வியாழன், 6 டிசம்பர், 2018

திருவானைக்கா திருமுறை திருப்பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ நீர்த்தீரள்நாதர், ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அகிலாண்டநாயகி, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

திருமுறை : இரண்டாம் திருமுறை 023 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது.

யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் மற்றும் பூவும் கொண்டு வந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. 

இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வ ஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

திருவானைக்கா பஞ்சபூத ஸ்தலங்களில் அப்பு ஸ்தலம். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைபட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் அப்புலிங்கமாக காட்சி தருகிறார்.

திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள். அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

உஷத் காலத்தில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். மேலும் இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

பதிக வரலாறு : திருச்சிராப்பள்ளியினின்றும் புறப்பட்டுத் திருவானைக்காவை அடைந்த பெருமானார், அங்கு வெண்ணாவல் மேவிய மெய்ப்பொருளை வணங்கி, யானை வழிபட்டதையும் கோச்செங்கட்சோழ நாயனார் செய்த அடிமையையும் அமைத்துப் பாடிய பண்ணுறு செந்தமிழ் மாலை இது.

பாடல் எண் : 01
மழையார் மிடறா மழுவாள் உடையாய்
உழையார் கரவா உமையாள் கணவா
விழவாரும் வெண் நாவலின் மேவிய எம் 
அழகா எனும் ஆயிழையாள் அவளே.

பொருளுரை:
நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன் பூண்ட என் மகள், "மேகம் போன்ற கரிய மிடற்றினனே, மழுவாகிய படைக்கலனை உடையவனே, மான் ஏந்திய கரத்தினனே, உமையாள் கணவனே, விழாக்கள் பல நிகழும் வெண்ணாவல் ஈச்சுரம் என்னும் திருவானைக்காவில் மேவிய எம் அழகனே! அருள்புரி", என்று உன்னையே நினைந்து கூறுகின்றாள்.


பாடல் எண் : 02
கொலையார் கரியின் உரி மூடியனே
மலையார் சிலையா வளைவித்தவனே
விலையால் எனையாளும் வெண்நாவல் உளாய்
நிலையா அருளாய் எனும் நேரிழையே.

பொருளுரை:
அவயவங்கட்கு ஏற்ற அணிகலன்கள் பூண்ட என் மகள், "கொல்ல வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவனே, மலையை வில்லாக வளைத்தவனே, தன்னைத்தந்து என்னைக் கொள்ளும் விலையால் என்னை அடிமையாக ஆளும் வெண்ணாவல் என்னும் தலத்தில் விளங்குபவனே! நிலையாக என்னை ஆண்டருள்" எனக் கூறுகின்றாள்.


பாடல் எண் : 03
காலால் உயிர் காலனை வீடுசெய்தாய்
பாலோடு நெய் ஆடிய பால்வணனே 
வேலாடு கையாய் எம் வெண்நாவல் உளாய்
ஆலார் நிழலாய் எனும் ஆயிழையே.

பொருளுரை:
என் ஆயிழையாள், "காலால் காலன் உயிரைப் போக்கியவனே, பால், நெய் முதலியவற்றை ஆடும் பால்வண்ணனே, வேல் ஏந்திய கையனே, வெண்ணாவலின் கீழ் விளங்குபவனே கல்லால மரநிழலின் கீழ் வீற்றிருந்து அறம் அருளியவனே!" என்று பலவாறு கூறுகின்றாள். அருள்புரி.


பாடல் எண் : 04
சுறவக் கொடி கொண்டவன் நீறு அதுவாய் 
உற நெற்றி விழித்த எம் உத்தமனே
விறல் மிக்க கரிக்கு அருள் செய்தவனே
அறம் மிக்கது எனும் ஆயிழையே.

பொருளுரை:
என் ஆயிழையாள், "மீன் கொடியை உடைய மன் மதன் எரிந்து நீறாகுமாறு நுதல் விழியைத் திறந்த எங்கள் உத்தமனே, வலிமைமிக்க யானைக்கு அருள் செய்தவனே, நீ அருள் செயாதிருப்பதைக் கண்டு அறம் தவறுடையது" என்று கூறுவாள்.


பாடல் எண் : 05
செங்கண் பெயர் கொண்டவன் செம்பியர்கோன் 
அங்கட் கருணை பெரிதாயவனே
வெங்கண் விடையாய் எம் வெண்நாவல் உளாய்
அங்கத்து அயர்வு ஆயினள் ஆயிழையே.

பொருளுரை:
ஆராய்ந்து எடுத்த அணிகலன்களைப் பூண்ட என் மகள், "செங்கண்ணான் எனப் பெயர் பூண்ட சோழ மன்னனுக்கு அழகிய கண்களால் கருணை பெரிதாகப் புரிந்தருளியவனே, கொடிய கண்களை உடைய விடையூர்தியை உடையவனே, எமது வெண்ணாவல் என்னும் பெயரிய திருஆனைக்காக் கோயிலில் உறைபவனே!" என்று பலவாறு நைந்து கூறி உடல் சோர்வுற்றாள்.


பாடல் எண் : 06
குன்றே அமர்வாய் கொலையார் புலியின் 
தன் தோலுடையாய் சடையாய் பிறையாய்
வென்றாய் புரம் மூன்றை வெண்நாவலுளே
நின்றாய் அருளாய் எனும் நேரிழையே.

பொருளுரை:
தன் உடல் உறுப்பிற்கு ஏற்ற அணிகலன்களைப் பூண்ட என் மகள், "கயிலைமலையில் வீற்றிருப்பவனே, கொல்லும் தொழில் வல்ல புலியினது தோலை உடுத்தவனே, சடைமுடியினனே, பிறை சூடியவனே, முப்புரங்களை அழித்து அவற்றின் தலைவர்களை வென்றவனே, வெண்ணாவல் என்னும் தலத்துள் எழுந்தருளியவனே! அருளாய்!" என்று அரற்றுகின்றாள்.


இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.


பாடல் எண் : 08
மலை அன்று எடுத்த அரக்கன் முடிதோள்
தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா
விலையால் எனையாளும் வெண்நாவல் உளாய்
அலசாமல் நல்காய் எனும் ஆயிழையே.

பொருளுரை:
ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள், "கயிலை மலையை அன்று எடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியன அழியுமாறு கால் விரலை ஊன்றிய தூய மழுவாளனே! என்னைக் கொண்டு தன்னைத்தரும் விலையால் என்னை ஆண்டருளும் வெண்ணாவல் தலத்தில் வீற்றிருப்பவனே! என்னை அலைக்காமல் அருள்புரிவாய்" என்று கூறுகிறாள்.


பாடல் எண் : 09
திருவார் தரு நாரணன் நான்முகனும்
மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய் 
விரையாரும் வெண்நாவலுள் மேவிய எம் 
அரவா எனும் ஆயிழையாள் அவளே.

பொருளுரை:
ஆராய்ந்தெடுத்த அணிகளைப் பூண்ட என் மகள், "திருமகள் மார்பிடை மருவிய திருமாலும், நான்முகனும் அடிமுடி காண மருவி வெருவுமாறு அழலுருவாய் நிமிர்ந்தவனே, மணம் கமழும் வெண்ணாவலுள் மேவிய எம் அரவாபரணனே!" என்று கூறுகின்றாள்.


பாடல் எண் : 10
புத்தர் பலரோடு அமண் பொய்த்தவர்கள்
ஒத்த உரை சொலிவை ஓரகிலார்
மெய்த் தேவர் வணங்கும் வெண்நாவல் உளாய்
அத்தா அருளாய் எனும் ஆயிழையே.

பொருளுரை:
ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள் "புத்தர்கள் பலரோடு, பொய்யான தவத்தைப் புரியும் சமணர்கள், தமக்குள் ஒத்த உரைகளைக்கூறி உன்னை அறியாதவராயினர். உண்மைத் தேவர்கள் வந்து வணங்கும் வெண்ணாவலுள் வீற்றிருக்கும் இறைவனே, அத்தனே, அருளாய்" என்று கூறுவாள்.


பாடல் எண் : 11
வெண்நாவல் அமர்ந்து உறை வேதியனை
கண்ணார் கமழ் காழியர் தம் தலைவன்
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார் 
விண்ணோர் அவர் ஏத்த விரும்புவரே.

பொருளுரை:
வெண்ணாவலின் கீழ் அமர்ந்துறையும் வேதங்களை அருளிய இறைவனை, கண்களில் நிலைத்து நிற்பதும் மணம் கமழ்வதுமான சீகாழிப்பதிக்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன், பண்ணோடு பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லார் விண்ணோர்களால் ஏத்தி விரும்பப்படுபவர் ஆவர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக