புதன், 4 மே, 2016

மழை வேண்டல் திருப்பதிகம்‬ 06 திருக்கழுமலம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பிரமபுரீஸ்வரர், ஸ்ரீ தோணியப்பர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ திருநிலை நாயகி, ஸ்ரீ பெரிய நாயகி

திருமுறை : முதல் திருமுறை 129 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

"வெப்பதின் தாக்கம் குறையவும், வறட்சி நீங்கவும் மழை வேண்டி இறைவனிடம் பிராத்திப்போம்...!"

"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க"

நாட்டில் மழை வளம் குறைந்து வறட்சி காணப்படும் போது. மேகராகக் குறிஞ்சி ராகத்தைப் பாடினால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அதிலும் ஞானக்குழந்தை திருஞானசம்பந்தர் இயற்றிய இந்தப் பாடலைத் தினமும் பாடி வருவோம். மழை வளம் பெருக, மண் வளம் செழிக்க இது உதவும். மொத்தத்தில் ஞானசம்பந்த சுவாமிகள் இந்த ராகத்தில் ஏழு பாடல்களைப் பாடியிருக்கிறார். அவை திருவையாறு, கழுமலம்(சீர்காழி), திருவீழிமிழலை, திருமுதுகுன்றம், திருப்பறியலூர், திருக்கச்சியேகம்பம் ஆகிய தலங்களில் பாடப்பட்டவை. மனித யத்தனத்தால் முடியாத காரியத்தை தெய்வ அனுக்கிரகம் தான் செய்து தரவேண்டும். தெய்வத்தை நம்புவோம். இந்தத் தேவாரப் பாடலை தினமும் பாடி வருவோம். கருணை பிறக்கும்.


பாடல் எண் : 01
சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால்
நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம் காட்டச் செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண் காட்டும் கழுமலமே.

பாடல் விளக்கம்‬:
விடை வடிவம் எழுதி உயர்த்திய வலிமையான கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று நாவின்கண் பொருந்திய கலைமகளோடு வந்து நான்முகன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில்; வாவிகள்தோறும் மலரும் வளவிய தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும் செங்கழுநீர் மலர்கள் வாய்களையும், காவி மலர்கள், கருங்குவளை மலர்கள், கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் கழுமலத்தின்கண் விளங்குவதாகும்.


பாடல் எண் : 02
பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ணவெண்ணீறு அலங்கரித்தான் அமரர்தொழ அமரும் கோயில்
தரும் தடக்கை முத்தழலோர் மனைகள் தொறும் இறைவனது தன்மை பாடிக்
கருந்தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப் பாட்டு அயரும் கழுமலமே.

பாடல் விளக்கம்‬:
அகன்ற விழிகளையும், பவளம் போலச் சிவந்த வாயையும் உடைய பெருமை மிக்க மலைமகளாகிய உமையம்மை பிரியாத திருமேனியில், அருமையான திருவெண்ணீற்றுப் பொடியை அழகுறப் பூசிய சிவபிரான் தேவர்கள் தன்னை வணங்க எழுந்தருளியுள்ள திருக்கோயில், வள்ளன்மையோடு விளங்கும் நீண்ட கைகளை உடைய முத்தீ வேட்கும் அந்தணர்களின் வீடுகள்தோறும் கரியவான பெரிய கண்களை உடைய மகளிர் இறைவனுடைய இயல்புகளைக் கூறிக்கொண்டு கழற்சிக்காய் அம்மானை பந்து ஆகியன ஆடி மகிழும் கழுமல நகரின் கண் உள்ளது.


பாடல் எண் : 03
அலங்கல் மலி வானவரும் தானவரும் அலைகடலைக் கடையப் பூதம்
கலங்க எழு கடுவிடம் உண்டு இருண்ட மணிகண்டத்தோன் கருதும் கோயில்
விலங்கல் அமர் புயன் மறந்து மீன் சனி புக்கு ஊன் சலிக்கும் காலத்தானும்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய மெய்யர் வாழ் கழுமலமே.

பாடல் விளக்கம்‬:
மலர் மாலை அணிந்த தேவர்களும் அசுரர்களும் கூடி அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்தபோது பூதங்களும் கலங்குமாறு எழுந்த கொடிய நஞ்சை, அவர்களைக் காத்தற்பொருட்டுத் தான் உண்டு, கரிய மணி போன்ற மிடற்றினன் ஆகிய சிவபிரான் தனது உறைவிடம் என்று மகிழ்வோடு நினையும் கோயில்; மலைகள் மீது தங்கி மழை பொழியும் மேகங்கள் மழை பொழிவதை மறத்தற்குரியதான மகரராசியில் சனி புகுந்து உணவு கிடைக்காமல் மக்கள் உடல் இளைக்கும் பஞ்ச காலத்திலும் மனம் கலங்காது பெரிய வள்ளன்மையோடு மக்களைக் காக்கும் உண்மையாளர் வாழும் கழுமலத்தின்கண் உள்ளது.


பாடல் எண் : 04
பாரிதனை நலிந்து அமரர் பயமெய்தச் சயமெய்தும் பரிசுவெம்மைப்
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு சிலைவளைத்தோன் பொருந்தும் கோயில்
வாரிசை மென்முலை மடவார் மாளிகையின் சூளிகைமேல் மகப் பாராட்டக்
காரிசையும் விசும்பு இயங்கும் கணங்கேட்டு மகிழ்வெய்தும் கழுமலமே.

பாடல் விளக்கம்‬:
மண்ணுலக மக்களை வருத்தியும், தேவர்களை அஞ்சுமாறு செய்தும், வெற்றி பெறும் இயல்பினராய்க் கொடிய போரை நிகழ்த்தும் அவுணர்களின் முப்புரங்களும் அழிய ஒப்பற்ற வில்லை வளைத்த சிவபிரான் உறையும் கோயில்; கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய மகளிர் மாடவீடுகளின் உச்சியில் நின்று தம் குழந்தைகளைப் பாடிப் பாராட்டும் இசையை மேகங்கள் உலாவும் வானவெளியில் உலாவும் கந்தருவர்கள் கேட்டு மகிழும் கழுமல நகரில் உள்ளதாகும்.


பாடல் எண் : 05
ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தமன்னும்
நீர் நின்ற கங்கை நகுவெண்தலை சேர் செஞ்சடையான் நிகழும் கோயில்
ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலையென்ன நிலவி நின்ற
கார் வண்டின் கணங்களால் கவின்பெருகு சுதைமாடக் கழுமலமே.

பாடல் விளக்கம்‬:
ஊர்ந்து செல்லும் அரவு, ஒளிவிடும் திங்கள், வன்னி, ஊமத்த மலர், நீர்வடிவான கங்கை, நகும் வெண்டலை ஆகியன சேர்ந்த செஞ்சடையை உடைய சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயில்; அழகு பொருந்திய வெள்ளி மலைகள் போல விளங்கி நிற்பனவும் மலர்களால் அலங்கரிக்கப்பெற்று அவற்றை மொய்க்கும் கரிய வண்டுகளின் கணங்களால் சூழப்பெற்றுக் கவின்மிகு வனவுமாய வெண்மையான சுதையால் அமைந்த மாட வீடுகள் நிறைந்த கழுமல நகரில் உள்ளது.


பாடல் எண் : 06
தரும் சரதம் தந்தருள் என்று அடி நினைந்து தழலணைந்து தவங்கள் செய்த
பெருஞ் சதுரர் பெயலர்க்கும் பீடார் தோழமை அளித்த பெருமான் கோயில்
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப அது குடித்துக் களித்து வாளை
கருஞ் சகடம் இளகவளர் கரும்பிரிய அகம் பாயும் கழுமலமே.

பாடல் விளக்கம்‬:
மெஞ்ஞானியர்க்குத் தரும் உண்மை ஞானத்தை எங்கட்கும் தந்தருள் என்று திருவடிகளை நினைந்து, தீ நடுவில் நின்று தவம் செய்யும் பெரிய சதுரப்பாடு உடையவர்கட்கும் மழை நீரில் நின்று தவமியற்றுபவர்கட்கும் பெருமை மிக்க தோழமையை வழங்கியருளும் சிவபிரான் உறையும் கோயில்; நெல்லறுவடை செய்த வயலில் முளைத்த தாமரை மலர்கள் தேனைச் சொரிய, அதனைக் குடித்துக் களித்த வாளை மீன்கள் வயற்கரைகளில் நிற்கும் பெரிய வண்டிகள் நிலைபெயரவும் கரும்புகள் ஒடியவும் துள்ளிப்பாயும் கழுமல வளநகரில் உள்ளதாகும்.


பாடல் எண் : 07
புவி முதல் ஐம்பூதமாய்ப் புலனைந்தாய் நிலனைந்தாய்க் கரணம் நான்காய்
அவையவைசேர் பயனுருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில்
தவம் முயல்வோர் மலர் பறிப்பத் தாழவிடு கொம்பு உதைப்ப கொக்கின் காய்கள்
கவணெறி கல்போல் சுனையின் கரைசேர புள்ளிரியும் கழுமலமே.

பாடல் விளக்கம்‬:
மண், புனல் முதலிய பூதங்கள் ஐந்து. சுவை ஒளி முதலிய புலன்கள் ஐந்து. அவற்றுக்கு இடமாகிய மெய், வாய் முதலிய பொறிகள் ஐந்து. வாக்கு பாதம் முதலிய செய்கருவிகள் ஐந்து. மனம் புத்தி முதலிய உட்கருவிகள் நான்கு ஆகிய ஆன்ம தத்துவங்களாகவும் அவற்றின் பயனாகவும், உருவமாகவும் அருவமாகவும் நிற்கின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயில், தவம் செய்ய முயல்வோர் இறைவனை அருச்சிக்க மரங்களில் பூத்த மலர்களைப் பறித்துக் கொண்டு விடுத்த கொம்புகள் நிமிர்ந்து தாக்குதலால் மாமரத்தில் காய்த்த காய்கள் விண்டு கவணிலிருந்து வீசப்பட்ட கல்போல சுனைகளில் வீழ ஆங்குறைந்த பறவைகள் அஞ்சி அகலும் வளமான கழுமல வளநகரில் உள்ளதாகும்.


பாடல் எண் : 08
அடல் வந்த வானவரை அழித்து உலகு தெழித்து உழலும் அரக்கர்கோமான்
மிடல் வந்த இருபதுதோள் நெரிய விரல் பணிகொண்டோன் மேவும் கோயில்
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே.

பாடல் விளக்கம்‬:
வலிமை பொருந்திய தேவர்கள் பலரை அழித்து உலகை அச்சுறுத்தித் திரிந்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் வலிமைமிக்க இருபது தோள்களையும் கால் விரலால் நெரிய ஊன்றி அவனைப் பணிகொண்ட சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயிலை உடையது, நாற்று நடவந்த உழவர்கள் இவை நாற்று நடுவதற்கு இடையூறாய்ப் பரற்கற்கள் போலத் தோன்றுகின்றனவே என்று கூறுமாறு கடலின்கண் இருந்து வந்த சங்குகள் முத்துக்களை வயல்களில் ஈன்று குவிக்கும் கழுமலமாகும்.


பாடல் எண் : 09
பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு கேழலுருவாகிப் புக்கிட்டு
ஆமளவும் சென்று முடியடி காணா வகை நின்றான் அமரும் கோயில்
பாமருவும் கலைப் புலவோர் பன்மலர்கள் கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களி கூர்ந்து நின்று ஏத்தும் கழுமலமே.

பாடல் விளக்கம்‬:
திருமகளின் கேள்வனாகிய திருமாலும், நான்முகனும் பன்றி உருவம் எடுத்தும், அன்னப்பறவை வடிவமெடுத்தும், தேடப் புகுந்து தம்மால் ஆமளவும் (ஆணவத்தால்) சென்று அடிமுடி காணாதவராய்த் தோற்று நிற்க, அழலுருவாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, பல்வகைப் பாக்களில் அமைந்துள்ள அருங்கலைகளை அறிந்த புலவர்கள் பல மலர்களைக் கொண்டு அருச்சித்து முறையோடு விருப்பங்கள் நிறைவேறக்கண்டு களிகூர்ந்து போற்றும் கழுமல நகராகும்.


பாடல் எண் : 10
குணம் இன்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்று கையில்
உணன் மருவும் சமணர்களும் உணராத வகை நின்றான் உறையும் கோயில் 
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண்மேல் தேவர்
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க மேல்படுக்கும் கழுமலமே.

பாடல் விளக்கம்‬:
நற்குணங்கள் இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவமாய் எண்ணிக் கையில் உணவேற்று உண்டு வாழும் சமணர்களும், அறிய முடியாதவாறு நின்ற சிவபிரான் உறையும் கோயிலை உடையது, ஆடவர் பெண்டிரை மணக்கும் திருமணத்தில் எழும் ஆரவாரமும், திருவிழாக்களின் ஓசையும், பூசுரர்களாகிய அந்தணர்கள் ஓதும் வேத ஒலியை அடங்குமாறு செய்து மிகுந்து ஒலிக்கும் கழுமல நகராகும்.


பாடல் எண் : 11
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்தன் கழல்மேல் நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன
சொற்றுணையோர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் தூமலராள் துணைவராகி
முற்றுலகம் அது கண்டு முக்கணான் அடிசேர முயல்கின்றாரே.

பாடல் விளக்கம்‬:
கற்றவர்களாலே பணிந்து வழிபடப்பெறும் கழுமலத்துள் விளங்கும் இறைவருடைய திருவடிகளின் மேல், நல்லோர்க்கு நற்றுணையாகும் பெருந்தன்மையையுடைய ஞானசம்பந்தன் விரும்பிப் போற்றிப்பாடிய, ஓதுவார்களுக்குத் துணையாய் அமைந்த சொற்களையுடைய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர், திருமகள் கேள்வராய் இவ்வுலகம் முழுவதையும் அரசாண்டு சிவனடி கூடும் முயற்சியைச் செய்கின்றவராவர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக