செவ்வாய், 3 மே, 2016

மழை வேண்டல் திருப்பதிகம்‬ 04 திருவீழிமிழலை

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ நேத்திரார்ப்பணேசுவரர், ஸ்ரீ திருவீழிநாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சுந்தர குஜாம்பிகை, ஸ்ரீ அழகுமுலையம்மை

திருமுறை : முதல் திருமுறை 132 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

"வெப்பதின் தாக்கம் குறையவும், வறட்சி நீங்கவும் மழை வேண்டி இறைவனிடம் பிராத்திப்போம்...!"

"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க"

நாட்டில் மழை வளம் குறைந்து வறட்சி காணப்படும் போது. மேகராகக் குறிஞ்சி ராகத்தைப் பாடினால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அதிலும் ஞானக்குழந்தை திருஞானசம்பந்தர் இயற்றிய இந்தப் பாடலைத் தினமும் பாடி வருவோம். மழை வளம் பெருக, மண் வளம் செழிக்க இது உதவும். மொத்தத்தில் ஞானசம்பந்த சுவாமிகள் இந்த ராகத்தில் ஏழு பாடல்களைப் பாடியிருக்கிறார். அவை திருவையாறு, கழுமலம்(சீர்காழி), திருவீழிமிழலை, திருமுதுகுன்றம், திருப்பறியலூர், திருக்கச்சியேகம்பம் ஆகிய தலங்களில் பாடப்பட்டவை. மனித யத்தனத்தால் முடியாத காரியத்தை தெய்வ அனுக்கிரகம் தான் செய்து தரவேண்டும். தெய்வத்தை நம்புவோம். இந்தத் தேவாரப் பாடலை தினமும் பாடி வருவோம். கருணை பிறக்கும்.


பாடல் எண் : 01
ஏரிசையும் வடவாலின் கீழிருந்து அங்கு ஈரிருவர்க்கு இரங்கி நின்று
நேரிய நான்மறைப் பொருளை உரைத்து ஒளிசேர் நெறி அளித்தோன் நின்ற கோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு 
வேரிமலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலையாமே.

பாடல் விளக்கம்‬:
அழகிய வடவால மரத்தின்கீழ் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்குக் கருணையோடு நேரிய நால்வேதங்களின் உண்மைப்பொருளை உரைத்து அவர்கட்குச் சிவஞானநெறி காட்டியருளிய சிவபிரானது கோயில், நிலவுலகில் வாழும் வேதப்புலவர்கள் பல நாள்களும் தம்மிடம் பயிலும் மாணவர்களுக்கு வேதம் பயிற்றுவிப்பதைக் கேட்டுத் தேன் நிறைந்த பொழில்களில் வாழும் கிளிகள் நாள்தோறும் வேதங்களுக்குப் பொருள் சொல்லும் சிறப்பினதாய திருவீழிமிழலை ஆகும்.


பாடல் எண் : 02
பொறியரவம் அது சுற்றிப் பொருப்பே மத்தாக புத்தேளிர் கூடி
மறி கடலைக் கடைந்திட்ட விடமுண்ட கண்டத்தோன் மன்னுங்கோயில் 
செறி இதழ்த் தாமரைத்தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலைக் குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல்
வெறி கதிர்ச்சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலையாமே.

பாடல் விளக்கம்‬:
தேவர்கள் அனைவரும் கூடி மந்தரமலையை மத்தாக நாட்டி உடலில் புள்ளிகளை உடைய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றிச் சுருண்டு விழும் அலைகளை உடைய கடலைக் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவனாகிய சிவபிரான் உறையும் கோயில், செறிந்த இதழ்களை உடைய தாமரை மலராகிய இருக்கையில் விளங்கும், தாமரை இலையாகிய குடையின்கீழ் உள்ள இள அன்னம், வயலில் விளையும் செந்நெற் கதிர்களாகிய சாமரம் வீச வீற்றிருக்கும் திருவீழிமிழலையாகும்.


பாடல் எண் : 03
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரமூன்றும் எழில் கண்ணாடி
உழந்து உருளும் அளவையின் ஒள்ளெரிகொள வெஞ்சிலை வளைத்தோன் உறையும் கோயில்
கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம் முகங்காட்டக் குதித்து நீர்மேல்
விழுந்த கயல் விழிகாட்ட விற்பவளம் வாய்காட்டும் மிழலையாமே.

பாடல் விளக்கம்‬:
வானத்தில் பறந்து திரிந்து உலக மக்களை நலிவு செய்து உழன்ற அசுரர்களின் முப்புரங்களையும் அழகிய கண்ணாடியில், உழந்து உருளக்கூடிய கால அளவிற்குள் ஒளி பொருந்திய தீப்பற்றி எரியுமாறு கொடிய வில்லை வளைத்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், செழுமையான முத்துக்கள் மகளிரின் பற்களையும், தாமரைகள் முகங்களையும் துள்ளிக்குதித்து நீர்மேல் விழும் கயல்கள் கண்களையும், ஒளி பொருந்திய பவளங்கள் வாய்களையும் காட்டும் திருவீழிமிழலையாகும்.


பாடல் எண் : 04
உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்
நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய அங்கு அங்கே நின்றான் கோயில் 
வரைசேரும் முகில் முழவ மயில்கள் பல நடமாட வண்டு பாட
விரைசேர் பொன்னிதழி தர மென்காந்தள் கையேற்கு மிழலையாமே.

பாடல் விளக்கம்‬:
நூல்களில் உரைக்கப்பெறும் எண்பத்து நான்கு லட்சம் பிறப்பு வேறுபாடுகளையும் முறையாகப் படைத்து, அவ்வவற்றின் உயிர்கட்கு உயிராய் அங்கங்கே விளங்கி நிற்போனாகிய சிவபிரான் உறையும் கோயில், மலைகளில் தங்கியுள்ள மேகங்கள் எழுந்து வந்து முழவுபோல ஒலிக்க, ஆண் மயில்கள் பல நடனமாட, வண்டுகள் பாட, பரிசிலாகக் கொன்றை மரங்கள் மணம் பொருந்திய மலர் இதழ்களாகிய பொன்னைத் தர மெல்லிய காந்தள் மலர்கள் கை போல விரிந்து அதனை ஏற்கும் திருவீழிமிழலையாகும்.


பாடல் எண் : 05
காணுமாறு அரிய பெருமானாகிக் காலமாய்க் குணங்கள் மூன்றாய்ப் 
பேணு மூன்றுருவாகிப் பேருலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை உத்தமனை இறைஞ்சீர் என்று
வேணுவார் கொடி விண்ணோர்தமை விளிப்ப போல் ஓங்கு மிழலையாமே.

பாடல் விளக்கம்‬:
காண்டற்கரிய கடவுளாய், மூன்று காலங்களாய், மூன்று குணங்களாய் எல்லோராலும் போற்றப் பெறும் அரி, அயன், அரன் ஆகிய மும்மூர்த்திகளாய், பெரிதாகிய இவ்வுலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரியும் சிவபிரான் உறையும் கோயில், மூங்கில்களிற் கட்டிய நெடிய கொடிகள் நிலை பேறு உடையவனாய் நிற்கும் மேலான சிவபிரானாகிய, உத்தமனை, வந்து வழிபடுவீர்களாக என்று தேவர்களை அழைப்பன போல, அசைந்து ஓங்கி விளங்கும் திருவீழிமிழலையாகும். மூன்று உருவுக்கு ஏற்ப அழித்தல் வருவிக்கப்பட்டது.


பாடல் எண் : 06
அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானப்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில் 
தகவுடை நீர் மணித்தலத்துச் சங்குள வர்க்கம் திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணம் செய்யும் மிழலையாமே.

பாடல் விளக்கம்‬:
உள்ளத்தில் பொருந்திய அன்புடையவராய், காமம் முதலிய அறுபகைகளையும் கடிந்து, சுவை ஒளி முதலிய ஐம்புலங்களை அடக்கிச் சிவஞானத்தில் திளைத்திருப்பவர்களாகிய துறவிகளின் இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்கும் பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில், மணிகளும் சங்கினங்களும் விளங்கும் தூயதான நீர் நிலைகளில் முளைத்த தாமரை மலராகிய தீயில் மிகுதியாக வளர்ந்த புன்கமரங்கள் பொரி போல மலர்களைத் தூவி, திருமண நிகழ்ச்சியை நினைவுறுத்திக் கொண்டிருப்பதாகிய திருவீழிமிழலையாகும்.


பாடல் எண் : 07
ஆறாடு சடைமுடியன் அனலாடு மலர்க்கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடும் குணமுடையோன் குளிரும் கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு
வேறாய உருவாகிச் செவ்வழி நற்பண்பாடும் மிழலையாமே.

பாடல் விளக்கம்‬:
கங்கையணிந்த சடைமுடியை உடையவனும், மலர் போன்ற கரத்தில் அனலை ஏந்தியவனும், இமவான் மகளாகிய பார்வதிதேவி தன் ஒரு கூறாக விளங்கத் திகழும் திருமேனியை உடையவனும், கூத்தாடும் குணமுடையவனும், ஆகிய சிவபிரான் மனங் குளிர்ந்து எழுந்தருளியிருக்கும் கோயில், சேற்றில் முளைத்த செங்கழுநீர் மலர்களின் மகரந்தங்களில் படிந்து தேனையுண்டு, தன் இயல்பான நிறம் மாறிச் சிவந்த நிறம் உடையதாய்த் தோன்றும் வண்டு செவ்வழிப் பண்ணைப் பாடிக்களிக்கும் திருவீழிமிழலையாகும்.


பாடல் எண் : 08
கருப்பமிகும் உடல் அடர்த்து காலூன்றிக் கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன்முடி தோள் நெரித்தவிரல் புனிதர் கோயில்
தருப்பமிகு சலந்தரன் தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டி ஈண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்யவிழி விமானஞ்சேர் மிழலையாமே.

பாடல் விளக்கம்‬:
கர்வம் மிகுந்த உடலை வருத்தி நெருங்கிச் சென்று காலை ஊன்றிக் கைகளை வளைத்துக் கயிலை என்னும் மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்ட அரக்கனாகிய இராவணனின் பொன்முடி தரித்த தலைகளையும் தோள்களையும் நெரித்து அடர்த்த கால் விரலையுடைய தூயவராகிய சிவபிரானார் உறையும் கோயில், செருக்கு மிக்க சலந்தரன் என்னும் அவுணனது உடலைத் தடிந்த சக்கராயுதத்தைப் பெற விரும்பிப் பெருவிருப்போடு இவ்வுலகில் திருமால் வழிபாடு செய்ததும், வானிலிருந்து இழிந்த விமானத்தை உடையதுமாகிய திருவீழிமிழலையாகும்.


பாடல் எண் : 09
செந்தளிர் மா மலரோனும் திருமாலும் ஏனமொடு அன்னமாகி
அந்தம் அடி காணாதே அவர் ஏத்த வெளிப்பட்டோன் அமரும் கோயில் 
புந்தியினான் மறைவழியே புல் பரப்பி நெய் சமிதை கையில் கொண்டு
வெந்தழலின் வேட்டு உலகில் மிக அளிப்போர் சேருமூர் மிழலையாமே.

பாடல் விளக்கம்‬:
சிவந்த இதழ்களையுடைய பெரிய தாமரை மலரின்மேல் உறையும் பிரமனும், திருமாலும் அன்னமாகியும் பன்றியாகியும் முடியடிகளைக் காணாது தம் செருக்கழிந்து வழிபட அவர்கட்குக் காட்சி அளித்தோனாகிய சிவபிரான் அமரும் கோயில், தாங்கள் பெற்ற அறிவால் வேத விதிப்படி தருப்பைப் புற்களைப் பரப்பி நெய், சமித்து ஆகியவற்றைக் கையில் கொண்டு அழல் வளர்த்து வேள்வி செய்து உலகைக் காப்பவர்களாகிய அந்தணர்கள் சேரும் ஊராகிய திருவீழிமிழலையாகும்.


பாடல் எண் : 10
எண்ணிறந்த அமணர்களும் இழி தொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை
நண்ணரிய வகை மயக்கி தன்னடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில்
பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப் பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பு எய்தி விமானத்தோடும் இழியும் மிழலையாமே.

பாடல் விளக்கம்‬:
எண்ணற்ற சமணர்களும், இழிதொழில் புரியும் சாக்கியர்களும், எக்காலத்தும் தன்னை நெருங்க இயலாதவாறு அவர்கள் அறிவை மயக்கித்தன் அடியவர்களுக்கு அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளிய கோயில், பண்ணிசை போலும் மென்மொழி பேசும் மகளிர் தாங்கள் பெற்ற புதல்வர்களைப் பாராட்டும் தாலாட்டு ஓசை கேட்டு வியந்து, தேவர்கள் விமானங்களோடு வந்து இறங்கும் திருவீழிமிழலையாகும்.


பாடல் எண் : 11
மின்னியலும் மணிமாடம் மிடைவீழி மிழலையான் விரையார் பாதம்
சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக்கோன் செழுமறைகள் பயிலும் நாவன்
பன்னிய சீர்மிகு ஞானசம்பந்தன் பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி
இன்னிசையால் பாடவல்லார் இருநிலத்தில் ஈசனெனும் இயல்பினோரே.

பாடல் விளக்கம்‬:
மின்னல் போலும் ஒளியுடைய மணிகள் இழைத்த மாட வீடுகள் செறிந்த திருவீழிமிழலை இறைவனின் மணம் கமழ்கின்ற திருவடிகளைச் சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் இயல்புடைய சிரபுரநகரின் தலைவனும், செழுமறை பயின்ற நாவினனும் பலர் போற்றும் சிறப்பு மிக்கவனுமாகிய ஞானசம்பந்தன் அன்பு கொண்டு பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் போற்றி இன்னிசையோடு பாட வல்லவர்கள் பெரிதான இந்நிலவுலகில் ஈசன் என்று போற்றும் இயல்புடையோராவர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக