வியாழன், 26 மே, 2016

46 சத்தி நாயனார் புராணம்

"கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்."

"சிவனடியார்களை இகழ்ந்தவர் நாவைத் தண்டாயம் என்னும் குறடுபோலும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்த வேளாளர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வேதபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வேதநாயகி

அவதாரத் தலம் : இரிஞ்சியூர்

முக்தி தலம் : இரிஞ்சியூர்

குருபூஜை நாள் : ஐப்பசி - பூசம்

"தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
வாங்க வாங்கும் தண்டாயத்தினால் வலித்து
ஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன்
ஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்."

பாடல் விளக்கம்:
சிவனடியாரைத் தீங்கு கூறி இகழ்ந்த நன்மை இல்லாரின் நாவைத் துண்டித்தற்கு ஏற்ப, வளைந்த "தண்டாயம்" என்ற கருவிகொண்டு இழுத்து, அவ்விடத்தேயே கூர்மையான கத்தியால் அரிந்து, அன்பு பெருகும் சிறப்புடைய தொண்டில் உயர்ந்து விளங்கினார்.

சத்தி நாயனார் புராணம்



சோழ வள நாட்டிலே அமைந்துள்ள வரிஞ்சையூர் பதியிலே வேளாளர் குலத்திலே சத்தி நாயனார் என்னும் நாமமுடைய சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார். இவர் இளமை முதற்கொண்டே சடைமுடியுடைய விடையவர் திருவடியைச் சிந்தையில் இருத்தி வந்ததோடு சிவனடியார்கள் சேவடிகளையும் தமது சென்னி மீது தாங்கி வழிபட்டு வந்தார். 

சத்தி நாயனார் சிவனடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து பேசினால் அக்கணமே அவர்களது நாவினை குறட்டினால் பிடித்து அரிவார். இத்தகைய வலிய மனமும் சக்தியும் வாய்க்கப் பெற்று ஒழுகி வந்தமையால் தான் இவர் சத்தி நாயனார் என்று திருநாமம் பெற்றார். சிவனடியார்களை எவரும் இகழாவண்ணம் காத்து வரும் பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்தார். ஆடுகின்ற அரசர்க்கு அளவிலா தொண்டாற்றி வந்த இத்திருத்தொண்டர், மன்னுள் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற அம்பலவாணனுடைய அழகிய சிலம்பணிந்த சேவடி நீழலை அடைந்தார்.

"நாயனார் தொண்டரை நலம் கூறலார்
சாய நாவரி சத்தியார் தாள் பணிந்து
ஆய மாதவத்து ஐயடிகள் எனும்
தூய காடவர் தம் திறம் சொல்லுவாம்."

பாடல் விளக்கம்:
சிவபெருமானின் தொண்டர்களைப் போற்றாதார் வீழ, அவர்களின் நாவை அரியும் சத்தி நாயனாரின் திருவடிகளை வணங்கிச் சிவநெறியான மாதவத்தையுடைய ஐயடிகள் என்னும் தூய காடவரின் அடிமைத் திறத்தைச் சொல்வாம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக