செவ்வாய், 26 டிசம்பர், 2017

மார்கழி உற்சவம் 14

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை



பாடல் எண் : 14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம் பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம் பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி ஆடேலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
ஆண்கள் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் ஆட, அவர்களின் தங்க நகைகள் ஆட, பெண்களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம்பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லி நீராடுங்கள். ஜோதி வடிவாய் திருவண்ணாமலையிலே காட்சி தரும் அந்த சிவனின் மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம் சொல்லுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழைப் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் வளையல்கள் அணிந்த தாயுமானவாய் விளங்கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி நீராடுங்கள்.

தத்துவ விளக்கம்:
வேதமாகவும், வேதத்தின் உட்பொருளாகவும், முதலாகவும், முடிவாகவும் உள்ள அவன் தாள் வணங்கி, அறியாமை இருளில் இருந்து வெளியேற வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர்.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை



பாசுரம் 14
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்டகிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே! 

கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது. வாக்கு கொடுப்பது மிக எளிது. அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும். வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள். நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

எல்லோருக்கும் முன்னதாகவே தான் எழுந்திருந்து எங்களை எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, எல்லோரும் வந்து எழுப்பும்படி படுத்திருக்கும் ஓர் ஆயர் மகளை நங்காய்! நாணாதாய்! என்றெல்லாம் சொல்லி எழுப்புகிறார்கள் தோழியர்கள். கதிரவன் தோன்றியதும் செங்கழுநீர் மலர் மலர்ந்து, ஆம்பல் வாய் மூடிக் கொள்வதை ஓரிடத்தில் பார்த்த பெண்கள், அதையே அனுமான ப்ரமாணமாகக் கொண்டு, உங்கள் வீட்டுப் புழக்கடையில் உள்ள வாவியில், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின என்றும், செங்கற் பொடியின் நிறத்தைப் போன்று செந்நிறமுடைய ஆடையை அணிந்த துறவியர் சத்துவகுணம் நிறைந்த விடியற்காலையை உணர்த்துவதற்காகச் சங்கு ஒலிக்கத் தாங்கள் தங்கள் கோயிலுக்குச் சென்றுவிட்டார்கள். 

குறிப்பு : இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக