சனி, 28 மே, 2016

74 நம்பியாண்டார் நம்பி புராணம்

சிவ ஆலயங்களில் இன்றும் தேவாரம் ஒலிக்க காரணமாக இருந்தவர் நம்பியாண்டார் நம்பி. சைவ சமய பெரியவர்களில் ஒருவரான இவருக்கு சிறுவயதில் இறைவன் காட்சி அளித்து, அருளிய ஸ்தலமாக விளங்குவது திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவில்.


இக்கோவில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூரில் அமைந்துள்ளது. இக்கோவில் சிதம்பரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் – காட்டுமன்னார்கோவில் இடையே சிதம்பரத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலும், காட்டுமன்னார்கோவிலில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரின் மூன்று பதிகங்களும், அப்பர் பெருமானின் 2 பதிகங்களும் கொண்ட தலமாக உள்ளது. இந்த கோவிலில் இறைவன் பெயர் செளந்தரேஸ்வரர், இறைவி திரிபுரசுந்தரி. தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. 

இந்த தலத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக கோவிலில் அருள்பாலிப்பவர் பொல்லாப்பிள்ளையார். முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதை போல, விநாயகருக்கும் உண்டு. இதில் முதல் படை வீடாக இருப்பது திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவில். அதற்கு அடுத்தாற்போல, திருவண்ணாமலை, திருக்கடவூர், மதுரை, திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), காசி ஆகியவையாகும். விநாயகர் அறுபடை வீடுகளில் 2 கோவில்கள் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பாகும்.

பொல்லாப்பிள்ளையார் வரலாறு: பொல்லாப் பிள்ளையார் சன்னிதியில் பக்தியுடன் தினமும் பூஜித்து வந்தவர் ஆதிசைவர் மரபில் தோன்றிய அனந்தேச சிவாச்சாரியார். இவருடைய மனைவி கல்யாணி அம்மையார். இவர்களுக்கு மகனாக பிறந்தவர் நம்பியாண்டார் நம்பி. அனந்தேச சிவாச்சாரியார் தினமும் கோவிலுக்கு சென்று  இறைவனுக்கு பிரசாதத்தை நைவேத்தியம் வைத்து விட்டு வீடு திரும்புவாராம். அப்போது, அவரிடம் சிறுவன் நம்பி எங்கே பிரசாதம் என்று கேட்கும் போது, விநாயகர் சாப்பிட்டு விட்டார் என்று அனந்தேசர் கூறினாராம். இதை சிறுவதிலேயே நம்பியாண்டார் நம்பி உண்மையாக கருதினார். 

இந்த நிலையில், ஒரு சமயத்தில் தந்தை வெளியூர் சென்றதால், அவர் வழியை பின்பற்றி, சிறுவன் நம்பி கோவிலுக்கு சென்று பக்தியுடன் பூஜை செய்துவிட்டு, தாயார் கொடுத்த நைவேத்தியத்தை பிள்ளையார் முன்பு வைத்து விநாயகப் பெருமானை சாப்பிடும் படி வேண்டினார். ஆனால், பிள்ளையார் சாப்பிடவில்லை. இதில் ஏதோ தவறு இருக்கும் என அஞ்சிய நம்பி, வேதனையுடன் அழுது புரண்டு, பிள்ளையாரை சாப்பிட சொல்லி தன்னுடைய தலையை கருங்கல்லில் முட்டி மோதி கொண்டாராம். 


அப்போது, பிள்ளையார் சிறுவன் முன்தோன்றி, கல்லால் தலையில் முட்டிய நம்பியை தம் திருக்கரத்தால் (தும்பிக்கை) தாங்கி தடுத்தருளினாராம். அதன்பின், பிள்ளையார் துதிக்கையை வலப்புறமாக நீட்டி அந்த நைவேத்தியத்தை சாப்பிட்டார். இதில் மகிழ்ந்த நம்பி நடந்த விஷயத்தை தன் தாயிடம் கூறினார். ஆனால், அதை அவர் நம்பவில்லை. மறுநாள் நம்பியின் தந்தை மறைந்திருந்து பார்க்க மீண்டும் அதே அற்புதம் நடைபெற்றது. இதை கண்டு மெய்சிலிர்த்த அனந்தேசர், தன்னுடைய மகனை கட்டித்தழுவி, இறைவனை கும்பிட்டாராம்.

இதையடுத்து, பிள்ளையாருக்கும், நம்பிக்கும் இடையே நாளுக்கு, நாள் நெருக்கம் அதிகரித்தது. இதன் விளைவாக நம்பியாண்டார் நம்பிக்கு எல்லா கலைகளும் கிடைக்க பெற்றது. தொடர்ந்து, அவர் பல திருமுறைகளையும், பாடல்களையும் பாடினார். திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை, திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை ஆகியன 11–ம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்தி பாடியவையாகும்.


இந்த செய்தி காட்டு தீப்போல பிரபஞ்சம் முழுவதும் பரவியது. இதையறிந்த ராஜராஜ சோழன், நம்பியாண்டார் நம்பியை சந்தித்து, திருமுறைகளை தொகுக்க வேண்டினாராம். தொடர்ந்து, இருவரும் சேர்ந்து பொல்லாப்பிள்ளையாரிடம் சைவ திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றை தொகுக்கும் மாபெரும் பணியை முடிக்க வேண்டும் என்று வேண்டினார்களாம். சிதம்பரம் கோவிலுக்கு வடமேற்கு மூலையில் உள்ளது என்று பிள்ளையார் அருளினார். இதையடுத்து, அங்கு சென்ற ராஜராஜசோழன் பூட்டி கிடந்த அறையை திறக்க அந்தணர்களை வேண்டினார். உரியோர் வந்தால் திறப்போம் என்று அந்தணர்கள் கூறினர். 

இதையடுத்து, சைவர் மூவர் சிலைகளை வடித்து நன்கு பூஜித்துவிட்டு திருமுறை சுவடிகள் இருந்த அறையை திறக்க செய்தாராம் ராஜராஜ சோழன். அப்போது, அந்த அறையில் பனை ஓலைகளில் எழுதப்பட்ட பதிகங்கள் கரையான் புற்றால் மூடப்பட்டிருந்தது. இதில் எண்ணெயை குடம், குடமாக ஊற்றி கரையானை போக்கி கண்டெடுத்த பதிகங்கள் மொத்தம் 796 ஆகும். இதில் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்கள் 384, திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் 312, சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் 100. 


இங்குள்ள பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்பாக தோன்றிய காரணத்தால் பொல்லாப் பிள்ளையார் என்றும், அதுவே நாளடைவில் மருவி தற்போது பொல்லாப்பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் அருள்பாலிக்கும் சவுந்தரேஸ்வரருக்கும் வரலாறு உண்டு. அதாவது, துர்வாச முனிவர் ஈசனை நோக்கி தவம் புரிந்தார். அப்போது, ஆகாய மார்க்கமாக கந்தவர்கள் (அரக்கன்) சிலர் பறந்து சென்றார்கள். அவர்களில் தேவதத்தன் என்னும் கந்தர்வன் பழங்களை சாப்பிட்டு விட்டு, அதன் கொட்டைகளை கீழே போட, அவை அந்த முனிவரின் மேல் விழுந்து தவம் கலையசெய்தது. இதில் கடும் கோபமடைந்த முனிவர், அந்த கந்தர்வனை, நாரையாக போக சபித்தார். அதன்விளைவாக அந்த கந்தர்வன், நாரையாக மாறினான். இதில் தவறை உணர்ந்த அந்த நாரை அதே முனிவரிடம் சாபவிமோசனத்திற்கு வேண்டியதாம். 

இதற்கு அந்த முனிவர், இந்த ஸ்தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு தினமும் கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகம் செய்தால், உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறினார். இதையடுத்து, அந்த நாரை தினமும் இறைவனுக்கு நீரை அபிஷேகம் செய்து பூஜித்து வந்தது. இந்த நிலையில், ஒருநாள் சிவபெருமான் அந்த நாரையை சோதிக்க விரும்பினாராம். அதன்படி, நாரை வரும் வழியில் மழை, புயல் வீச செய்தாராம். இதில் நாரை பறக்க முடியாமல் தவித்து, அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக காற்றில் பிய்ந்து விழுந்தன. அவ்வாறு சிறகுகள் விழுந்த இடம் சிறகிழந்த நல்லூர் என்று வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊர் இப்போதும், திருநாரையூரில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

சிறகே இல்லாத நாரை தவழ்ந்து வந்து சிவனை வழிபட்டு மோட்சம் பெற்றது. அதனால், இந்த ஊர் திருநாரையூர் என்று அழைக்கப்படுகிறது. நாரைக்கு அருள் செய்த ஸ்தலத்து இறைவன் சுயம்பு வடிவாக தோன்றியவர் என்று வரலாறு உண்டு. 

கோவில் அமைப்பும், திருவிழாவும்: இந்த கோவில் 3 கோபுரங்களை கொண்டது. கோவிலில் நுழைந்தவுடன் நேர் எதிரே சவுந்தரேஸ்வரர் சன்னிதியும், இடது புறத்தில் விநாயகரும், நந்தி மண்டபமும் உள்ளன. சுவாமி சன்னிதி மகா மண்டபத்தில் உற்சவமூர்த்திகளும், சோபன மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜர் சன்னிதியும், சுவாமி சன்னிதியின் வெளிப்புறம் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய சாமிகளும் உள்ளனர். நடராஜர் சன்னிதிக்கு நேர் எதிரே சந்தானாச்சாரியார்கள், சமயாச்சாரியார்கள் சன்னிதியும், பொல்லாப் பிள்ளையார் மகா மண்டபத்தில் நம்பியாண்டார் நம்பியும், ராஜராஜ சோழனும் காட்சி தருகிறார்கள். 

பிரகாரத்தின் மேற்கே சுப்பிரமணியர் சன்னதியும், வடமேற்கில் கெஜலட்சுமி சன்னிதியும், வடக்கு பிரகாரத்தில் திருமூலநாதர் சன்னிதியும், சண்டிகேஸ்வரர் சன்னிதியும், தல விருட்சமான புன்னை மரமும் உள்ளது. கோவில் மகா மண்டபத்தில் பள்ளி அறை உள்ளது. கோவில் வெளிபிரகாரத்தின் வடகிழக்கில் திரிபுரசுந்தரி அம்மன் சன்னிதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது. 

கோவிலுக்கு வெளியே சற்று தொலைவில் நம்பியாண்டார் நம்பி சிற்ப வடிவில் அருள்பாலிக்கிறார். மேலும், இக்கோவிலில் கி.பி.11–ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட கல்வெட்டுகளும் உள்ளன. 

பிரசித்தி பெற்ற இக்கோவில் தினமும் காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும்  திறந்திருக்கும். இக்கோவிலில் தினசரி ஐந்து கால பூஜைகள் நடைபெறுகிறது. இங்கு சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கிருத்திகை, ஐப்பசி கந்தர் சஷ்டி விழா, பிரதோஷம், மகா சிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திங்கட்கிழமை வரும் புனர்பூச நட்சத்திரத்தில் நம்பியாண்டார் நம்பிக்கு குரு பூஜை விழாவும் நடைபெறுகிறது. நாரை முக்தி அடைந்த வைகாசி விசாகம் அன்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. கோவிலில் ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 

சைவத் திருமுறைகளை நிலைநாட்டிய பொல்லாப் பிள்ளையாரை நாமும் வணங்கி அருள்பெறுவோம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

1 கருத்து: