புதன், 11 ஜூலை, 2018

ஸ்ரீ வாராஹி அம்மன் மாலை

சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னி தான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். 

சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹி அம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது. 

ஒன்று காசி மற்றொன்று தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ளது. இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படைத்தளபதி ஆவாள். ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம் என்று வர்ணிப்பர். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராகி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர். 

மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப்பெரியகோயிலில் உண்டு. எந்த வழிபாட்டை தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு. இங்கு சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராகியம்மனை வழிபட்டே தொடங்குகிறார்கள். சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராகிக்கு சன்னதி உள்ளது. 

கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. இங்கு என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமணவரம் உடனே கைகூடுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இத்தலத்து அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.

ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை .சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்களும், மற்றும் யாவரும் நலம் பெற வேண்டி ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.அல்லது அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பலனைத்தரும் அதில் உங்கள் தேவைக்கான பாடலை மட்டும் தேர்ந்தெடுத்துத் தினமும் படித்து வரத் தேவை நிச்சயம் நிறைவேறும். 

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வராகியை வணங்கினால் பகைவரை அழித்து பக்தரை காத்திடுவாள். கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்தும் காப்பாற்றுவாள். வராகியை வணங்கும் எவருக்கும் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.


இருகுழை கோமளம் தாள் புஷ்ப ராகம் இரண்டு கண்ணும்
குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே. .......... (01)


தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட்டது நடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூஜித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே. .......... (02)


மெய்ச்சிறத்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத்தேந்திப் புலால் நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வாராஹி பகைஞரையே. .......... (03)


படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினாலுலகம் நடுங்கிடவே. .......... (04)


நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்டிடும்
பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம் இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹி நீலி தொழில் இதுவே. .......... (05)


வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹி என் நாரணியே. .......... (06)


நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர் இம்மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே. .......... (07)


வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ்வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே. .......... (08)


வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹி என் பஞ்சமி கண் சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே. .......... (09)


பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தையாளர் தெரு எங்குமே. .......... (10)


எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே. .......... (11)


சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவி நின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே. .......... (12)


நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக்கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாராயணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரை வாழ்நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே. .......... (13)


மது மாமிஸம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹி என் மெய்த் தெய்வமே. .......... (14)


ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே. .......... (15)


தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே. .......... (16)


வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும் வெம்பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே. .......... (17)


வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலை வணங்காதவர்க்கே. .......... (18)


பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட்டேகை உலக்கை கொண்டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் எங்கள் அம்பிகையே. .......... (19)


தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்க வந்தோர்க்கு ஜெகம் அதனில்
வாமக்கரள களத்தம்மை ஆதி வாராஹி வந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே. .......... (20)


ஆராகிலும் நமக்கே வினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக்கிரை இடுவாள் கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத்தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடிஇருந்தாள் என்னை வாழ்விக்கவே. .......... (21)


தரிப்பாள் கலப்பை என் அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந்ததலை
நெரிப்பாள் தலை மண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே. .......... (22)


ஊராகிலும் உடன் நாடாகிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக்காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும் மெய்ச்சண்டப் ப்ரசண்ட வடிவி உண்டே. .......... (23)


உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே. .......... (24)


தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்டு
அஞ்சக் கரங்கொண்டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே. .......... (25)


அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட்டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர் கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனை நினையாதவரே. .......... (26)


சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹி நற்பொற்கொடியே. .......... (27)


பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் எனது
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வாராஹி என் நிர்க்குணியே. .......... (28)


தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட்டவர்க்கு வினை வருமோ? நின் அடியவர்பால்
மாறிட்டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட்டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே. .......... (29)


நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர் தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே. .......... (30)


வீற்றிருப்பாள் நவகோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள் கலி வந்தணுகாமல் என் கண் கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே. .......... (31)


சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க்கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே. .......... (32)

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக