புதன், 11 மே, 2016

நலம் தரும் திருப்பதிகம் 01 திருஆலவாய்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கலிங்கப்பெருமான், ஸ்ரீ சோம சுந்தரேஸ்வரர் 

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அங்கயற்கண்ணி, ஸ்ரீ மீனாட்சிதேவி 

திருமுறை : மூன்றாம் திருமுறை 51 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம்

பாடல் எண் : 01
செய்யனே திருஆலவாய் மேவிய
ஐயனே அஞ்சல் என்று அருள்செய் எனைப்
பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று பாண்டியற்கு ஆகவே.

நடுநிலைமை உடையவரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரே! என்னை அஞ்சேல் என்று அருள் செய்வீராக. பொய்யராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு மெல்லச் சென்று பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.


பாடல் எண் : 02
சித்தனே திருஆலவாய் மேவிய
அத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை
எத்தராம் அமணர் கொளுவும் சுடர்
பத்திமன் தென்னன் பாண்டியற்கு ஆகவே.

எல்லாம் வல்ல சித்தரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளிய தலைவரே! என்னை அஞ்சேல் என்று அருள் செய்வீராக. ஏமாற்றித் திரிவோராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு ஆருக மதத்தில் பக்தியுடையோனாகிய பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.


பாடல் எண் : 03
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே அஞ்சல் என்று அருள்செய் எனை
எக்கராம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே.

சிவனை மதியாது தக்கன் செய்த வேள்வியைச் சிதைத்த திருஆலவாய்ச் சொக்கரே! என்னை அஞ்சேல் என்று அருள்புரிவீராக. இறுமாப்புடைய சமணர்கள் இம்மடத்திற்குப் பற்ற வைத்த நெருப்பு அத்தகையோர் பக்கமே சார்ந்து பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.


பாடல் எண் : 04
சிட்டனே திருஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே அஞ்சல் என்று அருள்
துட்டராம் அமணர் கொளுவும் சுடர்
பட்டிமன் தென்னன் பாண்டியற்கு ஆகவே.

நீதிநெறி தவறாதவரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அட்டமூர்த்தி வடிவானவரே! என்னை அஞ்சேல் என்று அருள்புரிவீராக! கொடியவரான அமணர் இம்மடத்தில் பற்ற வைத்த நெருப்பு கல்வியறிவுடையோனாகிய பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.


பாடல் எண் : 05
நண்ணலார் புரமூன்று எரி ஆலவாய்
அண்ணலே அஞ்சல் என்று அருள்செய் எனை
எண்ணிலா அமணர் கொளுவும் சுடர்
பண்ணியல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே.

பகையசுரர்களின் திரிபுரங்களை எரித்த திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே! என்னை அஞ்சேல் என்று அருள்செய்வீராக. சிந்திக்கும் திறனில்லாத சமணர்கள் இம்மடத்தைக் கொளுத்திய நெருப்பானது பண்ணிசையோடு தமிழ் வழங்கும் பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.


பாடல் எண் : 06
தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேனையும்
அஞ்சல் என்று அருள் ஆலவாய் அண்ணலே
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே.

திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே! அபயம் என்று உம்முடைய திருவடிகளைச் சரணம் அடைந்த அடியேனையும் அஞ்சேல் என்று கூறி அருள்புரிவீராக. வஞ்சகம் செய்யும் சமணர்கள் இம்மடத்திற்கு வைத்த இந்த நெருப்பு, பஞ்சவன், தென்னன் முதலிய பெயர்களையுடைய பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.


பாடல் எண் : 07
செங்கண் வெள்விடையாய் திருஆலவாய்
அங்கணா அஞ்சல் என்று அருள்செய் எனை
கங்குலார் அமண்கையர் இடும் கனல்
பங்கமில் தென்னன் பாண்டியற்கு ஆகவே.

சிவந்த கண்களையுடைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அழகிய கண்களையுடைய சிவபெருமானே! அடியேனை அஞ்சேல் என்று அருள்செய்வீராக! இருள் மனம் கொண்ட சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பானது, உயிருக்குத் தீங்கு நேராதபடி பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.


பாடல் எண் : 08
தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை
ஏத்திலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே.

பிறன் மாதரை விரும்பிய தூர்த்தனாகிய இராவணனின் வீரத்தை அழித்துப்பின் அருள்செய்த திருஆலவாயில் வீற்றிருந்தருளும் பெருங்கருணையுடைய சிவபெருமானே! அடியேனை அஞ்சேல் என்று அருள்செய்வீராக! இறைவனைத் துதிக்கும் பேறு பெறாத சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பு, இப்பூவுலகை ஆளும் தென்னன் பாண்டியனைச் சென்று பற்றுவதாக!.


பாடல் எண் : 09
தாவினான் அயன்தான் அறியா வகை
மேவினாய் திருஆலவாயாய் அருள்
தூவிலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான் தென்னன் பாண்டியற்கு ஆகவே.

உலகத்தைத் தாவியளந்த திருமாலும், பிரமனும் அறிய முடியாதவாறு நெருப்பு மலையாய் ஓங்கி நின்ற திருஆலவாய் இறைவனே! அடியேனுக்கு அருள் புரிவீராக! நீராடாமையால் தூய்மையற்ற சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட இந்நெருப்பு இதற்குக் காரணமான பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக!.


பாடல் எண் : 10
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே அஞ்சல் என்று அருள்செய் எனை
குண்டராம் அமணர் கொளுவும் சுடர்
பண்டிமன் தென்னன் பாண்டியற்கு ஆகவே.

எட்டுத் திசைகளிலும் எழில் பரவும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும், அண்டங்களுக்கெல்லாம் நாயகனான சிவபெருமானே! அடியேனை அஞ்சேல் என்று அருள்புரிவீராக! சிறுமையுடைய சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பானது தொன்மையாக விளங்கும் பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.


பாடல் எண் : 11
அப்பன் ஆலவாய் ஆதி அருளினால்
வெப்பம் தென்னவன் மேலுற மேதினிக்கு
ஒப்ப ஞானசம்பந்தன் உரைபத்தும்
செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே. 

"எனக்குத் தந்தையாக விளங்கும் திருஆலவாய் ஆதிமூர்த்தியின் திருவருளால் சமணர்கள் இம்மடத்திற்கு வைத்த நெருப்பின் வெப்பமானது பாண்டிய மன்னனைப் பற்றுவதாக" என்று உலக நியதிக்கு ஏற்ற தன்மையில் ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் குற்றமற்ற செல்வர்களாகத் திகழ்வர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக