சனி, 11 ஜூன், 2016

நலம் தரும் திருப்பதிகம் 04 திருக்காளத்தி

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, ஸ்ரீ காளத்திநாதர், ஸ்ரீ குடுமித்தேவர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஞானப்பிரசுன்னாம்பிகை, ஸ்ரீ ஞானப்பூங்கோதை

திருமுறை : ஆறாம் திருமுறை 18 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


நாகதோஷம் நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம் 


திருநாவுக்கரசர் பாடிய இந்தப்பாடல் காளஹஸ்தி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், ஸ்ரீ ஞானப்பூங்கோதை மீது பாடப்பட்டது. ஜாதகத்தில் நாகதோஷம் எனப்படும் ராகு, கேது தோஷம் நீங்கி திருமண யோகம் கைகூட இதைப் பாடலாம். இங்குள்ள அம்பிகை கல்வி தேவதையாக விளங்குவதால் மாணவர்களும் கல்வி விருத்திக்காக படிக்கலாம். அம்பாளின் பெயர் ஒன்பதாம் பாடலில் உள்ளது. 

பாடல் எண் : 01
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண்
வியன் கச்சிக் கம்பன் காண் பிச்சை அல்லால்
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண்
மயானத்து மைந்தன் காண் மாசொன்று இல்லாப்
பொன் தூண் காண் மாமணி நல்குன்று ஒப்பான் காண்
பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற
கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட
கணநாதன் காண் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
விற்று அப்பணத்தால் உணவு வாங்குவதற்குரிய பொருள் ஒன்றும் தன்பால் கொள்ளாத வறியவனைப் போலக் காட்சி வழங்கி, கச்சி ஏகம்பத்தில் உகந்தருளியிருந்து, பிச்சை எடுத்தலைத் தவிர உணவுக்கு வேறு வழியில்லாத பெருந்திறமையனாய், மயானத்துக் காணப்படுபவனாய், ஏழு உலகங்களையும் இடையறாது தாங்கி நிற்கும் கற்றூண் போல்வானாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணங்களின் தலைவனாகிய எம்பெருமான் எப்பொழுதும் என் மனக்கண்களுக்குக் காட்சி வழங்கியவாறே உள்ளான்.


பாடல் எண் : 02
இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் 
எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே
முடிப்பான் காண் மூவுலகும் ஆயினான் காண்
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசுபதன் காண்
பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண்
கடித்தார் கமழ் கொன்றைக் கண்ணியான் காண்
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
என் வினைகளை அழிப்பவனாய், ஏகம்பத்தில் உறைபவனாய், அணிகலன்களாக எலும்புகளையே அணிபவனாய், எல்லா உலக நிகழ்ச்சிகளையும் வகுத்து அமைப்பவனாய், மூவுலகங்களிலும் வியாபித்திருப்பவனாய், பஞ்சாதியாக முறையாக வழு ஏதுமின்றி வேதங்களை ஓதும் பிரமனின் ஐந்தாம் தலையை நீக்கிய பசுபதி என்ற அடையாளங்களை உடையவனாய், பராய்த்துறை. பழனம், பைஞ்ஞீலி இவற்றில் உகந்தருளியிருப்பவனாய்க் கொன்றைப் பூவினாலாய மார்பு - மாலை, முடிமாலை இவற்றை அணிபவனாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 03
நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதன் காண் 
ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் 
புரிசடைமேல் புனலேற்ற புனிதன் தான் காண்
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் 
தன்மைக் கண் தானே காண் தக்கோர்க்கு எல்லாம்
காரணன் காண் காளத்தி காணப்பட்ட 
கண நாதன் காண் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
நாராயணனாய், பிரமனாய், நான்கு வேதங்களையும் ஓதுபவனாய், ஞானப் பெருங்கடலின் அக்கரையை அடையச் செய்யும் படகு போன்ற நிறைவானவனாய்ப் புண்ணியனாய்ப் பழையோனாய், முறுக்குண்ட சடைமீது கங்கையை ஏற்ற தூயோனாய், எங்கும் இயங்குபவனாய்ச் சந்திர சூரியர்களை உடனாய் இருந்து செயற்படுப்போனாய், நற்பண்புகளில் தனக்கு உவமை இல்லாதானாய், மெய்யுணர்வுடையோருக்குத் தானே முதற் பொருளாகத் தோன்றுபவனாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணத் தலைவனாகிய எம்பெருமான் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 04
செற்றான் காண் என் வினையை தீயாடி காண்
திருவொற்றியூரான் காண் சிந்தை செய்வார்க்கு
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண்
உமையாள் நற்கொழுநன் காண் இமையோர் ஏத்தும்
சொற்றான் காண் சோற்றுத்துறை உளான் காண்
சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான் காண் காளத்தி காணப்பட்ட 
கணநாதன் காண் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
என் தீவினைகளை அழித்துத் தீயின்கண் கூத்து நிகழ்த்தித் தன்னைத் தியானிப்பவர்களுக்கு நெருக்கமானவனாய், உமா தேவியின் கணவனாய், தேவர்கள் துதிக்கும் வேத வடிவினனாய், மன்மதனுடைய அம்பு செலுத்தும் ஆற்றலைச் சாம்பலாக்கக் கற்றவனாய், ஒற்றியூர், ஏகம்பம், சோற்றுத்துறை என்ற திருத்தலங்களில் உறைபவனாய்க் காளத்தியில் காணப்படும் கணநாதன் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 05
மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் 
இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான்
ஏழ் அண்டத்து அப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான்
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
மனத்திலும் தலைமேலும் சொற்களிலும் உள்ளானாய், மனம் மெய்மொழிகளைச் செயற்படுத்தித் தன் திருவடிகளை வாயாரப்பாடும் தொண்டர் இனத்தானாய். தேவர்கள் தலை மேலானாய், ஏழுலகங்களையும் கடந்தவனாய், இவ்வுலகில் செவ்விதாகிய பொன் போன்ற நல்ல விளைவை நல்கும் குறிஞ்சி முதலிய நிலத்தில் உள்ளானாய், நறிய கொன்றைப் பூவில் உறைபவனாய், மலை நெருப்பு காற்று மேக மண்டலம் இவற்றில் உடனாய் இருந்து இவற்றைச் செயற்படுப்பவனாய்க் கயிலாயத்து உச்சி உள்ளானாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 06
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண்
ஏகம்பம் மேயான் காண் இமையோர் ஏத்தப்
பொல்லாப் புலனைந்தும் போக்கினான் காண்
புரிசடைமேல் பாய் கங்கை பூரித்தான் காண்
நல்லவிடை மேற்கொண்டு நாகம் பூண்டு 
நளிர் சிரமொன்று ஏந்தியோர் நாணாய் அற்ற
கல்லாடை மேற்கொண்ட காபாலி காண்
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
ஏனைய பொருள் தோன்றுதற்கு முன்னும் இருப்பவனாய், ஏகம்பத்து விரும்பி உறைபவனாய், தேவர்கள் துதிக்கப் பொறிவாயில் ஐந்து அவித்தவனாய், முறுக்கேறிய சடையின் மேல் பாய்ந்த கங்கையை அதன்கண் நிரப்பியவனாய், பெரிய காளைமீது ஏறிப் பாம்புகளைப் பூண்டு குளிர்ந்த மண்டையோட்டை ஏந்தி, நாணத்தைக் காப்பதொரு பொருளாகத் துறந்தார் அணியும் காவியாடை உடுத்துக் காபாலம் என்னும் கூத்தாடும் காளத்திநாதன் என் கண் உள்ளான்.


பாடல் எண் : 07
கரியுருவு கண்டத்து எம் கண்ணுளான் காண் 
கண்டன் காண் வண்டுண்ட கொன்றையான் காண்
எரிபவள வண்ணன் காண் ஏகம்பன் காண்
எண்திசையும் தானாய குணத்தினான் காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயாடி காண் 
தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண்
கரியுரிவை போர்த்து உகந்த காபாலி காண்
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
நீலகண்டனாய், எமக்குக் காட்சி வழங்குபவனாய், அருளால் ஏற்ற பெற்றியின் பல்வேறு வடிவு உடையவனாய், வண்டுகள் நுகரும் கொன்றைப் பூவினை அணிந்தவனாய், ஒளிவீசும் பவள வண்ணனாய், ஏகம்பனாய், எட்டுத் திசைகளும் தானேயாய பண்பினனாய், முப்புரங்களையும் தீக்கொளுவியவனாய். நெருப்பிடையே கூத்து நிகழ்த்துபவனாய், என் உள்ளத்திலிருந்து தீவினைகளை அழிப்பவனாய், யானைத் தோலைப் போர்த்து மகிழ்ந்து காபாலக் கூத்து ஆடுபவனாய்க் காளத்திப் பெருமான் என் கண் உள்ளான்.


பாடல் எண் : 08
இல்லாடிச் சில்பலி சென்று ஏற்கின்றான் காண் 
இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண்
வில்லாடி வேடனாய் ஓடினான் காண் 
வெண்ணூலும் சேர்ந்த அகலத்தான் காண்
மல்லாடு திரள்தோள்மேல் மழுவாளன் காண் 
மலைமகள் தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழ் இருந்த காபாலி காண் 
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் வழங்கும் சிறு அளவினவாகிய உணவுகளை ஏற்கின்றவனாய், தேவர்கள் தொழுது வழிபடப்படுகின்றவனாய், வில்லை ஏந்தி வேடன் உருக் கொண்டு பன்றிப்பின் ஓடியவனாய். பூணூலும் பூண்ட மார்பினனாய், வலிய திரண்ட தோளில் மழுப்படை ஏந்தியவனாய், பார்வதி கணவனாய், மகிழ்வோடு ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழ்த் தென்முகக் கடவுளாய் இருந்தவனாய்க் காபாலக் கூத்து ஆடுபவனாய்க் காளத்தியில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 09
தேனப் பூ வண்டுண்ட கொன்றையான் காண்
திரு ஏகம்பத்தான் காண் தேனார்ந்து உக்க
ஞானப் பூங்கோதையாள் பாகத்தான் காண்
நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண்
வானப்பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து
நின்றான் காண் வண்டார் சோலைக்
கானப்பேரூரான் காண் கறைக் கண்டன் காண்
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
வண்டுகள் நுகரும் தேனை உடைய கொன்றை சூடியாய்த் திருஏகம்பத்தனாய், தேன் ஒழுகும் பூக்களை அணிந்த ஞானப்பூங்கோதை அம்மையை இடப்பாகமாகக் கொண்டவனாய், நமக்கு இனியவனாய், ஞானப் பிரகாசனாய், ஊழியிறுதியில் வானமும் உலகும் அழியுமாறு விரைந்து ஒடுக்க வல்லவனாய், வண்டுகள் பொருந்திய சோலைகளை உடைய திருக்கானப்பேரூரில் உறைபவனாய் நீலகண்டனாய்க் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 10
இறையவன் காண் ஏழ் உலகும் ஆயினான் காண்
ஏழ் கடலும் சூழ் மலையும் ஆயினான் காண்
குறையுடையார் குற்றேவல் கொள்வான் தான் காண்
குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண்
மறையுடைய வானோர் பெருமான் தான் காண்
மறைக்காட்டு உறையும் மணிகண்டன் காண்
கறையுடைய கண்டத்து எம் காபாலி காண்
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
யாவருக்கும் முதல்வனாய், ஏழுலகும், ஏழ் கடலும் இவற்றைச் சுற்றிய மலைகளும் ஆகிப் பலகுறைபாடுகளையும் உடைய உயிர்கள் தனக்குச் செய்யும் குற்றறேவல்களை ஏற்றுக் குடமூக்குத் தலத்திலுள்ள கீழ்க்கோட்டத்தை விரும்பி, வேதம் ஓதும் வானோருக்கும் தலைவனாய்த் திருமறைக்காட்டுத் தலத்தில் தங்கும் நீலகண்டனாய்க் கறைக் கண்டனாய்க் காபாலக் கூத்து ஆடும் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 11
உண்ணா அருநஞ்சம் உண்டான் தான் காண் 
ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காணப்
பண்ணாரப் பல்லியம் பாடினான் காண் 
பயின்ற நால்வேதத்தின் பண்பினான் காண்
அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம் 
அடியிணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண்
கண்ணாரக் காண்பார்க்கு ஓர் காட்சியான் காண்
காளத்தியான் அவன் என் கண் உளானே.

பொருளுரை:
பிறர் உண்ண இயலாத கொடிய நஞ்சினை உண்டவனாய், ஊழித் தீயை ஒப்ப அழிப்பதனைச் செய்பவனாய்ப் பண்களுக்குப் பொருந்தப் பல வாச்சியங்களை இயக்கிப் பாடியவனாய், தான் ஓதிய நான்கு வேதங்களில் கூறப்பட்ட இறைமைப் பண்புகளை உடையவனாய், அண்ணாமலையானாய், அடியார் கூட்டம் தன் திருவடிகளைத் தொழுது போற்றுமாறு அருளுபவனாய், தன்னை மனக்கண்களால் காண்பவர்களுக்கு அரிய காட்சிப் பொருளாய் இருப்பவனாய் உள்ள காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக