ஞாயிறு, 17 டிசம்பர், 2017

மார்கழி உற்சவம் 03

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை



பாடல் எண் : 03
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிர் எழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்து உன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள். தூங்கிக் கொண்டிருந்த தோழி, ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும் பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள். வந்த தோழியர் அவளிடம், அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.

தத்துவ விளக்கம்:
ஈசன் மீது நோக்கம் இருந்தபோதும், பலவீனமான மனதினால், மாயைக்கு ஆட்பட்டு, சோம்பலுற்றுக் கிடக்கும் தன்மையச் சுட்டிக் காட்டுகிறார் மாணிக்கவாசகர்.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை



பாசுரம் : 03
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.

திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர் (விழுப்புரம் மாவட்டம்) உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.

மாதம் மும்மாரிப் பெய்து நாடெல்லாம் ஷேமமாக இருக்க வேண்டும் என்று ஆண்டாள் ஆசைப்படுகிறாள். நோன்பு நோற்கிறவர்கள் ஓங்கி உலகளந்த உத்தமனாகிற திரிவிக்கிரமனின் பெயரை (அஷ்டாக்ஷர மஹாமந்திரத்தை) சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு நோன்பு நோற்றால் மாதத்திற்கு மூன்று மழை பொழியும். ஒருநாள் மழை பெய்து அத்தண்ணீர் பூமியில் ஒன்பது நாள் ஊற வேண்டும். அவ்வாறு மழை பொழிந்தால் நாட்டில் எந்தத் தீமையும் ஏற்படாது. வயல்களில் யானை போல் பருத்திருக்கும் கயல் மீன்கள் பயிர்களின் நடுவே செல்ல முடியாமல் மேலே துள்ளி எழுந்து மற்றோரிடத்தில் விழும். வயல்களில் தேங்கி இருக்கும் தண்ணீரில் குவளை மலர்கள் பூத்து மலர்ந்திருக்கும். தேனைப் பருகும் வண்டுகள் அந்த மலர்களிலுள்ள தேனைப் பருகிக்கொண்டே மயங்கி உறங்கும். திருவேங்கடமலைபோல் இருக்கும் பசுக்கள் உள்ள இடத்திற்குத் தயங்காமல் சென்று பால் கறக்கத் தொடங்கினால், வள்ளல் போன்ற பசுக்கள் குடம் குடமாகப் பாலைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். இவ்வாறு வளம் பெருகி நீங்காத செல்வம் நிறைந்திருக்கும் திருமந்திரத்தைச் சொல்லி, பகவானைப் பாடினால் திருவாய்ப்பாடியில் நீர்வளம், நிலவளம், பால்வளம் எல்லாம் பெருகும். லக்ஷ்மிகடாக்ஷம் பெருகி நிலைத்திருக்கும். பகவானின் திருப்பெயர் எதைத்தான் தராது? எல்லாவற்றையும் கொடுக்கும் என்கிறாள் ஆண்டாள். 

குறிப்பு : பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக