சனி, 19 நவம்பர், 2016

நலம் தரும் திருப்பதிகம் 10 நின்றத் திருத்தாண்டகம்

திருமுறை : ஆறாம் திருமுறை 094 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

"இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் போது பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்."

இந்த பதிகத்தில் இறைவன் சிவபெருமான், உலகத்தில் உள்ள உயிருள்ள பொருள், உயிரில்லாத பொருள் அனைத்திலும் கலந்து நிற்கும் நிலை சொல்லப்படுவதால் நின்றத் திருத்தாண்டகம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் நின்றவாறே என்று முடிகின்றன.


இருநிலனாய்த் தீயாகி என்று தொடங்கி எல்லா இடங்களிலும், எல்லாப் பொருட்களிலும் சிவபெருமானே நிறைந்து நிற்கின்றான் என்பதை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். அவ்வாறே ஸ்ரீ ருத்ரத்திலும் உயிருள்ள பொருள்களையும் உயிரற்றப் பொருள்களையும் ஒவ்வொன்றாய் எடுத்துக் கூறி அங்கே நிறைந்து நிற்கும் சிவபெருமானை வழிபடுதல் அவசியம் என்று சொல்லப் பட்டுள்ளது. எங்கும் சிவமயமாய், எவற்றையும் சிவமாய் காணுதலே மெய்யுணர்வு உடையவர்களுக்கு பொருத்தமான செயலாகும். 

சிவபிரான் பணித்தபடி வடஇந்தியாவில் எங்கோ இருந்த ஒரு குளத்தில் மூழ்கிய அப்பர் பிரான் திருவையாற்றுக் குளத்தில் எழுந்து, திருக்கோயிலுக்குச் செல்லும் வழியில் அனைத்து உயிர்களிலும் சிவபிரானையும் பார்வதி தேவியையும் தான் கண்ட அனுபவத்தை, கண்டேன் கண்டறியாதன கண்டேன் என்று மாதர்பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்தில் கூறுவது, அப்பர் பிரான் மெய்யுணர்வு கொண்டவராகத் திகழ்ந்ததை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

மேற்கூறிய காரணத்தால் இந்த பதிகம் வடமொழி வேதங்களில் உள்ள ஸ்ரீ ருத்ர மந்திரத்திற்கு சமமாக கருதப்படுகின்றது. இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் போது பல அன்பர்களால் கூறப்படும் பதிகம் ஆகும். சிவபிரானின் விசுவரூபத்தையும், அளப்பரிய ஆற்றலையும், அவனது அருட் சிறப்புகளையும் குறிப்பிடும் பதிகம்

பாடல் எண் : 01
இருநிலனாய்த் தீயாகி நீருமாகி
இயமானனாய் எறியும் காற்றும் ஆகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி
ஆகாசமாய் அட்டமூர்த்தியாகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவும் தம்முருவும் தாமேயாகி
நெருநலையாய் இன்றாகி நாளையாகி
நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே.

பொருளுரை:
பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும், ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.


பாடல் எண் : 02
மண்ணாகி விண்ணாகி மலையுமாகி 
வயிரமுமாய் மாணிக்கம் தானேயாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியுமாகிக்
கலையாகிக் கலைஞானம் தானேயாகிப்     
பெண்ணாகிப் பெண்ணுக்கோர் ஆணுமாகிப்
பிரளயத்துக்கு அப்பாலோர் அண்டமாகி
எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்துமாகி 
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே.

பொருளுரை:
மண் ஆகவும், விண் ஆகவும், மலையாகவும், வயிரமாகவும், மாணிக்கமாகவும் விளங்கும் சிவபிரான், கண்ணாகவும் கண்ணுக்கு மிகவும் அவசியமான கண்மணியாகவும் விளங்குகின்றான். நூலாக இருப்பவனும் அந்த நூல்கள் மூலம் உணரப்படும் அறிவாக இருப்பவனும் அவனே. கலையாக விளங்கும் பெருமான் கலைஞானமாகவும் விளங்குகின்றான். பெண்ணாகவும், அந்த பெண்ணுக்குத் துணையான பொருத்தமான ஆணாகவும், ஊழிக்காலத்தைத் தாண்டி நிற்கும் சுத்தமாயா தத்துவமாகவும் விளங்குகின்றான். அந்த இறைவன, நமது உள்ளத்தின் எண்ணங்களாகவும், அந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்துக்களாகவும், நிற்கும் சுடராகவும் விளங்கும் தன்மை மிகவும் வியக்கத்தக்கதாகும்.


பாடல் எண் : 03
கல்லாகிக் களறாகிக் கானுமாகிக் 
காவிரியாய்க் கால் ஆறாய்க் கழியுமாகிக்
புல்லாகிப் புதலாகிப் பூடுமாகிப் 
புரமாகிப் புரமூன்றும் கெடுத்தானாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளுமாகிச்
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழலாகி
நெல்லாகி நிலனாகி நீருமாகி 
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்றவாறே.

பொருளுரை:
மலையாகியும் களர் நிலமாகியும் காடாகியும், ஆறாகியும், வாய்க்காலாகிய வழியாகியும், கடற்கரைக்கழியாகியும், புல்லாகியும், புதராகியும், பூடு ஆகியும், நகர் ஆகியும், புரம் மூன்றிற்கும் அழிவாகியும் சொல்லாகியும், சொல்லிற்குப் பொருந்திய பொருள் ஆகியும், போக்கு வரவு ஆகியும், அப்போக்குவரவுக்கு வேண்டிய இடம் ஆகியும் நிலனாகியும், நீராகியும், நெல்லாகியும், நெடிய ஒளிப் பிழம்பாகியும் எம்பெருமான் நெடுகப்பரவி நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.


பாடல் எண் : 04
காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்குலாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல் களிறுமாகிக்
குரைகடலாய் குரைகடற்கோர் கோமானுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனியாகி 
நீள்விசும்பாய் நீள்விசும்பின் உச்சியாகி
ஏற்றானாய் ஏறு ஊர்ந்த செல்வனாகி 
எழும்சுடராய் எம்மடிகள் நின்றவாறே.

பொருளுரை:
காற்றாகவும், மழை பொழியும் கார்மேகமாகவும், இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்று மூன்று காலங்களாகவும், கனவாகவும், நனவாகவும், இரவாகவும், நாளின் மற்றோர் பகுதியான பகலாகவும், ஒலிக்கும் கடலாகவும், அந்த கடலுக்குத் தலைவனான வருணனாகவும், திருநீறு அணிந்த மேனியனாகவும், சடையில் கங்கையை ஏற்றவனாகவும், நீண்ட ஆகாயமாகவும், அந்த ஆகாயத்திற்கு உச்சியாகவும், இடபத்தின் மேல் ஏறிச் சென்று எங்கும் திரியும் வல்லமை படைத்தவனாகவும் சிவபிரான் இருக்கின்றான். அவன் உயிர்கள் பால் கருணை கொண்டு அவை உய்யும் பொருட்டு ஐந்தொழில்களையும் தானே விருப்பமுடன் ஏற்றுக்கொண்டுள்ளான். இவ்வாறு அவன் இருக்கும் நிலை மிகவும் போற்றத்தக்கது.  இவ்வாறு பரந்து எங்கும் வியாபித்து இருக்கும் சிவபிரான், கொலைவெறி கொண்ட யானை போன்று வலிமை படைத்தவனாய், கூற்றுவனை உதைத்து, தனது அடியான் மார்க்கண்டேயனைக் காப்பாற்றிய கருணை உள்ளம் கொண்டவன் ஆவான்.


பாடல் எண் : 05
தீயாகி நீராகித் திண்மையாகித் 
திசையாகி அத்திசைக்கோர் தெய்வமாகித்
தாயாகித் தந்தையுமாய்ச் சார்வுமாகித் 
தாரைகையும் ஞாயிறும் தண்மதியுமாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற 
இரதங்கள் நுகர்வானும் தானேயாகி        
நீயாகி நானாகி நேர்மையாகி 
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்றவாறே.

பொருளுரை:
தீயின் வெம்மையாகவும், நீரின் தண்மையாகவும், நிலத்தின் வலிமையாகவும், காற்றின் அசையும் தன்மையாகவும், ஆகாயத்தின் கலக்கும் தன்மையாகவும் இருப்பவன் சிவபிரான். எட்டுத் திசைகளாகவும், அந்த திசைகளின் நாயகர்களாகவும், உயிர்களுக்கெல்லாம் தாயாகவும், தந்தையாகவும், உயிர்கள் பற்றுக் கொள்ளும் பற்றுக்கோடாகவும், வானில் திரியும் விண்மீன்களாகவும், சூரியனாகவும், குளிர்ச்சி பொருந்திய சந்திரனாகவும். செடி கொடி மரங்களில் காணப்படும் காயாகவும், பழமாகவும், பழத்தின் சுவையாகவும், அந்த சுவையை நுகரும் உயிர்களாகவும், நீ, நான், அவன் எனப்படும் மூன்று நிலைகளாகவும் (தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று நிலைகள்), நுண்ணிய பொருளாகவும், நீண்ட ஒளிப்பிழம்பாகவும், எங்கும் பரவி, அனைத்திலும் வியாபித்து இருக்கும் பெருமானின் நிலை மிகவும் வியக்கத்தக்கது.


பாடல் எண் : 06
அங்கமாய் ஆதியாய் வேதமாகி 
அருமறையோடு ஐம்பூதம் தானே ஆகிப்
பங்கமாய்ப் பல சொல்லும் தானே ஆகிப் 
பால் மதியோடு ஆதியாய்ப் பான்மையாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னியாகிக் 
கடலாகி மலையாகிக் கழியுமாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வனாகி 
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே.

பொருளுரை:
உலகின் புராதனமான நூல் என கருதப்படும் வேதங்களாகவும், அவைகளின் பொருளாகவும், அந்த வேதங்களின் ஆறு அங்கங்களாகவும், திகழும் சிவபெருமான் அந்த வேதங்களில் உள்ள மந்திரங்களாகவும் விளங்குகின்றான். புகழ்சொற்களாக இருக்கும் அந்த இறைவன் இகழ்ச்சொற்களாகவும் இருக்கின்றான்; வெண்ணிறம் கொண்ட சந்திரனாகவும், ஆதியாகவும், வினைகளாகவும் உள்ள இறைவன், கங்கை, காவிரி, கன்னி குமரித்துறை முதலான தீர்த்தங்களின் தேவதைகளாகவும் விளங்குகின்றான்; கடல்களாகவும், மலைகளாகவும், கழிகளாகவும் எங்கும் நிறைந்திருக்கும் அந்த இறைவன், எருதினை வாகனமாகக் கொண்டு, தோன்றி விளங்கும் சுடராக இருக்கும் தன்மை மிகவும் வியக்கத்தக்கது.


பாடல் எண் : 07
மாதா பிதாவாகி மக்களாகி 
மறிகடலும் மால் விசும்பும் தானேயாகிக்
கோதா விரியாய்க் குமரியாகிக் 
கொல்புலித் தோலாடைக் குழகனாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று 
புனைவார் பிறப்பறுக்கும் புனிதனாகி    
யாதானும் என நினைந்தார்க்கு எளிதே ஆகி
அழல் வண்ண வண்ணர் தாம் நின்றவாறே.

பொருளுரை:
உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் தாயாகவும் தந்தையாகவும் விளங்கும் சிவபிரான் அவர்களது மக்களாகவும் விளங்குகின்றான்; அவனே இடைவிடாது ஒலிக்கும் அலைகள் நிறைந்த கடல்களாகவும், மயக்கம் அளிக்கும் அளவு விரிந்த பரப்புடைய ஆகாயமாகவும், கோதாவிரி, குமரி முதலிய தீர்த்தங்களாகவும், கொலைத் தன்மை உடைய புலியினது தோலை ஆடையாக உடைய அழகனாகவும் உள்ளான். .அத்தகைய இறைவன், மலர்ந்த பூக்களைக் கொண்டு வழிபடும் அடியார்களுக்கு, அவரது பிறவிப்பிணியை நீக்கும் புனிதனாகவும், தனது வாழ்வில் எத்தகைய இடர்ப்பாடுகள் நேரிடினும், மனம் கலங்காமல், தன்னையே நினைக்கும் அடியார்களுக்கு மிகவும் எளியவனாகவும் விளங்குகின்றான், நெருப்பினைப் போல நிறம் உடைய அவனது திறமை மிகவும் வியக்கத்தக்கது.


பாடல் எண் : 08
ஆவாகி ஆவினில் ஐந்துமாகி 
அறிவாகி அழலாகி அவியுமாகி
நாவாகி நாவுக்கோர் உரையுமாகி 
நாதனாய் வேதத்தின் உள்ளோனாகி
பூவாகிப் பூவுக்கோர் நாற்றமாகிப் 
புக்குளால் வாசமாய் நின்றானாகித்
தேவாதி தேவர் முதலுமாகிச் 
செழுஞ்சுடராய் சென்றடிகள் நின்றவாறே.

பொருளுரை:
பசுவும், பசுவினிடத்தில் தோன்றும் ஐந்து பொருட்களாகவும் (பால், தயிர், நெய், கோசலம், கோமியம்), வேள்வித் தீயாகவும், வேள்விகளைச் செய்வதற்குரிய அறிவாகவும், அந்த வேள்வியினில் இடப்படும் பொருட்களாகவும், வேள்விக்கான மந்திரங்களைச் சொல்லும் நாவாகவும், அவ்வாறு சொல்லப்படும் மந்திரங்களாகவும், அந்த மந்திரங்களின் பொருளாகவும், வேள்வியில் பயன்படுத்தப்படும் பூக்களாகவும், அந்த பூக்களின் வாசனையாகவும், வாசனையாக பூக்களுடன் ஒன்றியிருக்கும் நிலையாகவும், வேள்விகளால் தொழப்படும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகவும் செழுஞ்சுடராய் எம்பெருமான் எங்கும் பரவி இருக்கும் தன்மை மிகவும் வியக்கத்தக்கது.


பாடல் எண் : 09
நீராகி நீளகலம் தானேயாகி 
நிழலாகி நீள்விசும்பின் உச்சியாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமையாகிப் 
பெருமதில்கள் மூன்றினையும் எய்தானாகி      
ஆரேனும் தன்னடைந்தார் தம்மை எல்லாம்
ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம்
பாராகிப் பண்ணாகிப் பாடலாகிப் 
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்றவாறே.

பொருளுரை:
பெரிய மதில்கள் மூன்றினையும் ஒரே அம்பினை எய்தி அழித்த சிவபெருமான், தன்னை அடைந்த அடியார்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ஆட்கொள்ள வல்லவன். அத்தகைய ஈசன், நீரின் சுவையாகவும், மிகவும் நீண்டும் பரந்த ஒளி வடிவாகவும், பரந்த ஆகாயத்தினும் மேலானவனாகவும், ஒப்பிலாத புகழை உடையவனாய், அந்தப் புகழுக்கு மிகவும் பொருத்தமானவனாய் விளங்குகின்றான். உலகத்தினைப் போன்று பொறுமை உடைய சிவபெருமான், பாடலாகவும், பாடலின் இனிமையான இசையாகவும், அனைத்திற்கும் மேலான ஒளியாகவும் விளங்கி நிற்கும் செயல் மிகவும் வியக்கத் தக்கதாகும்.


பாடல் எண் : 10
மாலாகி நான்முகனாய் மாபூதமாய் 
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வுமாகிப்    
பாலாகி எண்திசைக்கும் எல்லையாகிப் 
பரப்பாகிப் பரலோகம் தானேயாகிப்
பூலோக புவலோக சுவலோகமாய்ப் 
பூதங்களாய்ப் புராணன் தானேயாகி
ஏலாதன எல்லாம் ஏல்விப்பானாய் 
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே.

பொருளுரை:
திருமாலாகவும், பிரமனாகவும் அவர்களுடனே இருந்து அவர்கள் செய்யும் தொழிலுக்குத் துணையாக இருப்பவன் சிவபெருமான்; அவன் பஞ்சபூதங்கள், ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள் மற்றும் ஐந்து தன்மாத்திரைகள் ஆக இருந்து, உயிர்கள் மெய்ப்பொருளை அறியும் முயற்சியில் உயிர்களுக்கு உதவி செய்கின்றான்; அவன் அனைத்துப் பொருள்களிலும் பெரியதாய் விரிந்து காணப்படுபவன்; அனைத்துப் பொருட்களிலும் நுண்ணியதாக உள்ளவன். அவனே அனைத்துப் பொருட்களின் மகிழ்ச்சியாக காணப்படுகின்றான். எட்டுத் திசைகளையும் தாண்டி, அந்த திசைகளுக்கு எல்லையாக உள்ளவன்; உலகின் பரந்த பரப்பாக விளங்கும் அவன் பரலோகமாகவும், பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தவலோகம், மகலோகம், சத்யலோகம் ஆகிய உலகங்களாகவும் அவைகளில் உட்பட்ட அண்டங்களாகவும் விளங்குகின்றான். அவன் தான் அனைவருக்கும் முன்னவன். உலகில் உள்ள சடப்பொருட்கள் அனைத்தும் தாமாக இயங்க முடியாதவை. அத்தகைய சடப்பொருட்களையும் இயங்கச் செய்யும் சிவபெருமான், எழுகின்ற ஒளிச்சுடராக என்றும் விளங்குவது அதிசயத்தக்க செயலாகும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்

நன்றி: என். வெங்கடேஸ்வரன்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக