திங்கள், 24 செப்டம்பர், 2018

ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல்

ஆறுமுகங்கள் கொண்டு ஸ்ரீ ஷண்முகர் என்று போற்றப்படும் முருகப் பெருமான் தீராத வினைகளைத் தீர்ப்பவன். துன்பங்கள், துயரங்களைப் போக்குபவன். பாம்பன் சுவாமிகள் இயற்றிய அவன் மீதான ஷண்முக கவசமும், பகை கடிதல் ஸ்லோகமும் தீராத வினைகளைத் தீர்க்கவல்லது.


"பகை கடிதல்" என்னும் "இந்தத் திருப்பத்தை காலை மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திருமயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர். படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். "ஏ! மயிலே! நீ இல்லாமல் முருகன் எங்கும் செல்ல மாட்டானாமே! சரி! உன்னையே அழைக்கிறேன்! நீ உடனே என் முருகனைக் கூட்டிக் கொண்டுவா!" என விரும்பி வேண்டிக் கேட்கும் வகையில், சந்தம் கமழத் திகழும் பதிகம் இது

பாடல் எண் : 01
திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே 
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே 
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே 
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

பொருளுரை:
தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே! பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே! அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! தவசிகள் வணங்கும் (தவ)மேனியனே! (அஞ்ஞான) இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானே என்று தியானிக்கும் என் எதிரில் பறவைகட்கெல்லாம் தலையாய மயிலே! உன் நாயகனைக் கொண்டு வருவாயாக!!!!! 


பாடல் எண் : 02
மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே 
பொறைமலி உலகுருவே புனநடை தரும் உருவே
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே 
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே. 

பொருளுரை:
வேதங்களால் துதிக்கப்படும் சிவபிரான் திருமுன்பிருந்தே மூல மந்திரப் பொருள் விரித்த குரு வடிவே!! பொறுமை நிறைந்த உலக உருவானவனே! வள்ளியம்மை இருந்த புனத்தில் நடந்த அழகனே! பெருமை மிக்க இளமையான திருமுகமுடையவனே என்று தியானிக்கும் என் எதிரில் எக்குறையினையும் நீக்கும் அழகிய மயிலே! உனது இறைவனைக் கொண்டு வருவாயாக!


பாடல் எண் : 03
இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே 
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே தடவரை அசைவுறவே
குதிதரும் ஒரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

பொருளுரை:
பல கீழ்மக்கள் போரிடும்படி இவ்வுலகில் வாழும் எனக்கெதிரில், புகழப்படும் மிகப்பல் சூரியர் (உதயமோ) என என்னும்படி ஒளிவளரும் திருவடியைத் தாங்கும் இடமென்ன (ஊர்தி என) மிகுந்த திறமோடு வரும் மயிலே! பெரிய மலைகள் அதிரும்படி குதித்துவரும் ஒப்பற்ற மயிலே, உனது பெருமானைக் கொண்டு வந்து அருள்க!


பாடல் எண் : 04
பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே 
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால் 
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே.

பொருளுரை:
பிறவிக்கேதுவான பாவநெறியொழுகும் மனிதர் முன்னே, இன்புறும் என் எதிரில் நவரத்தினம் பதித்த அணியை நெற்றியிலும், அழகிய வேறு அணிகளைக் கழுத்திலும், அணிந்த பெருமை பொருந்திய திருமயிலே! ஆற்றலோடு உலகத்தையே ஒரு நொடியில் வலமாக வரும் மயிலே! உன் தலைவனைக் கொண்டு வந்தருள்வாயாக.


பாடல் எண் : 05
அழகுறு மலர் முகனே அமரர்கள் பணி குகனே 
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே 
இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே 
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

பொருளுரை:
அழகிய மலர்ச்சியுள்ள முகமுடையவனே! தேவர்கள் வணங்கும் குகப்பெருமானே! நீங்கா இளமைத் திருமேனியனே! எல்லோராலும் மதிக்கப்படும் மிகப் பெரிய அறிஞனே! மரணமிலார் (ஞானியர்) தலைவனே! என்று தியானிக்கும் என் முன்னே இளமை விளங்க நிற்கும் மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்து அருள்க!


பாடல் எண் : 06
இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே 
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே 
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர் 
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே.

பொருளுரை:
மற்றொப்பாரில்லாத அறுமுகனே! இந்திராணி அன்பு கொள்ளும் மருமகனே! கொத்தான மலர் மாலை புரளும் திருத்தோளனே என்று தியானிக்கும் என் எதிரில் கூட்டமான படங்களையுடைய (சேடன்) பாம்பின் வன்மை குன்றும்படி எழும் ஒப்பற்ற (அருட்) குணமுடைய மரகத மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக.


பாடல் எண் : 07
எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே 
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான் 
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள் 
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. 

பொருளுரை:
ஏழையாகிய அடியேனது இறைவா! குகா! என்று தியானிக்கும் என் எதிரில் வானவெளியில் சஞ்சரிக்கும் கூட்டங்களாகிய விண்மீன்களை, அழகிய முட்டைகளைப் போல ஒடுங்கிப் பளபளவென்று மின்னுமாறு பல இறக்கையை (தோகையை) விரிக்கும் நீண்ட குளிர்ந்த மணிபோலும் விழிபடைத்த மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக.


பாடல் எண் : 08
இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே 
பலபல களமணியே பலபல பதமணியே 
கலகல கல எனமா கவினொடுவருமயிலே 
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே.

பொருளுரை:
மேலே விளங்கு மயூர (வாகன) முருக எனத் தியானிக்கும் என் எதிரில் கழுத்தணிகள் பலவும், கலகலவென ஒலிக்கும்படி அழகாய் வரும் மயிலே! விளங்கும் கொண்டையுள்ள மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக.


பாடல் எண் : 09
இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே 
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே 
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே 
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

பொருளுரை:
சிவகுமார! என் பகையை ஒழித்தருள்க என்று தியானிக்கும் என் எதிரில் பேரின்ப நிலை கைவந்த முனிவர்களும் அழகிய தேவர்கள் பலரும் துதிக்கவும் தொகுதொகு என்ற தாளத்துடன் தேவ நடனம் செய்யும் மயிலே! குகப்பரமன் வீற்றிருக்கும் மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக.


பாடல் எண் : 10
கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே 
அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே 
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே 
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

பொருளுரை:
அருள்மழை பொழியும் கருணை மேகமே! கும்பமுனி (அகத்தியர்) வணங்கும் முதல்வனே! அருணகிரி (யை ஆண்டருள்) அறுமுகச் சிவனே என்றெல்லாம் உள்ளத்தில் தியானிக்கும் என் எதிரில் வாசமிக்க மாலை அணிந்த கழுத்தையுடைய மயிலே! மேன்மைகள் பல விளங்கு மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக