வியாழன், 17 ஆகஸ்ட், 2017

ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசி விரதங்கள்

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.


01 சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி, "காமதா ஏகாதசி" என்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி "பாப மோகினி ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறும்.

02 வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி "மோகினி ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "வருதித் ஏகாதசி" என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
        
03 ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "நிர்ஜலா ஏகாதசி" என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி "அபார ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

04 ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி "சயனி ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "யோகினி ஏகாதசி" என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.

05 ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது "புத்ரஜா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசியானது "காமிகா ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.
        
06 புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி "பத்மநாபா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "அஜா ஏகாதசி" என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.

07 ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி "பாபாங்குசா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "இந்திரா ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

08 கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி "பிரபோதின ஏகாதசி" எனப்படும். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், தேய்பிறை ஏகாதசியான "ரமா ஏகாதசி" தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.
        
09 மார்கழி மாத ஏகாதசி "வைகுண்ட ஏகாதசி" என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "உத்பத்தி ஏகாதசி" எனப்படுகிறது.

10 தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரதா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "சுபலா ஏகாதசி" என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.

11 மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜெயா ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா ஏகாதசி" என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.
        
12 பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி "விஜயா ஏகாதசி" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வளர்பிறை ஏகாதசி "ஆமல கிஏகாதசி" எனப்படும். இன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும்.

"ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி "கமலா ஏகாதசி" எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக