செவ்வாய், 27 டிசம்பர், 2016

ஸ்ரீ ஆஞ்சநேயர் கவசம்


அஞ்சனை மைந்தன் அனுமனை போற்ற
நெஞ்சினில் வரும் பலம்
வஞ்சனை தீர்க்கும் வாயுவின் மகனால் 
வல்வினை தீரும் நிஜம்

சீரஞ்சீவி அனுமன் என் சிரசினை காக்க
ஸ்ரீ ராம பக்தன் என் சீர் சடை காக்க
நெறி மேவி நின்றவன் என் நெற்றியை காக்க
புவியினில் நீண்டவன் என் புருவங்கள் காக்க

இமயத்தில் நிற்பவன் என் இமைகளைக் காக்க
சமயத்தில் வந்தெனை சடுதியாய் காக்க
வீரத்தின் வீரன் என் விழிகளை காக்க
வீசிடும் காற்றோன் என் விழி மூடி காக்க

நாரணப் பிரியன் என் நாசியை காக்க
காரணப் பொருளே என் காலமே காக்க
முழுஞானம் கொண்டவன் என் மூக்கினை காக்க
முன்நின்ற வானரன் என் வாயினை காக்க

வெற்றிலை பிரியன் என் வெற்றியை காக்க
பற்றியே வந்தெனை பற்றுடன் காக்க
பல் நலம் கொண்டவன் என் பற்களைக் காக்க
நல் மனம் கொண்டவன் என் நாவினைக் காக்க

நாடியே வந்தவன் என் நாடியை காக்க
தேடியே வந்தென்னை தேவனே காக்க
கரிமலை கடந்தவன்-என் கன்னங்கள் காக்க
கடுகதியில் வந்தென் கழுத்தினை காக்க

கையிலையின் வாசன் என் கைகால்கள் காக்க
கதிரொளியாய் வந்து கருணையாய்க் காக்க
நல்லன செய்பவன் என் நகங்களைக் காக்க
அல்லனதீர்ப்பவன் என் அகம் தனை காக்க

நெடு மேனியானவன் என் நெஞ்சினைக் காக்க
சுடுமேனி யாய் வந்த சூட்சுமம் காக்க
இடுக்கண் கழைபன் என் இடுப்பினை காக்க
இரு கண்ணின் மணிகளை இருட்டிலும் காக்க

தோழமை கொண்டவன் என் தோழ்களை காக்க
தோன்றிய புகழவன் என் தோலினைக் காக்க
குரங்கினத் தவைவன் என் குறியினைக் காக்க
குருவாகி வந்து என் குருதியை காக்க

திசையெலாம் திரிந்தவன் என் தசையினை காக்க
விசையெனப் பாய்ந்து என் செவிகளை காக்க
நடுவாகி நின்று என் முதுகினை காக்க
நவின்றிடும் தேவன் என் நரம்புகள் காக்க

ஒன்பது வாசலை ஓப்பிலா காக்க
புண்படா வண்ணமே புவனமே காக்க
இளமையும் முதுமையும் இனியவா காக்க
இரவிலும் பகலிலும் என்றும் நீ காக்க

உலகத்தின் நாயகன் என் உயிரினைக் காக்க
கலகத்தில் இருந்தென்னை கதி தந்து காக்க
நிலையற்ற வாழ்வினில் நிமலனார் காக்க 
சிலையற் இருந்தென்னை சீலனார் காக்க

இராமனின் பக்தன் என் இதயத்தை காக்க
சுக்ரீவன் தோழன் என் சுவாசத்தை காக்க
உடல் உள்ளம் என்றுமே உறுதியாய் காக்க
கடல்தாண்டி வந்தவன் என் குடல்களைக் காக்க

வளமிக்க வாழ்வினை வளத்துடன் காக்க 
வாழையடி வாழையாய் வாழ்திடக் காக்க
எம்மை எந்நாளும் உன் நிழலினில் காக்க
இம்மையிலும் மறுமையிலும் ஈடிலா காக்க

நோய் நொடிகள் வாராமல் நொடியினில் காக்க
தாய் மடியில் தவழ்ந்தயென் மேனியை காக்க
நவகோளின் தோசங்கள் நீக்கி நீ காக்க
தவக்கோலம் கொண்டவன் தரணியை காக்க

தீராத நோய்களைத் தீர்த்து நீ காக்க
வாராத செல்வங்கள் வந்திடக் காக்க
ஈரேழு புவனத்து உறவுகள் காக்க
பாராளும் மன்னர்கள் நட்புகொள் காக்க

பஞ்ச பூதங்கள் எனை பகைக்காது காக்க
வஞ்சங்கள் இல்லாது மனம் தனை காக்க
பில்லி பேய் சூன்யங்கள் அணுகாது காக்க
பிள்ளை என்றன்பாய் பிரியமாய் காக்க

அரக்கர்கள் பூதங்கள் அண்டாமல் காக்க
இரக்கமறு மாந்தர்கள் பகை இன்றி காக்க
சிறை சென்று வாடாமல் சீருடன் காக்க
மறையெலாம் போற்றும் உன் பொன்னடிகள் காக்க

இல்லாமை நீக்கி எனை இறைவா நீ காக்க
நில்லாத பசி எனை அண்டாது காக்க
கடன் தொல்லை தீர்த்தெனை கருணையே காக்க
கலியுகக் கொடுமைகள் கழிந்திடக் காக்க

செய்தொழில் கருமங்கள் செய்வதை காக்க
மெய் வருந்தாமல் எனை மேன்மையாய்க் காக்க
புலத்திலும் நிலத்திலும் புகழனார் காக்க
தலத்திலே வந்து உன் தனையனை காக்க

கொடுவிச யந்துக்கள் கொட்டாது காக்க
கொடுமைகொள் நுண்ணுயிர் வாட்டாது காக்க
வானமும் வையமும் வளம் பெறக் காக்க
தானமும் தர்மமும் தழைத்திடக் காக்க

நல்லோர்கள் உறவுகள் நலிவின்றி காக்க
வல்லோரும் எனை கண்டு வணங்கிட காக்க
கனவிலும் நனவிலும் கருத்துடன் காக்க உன் 
நினைவுகள் நீங்காது நிலைபெறக் காக்க

மானத்தில் பங்கங்கள் நேராது காக்க
ஊனத்தில் துவண்டிங்கு வாடாது காக்க
நீள் ஆயுள் நிறைசெல்வம் தந்தெனை காக்க
வால் கொண்ட மணியினால் வந்தென்னை காக்க

மரணத்தின் வாசலில் மாருதி காக்க
சரணத்தை தந்தெனை மரணத்தில் காக்க
பிறவிப் பிணியதை தீர்த்து நீ காக்க
பிறவாமை தந்தெனை பிரியாமல் காக்க

முனிவரும் தேவரும் எனக் அருள் செய்ய
பனிதரும் திங்களின் மூலனே காக்க
இனிவருங் காலங்கள் இனித்திட காக்க
பிணிவருந்தாமல் என் துணிவினை காக்க

பார்க்க நீ பார்க்க பாவங்கள் போக்க
தீர்க்க நீ தீர்க்க தீ வினைகள் தீர்க்க
வார்க்க நீ வார்க்க உன் அருளினை வார்க்க
காக்க நீ காக்க உன்கதி தந்து காக்க

ஆஞ்சநேயனே காக்க வாயுதேவனே காக்க
வீர அனுமனே காக்க ராம பக்தனே காக்க
ஸ்ரீ ராம பக்தனே காக்க காக்க.

குறிப்பு: இப்பாடலுக்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

தொகுப்பு : தில்லையம்பதி ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக