்பு எத்தனை வந்தாலும் அதனால் எனக்குத்துன்பம் இல்லை.


பாடல் எண் : 05
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கி யாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே.

பொருளுரை:
உமாதேவி பங்கனே! மண்ணுலகும் விண்ணுலகும் உன்னை வணங்கி நிற்கும். நான்கு வேதங்களும் உன்னையறிய முயன்று அறியவொண்ணாமையால் இளைக்கும். அவ்வாறான பின்பு, யாம் உன்னை வணங்கி உன் திருவடியை விடோம் என்று சொல்ல, நீ வந்து எமக்கு அருள் செய்தற்கு உன் திருவுளம் யாதோ?.


பாடல் எண் : 06
நினைப்பதாக சிந்தை செல்லும் எல்லையேய வாக்கினால்
தினைத்தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே.

பொருளுரை:
பரமனே! உலகனைத்தும் ஆகியிருக்கிறான். எனினும் அவனை அநுபூதியில் அடைவதற்கு மனம் உதவாது; வாக்கு உதவாது; ஐம்பொறிகளும் உதவமாட்டா. அந்தக் கரணங்கள் யாவும் பிரபஞ்சத்தை நுகர்வதற்கே உதவுகின்றன. பஞ்சபூதப் பொருளாகிய பரமனை வழிபடுதற்குச் சிறிதேனும் அவைகள் பயன்படா.


பாடல் எண் : 07
எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையின்
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு
ஈது அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே.

பொருளுரை:
சிவனே! நான் உன்னை அடைய இருப்பது எப்பொழுதோ? எனக்கு உன்னையன்றி வேறு புகலிடம் இல்லாமையால், என் துன்பத்தை நோக்கி இரங்கிக் காத்தருளல் வேண்டும். இவ்வாறு நீயே ஆட்கொண்டருளினாலன்றி, நான் உன்னை அடையும் வகையில்லை.


பாடல் எண் : 08
ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான்
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஒர் நின் அலால்
தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே.

பொருளுரை:
இறைவா! இவ்வுலகம் அவ்வுலகம் ஆகிய எல்லாம் நீயே ஆகியிருப்பதால், உனக்கு வேறான பொருள் ஒன்றும் இல்லை என்று என் அறிவுக்கு எட்டியவாறு நான் கருதுவேன். அங்ஙனம் எண்ணவில்லையேல் நான் நீசன் ஆவேன். உனக்குப் புறம்பாக வேறு ஒரு பொருள் இல்லாததால் நீ பரம்பொருள். எங்கும் ஒரே ஒளிப்பிழம்பாக நீ இருப்பதால் நான் சிந்திப்பதற்கு மற்றோர் ஒளி வடிவம் ஏதும் இல்லை.


பாடல் எண் : 09
சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரில் ஐம்புலன்களால்
முந்தையான காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தையாய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே.

பொருளுரை:
மனம் முதலியவற்றால் முற்காலத்தில் உன்னை அடையாத மூர்க்கனாகிய நான், வெந்தொழிந்தேனில்லை. என் மனம் குன்றி, வாய் விட்டலறினேனில்லை. இன்னும் உன்னையடைய நினைத்திருக்கிறேன்.


பாடல் எண் : 10
இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள்
கருப்பு மட்டு வாய் மடுத்து எனைக் கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும்
விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே.

பொருளுரை:
இரும்பு போலும் வன் மனத்தையுடைய நான், என்னை ஆண்டருளின உன் திருவடியைப் பிரிந்தும், தீப்பாய்ந்து மடிந்திலேன். இத்தன்மையேனாகிய என்னிடத்தில், உனக்குச் செய்ய வேண்டிய அன்பிருக்கின்றது என்பது என்ன மாய வித்தை?.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

05 திருவாசகம் - திருச்சதகம் 07 காருணியத்து இரங்கல்

"காருணியத்து இரங்கல் என்பது இறைவன் கருணையைக் குறித்து இரங்குதலாம்."


பாடல் எண் : 01
தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி.

பொருளுரை:
கடவுளே! சங்கரனே! விருத்தனே! ஒப்பில்லாத தலைவனே! தேவர் தலைவனே! வணக்கம். இந்த உடம்போடு கூடி வாழும் வாழ்க்கையைச் சகித்திலேன். ஆதலால் இதனை ஒழித்து உன் திருவடியை அடைவிக்க வேண்டும்.


பாடல் எண் : 02
போற்றி ஓம் நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன்
போற்றி ஓம் நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை
போற்றி ஓம் நமச்சிவாய புறமெனப் போக்கல் கண்டாய்
போற்றி ஓம் நமச்சிவாய சயசய போற்றி போற்றி.

பொருளுரை:
இறைவனே! போற்றி! போற்றி! இந்தப் பொய்யுலக வாசனையால் மயங்குகின்றேன். உன்னையன்றி எனக்கு வேறு புகலிடம் இல்லை. ஆதலால் என்னைக் கைவிடாமல் காத்தருளல் வேண்டும்.


பாடல் எண் : 03
போற்றி என் போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்
போற்றி நின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி
போற்றி நின் கருணை வெள்ளப் புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்று இயமானன் வானம் இருசுடர்க் கடவுளானே.

பொருளுரை:
பொய்யுடலில் ஆசை வைத்துள்ள என் போன்றவர்களுக்கு அருள் புரிவதால், நீ, வள்ளல் ஆகின்றாய். உன் கருணைக்குப் புதிய தேன் ஒப்பானது. ஐம்பெரும் பூதங்கள், சூரியன் சந்திரன், உயிர் ஆகிய எட்டு மூர்த்திகளாய் நீ இருக்கின்றாய். இப்படி யெல்லாம், இருக்கிற உனக்கு மேலும் மேலும் வணக்கம் கூறுகிறேன்.


பாடல் எண் : 04
கடவுளே போற்றி என்னைக் கண்டு கொண்டருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்தருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி.

பொருளுரை:
நான் தகவிலன் என்பதை அறிந்து என்னை ஆட்கொள். என் உள்ளத்தை உருக்கி அதை இலகச் செய். உடலை ஒதுக்கிவிட்டு விரைவில் முத்தியடையும்படி செய். கங்காதரா! உன்னை நான் மீண்டும் வணங்குகிறேன். நான் தகாதவன் எனினும் நீ சங்கரன் ஆதலால் என்னை ஆட்கொண்டருள்க.


பாடல் எண் : 05
சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப்
பொங்கரா அல்குல் செவ்வாய் வெண்ணகைக் கரிய வாட்கண்
மங்கையோர் பங்க போற்றி மால்விடை ஊர்தி போற்றி
இங்கு இவ்வாழ்வு ஆற்றகில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே.

பொருளுரை:
சங்கரனே! மங்கை பங்கனே! மால்விடை யுடையானே! வேறோர் புகலிடம் இல்லேன். இந்தப் பொய் வாழ்வைச் சகிக்கிலேன் ஆதலால், என்னைக் கைவிடல் உனக்குத் தகுதியன்று.


பாடல் எண் : 06
இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி
பழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடில் வாழ்வு போற்றி உம்பர் நாட்டு எம்பிரானே.

பொருளுரை:
எம்பிரானே! என்னை நானே தாழ்த்துவது அன்றி உன்னை நிந்தித்திலேன். சிறியவர் செய்த குற்றங்களைப் பெரியவர் பொறுத்தல் கடமையாதலால் என் குற்றங்களைப் பொறுத்து, இந்தப் பொய் வாழ்க்கையை ஒழித்தருளல் வேண்டும்.


பாடல் எண் : 07
எம்பிரான் போற்றி வானத்தவர் அவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம்பலவ போற்றி
உம்பராய் போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி.

பொருளுரை:
தேவர் பிரானே! உமாதேவி பாகனே! திருவெண்ணீறு உடையவனே! செவ்விய பெருமானே! திருச்சிற்றம்பலத்தை உடையவனே! முத்தி உலகை உடையவனே! என்னை அடிமையாக உடையவனே! என்னைக் காத்தருளல் வேண்டும்.


பாடல் எண் : 08
ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி
வருக என்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி
தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே.

பொருளுரை:
பலவாகத் தோன்றும் பொழுதும் நீ ஒருவன் தான் இருக்கிறாய். உயிர்கள் அனைத்துக்கும் நீ சிறந்த தந்தையாய் இருக்கிறாய். தேவர்களுக்கெல்லாம் நீ மூத்தவன். உயிர்கள் உள்ளத்தில் நீ நித்திய திருவுருவத்தில் இருக்கிறாய். உனக்கும் எனக்கும் உள்ள உறவை நீ உறுதிப்படுத்து. என்னை உன் மயம் ஆக்குக. எனது உயிர் போதத்தை அகற்றி விடு. உனது மகிமையை நினைந்து நான் உன்னையே போற்றுகிறேன்.


பாடல் எண் : 09
தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை போற்றி
வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிட வேண்டும் போற்றி.

பொருளுரை:
அன்பரிடத்தில் மிகுந்த அன்பு செய்பவனே! என் பொய்ம்மை ஒழியும் வண்ணம் என்னை ஆண்டருளினவனே! விடத்தை உண்டு தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தவனே! உன் திருவடியை எனக்குத் தந்தருளல் வேண்டும்.


பாடல் எண் : 10
போற்றி இப்புவனம் நீர்தீக் காலொடு வானம் ஆனாய்
போற்றி எவ்வுயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாய் ஈறு இன்மை ஆனாய்
போற்றி ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே.

பொருளுரை:
பஞ்ச பூதங்களாக இருப்பவனே! எல்லா உயிர்களுக்கும் பிறப்பிடமாய் இருப்பவனே! பிறப்பு இல்லாதவனே! எல்லா உயிர்களுக்கும் இறுதியும் உனக்கு இறுதி இன்மையும் ஆனவனே! ஐம்புலன்களும் தொடரப்பெறாத மாயத்தை உடையவனே! என்னைக் காத்தருளல் வேண்டும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

05 திருவாசகம் - திருச்சதகம் 06 அநுபோக சுத்தி

"சிவானுபவத்தினால் ஆன்மா தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ளுதலாம்" 


பாடல் எண் : 01
ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என் பிறவி
நாசனே நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாயான
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
தேசனே அம்பலவனே செய்வது ஒன்றும் அறியேனே.

பொருளுரை:
இறைவா! பெருமை வாய்ந்த எம் தந்தையே! நீ பிறவி நோயைப் போக்கியுள்ளாய். சிற்றம்பலச் செழுஞ்சுடரே! உடல் உணர்ச்சியில் உழன்று கிடந்த என்னை நீ, உயர்ந்த பேறும் அடையப் பெற்றவன் ஆக்கினாய். உன்னை விட்டுப் பிழைபடுகிற மனத்தை உடைய எனக்கு, என்ன செய்வது என்று விளங்கவில்லை.


பாடல் எண் : 02
செய்வது அறியாச் சிறு நாயேன் செம்பொன் பாதமலர் காணாப்
பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டும் கேட்டிருந்தும்
பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பது ஆனேன் போரேறே.

பொருளுரை:
செய்ய வேண்டுவது இது என்று அறியாத நாயினேன் உன் திருவடியைக் காணாத பொய்யர் பெறும் பேறெல்லாம் பெறுதற்குரியேனாகி, உன் மெய்யன்பர் உன் திருவடியை அடையக் கண்டும் கேட்டும் அதனை அடைய முயலாமல் பொய்யனாய் உண்டும் உடுத்தும் காலம் கழிக்கின்றேன்.


பாடல் எண் : 03
போரேறே நின் பொன்னகர்வாய் நீ போந்தருளி இருள்நீக்கி
வாரேறு இளமென் முலையாளோடு உடன் வந்தருள அருள் பெற்ற
சீரேறு அடியார் நின்பாதம் சேரக் கண்டும் கண்கெட்ட
ஊரேறாய் இங்கு உழல்வேனோ கொடியேன் உயிர் தான் உலவாதே.

பொருளுரை:
இறைவனே! நீ உன் சிவபுரத்தில் நின்றும் எம் பிராட்டியோடும் இவ்விடத்து எழுந்தருளி அருள் செய்யப்பெற்ற உன் அன்பர், உன் திருவடியை அடையக் கண்டும், கண்கெட்ட ஊர் எருது போன்று இவ்வுலகத்தில் உழல்வேனோ? இத்தன்மையேனது உயிர் நீங்காதோ?.


பாடல் எண் : 04
உலவாக் காலம் தவமெய்தி உறுப்பும் வெறுத்து இங்கு உனைக் காண்பான்
பலமா முனிவர் நனிவாடப் பாவியேனைப் பணி கொண்டாய்
மலமாக் குரம்பை இது மாய்க்க மாட்டேன் மணியே உனைக் காண்பான்
அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன் எம்மானே.

பொருளுரை:
அளவில்லாத காலம் உடலை வெறுத்துத் தவம் புரிந்த பல முனிவரும் வருந்தி நிற்க, பாவியாகிய என்னைப் பணி கொண்டனை. அங்ஙனமாகவும் இந்தமல உடம்பை ஒழிக்க முயலேன். உன்னிடத்து அன்பு இல்லாத நான் இனி எவ்வகையால் உயர்வேன்?.


பாடல் எண் : 05
மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடுவார் நின்கழல் கூட
ஊனார் புழுக்கூடு இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே.

பொருளுரை:
மான்விழி போன்ற விழியினை உடைய அம்பிகையின் வலப்பாகா! சிதம்பர நாதா! நீ பரிபூரணப் பரம் பொருளாகத் தோன்றி உன் அடியார்க்கு அமிர்தம் ஆகின்றாய். உன்னை நினைவதே மானுட வாழ்க்கையின் குறிக்கோள் என்று நீ காட்டியருளியதை அறிந்து கொண்ட நின் அன்பர், உன்னையே நினைந்து உன்னை அடைந்தார். உன் உடைமையாகிய நானோ உடலையே நினைந்து நிலவுலகுக்கு உரியவன் ஆனேன்.


பாடல் எண் : 06
உடையானே நின்றனை உள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதம் சேரக் கண்டு இங்கு ஊர் நாயின்
கடை ஆனேன் நெஞ்சு உருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூடு இது காத்து இங்கு இருப்பதாக முடித்தாயே.

பொருளுரை:
உயிர்கள் அனைத்தும், இறைவா! உனக்குச் சொந்தம் ஆயினும் பேரன்போடு உன்னையே நினைப்பவர் மட்டும் உன்னை அடைகின்றனர். இதை நான் கண்டிருந்தும் என் நெஞ்சம் உருகவில்லை. எனக்கு விவேகம் வரவில்லை. உள்ளக் கனிவு உண்டாகவில்லை. துர்நாற்றம் வீசும் உடலில் விருப்பம் வைத்து ஊர் நாய்க்கும் கீழ்ப்பட்டவனாக இங்கு வாழ்ந்து இருக்கிறேன்.


பாடல் எண் : 07
முடித்த வாறும் என்றனக்கே தக்கதே முன்னடியாரைப்
பிடித்த வாறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய்
துடித்த வாறும் துகில் இறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர்
பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடு என் தனக்கே சூழ்ந்தேனே.

பொருளுரை:
நீ முடித்த விதம் எனக்குத் தக்கதே. நான் அடியவரைப்பற்றியிருந்தும், என்னை மாயையாகிய பெண் வருத்த வருந்தினேன். எனக்கு நானே கெடுதியுண்டாக்கிக் கொண்டேன்.


பாடல் எண் : 08
தேனை பாலைக் கன்னலின் தெளியை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை உம்பரானை வம்பனேன்
நான் நின் அடியேன் நீ என்னை ஆண்டாய் என்றால் அடியேற்குத்
தானும் சிரித்தே அருளலாம் தன்மையாம் என் தன்மையே.

பொருளுரை:
மனம் தெளிந்தவர்களுக்குப் பரமானந்தத்தை ஊட்டும் ஞானப் பிரகாசன் நீ. அவர்களுக்கு ஒப்பற்ற மேலாம் பொருள் நீ. மற்றுப் பக்குவம் அடையாத நான் உனக்கு அடிமை என்றும் நீ எனக்குத் தலைவன் என்றும், சொந்தம் பாராட்டினால் ஒரு புன்சிரிப்பின் மூலம் நீ அதை மறுப்பாய். உன் அருளுக்குத் தகுதியற்ற நான் அதற்குத் தகுதியுடையவன் என்று சொல்லுவது தகாது.


பாடல் எண் : 09
தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயான
புன்மையேனை ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ
என்னை நோக்குவார் யாரே என் நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழும் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே.

பொருளுரை:
உன்னுடைய இயல்பு, பிறர் பலராலும் அறியப் பெறாதது. அத்தகைய இறைவனே! புன்மையுடைய என்னை ஆண்டருளிப் புறத்தே செல்ல விடுகிறாயோ? நீயே அப்படிச் செய்தால் நான் என் செய்வேன்? எவ்விடத்தில் புகுவேன்? என்னை நோக்குவோர் யார்?.


பாடல் எண் : 10
புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியார் உள்நின்று
நகுவேன் பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன்
நெகும் அன்பு இல்லை நினைக் காண நீ ஆண்டருள அடியேனும்
தகுவனே என் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே.

பொருளுரை:
இறைவனே! உன் திருவடிகளில் சரண் புகுவேன். உன் அடியார் நடுவில் கூடியிருந்து நகைத்தல் ஒன்றுமே செய்வேன். ஆனால் சரியான அன்பிலேன். இத்தகையோனான என்னை நீ ஆண்டருளல் தகுதியாமோ?.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||