ஞாயிறு, 18 ஜூன், 2017

அடியாருக்கு அகமகிழ்ந்து அருள்வான் பரமன்

அனைவருமே இறைவனைத்தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த இறைவனும் தேடி அலைந்து கொண்டுதான் இருக்கிறார்! யாரை? திருமூலா் விளக்கம் சொல்கிறார். அது என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன் திருவொற்றியூர் வரை போய்விட்டு வரலாம், வாருங்கள், விஷயம் இருக்கிறது!


திருவொற்றியூரில் சிவபெருமான், ஒருவரின் முகவரியைத்தேடி அவரைக் கண்டுபிடித்து அவருடனே தங்கிவிட்டாராம்! இறைவனே தேடிப்போன அந்த உத்தம பக்தரின் பெயா் - பட்டினத்தார்!

"விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை 
வீணருடன் கிட்டேன் சுகதுக்கம் அற்றுவிட்டேன் தொல்லை
நான்மறைக்கும் எனும்பதம் தானே இங்கு வந்து
என்னிடத்தே எய்தியதே". 

- என்கிறார் பட்டினத்தார். அதாவது, நாம் தேடிக்கொண்டிருக்கும் தெய்வம், பட்டினத்தாரைத் தேடிப் போனதாம்! ஏன் என்பதைத் திருமூலர் சொல்லக் கேட்கலாம்: 

நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்மெல்ல 
விளையாடும் விமலன் அகத்திலே அல்ல செவி 
சத்தம் ஆதி மனத்தையும் மெல்லத் தரித்தர் முகத்தே பசித்தே. 
(திருமந்திரம் - 2137) 

கருத்து: நல்வார்த்தைகளைப் பேசும் வாயும், நல்லவற்றையே நினைக்கும் மனமும் உடையவர்கள் உள்ளத்திலே, பரம்பொருளான சிவபெருமான் அருள் நடமிடுவார். இப்படிப்பட்ட தன்மை இல்லாதவர்கள் - அதாவது நல்லதைப் பேசாத வாயும், நல்லதைக் கேட்காத காதும், நல்லதை நினைக்காத மனமும் படைத்தவர்களுடைய முகம் வாடி, வருந்திப் பொலிவிழந்து காணப்படும்.

மனம், வாக்கு, காயம் எனும் மூன்றையும் சொல்லி, அறிவுறுத்தும் பாடலிது. இதுதான் வரிசை. ஆனால் திருமூலா் இந்த வரிசையை மாற்றி, வாக்கு - மனம் - காயம் (உடம்பு) என்கிறார். ஏன்? மனம் என்ன நினைக்கிறது, மனத்தில் என்ன உள்ளது என்பதை யாராலும் அறிய முடியாது. ஆனால், வாக்கு இனிமையாக இருக்கிறதா, நல்வார்த்தைகளாக இருக்கின்றனவா என்பதைச் சுலபமாக அறியலாம். 

அதனாலேயே, முதலில் வாக்கை வைத்தார் திருமூலா். அது மட்டுமல்ல, "வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்" என அப்பா் சுவாமிகளும், முதலில் வாக்கை வைத்து, அதன் பிறகே, மனதை வைக்கிறார். நல்வாக்கு, வாழ்த்த வாய் என்றெல்லாம் முதலில் வைக்கப்பட்டதற்குக் காரணம், இனிமையான வாக்கும், வாழ்த்துதலும் என்றுமே பஞ்சத்திற்கு உட்பட்டிருக்கின்றன என்பதுதான்!

பெற்றோர்கள், கணவன், மனைவி, குழந்தைகள், உறவினா்கள் மற்றவர்கள் என அனைவரிடமும் கடுமையான வார்த்தைகளைத்தான் கொட்டுகிறோமே தவிர, இனிமையான வார்த்தைகளோ, நல்வார்த்தைகளோ இடம்பெற மாட்டேனென்கின்றன. வெறுப்பான வார்த்தைகளும் கொதிக்கும் சொற்களுமே இடம் பெறுகின்றன.

இதைப் பார்க்கும்போது, வள்ளுவருக்கே கோபம் வருகிறது: “எவன் அது?” என்று கோபமாகக் கேட்கிறார். "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்குவது?" ஆகையால், அனைவரிடமும் இனிமையாகவே, நல்வார்த்தைகளையே பேசுவோம். பலவிதமான பிரச்னைகளுக்கும் இது ஒன்றே தீா்வு. வாயில் நல்வார்த்தைகள் இருக்க, வாட்டம் எதற்கு? என்பார்கள் முன்னோர்கள். 

அடுத்து, மனதைச் சொல்கிறார் திருமூலா். வாயால் இனிமையாகப் பேசி, நல்வார்த்தைகளையே பேசினாலும், மனதில் களங்கம் இருந்தால், அது அடுத்தவர்க்கு மட்டுமல்ல, நமக்கே பிரச்னைகளை உண்டாக்கும். மனதிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன ஞான நூல்கள்.

சாதாரணமாகப் பேச்சு வழக்கிலேயே, “மனசாட்சி அறிய நான் சொல்வது உண்மை; பொய் சொல்லவில்லை” எனக் கூறுவதைக் கேட்டிருப்போம். மனசாட்சிக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம்? மனது இருக்கிறதே அதுதான் அனைத்திற்கும் காரணம். அழகான எதையாவது ஒன்றைப் பார்த்துவிட்டால், மனம் உடனே போய் அதில் விழுந்து விடுகிறது; மேலும் மேலும் பார்க்கும்படியாகக் கண்களைத் தூண்டுகிறது; எப்படியாவது அதை அடையும்படியாக அறிவைத் திட்டம் போடத்தூண்டுகிறது; அழகில் மயங்கிய மனமும் அறிவும் சோ்ந்து, தவறான வழிகளில் ஈடுபடுகின்றன.

அப்போது, அதிசயமாக “ஏய், இது வேண்டாம், பிரச்னையில் மாட்டிக்கொள்வாய், ஒதுங்கிவிடு” என அறிவு எச்சரித்தாலும், எடுபடாது. அறிவையே தனக்கு அடிமையாக, மனம் செய்துடும். பிறகென்ன? தவறான வழியில் போன மனது, மேலும் மேலும் முன்னேறி, மீளவே முடியாதபடி அந்தகாரத்தில் ஆழ்ந்து விடும்.

உதவி செய்ய ஒருவருமின்றித் தவிப்போம். வழிதெரியாமல் திண்டாடும் போது, “அப்பவே சொன்னேன். நீ கேக்கல. இப்ப பாத்தியா? திண்டாடித் தெருவுல நிக்கற!” என ஒரு குரல் கேட்கும். அது, மனசாட்சியின் குரல்! ஆம், அழகான ஒன்றைப் பார்த்ததும், அதன்மேல் போய் விழுந்து, அல்லலில் ஆழ்த்தியதே, அதே மனம் தான். அல்லல்களுக்குக் காரணமான மனமே, இடித்து அறிவுரையும் கூறும் இப்போக்கு மிகவும் விசித்திரமானது.

இப்படிப்பட்ட ஒருநிலை எல்லோருக்குமே வாய்த்திருக்கும். தவறு செய்யத் தூண்டிய மனமே, அதன் மூலம் உண்டான துயரங்களுக்கான காரணங்களைப் பட்டியலிடும்! நமக்கே நம் மீது வெறுப்பு வரும். ஒப்புக்கொள்கிறோமோ, இல்லையோ, மிகமிகத் தூய்மையானது மனம். இதைப்புரிந்து கொள்ள ஓா் உதாரணம் - தானும் பிரகாசித்து, தன்னைச் சுற்றி இருக்கும் இருளையும் நீக்கும் விளக்கைப் பலவிதமான மூடி(கூடை)களைப் போட்டு மூடி வைத்தால், மேலும் மேலும் இருள்தான் நீங்காதிருக்குமே தவிர, அதற்காகப் பிரகாசிக்கும் விளக்கைக் குற்றம் சொல்வோமா? விளக்கின் இயற்கை, ஔிவீசி இருளைப் போக்குவது தானே! 

அதுபோல, மனம் என்பது இயற்கையாகவே தூய்மையானது. அதை பலவிதமான மூடிகளால் - ஆசை, கோபம், பயம், தன்னலம், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றைப் போட்டு மூடிவைத்திருக்கிறோம். இம்மூடிகளை மேலும் மேலும் அதிகரிக்கின்றோமே தவிர, நீக்கும் முயற்சியில் நாம் ஈடுபடுவதில்லை.

விளக்கைச் சுற்றி இருக்கும் மறைப்புகளை ஒவ்வொன்றாக நீக்க நீக்க, விளக்கு ஔி வீசுவதைப்போல, மனத்தைச் சுற்றியிருக்கும் மறைப்புகளை ஒவ்வொன்றாக விலக்க விலக்க, மனம் தன்னுடைய இயல்பான நன்னிலைக்கு வந்துவிடும். இந்நிலையை அடைந்தவகளேஞார்னிகள். அப்படிப் பட்டவர்களின் உள்ளத்தில் சிவபெருமான் - இறைவன் நடம் புரிகிறாராம்.

அந்நிலையை அடையாதவர்களோ, நல்லதைப் பேசாமல், நல்லதைக் கேட்காமல், நல்லதை நினைக்காமல்,செய்யக்கூடாதவற்றையெல்லாம் செய்து, துயர வலையில் அகப்பட்டு, எந்நேரமும் இருண்ட முகத்தோடே இருப்பார்கள் என்கிறார் திருமூலா். நல்வார்த்தைகள் பேசி, நல்லதையே நினைக்கும் பண்புகளைக் கொண்டவர்களின் உள்ளத்தில் சிவபெருமான் நடம் புரிவான் எனச் சொன்ன திருமூலா், அடுத்த பாடலில் அவ்வாறு சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களைக் கூறுகிறார்.

"தவிர வைத்தான் வினை தன் அடியார்கோள்
தவிர வைத்தான் சிரத்தோடு தன் பாதம்
தவிர வைத்தான் நமன் தூதுவா் கூட்டம்
தவிர வைத்தான் பிறவித்துயா் தானே "
-- (திருமந்திரம் - 2050) 

கருத்து: தன் அடியார்களான மெய்யன்பர்கள் வினைத் துன்பங்களுக்கு ஆளாகாது தடுத்துக் காத்தருளினார். செய்த வினைகளால் வரும் நவகோள்களின் பாதிப்பு உண்டாகாதிருக்கத் தன்னுடைய திருவடிகளை அடியார்களின் தலைமேல் வைத்துக் காத்தருளினார். யம பயத்திலிருந்து அடியார்களைக் காத்தருளினார். மீண்டும் மீண்டும் பிறந்திறக்கும் துயரம் தவிர்த்து, முக்தியையும் அருளினார். 

வினைத்துயரங்களிலிருந்து அடியார்களைக் காத்தது; நவக்கிரகக் கோளாறுகளிலிருந்து அடியார்களைக் காப்பது; அடியார்களின் தலைமேல் தன் திருவடிகளை வைப்பது; யமனிடமிருந்து அடியார்களைக் காப்பது; பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேற்றுவது எனச் சிவபெருமானின் திருவிளையாடல்கள் பலவற்றையும் இங்கே நம் மனதில் பதிய வைக்கிறார் திருமூலர்.

இப்பாடலின் ஒவ்வொருவரிக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வாழ்விலிருந்தே, நடந்த நிகழ்வுகளைக் கொண்டு நாம் விளக்கம்பெறலாம். அது நீண்டுபோகும் என்பதாலும், அதே சமயம் மேலும் சில உத்தமர்களுக்கு அருள்புரிந்த நிகழ்வுகளையும் பார்க்கலாம் என்ற நினைப்பாலும், வேறுவேறு நிகழ்வுகள் இங்கே அணிவகுக்கின்றன.

சிவபெருமானும், அம்பிகையும் கயிலையில், வில்வ மரத்தினடியில் எழுந்தருளியிருந்தபோது, மரத்தின் மேலிருந்த குரங்கொன்று வில்வ தளங்ளைப் பறித்து, சிவதம்பதியர் மேல் இட்டது. உடனே சிவபெருமான் அக்குரங்கை அழைத்து, “வில்வம் கொண்டு எம்மை அா்ச்சித்ததால், நீ சக்கரவர்த்தியாக ஆவாய்!” என்றார். அதற்குக் குரங்கு,”பரம்பொருளே! சக்கரவர்த்தியாயிருந்தால், பதவி சுகத்தில் ஈடுபட்டு, போகத்தில் திளைத்து, உம்மை மறக்கும்படி நேரலாம். ஆகையால், நான் சக்கரவர்த்தியாக இருந்தாலும் என் முகம் மட்டும் குரங்கு முகமாகவே இருக்குமாறு அருள் புரியுங்கள். அப்போது தான், பழையனவற்றை நான் மறக்கமாட்டேன்; வினைகளும் என்னைத் தீண்டாது” என வரம் வேண்டியது.

“அவ்வாறே ஆகுக” என்று அருள்புரிந்தார் சிவபெருமான். வரம் பெற்ற அக்குரங்கு தான், முசுகுந்த சக்கரவர்த்தியாகப் பிறந்தது; வினை தீண்டாத நிலைபெற்றது. அடுத்து, நவகோள்களின் பாதிப்பிலிருந்து அடியாரைக் காத்தது: அமணர்களின் பிடியிலிருந்து ஆலவாயாம் மதுரையை மீட்பதற்காக, ஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தார் அரசி மங்கையர்க்கரசி. 

அப்போது திருமறைக்காட்டில் திருநாவுக்கரசருடன் இருந்த திருஞானசம்பந்தரைச் சந்தித்த அரசியின் தூதா்கள், தகவலைச் சொல்ல, மதுரைக்குப் புறப்பட ஆயத்தமானார் திருஞானசம்பந்தர். அமணர்களின் நடவடிக்கைகள் முழுவதையும் அறிந்த அனுபவசாலியான, முதுமை - ஞானம், கல்வி - கேள்வியில் சிறந்து விளங்கிய திருநாவுக்கரசா், திருஞானசம்பந்தரைத் தடுத்தார். 

“கோள்களின் நிலை சரியாக இல்லை; ஆகவே தாங்கள் இப்போது மதுரைக்குச் செல்ல வேண்டாம்” எனக்கூறித் தடுத்தார். திருஞானசம்பந்தரோ, ”இறைவனருள் பெற்றவர்க்கு எல்லா நாள்களும் கோள்களும் நல்லவையே” எனக்கூறி, கோளறு பதிகம் பாடிப் புறப்பட்டார், மதுரை சென்றார், வென்றார்.

அப்போது திருஞானசம்பந்தா் பாடிய "கோளறு பதிகம்" இன்றும் அடியார்களால், கோள்களின் பாதிப்பிலிருந்து நீங்கப் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அறுபதுகளில், கோள்களின் கடும் பாதிப்பு குறித்து ஜோசியர்கள் கூற, காஞ்சி ஸ்ரீமகா சுவாமிகள் இக்கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்யச் சொல்ல, அனைவரும் திருஞானசம்பந்தரால் அருளப்பட்ட கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்து,கோள்களின் பாதிப்பிலிருந்து நீங்கியது மிகவும் பிரசித்தம்.

அடுத்து, திருவீழிமிழலை எனும் திருத்தலத்தில் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் இருந்தபோது, கோள்களின் காரணமாகப் பலகாலம் மழையின்றிப் பஞ்சமும் பசியும் பரவின. அதை அறிந்த திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் திருவீழிமிழலை நேத்ரார்ப்பணேசுவரரிடம் சென்று முறையிட்டார்கள்.

அவா்கள் முறையீட்டுக்குச் சிவபெருமான் பதில் அளித்தார்: “இத்தீங்கு உங்களைப் பீடிக்காது என்றாலும், அடியார்களின் கவலை நீங்குவதற்காக, நம் சந்நதியில் கிழக்குப் பீடத்தில் சம்பந்தனுக்கும், மேற்கு பீடத்தில் அப்பருக்கும், யாம் தினந்தோறும் ஒரு பொற்காசு வைப்போம். அதைக்கொண்டு அடியார்களின் துயா் தீருங்கள்!” அடுத்து, அடியார்களின் தலைமேல் சிவபெருமான் தன் திருவடிகளை வைத்தது - சைவசமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரா், சித்தவடம் எனும் மடத்தில் படுத்து உறங்கியபோது, அருகில் படுத்திருந்த கிழவா் ஒருவரின் திருவடி, சுந்தரரின் தலைமேல் பட்டது.

அதை சுந்தரா் கூறியபோது, “வயதானதால் எனக்குப் புரியவில்லை” என்றார் கிழவா். வேறுபக்கம் திரும்பிப் படுக்க, அப்போதும் கிழவரின் திருவடிகள் பட்டன. சுந்தரா் கோபத்துடன் “யாரையா நீா்? ஏனிப்படிச் செய்கிறீா்?” எனக் கேட்க, “எம்மை நீா் அறியவில்லையா?” எனச் சொல்லி அப்பெரியவா் மறைந்தார். வந்தது திருவதிகை சிவபெருமானே என்பதை அறிந்த சுந்தரா் அகமகிழ்ந்து, "தம்மானை அறியாத" என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி இறைவனைத் துதித்தார். 

அடுத்தது யம வாதை வராமல் தடுத்தது. மார்க்கண்டேயருக்கு திருக்கடவூரில் நடந்த நிகழ்ச்சியிது. இவ்வாறு சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் பலவற்றையும் இப்பாடல் மூலம் நமக்கு உணா்த்துகிறார் திருமூலா். வினை நீக்கியது, கிரகக் கோளாறில் இருந்துகாத்தது, பசி தீா்த்தது, திருவடி வைத்தது, யமவாதை தீா்த்தது எனப் பல விவரங்களையும் சொல்லி நம்மை இறையருளுக்குப் பாத்திரர்களாக்குகிறார் திருமூலா்.

நன்றி பி என் பரசுராமன்

|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

பிழை தவிர்த்த இறைவன்

மக்கள் இறைவனை மலர்களாலும், பாடல்களாலும் அர்ச்சனை செய்து மகிழ்கின்றனர். மலர்கள் அன்றைக்கே மலர்ந்து அன்றைக்கே வாடிவிடும் தன்மையை உடையன. மலர்களால் செய்யப்படும் அர்ச்சனை ஒருநாள் மட்டுமே நிலைக்கிறது. ஆனால் இறைவனை வழிபடுவதற்காகப் பாடப் பெற்ற பாடல்களின் சொல் மலர்கள் என்றும் வாடாதவை. அவை மனித மனத்தையும், இறை மணத்தையும் இணைக்கும் திறமுடையன. சொல்மாலை புனைந்தேத்துவது மாலையைப் புனைந்தேத்துவதைவிடச் சிறந்ததாகும்.


சைவ சமயத்தில் இறைவனைப் போற்றும் பாடல்கள் திருமுறைகள் ஆகும். இத்திருமுறைகள் தினம் தினம் பாடி வரப்பெறுகின்ற அளவிற்கு மக்களிடத்தில் பெருமளவில் செல்வாக்கு பெற்றுள்ளன. திருமுறைகள் சொல்வளமும், பொருள் நலமும், நம்பிக்கை நயமும் கொண்டனவாகும். இதன் காரணமாகத் திருமுறைகள் மக்களையும் மகேசனையும் இணைக்கும் பாலங்கள் என்றால் அது மிகையில்லை.

பன்னிரு திருமுறைகளாகப் பகுக்கப் பெற்ற இத்திருமுறைகளில் ஏழாம் திருமுறை சுந்தரரால் பாடப்பெற்றதாகும். ஏழிசையாய், இசைப்பயனாய் இன்னமுதாய்ப் பாடிய தமிழ்த்திருமுறைள் சுந்தரரின் பாடல்களாகும். வாக்கிற்கு அருணகிரியார், கனிவிற்கு மாணிக்கவாசகர், தாக்கிற்குத் திருஞானசம்பந்தர், நோக்கிற்கு நக்கீரர், நயத்திற்குச் சுந்தரர், சொல்லுருதிக்குத் திருநாவுக்கரசர் என்ற வரிசை முறை தமிழகத்தில் வழங்கி வரும் வரிசை முறையாகும்.. நயத்திற்குச் சுந்தரர் என்ற நிலையில் சுந்தரரின் பாடல்கள் நற்றமிழ் நயத்திற்கு உரியனவாக விளங்குகின்றன.

"மந்திரம் ஒன்றறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன்
சுந்தர வேடங்களினால் துரிசே செய்யும் தொண்டன்"

என்று தன் இயல்பினை தன் பாடிய பாடலில் எடுத்துரைத்துக் கொள்ளுகின்றார் சுந்தரர். சுந்தர வேடம் என்பதற்கு எப்போதும் அழகான வேடம் கொண்டிருப்பவர் என்று பொருள். துரிசே செய்தல் என்றால் அழகான வேடம் கொண்டாலும் தவறுகளே செய்யக் கூடிய இயல்பினைப் பெற்றவன் என்று பொருள். தொண்டன் என்பது தொண்டுகளைச் செய்து இறைவனிடத்தில் மிக நெருக்கமாக இருந்தவர் என்று பொருள். இவ்வகையில தொண்டனாகவும் தவறுகள் செய்பவராகவும், மனைவாழ்வில் மகிழ்ந்தவராகவும், மந்திரம் ஏதும் அறியதாவராகவும் விளங்கிய சுந்தரர் தன் இனிய பாடல்களால் இறைவனுக்குக் கட்டளை இட்டவர். இவரின் கட்டளைகளை ஏற்று இறைவன் தூதும் போனார். தங்கம் கொண்டுவந்தார். முதலை உண்ட பாலகனை எழுப்பி நின்றார். ஊடல் தீர்த்தார். இத்தனைச் செயல்களுக்கும் காரணம் சுந்தரர் இறைவனிடத்தில் கொண்டிருந்த அளிவலாத அன்பும், உரிமையுமே ஆகும். சுந்தரர் தான் தினம் காணும் இறைவனின் வடிவழகை எடுத்துரைக்கின்றார்.

"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே."

என்ற இப்பாடலில் சுந்தரர் கண்ட இறைவனின் வடிவழகை பக்தர்களுக்குக் காட்டுகின்றார். இறைவன் பொன் போன்ற மேனியை உடையவன். அவன் தன் இடையில் புலித்தோலை உடுத்தியிருப்பவன். அவனது தலையில் முடிக்கற்றை சடைபோன்று விரிந்து நிற்கும். அது மின்னும் பல பொருள்களைத் தனக்குள் அடக்கியது. கொன்றை மாலையையும் அது தாங்கிக் கொண்டு நிற்கும். மன்னவன் எம் இறைவன். அவன் மாமணியாகவும் மழபாடி என்ற ஊரில் மாணிக்கமாகவும் நின்று கொண்டு இருக்கின்ற ஆண்டவனைத் தவிர வேறு யாரை நான் நினைக்கமுடியும் என்ற சுந்தரர் காட்டும வடிவழகில் இறையழகும் தமிழ் அழகும் கலந்து நிற்கும் காட்சியைக் கண்டு இன்புற முடிகின்றது.

இறைவனான சிவபெருமானுக்கும் சுந்தரருக்குமான முதல் சந்திப்பு சண்டையில் தான் தொடங்கியது. அந்தநாளில் நடைபெற்ற அந்த சண்டையை என்றைக்கும் மறவாமல் தன் நினைவுகளில் சுமந்த வண்ணம் பாடல் புனைகின்றார் சுந்தரர். தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள் சபை முன் வன்மைகள் பேசிட வன்தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார் புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்து என்னைப் போகம் புணர்ந்த நன்மையினார்க்கிடம் ஆவது திருநாவலூரே என்று திருநாவலூர் பற்றிப் பாடுகிறார் சுந்தரர். 

திருநாவலூர் சுந்தரரின் சொந்த ஊர் ஆகும். இவ்வூருக்கு வந்த சுந்தரர்  தன் வாழ்வு பற்றி மதிப்பீட்டைச் செய்து கொள்ளுகின்றார். தன்னுடைய பெருந்தன்மையினால் அடியவனான என்னை ஆட்கொண்ட பெருந்தகை சிவபெருமான். பொதுமக்கள் கூடி நின்ற சபையில் நான் அப்பெருந்தகையுடன் வன்மைகள் பேசினேன். அப்படிப்பேசினாலும் வன்தொண்டன் என்று என்னை அழைத்து அவர் அருகில் அணைத்துக் கொண்டார். தொடர்ந்து நான் பல முறை வேண்டுகோள்கள் வைத்தாலும் அவற்றையும் ஏற்றுக் கொண்டுத் தான் வேண்டுவன எல்லாவற்றையும் எனக்களித்தார். 

நான் பொன் வேண்டியபோது பொன் தந்தார். பெண் வேண்டியபோது பெண் தந்தார். இப்பெருமான் அமர்ந்த நல்லிடம் என் சொந்த ஊரான திருநாவலூர் ஆகும். இங்கு தன் சொந்த ஊரைச் சுந்தரர் பாராட்டினாலும், சொந்த ஊரில் உள்ளவர்களுக்குத் தன் இறை அனுவபத்தை வெளிப்படுத்தி நின்று தன்னை உறுதிப் படுத்திக்கொள்கிறார் சுந்தரர்.

மனிதப் பிறவி என்பது மகத்தான பிறவி என்றாலும் அப்பிறவிக்கு ஏதேனும் ஒரு கவலை எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றது. ஒரு கவலை தீர்ந்தால் மறுகவலை. மறுகவலை தீர்ந்தால் மற்றுமொரு கவலை என்று கவலைப்படுவதே மனித வாழ்க்கையாகிவிடுகின்றது. இத்தகைய வாழ்வில் ஒரே ஒரு துணை ஆண்டவன் தான். அந்த ஆண்டவனின் துணையின் பெருமையைச் சுந்தரர் உணர்ந்து பாடுகின்றார்.

"பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உம் கழல் ஏத்துவார்க்கு
மற்றோர் பற்றிலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்வீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆபற்காலத்தடிகேள் உம்மை
ஒற்றி வைத்து இங்கு உண்ணலாமோ? ஓணகாந்தன் தளியுளீரே."

என்ற இப்பாடல் மனித வாழ்க்கையின் இயல்பினையும் இறைவனின் துணையையும் ஒருங்கு கூட்டி உரைக்கின்றது. அடியவர்கள் கடவுளிடத்தில் ஒன்றைப் பெற்றபோது அதற்காக மகிழ்வர். அதே நேரத்தில் தான் ஒன்றைக் கடவுளிடத்தில் கேட்டபோது கடவுள் தராத நிலையிலும் கவலை கொள்ளாது இறைவனைப் போற்றுவர். பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும் என்றும் துணையாக இருப்பவன் இறைவன். இறைவன் தன்னடியார்களுக்கு வேறொருவர் துணை செய்யமாட்டார் என்ற நிலை கருதி அனைவருக்கும் அவ்வப்போது உதவி வருகின்றான். இதற்குக் காரணம் அவன் மதியைத் தன் தலையில் வைத்திருப்பதுதான். 

மதி என்றால் இந்த இடத்தில் இருபொருள்பட கொள்ள வேண்டும். மதி என்பதற்கு முதல் பொருள் நிலவு என்பது. சிவபெருமான் தன் தலையில்; மதி என்ற பிறை நிலவினைச் சூடியுள்ளான். அப்பிறை நிலவு வேண்டியவர் வேண்டாதவர் பார்த்து ஒளி தருவதில்லை. அனைவருக்கும் ஒளி தருகின்றது. இரவில் அது ஒன்றே மக்களுக்குத் துணை. எனவே ஆண்டவனும் மதியைச் சூடிய காரணத்தால் அவ்வியல்பினைப் பெற்றவனாக விளங்குகின்றான்.

மதி என்றால் அறிவு என்று பொருள். மதியுடையவர் செய்கை செய்வீர் என்பதால் அழியாத அறிவுடைய எம்பிரான் சிவபெருமான் தனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் பார்த்து அருள் செய்வதில்லை. அனைத்து உயிர்களுக்கு உதவும் பேரறிவினைப் பெற்றவன் அவன் என்பது மற்றொரு பொருளாகும். மக்கள் துணையற்றபோதும், அலைந்து திரிகின்றபோதும், ஆபத்தினால் வருத்தமுறும் போதும் என்ன செய்வார்கள். ஆண்டவனை முன் வைத்தே, அவனையே ஒப்பாக வைத்துத் தம் செயல்களைச் செய்வார்கள். இப்படி ஆண்டவனை ஒரு பொருளாக வைத்துத் தம் வாழ்வை நீட்டித்துக் கொள்ளும் மனிதப்போக்கு நல்லதுதானா? இருந்தாலும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுகின்ற திருவோணகாந்தன்தளி என்ற இடத்தில் குடியிருக்கும் எம்பெருமானுக்கு இதுவெல்லாம் ஒரு விளையாட்டே ஆகும்.

திருவாரூர், திருவொற்றியூர் என்று தன் இருப்பிடத்தைத் தன் துணைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டே இருந்த சுந்தரர் இம்மாறுதல்களால் பெற்ற இன்னல்கள் பற்பலவாகும். கண்கள் இழந்தார். துன்பம் மிகப் பட்டார். என்றாலும் இறைவன் இவருக்கு ஊன்றுகோல் தந்தான். கண்ணொளியை ஒவ்வொன்றாகத் தந்தான்.. எப்போதும் இறைவனையே தேடுகின்ற இயல்பினை உடையவர் சுந்தரர்.

"தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்;கள் நாள்தோறும்
நாடுவன் நாடுவண் நாபிக்கு மேலேயோர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளே."

திருவாமத்தூர் இறைவனை மனதில் நினைந்ததும் சுந்தரருக்கு மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது. இதன் காரணமாக அவர் பாடல்களில் வரும் சொற்களுக்கும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஒன்றுக்கு இரண்டாய் வந்து விழுகின்றன. நாள்தோறும் இறைவனின் மலர்ப்பாதங்களைத் தேடுகிறார். நாபிக்கு மேல் நால்விரல் என்ற அளவின் இடம் இதயம் ஆகும். அதாவது நாபி என்றால் உந்திச்சுழி - தொப்புள் என்று பெயர். இந்தத் தொப்புள் பகுதிக்கு நாலுவிரற்கடை மேலாக இருப்பது இதயம்.

இந்த இதயம் மனித உடலில் பாயும் இரத்தத்தைச் சுத்தம் செய்வது. மிக மென்மையானது. மேன்மையானது. இந்த இடப் பகுதியில் இறைவனை நாடி நாடி வைத்துக் கொள்கிறார் சுந்தரர். மாடுவேன் என்றால் பிணைத்துக் கொள்வேன் என்று பொருள். மாட்டுவேன் என்பதன் குறை இதுவாகும். இறைவனின் வன்கை பிடித்து மகிழ்ந்து அவனுடன் பிணைத்துக் கொள்வேன், பிணைத்துக் கொள்வேன். திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனைக் கண்டு நான் ஆடுவேன் ஆடுவேன் என்று மகிழ்ந்து சொல் பெருக்கி ஆடுகிறார் சுந்தரர்.

சுந்தரர் திருவஞ்சைக்களத்தில் பாடி ஆடும் தோற்றம் கண்டு உலகத் தொண்டர்கள் மகிழ்கின்றார்கள்.

"தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே 
சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே 
அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே
மலைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள் 
வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அலைக்கும் கடலங்கரை மேல்மகோதை 
அணியா பொழில் அஞ்சைக்களத்து அப்பனே." 

என்ற இப்பாடல் சுந்தரரின் ஆட்டத்தை சொல் ஆட்டத்துடன் எடுத்துரைக்கின்றது. என்னே என்னே என்று முடியும் இப்பாடல் ஓசையொழுங்கும் பெற்றது. இறைவனை விளிக்கும் வண்ணமுமாக அமைவது. இத்தகைய நிலையில் இறைவனை ஆடியும் பாடியும் கண்டவர் சுந்தரர். இவரது பாடல் உயிர்சக்தி மிக்கது என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. அவிநாசி என்ற இடத்தில் முதலை உண்ணப்பட்ட ஒரு பாலகனை மீட்டெடுத்தது இவர் பாடலாகும்.

"உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே."

என்ற இப்பாடலில் இறைவனை முன்வைத்துக் காலனை உயிர்தரச் சொல்லுகின்றார் இதற்கு அடிபணிந்து ஆண்டவனும் காலனும் பிள்ளையைத் தருகின்றனர். சுந்தரரின் தமிழ் இழந்த பிள்ளையின் உயிரைத் தரும் சக்தி மிக்கது. இறையடியார்களை இணைக்கும் பக்தி மிக்கது. இவரின் திருத்தொண்டத்தொகையால் அறுபத்து மூன்று நாயன்மார்கள் இனம் காணப் பெற்றனர். 

ஒற்றை வரியில் இவர் அடியவரை விளித்தாலும் அவ்வரிக்குள் அவ்வடியவரின் தொண்டு முழுவதும் இடம் பெற்றுவிடச் செய்யும் தன்மை இவரின் தமிழுக்கு உண்டு. இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன், தாதை தாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன் என்ற பாடலடிகளில் அடியவரின் பெயரும் அவர் தொண்டும் வெளிப்பட்டிருக்கும் தன்மை எண்ணி எண்ணி வியக்கத்தக்கது. இறைவனிடத்தில் எது கேட்டாலும் கிடைக்கும் என்ற உறுதியைத் தன் பாடல்களைப் படிக்கும் அன்பர்களுக்கு ஏற்படுத்திச் சென்றுள்ளார் சுந்தரர்.

"பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் 
போகமும் திருவும் புணர்ப்பானைப் 
பின்னை என்பிழையைப் பொறுப்பானைப் 
பிழை எலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா 
எம்மானை எளி வந்த பிரானை
அன்னம் வைகும் வயல் பழனத்து 
அணி ஆரூரானை மறக்கலும் ஆமே."

என்ற அவரின் பாடல் பிழை செய்தாலும் பொறுக்கும் எளிவந்த தன்மை பெற்றவன் இறைவன் என்று அறிமுகம் செய்கின்றது. பிழையற்ற வாழ்க்கை வாழ்பவர் யார். எல்லாரும் பிழைத்தே வாழ்கிறோம். இம்மை செய்பிழை, மறுமைப் பிழை, சென்ற பிழை என எல்லாப்பிழைகளையும் தவிர்க்கும் ஒரே புனிதன் இறைவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி மனித வாழ்வினை வளமாக்குவது சுந்தரரின் சுந்தரத்தமிழாகும்.

நன்றி Palaniappan M  


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

விக்னேஸ்வர சோடச நாமாவளி

உடலில் ஏதாவது ஆறாத காயமோ அல்லது உடலில் ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தாலும், இந்த விநாயகர் மந்திரத்தை 21 முறை கூறினால் பாதகம் இல்லாமல் நல்லபடியாகவே குணம் ஆகும்.


பிருகு முனிவர், மன்னர் படும் துன்பத்தை பார்த்து கலங்கி, "அரசே நான் கூறும் விநாயகர் மந்திரத்தை திரும்ப திரும்ப ஜபித்தால் இந்த உருவம் நீங்கி பழையபடி நல்ல சுந்தரமான அம்சத்தை பெறுவீர்கள்." என்றார்.

பிருகு முனிவர் கூறிய இந்த அற்புத விநாயகர் மந்திரத்தை அப்படியே சொன்னார் சோமகாந்த மன்னர். இதை பல தடவை நம்பிக்கையுடன் சொல்லி வந்தார். என்ன ஆச்சரியம்… மன்னரின் உடலில் இருந்து இத்தனை வருடம் ஆட்டி படைத்த நோய் சில வாரங்களிலேயே படிபடியாக நீங்கி பழைய சுந்தரமான உருவத்தை பெற்றார்.

விநாயகரை வழிபடும் போது தலையில் குட்டி நாம் செய்த தவறுகளை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். நாம் அறிந்தும் அறியாமல் செய்த தவறுகளை மன்னித்து அருள் புரிவார் விநாயக பெருமான்.

"ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் 
சதுர்புஜம் பிரஸன்ன வதனம் 
த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே."

விநாயகரை விக்ன நாசனனாக வழிபடுவதற்கென்று தனிப்பட்ட மந்திரங்கள் இருக்கின்றன. அவை "விக்னேஸ்வர சோடச நாமம்" என்று பெயர் பெற்றவை. அவருக்குச் சிறப்பாக பதினாறு நாமங்கள் கொண்ட சோடச நாமாவளியும் இருக்கிறது. இந்தச் சிறப்பான நாமாவளி விநாயகரின் விக்ன நாசன கணபதி அம்சத்துக்கு உரியது.

                                                            01 ஓம் சுமுகாய நம
                                                            02 ஓம் ஏக தந்தாய நம
                                                            03 ஓம் கபிலாய நம
                                                            04 ஓம் கஜகர்ணகாய நம
                                                            05 ஓம் லம்போதராய நம

                                                            06 ஓம் விநாயகாய நம
                                                            07 ஓம் விக்கினராஜாய நம
                                                            08 ஓம் கணாத்பதியே நம
                                                            09 ஓம் தூமகேதுவே நம
                                                            10 ஓம் கணாத்ய க்ஷசாய நம
                                                            11 ஓம் பாலசந்திராய நம

                                                            12 ஓம் கஜானனாய நம
                                                            13 ஓம் வக்ரதுண்டாய நம
                                                            14 ஓம் சூர்ப்பகன்னாய நம
                                                            15 ஓம் ஏரம்பாய நம
                                                            16 ஓம் ஸ்காந்த பூர்வாய நம

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வரூதினீ ஏகாதசி

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன


வைகாசி மாதம் - கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறையில்) வரும் ஏகாதசி திதியை வரூதினீ ஏகாதசியாக ‌கொண்டாடுவர். வரூதினீ ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம். அர்ஜூனன் கிருஷ்ண பரமாத்மாவிடம் "பிரபு! தாங்கள் தயைகூர்ந்து வைகாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியம், அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதிக்க வேண்டிய தெய்வம், விரத விதிமுறைகள், விரதத்தை அனுஷ்டிப்பதால் விளையும் நற்பலன்கள் ஆகியவற்றைப் பற்றி விஸ்தாரமாக வர்ணிக்க வேண்டுகிறேன்." என்றான்.

ஸ்ரீ கிருஷ்ணர், ஹே குந்தி நந்தனா! வைகாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி வரூதினீ ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அளவில்லா செளபாக்கியம் கிடைக்கும். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மனிதர்களின் சர்வ பாவங்களும் நீங்கப் பெறுகிறது. துரதிர்ஷ்டத்தால் துக்கத்தில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினை பெறுவர். வரூதினீ ஏகாதசியின் புண்ணிய பலனின் பிரபாவத்தால் ராஜா மாந்தாதா ஸ்வர்க்கலோகப் பிராப்தியை பெற்றார். இஷ்வாகு அரச பரம்பரையில் வந்த மஹாராஜா தந்துமாரா, சிவபெருமானின் சாபத்தால் தான் பெற்ற குஷ்ட ரோகத்திலிருந்து விடுதலை பெற்று, இவ்விரத மேன்மையால் ஸ்வர்க்கலோகப் பிராப்தியும் பெற்றார்.

வரூதினீ ஏகாதசி விரத புண்ணிய பலன் பத்தாயிரம் (10,000) வருடங்கள் தவம் செய்வதால் கிடைக்கப்பெறும் புண்ணியத்திற்கு இணையானதாகும். இவ்ஏகாதசி விரதத்தின் புண்ணிய பலன், குருக்ஷேத்ர பூமியில் சூரிய கிரஹண காலத்தில் சொர்ண (தங்கம்) தானம் ஒரு முறையாவது செய்வதால் கிடைக்கப்பெறும் புண்ணியத்திற்கு சமமானதாகும். உத்தமமான இவ்ஏகாதசி விரதத்தின் புண்ணிய மஹிமையால், மனிதர்கள் இவ்வுலகில் அல்லாது பரலோகத்திலும் சுகபோகங்களை அனுபவித்துடன்,முடிவில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர். 

"ராஜன்! இவ்ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், இவ்வுலகில் சுக போகங்களுடன் வாழ்வதுட‌ன், இறுதியில் முக்தியும் பெறுவர். சாஸ்திரங்களில், குதிரை(அஸ்வ) தானத்தை விட யானை(கஜ) தானம் மேலானது எனவும், யானை தானத்தை விட, பூமி தானம் மேலானது எனவும், பூமி தானத்தை விட,  தில(எள்) தானம், மேலானது எனவும், தில தானத்தை விட சொர்ண தானம் பன்மடங்கு மேலானது எனவும், தான தர்மங்களைப் பற்றி குறிப்பிடும் போது கூறியுள்ளனர். மேலும், சொர்ண தானத்தை விட அன்னதானம்  மேன்மையானதும், சிரேஷ்டமானதும் ஆகும் என்றும் கூறியுள்ளனர். இவ்வுலகில் அன்னதானத்திற்கு ஈடான தானம் வேறெதுவும் இல்லை. அன்னதானம் பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் என அனைவருக்கும் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

தகுதியானவருக்கு கன்யா தானம் செய்து கொடுப்பது, அன்னதானம் செய்வதற்கு இணையானது என்றும், அறியாமையில் உழல்பவருக்கு ஜீவன் முக்திக்கு வழிகோலும் ஆன்மீக அறிவினைப் புகட்டுவது அதை விட மேலானது என்றும் சாஸ்திரம் அறிந்த சான்றோர் கூறியுள்ளனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், கோதானம் அன்னதானத்திற்கு இணையானது என்று கூறியுள்ளார். கன்யாதானம், அன்னதானம், கோதானம் மற்றும் ஆன்மீக அறிவு புகட்டுதல் முதலிய உத்தமமான நற்கர்மங்களால் கிட்டும் ஒருங்கிணைந்த புண்ணிய பலனை, ஒருவர் வருதினீ ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதின் மூலம் பெறுவர்.

பேராசை, சோம்பல், வேலை செய்ய உடல் வணங்காமை இவை காரணமாக, தன் மகளின் செல்வத்தில் வாழ்பவர், செல்வத்தை அனுபவிப்பவர் பிரளய காலம் வரை நரகத்தில் தண்டனை அனுபவிப்பதுடன், மறு ஜென்மத்தில் இழி பிறப்பெடுத்து கஷ்டமும், துக்கமும் அனுபவிப்பர். ஒருவர் அன்புடனும், பாசத்துடனும் ஹோம அக்னி வளர்த்து, இறை வணக்கத்துடன், மந்திரங்கள் ஒலிக்க, அணி மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கன்னியை தகுதியானவருக்கு கன்யாதானம் செய்வதனால் கிட்டும் புண்ணியத்தைக் கணக்கிட சித்ரகுப்தனாலும் இயலாது. அத்தகைய மேன்மையான கன்யாதான புண்ணிய பலனை, வருதினீ ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் எளிதில் பெறலாம்.  

இரவு முழுவதும் கண் விழித்து, பாகவதம், புராணங்கள் ஸ்ரவணம் செய்தல், பஜனை, கீர்த்தனை என்று இருத்தல் வேண்டும். பிறரை நிந்தனை செய்தல்,  சூதாட்டம், கேளிக்கை, பகல் உறக்கம், வெற்றிலை பாக்கு, எண்ணெய் மற்றும் உணவு உண்ணுதலும் தவிர்க்கப்பட வேண்டும். துஷ்டர் மற்றும் பாவம் புரிந்தோரிடமிருந்து விலகி இருத்தல் வேண்டும். கோபம் கொள்வதும், பொய் பேசுதலும் கூடாது.

ராஜன்!, எவர் ஒருவர் ஏகாதசி விரதத்தை விதிபூர்வமாக கடைப்பிடிக்கிறாரோ, அவருக்கு ஸ்வர்க்கலோகப் பிராப்தி கிட்டும். மனிதர்கள் பாவவினைகளைக் கண்டு அஞ்சுதல் வேண்டும். வருதினீ ஏகாதசி விரத மஹாத்மியத்தை ஸ்ரவணம் செய்வதால் ஒரு ஆயிரம் கோதானம் (பசு) செய்த புண்ணியம் கிட்டப் பெறும். இவ்ஏகாதசி விரத புண்ணியமானது புனித நதியான கங்கையில் நீராடுவதால் கிட்டப் பெறும் புண்ணியத்தை விட பன்மடங்கு மேலானதாகும்.

கதாசாரம்: தன் உணர்ச்சிகளை உள்ளடக்கி சுயக்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சௌபாக்கியத்தின் ஆதாரமாகும். அனைத்துவித நடவடிக்கைகளிலும் சுய கட்டுப்பாட்டினை மேற்கொள்ளுதல், சுகத்திற்கும் சௌபாக்கியத்திற்கும் வளர்ச்சியை கொடுக்கும். சுயக்கட்டுப்பாடு இல்லையெனில் அவர் மூலம் செய்யப்படும் தவம், தியாகம், பக்தி, பூஜை இவை யாவும் சக்தியை இழக்கும்

நன்றி : Kshetra Yaatra


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||