செவ்வாய், 3 மே, 2016

மழை வேண்டல் திருப்பதிகம்‬ 05 திருவையாறு

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஐயாற்றீசர், ஸ்ரீ ஐயாரப்பர், ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி, ஸ்ரீ தர்மசம்வர்த்தினி

திருமுறை : முதல் திருமுறை 130 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

"வெப்பதின் தாக்கம் குறையவும், வறட்சி நீங்கவும் மழை வேண்டி இறைவனிடம் பிராத்திப்போம்...!"

"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க"

நாட்டில் மழை வளம் குறைந்து வறட்சி காணப்படும் போது. மேகராகக் குறிஞ்சி ராகத்தைப் பாடினால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அதிலும் ஞானக்குழந்தை திருஞானசம்பந்தர் இயற்றிய இந்தப் பாடலைத் தினமும் பாடி வருவோம். மழை வளம் பெருக, மண் வளம் செழிக்க இது உதவும். மொத்தத்தில் ஞானசம்பந்த சுவாமிகள் இந்த ராகத்தில் ஏழு பாடல்களைப் பாடியிருக்கிறார். அவை திருவையாறு, கழுமலம்(சீர்காழி), திருவீழிமிழலை, திருமுதுகுன்றம், திருப்பறியலூர், திருக்கச்சியேகம்பம் ஆகிய தலங்களில் பாடப்பட்டவை. மனித யத்தனத்தால் முடியாத காரியத்தை தெய்வ அனுக்கிரகம் தான் செய்து தரவேண்டும். தெய்வத்தை நம்புவோம். இந்தத் தேவாரப் பாடலை தினமும் பாடி வருவோம். கருணை பிறக்கும்.


பாடல் எண் : 01
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழை என்று அஞ்சி
சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து, கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக் காலத்து, "அஞ்சேல்" என்றுரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரான் அமரும் கோயிலை உடையது, நடனக் கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக்கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.


பாடல் எண் : 02
விடலேறு படநாகம் அரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும்
அடலேறு ஒன்று அது ஏறி அஞ்சொலீர் பலியென்னும் அடிகள் கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகித்
திடலேறிச் சுரிசங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
கொல்லுதலாகிய குற்றம் பொருந்திய படத்தினையுடைய நாகத்தை இடையிற்கட்டி, மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு வலிமை பொருந்திய விடையேற்றின் மேல் ஏறி, அழகிய சொற்களைப் பேசும் மகளிரே! பிச்சையிடுங்கள் என்று கேட்டுச் சென்ற சிவபிரானது கோயிலையுடையது, வளைந்த மூக்கினையுடைய கடற் சங்குகள் கடலினின்றும் அலை வழியாக அதில் பாயும் காவிரியோடு வந்து இரவின்கண் திடலில் ஏறித்தங்கிச் செழுமையான முத்துக்களை ஈன்று சஞ்சரிக்கும் திருவையாறாகும்.


பாடல் எண் : 03
கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பேராளர் மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலும் கோயில்
கொங்காளப் பொழில் நுழைந்து கூர்வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி
செங்கால் நல் வெண்குருகு பைங்கானல் இரைதேரும் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
சிறந்த பிரமன், திருமால் ஆகியோரின் முழு எலும்புக்கூட்டை அணிந்தவரும், கயிலாய மலையில் உறைபவரும், கானப்பேர் என்னும் தலத்தில் எழுந்தருளியவரும், மங்கை பங்கரும் முத்தலைச் சூலப்படை ஏந்தியவரும், விடை ஊர்தியை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய கோயிலை உடையது, சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளில் நுழைந்து கூரிய தம் அலகுகளால் தம் இறகுகளைக் கோதிக் குளிர் நீங்கிப் பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைகளைத் தேடும் திருவையாறாகும்.


பாடல் எண் : 04
ஊன் பாயும் உடைதலைக் கொண்டு ஊர் ஊரின் பலிக்கு உழல்வார் உமையாள் பங்கர்
தான் பாயும் விடையேறும் சங்கரனார் தழலுருவர் தங்கும் கோயில்
மான் பாய வயலருகே மரமேறி மந்தி பாய் மடுக்கள் தோறும்
தேன் பாய மீன்பாயச் செழுங்கமலமொட்டு அலரும் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
புலால் பொருந்தியதாய், முடை நாற்றமுடைத்தாய் உள்ள தலையோட்டைக் கையில் ஏந்தி, ஊர்கள்தோறும் பலியேற்று உழல்பவரும், உமை பாகரும், பாய்ந்து செல்லும் விடையேற்றை உடையவரும், நன்மைகளைச் செய்வதால் சங்கரன் என்ற பெயரை உடையவரும், தழல் உருவினருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, மான் துள்ளித் திரிய, வயலருகே உள்ள மரங்களில் ஏறி மந்திகள் பாய்வதால் மடுக்களில் தேன்பாய, அதனால் மீன்கள் துள்ளவும் செழுமையான தாமரை மொட்டுக்கள் அலரவும், விளங்குவதாகிய திருவையாறாகும்.


பாடல் எண் : 05
நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றைத்
தாரோடு தண்கரந்தை சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில் 
காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ் தார் வீதித்
தேரோடும் அரங்கேறி சேயிழையார் நடம் பயிலும் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
கங்கை நதி, வில்வம், பிறைமதி, வெள்ளெருக்கு, கொன்றை மலர் நிறைந்த மாலை, குளிர்ந்த கரந்தை ஆகியவற்றைச் சடையின்கண் அணிந்த தத்துவனாகிய சிவபிரான் தங்கியுள்ள கோயிலையுடையது, மேக மண்டலம் வரை உயர்ந்து சென்று வானத்தை அளந்து மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்ததும், மணம் வீசும் வீடுகளை உடைய தேரோடும் வீதிகளில் அரங்குகளில் ஏறி அணிகலன்கள் புனைந்த இளம் பெண்கள் நடனம் ஆடுவதுமாகிய திருவையாறாகும்.


பாடல் எண் : 06
வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்
காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார் வீதித்
தேம் தாம் என்று அரங்கேறிச் சேயிழையார் நடமாடும் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
காட்டும் வள்ளலாய், மணங்கமழும் கொன்றை மாலையைச் சடையின்மிசை அணிந்தவனாய் புண்ணிய வடிவினனாய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, மகளிர் காந்தாரப் பண்ணமைத்து இசைபாட அழகிய வீதிகளில் அமைந்த அரங்கங்களில் ஏறி அணிகலன்கள் பூண்ட இளம் பெண்கள் தேம், தாம் என்ற ஒலிக் குறிப்போடு நடனம் ஆடும் திருவையாறாகும்.


பாடல் எண் : 07
நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கி வரும் புரமூன்றும் நீள்வாய் அம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோயில்
குன்றெலாம் குயில் கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு கண்வளரும் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
நீண்ட வானவெளியில் நின்று உலவி, தேவர்கள் வாழ்விடங்களை அழித்து வந்த முப்புரங்களையும், நீண்ட கூரிய அம்பு சென்று உலவும் படி கணை தொடுத்த வில்லாளியும், கயிலை மலை ஆளியுமாகிய சிவபிரான் சேர்ந்துறையும் கோயிலையுடையது, சிறுமலைகளில் குயில்கள் கூவவும், செழுமையான தேன் நிறைந்த மலர்களைத் தீண்டி மணம் மிகுந்து வருவதாகிய தென்றல் காற்று அடிவருடவும், அவற்றால் செழுமையான கரும்புகள் கண் வளரும் வளமுடைய திருவையாறாகும்.


பாடல் எண் : 08
அஞ்சாதே கயிலாய மலையெடுத்த அரக்கர்கோன் தலைகள் பத்தும்
மஞ்சாடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம் வீழ இளமேதி இரிந்து அங்கு ஓடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல் படியும் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
அஞ்சாமல் கயிலை மலையை எடுத்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தையும் வலிமை பொருந்திய அவன் தோள்களோடு நெரியுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் புரிந்த சிவபிரான் எழுந்தருளிய கோயிலை உடையது. இனிய தோற்றத்தையுடைய இளந்தென்னையில் காய்த்த நெற்று விழ, அதனைக் கண்டு அஞ்சிய எருமை இளங்கன்று அஞ்சி ஓடி செந்நெற் கதிர்களைக் காலால் மிதித்துச் செழுமையான தாமரைகள் களையாகப் பூத்த வயல்களில் படியும் திருவையாறாகும்.


பாடல் எண் : 09
மேலோடி விசும்பணவி வியனிலத்தை மிக அகழ்ந்து மிக்கு நாடும்
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாட குவிமுலையார் முகத்தில் நின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
அன்னமாய் மேலே பறந்து சென்று வானத்தைக் கலந்தும், அகன்ற நிலத்தை ஆழமாக அகழ்ந்தும் முயற்சியோடு தேடிய நான்முகன், திருமால் ஆகியோர் அறிய முடியாதவாறு ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் கோயிலையுடையது, கூத்தர்கள் கையில் வைத்து ஆட்டும் அபிநயக் கோலுடன் திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாட, திரண்ட தனங்களையுடைய அச்சேயிழையார் முகத்தில் கண்களாகிய சேல்மீன்கள் பிறழவும், வில் போன்ற புருவங்கள் மேலும் கீழும் செல்லவும், நடனமாடும் திருவையாறாகும்.


பாடல் எண் : 10
குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணமொன்றில்லா
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவித் தொண்டீர்
எண்டோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில்
செண்டாடு புனல் பொன்னிச் செழுமணிகள் வந்து அலைக்கும் திருவையாறே.

பாடல் விளக்கம்‬:
இழிசெயல்களில் ஈடுபடுவோராய்ச் சிறிய ஆடையினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத சொற்களையும், வஞ்சனை பொருந்திய உரைகளையும், கேளாமல், தொண்டர்களே! நீவிர் சிவபிரானை அடைந்து அவருக்கு ஆட்படுவீர்களாக. எட்டுத் தோள்களையும், முக்குணங்களையும் உடைய எம் ஈசனாகிய இறைவன் இனிதாக எழுந்தருளியிருக்கும் கோயிலையுடையது, பூக்களைச் செண்டுகள் போல் உருட்டி ஆட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த காவிரி செழுமையான மணிகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவையாறு என்னும் தலமாகும்.


பாடல் எண் : 11
அன்னமலி பொழில் புடைசூழ் ஐயாற்று எம்பெருமானை அந்தண் காழி
மன்னியசீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல் 
இன்னிசையால் இவைபத்தும் இசையுங்கால் ஈசனடி ஏத்துவார்கள்
தன்னிசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார் தாழாதன்றே.

பாடல் விளக்கம்‬:
அன்னப் பறவைகள் நிறைந்த பொழில்கள் புடை சூழ்ந்து விளங்கும் திருவையாற்றுப் பெருமானை, அழகிய தண்மையான சீகாழிப்பதியில் வாழும் சிறப்பு மிக்க, வேதங்கள் பயிலும் நாவினன் ஆகிய புகழ் வளரும் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்களாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி, ஈசனடியை ஏத்துபவர்கள் புகழோடு தவநெறியின் பயனாக விளங்கும் அமரர் உலகத்தைத் தாழாமல் பெறுவர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

1 கருத்து: