வெள்ளி, 27 மே, 2016

57 கோட்புலி நாயனார் புராணம்

"அடல் சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்." 

"சிவபெருமானுக்குப் படைப்பதற்காக தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தாரைக் கொன்று நேர்மையை நிலைநாட்டிய வேளாளர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ இரத்தினபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கமலாம்பிகை

அவதாரத் தலம் : திருநாட்டியத்தான்குடி

முக்தி தலம் : திருநாட்டியத்தான்குடி

குருபூஜை நாள் : ஆடி - கேட்டை

"எல்லாரும் புகுந்ததற்பின் இருநிதியம் அளிப்பார் போல்
'நல்லார்தம் பேரோன் முன் கடைகாக்க நாதன் தன்
வல்லாணை மறுத்து அமுதுபடி அழித்த மறக்கிளையைக்
கொல்லாதே விடுவேனோ எனக்கனன்று கொலைபுரிவார்."

பாடல் விளக்கம்:
உறவினர் எல்லாரும் வந்து சேர்ந்த பின்பு, பெரும் பொருள் தருபவர் போல் காட்டி நல்லவரான கோட் புலியார், தம் பெயரினையுடைய காவலன், முன் வாயிலைக் காவலாக நின்று காக்க, இறைவரின் வலிய ஆணையையும் மறுத்துத் திருவமுதுக்காக இருந்த நெல்லை அழித்து உண்ட பாவம் செய்த உறவினரையெல்லாம் கொல்லாமல் விடுவேனோ! என்று சினம் கொண்டு கொலை செய்வாராகி.

கோட்புலி நாயனார் புராணம்



காவிரி பாயும் சோழவள நாட்டிலே நாட்டியத்தான்குடி என்னும் சிவத்தலத்தில் வீர வேளாளர் மரபிலே வாழ்ந்தவர் கோட்புலி நாயனார். இச்சிவத்தொண்டர் சோழருடைய படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர் அஞ்சாத வீரர். கொலை செய்வதில் வல்ல புலி போன்ற குணம் மிக்கவராதலால், இவருக்கு கோட்புலியார் என்று காரணப் பெயர் ஏற்பட்டது. இப்பெயர் இவரது இயற்பெயராக இருக்கும் என்று எண்ணுவதற்கில்லை. 

எண்ணற்றப் போர்க்களம் சென்று பகையரசர்களை வென்று மன்னர்க்கு எல்லையற்ற வெற்றியைத் தேடிக் கொடுத்தார். அதனால் அவருக்கு இச்சிறப்புப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். வீரம் வளர்த்த கோட்புலியார் அரனாரிடத்து எல்லையில்லா பக்தி பூண்டிருந்தார். இவர் தமக்கு கிடைக்கும் அளவற்ற நிதிகள் அத்தனைக்கும் நெல் வாங்கி வீட்டில் மலை மலையாகக் குவித்தார். சேமித்த நெற்குவியலைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தினார். ஒருமுறை நாயனார் அரச கட்டளையை ஏற்றுப் போர்முனைக்குப் புறப்பட்டார். 

போருக்குப் போகும் முன்னே தம் குடும்பத்தாரிடமும், உறவினரிடமும், சுற்றத்தாரிடமும், எம்பெருமானுக்காகச் சேமித்து வைத்த நெல்லை யாரும் தன் சொந்த உபயோகத்திற்காக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுப்பது சிவத்துரோகமாகும். இது இறைவன் ஆணை. கோயில் திருப்பணிக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொடுக்கலாம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டு புறப்பட்டார். கோட்புலியார் சென்ற சில நாட்களுக்கெல்லாம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் எல்லோரும் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். அச்சமயம் கோட்புலியாரின் உறவினர் பசியின் கொடுமை தாங்காமல் அடியார் வழிபாட்டிற்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைத் தாராளமாக எடுத்துச் செலவு செய்தனர்.

போருக்குச் சென்றிருந்த கோட்புலியார் வெற்றி பெற்று நாடு திரும்பினார். சுற்றத்தார்களும், உறவினர்களும் நெற்குவியலை எடுத்து உண்டதை அறிந்து சினங்கொண்டார். எம்பெருமானுக்கு வழிபாடு செய்யாமல் தங்கள் வறுமைக்கு நெல்லைப் பயன்படுத்திக் கொண்ட சுற்றத்தார் அத்தனை பேரையும் அழைத்தார். ஒருவரையும் தப்பி ஓடிவிடாதபடி காவல் புரியச் செய்து தம் தந்தையார், தாயார், உடன் பிறந்தார் மனைவியர்கள், சுற்றத்தார் ஆகிய அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தினார். 

அதன் பிறகு அவரது வாளுக்குத் தப்பிய பிழைத்தது ஓர் ஆண்பிள்ளை! அப்பிள்ளையைக் கண்ட காவலன் நாயனாரிடம், ஐயனே! பாலகன் நம் குடிக்கு ஒரே புதல்வனாகும். இவன் அன்னத்தை உண்டதில்லை. இக்குழந்தையை மட்டுமாவது கொல்லாமல் அருள்புரியும் என்று பணிவோடு வேண்டினான். அவன் மொழிந்ததைக் கேட்டு, மேலும் கோபம் வளர நாயனார், இப்பாலகன் அன்னத்தை உண்ணாவிடினும், அன்னத்தை உண்ட அன்னையின் மூலைப் பாலை உண்டவன் என்று கூறி அக்குழந்தையையும் தமது வாளினால் இரு துண்டாக்கினார். 

அப்பொழுது சடைமுடிப் பெருமானார் விடையின் மீது எழுந்தருளினார். அன்பனே! உன் உடைவாளால் உயிர் நீத்தோர் அனைவரும் பிறவி என்னும் பாவத்தை விட்டு அகன்றவராயினர். அவர்கள் சிவபுரியில் இன்புற்று வாழ்வர். நீ இந்நிலையில் நம்முடன் அணைவாய் என்று அருள் புரிந்தார் சிவபெருமான். கோட்புலியார் காட்டிய பக்தியின் சக்தி அனைவருக்கும் பிறவாப் பெருவாழ்வைக் கொடுத்தது.

"அத்தனாய் அன்னையாய் ஆருயிராய் அமிர்தாகி
முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்த
கொத்தலர் தார்க் கோட்புலியார் அடிவணங்கிக் கூட்டத்தில்
பத்தராய்ப் பணிவார் தம் பரிசினையாம் பகருவாம்."

பாடல் விளக்கம்:
தந்தையும், தாயும், அரிய உயிரும், அமிர்தமும் ஆய வினையின் நீங்கிய இறைவனின் திருவடிகளை உட் கொண்டதால், சுற்றத்தாரின் பாசத்தை, வேர் அறத் தடிந்த, கொத்தான மலர்களைக் கொண்ட மாலையையுடைய கோட்புலி நாயனாரின் திருவடியை வணங்கிக் கூட்டத்தவரான (தொகை) அடியார்களுள் பத்தராய்ப் பணிபவரின் இயல்பை இனி இயம்புவாம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக