புதன், 3 ஆகஸ்ட், 2016

திருப்புகழ் - சிறுவை (சிறுவாபுரி) 02


சிந்தையில் சிறுவை முருகனை நினைத்தாலே போதுமாம்.! திருவண்ணமலையை எப்படி நினைக்க முக்தியோ  அதே போல் நம் சிறுவாபுரி முருகனும்.!

|| ----- ----- ----- மூலநூல் ----- ----- ----- ||


சீதள வாரிஜ பாதாந மோநம
நாரத கீதவி நோதாந மோநம
சேவல மாமயில் ப்ரீதாந மோநம ...... மறைதேடுஞ்

சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம
தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப்

பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோராந மோநம
பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது

பார்வதி யாள்தரு பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம
பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய்

போதக மாமுக னேரான சோதர
நீறணி வேணியர் நேயாப்ர பாகர
பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா

போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா

மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா

வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.



|| ----- ----- ----- சொற்பிரிவு ----- ----- ----- ||


சீதள வாரிஜ பாதா நமோ நம
நாரத கீத விநோதா நமோ நம
சேவல மாமயில் ப்ரீதா நமோ நம ...... மறைதேடுஞ்

சேகரமானப்ர தாபா நமோ நம
ஆகம சார சொரூபா நமோ நம
தேவர்கள் சேனை மகீபா நமோ நம ...... கதிதோயப்

பாதக நீவு குடாரா நமோ நம
மா அசுரேச கடோரா நமோ நம
பாரினிலே ஜய வீரா நமோ நம ...... மலைமாது

பார்வதியாள் தரு பாலா நமோ நம
நாவல ஞான மனஉலா நமோ நம
பாலகுமாரசுவாமீ நமோ நம ...... அருள்தாராய்

போதக மாமுக நேரான சோதர
நீறணி வேணியர் நேயா ப்ரபாகர
பூமகளார் மருகேசா மகோததி ...... யிகல்சூரா

போதக மாமறை ஞானா தயாகர
தேனவிழ் நீப நறாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா

மாதவர் தேவர்களோடே முராரியும் 
மாமலர் மீதுறை வேதாவுமே புகழ்
மாநிலம் ஏழினு மேலான நாயக ...... வடிவேலா

வானவ ரூரினும் வீறாகி வீறளகாபுரி 
வாழ்வினு மேலாகவே திருவாழ் 
சிறுவாபுரி வாழ்வே சுராதிபர் ...... பெருமாளே.

‎பொருளுரை‬: 
குளிர்ந்த தாமரை மலர்ப் பாதனே போற்றி, போற்றி, நாரதருடைய இசையில் மகிழ்பவனே போற்றி, போற்றி, சேவற்கொடியோனே, சிறந்த மயில்மீது பிரியமானவனே போற்றி, போற்றி, வேதங்கள் தேடும் அழகான கீர்த்தியை உடையோனே போற்றி, போற்றி, ஆகமங்களின் சார ஸ்வரூபமாக உள்ளவனே போற்றி, போற்றி, தேவர்களின் சேனைக்குத் தலைவனே போற்றி, போற்றி, நற்கதி அடைய, பாதகத்தைப் பிளக்கும் கோடாரியே போற்றி, போற்றி, பெரிய அசுரர்கள் அஞ்சும்படியாக கொடுமை காட்டுபவனே போற்றி, போற்றி, இவ்வுலகிலே ஜயவீரனாக விளங்குபவனே போற்றி, போற்றி, மலைமகள் பார்வதி பெற்றெடுத்த செல்வமே போற்றி, போற்றி, வாக்கிலே வித்தகனே, ஞான மனத்தில் உலவுகின்றவனே போற்றி, போற்றி, பாலகுமாரசுவாமீ போற்றி, போற்றி, நினதருளைத் தருவாயாக. 

யானையின் சிறந்த முகத்தோனுக்கு நேர் இளைய சகோதரனே, திருநீறு அணிந்த சடைப் பெருமானுக்குப் பிரியமானவனே, ஞான சூரியனே, லக்ஷ்மிதேவியின் மருமகனே, ஈசனே, பெருங்கடலைப் பகைத்து வேல் விட்ட சூரனே, சிறந்த வேதங்களை போதிக்க வல்லவனே, ஞானனே, கருணா மூர்த்தியே, தேன் சொட்டும் கடப்பமலரின் மணம் வீசும் திருமார்பை உடையவனே, பூரணச் சந்திரனைப் போல விளங்கும் ஆறு முகத்தானே, முருகேசா, தவ முநிவர்கள், தேவர்கள, அவர்களுடன் திருமாலும், தாமரை மலரின் மீதுள்ள பிரமனும், யாவரும் புகழும் நாயகனே, பெரிய உலகங்கள் ஏழிலும் மேலான தலைவனான வடிவேலனே, தேவர்களது ஊரான அமராபுரியைக் காட்டிலும் மேம்பட்ட, புகழ் பெற்ற குபேரன் ஊராகிய அளகாபுரியைக் காட்டிலும் மிகச் சிறந்த, லக்ஷ்மி வாசம் செய்யும் சிறுவாபுரித் தலத்தின் செல்வமே, தேவர் தலைவர்களுக்கெல்லாம் பெருமாளே.

சிறுவைத்தலம் சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப்பெயர் "சிறுவரம்பேடு"."லவ, குசர்" ஆகிய சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.



|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக