செவ்வாய், 26 டிசம்பர், 2017

மார்கழி உற்சவம் 15

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை



பாடல் எண் : 15
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தம் களி கூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
அழகிய மார்பு கச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே! நம் தோழி எம்பெருமானே என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள். மனம் மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப் பேசுவதால் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். அவள் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப் பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து பாடுவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.

தத்துவ விளக்கம்:
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவரின் நிலையான –  எல்லாப் புலன்களும் அவனை நோக்கியே நகர்ந்து போகும் பித்தான நிலை –  எப்படி இருக்கும் என்பதை, இங்கு மாணிக்கவாசகர் காட்டுகிறார்.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை



பாசுரம் 15
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயானை பாடலோர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.

உடனே தோழிகள், உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர். அப்போது அவள், சரி.. சரி... எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள். அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள். தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக் கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.

ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு பேசக்கற்றுத்தரவா வேண்டும்! இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.

அடியார்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கும் கூட்டத்தைக் காணவேண்டும் என்று ஆசைப்படுகிறவள் ஓர் ஆயர்மகள். அப்படிப்பட்டவளை இப்பாசுரத்தில் எழுப்புகிறார்கள் தோழியர்கள். ஏனைய பாசுரங்கள் போல் இல்லாமல் இந்தப் பாசுரம் உரையாடல் நடையில் அமைந்துள்ளது. தோழியர்கள் இவளுடைய வீட்டுக்கு வரும்போது, இவள் இனிய குரலில் கண்ணனைப் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். வந்தவர்கள் வந்த நோக்கத்தை மறந்து இவளுடைய அழகிலும் இசையிலும் மனதைப் பறிகொடுத்து, "எல்லே இளங்கிளியே!" என்று புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் வேளையில், தோழியர் எழுப்புவது தன் செயலுக்கு இடையூறு என்று நினைத்த அப்பெண் "சில்" என்று அழைக்காதீர்கள்! நங்கைமீர்! இதோ வந்துகொண்டிருக்கிறேன் என்று சினத்துடன் பதில் கூறினாள்.

இவள் கூறியதைக் கேட்ட தோழியர், "நீ இவ்வாறு கடுமையாகப் பேசுவாய் என்பது எங்களுக்கு வெகுநாள்களாகவே தெரியும்' என்றார்கள். கடுமையாகப் பேசுவதில் நீங்களே வல்லவர்கள் என்று மிகக் கடுமையாகச் சொன்ன ஆயர்மகள், அடியார்களோடு வாதிடக்கூடாது என்று கூறப்படுவதால் கடுமையைக் குறைத்துக்கொண்டு, "நானே பேச்சில் வல்லவளாக இருந்துவிட்டுப் போகிறேன்" என்று கூறி அடங்கிவிட்டாள். அப்படியாகில் "எங்களோடு சேர்வதைவிட நீ என்ன பெரிய வாய்ப்பை எதிர்பார்க்கிறாய்! விரைவாக வந்துசேர்" என்றார்கள் தோழியர்கள். எல்லாரும் வந்தனரா? என்றாள் படுத்திருப்பவள். வந்துவிட்டனர் நீ வந்து ஒவ்வொருவராக எண்ணிப் பார்த்துக்கொள்! வலிமை மிக்க குவலயாபீடம் என்கிற யானையை அழித்தவனும், பகைவர்களின் பகையை நீக்கவல்லவனும் முதலில் கோபியர்களுக்குத் தோற்று, பிறகு அவர்களைத் தோற்கடிப்பவனுமாகிய மாயனைப் பாட எழுந்துவாராய் என்று அழைக்கிறார்கள்.

குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக